செவ்வாய், 31 டிசம்பர், 2019

ஏதேதோ எழுத எண்ணம் கொண்டு
வெகு நேரமாக சித்தம் நிலைநிறுத்தி
காத்திருக்கிறேன்...
படைப்பில் கர்வம் கொள்வதற்கு
படைத்துவிட துடிதுடிக்கிறேன்
அன்னையைப் போல் அங்கொருத்தி
எனக்காகச் சமைத்தெடுத்து
அன்னமிட்டால் மனக் கிண்ணம் நிரம்ப
எழுதியது அவளல்லவா
வெறும் எழுதும் பொருள் நானல்லவா...
புள்ளி வைத்து முடித்து வைப்பவன்
சிறு புள்ளிக்குள் புள்ளியாகிறேன்

குழந்தையாய் பிறந்து
வளர்ந்து வளர்ந்து
மீண்டும் குழந்தையாய்
மனிதன்

குளிரில் பிறந்து
வளர்ந்து வளர்ந்து
மீண்டும் குளிரில்
முடியும் வருடம்

குழந்தைத்தனம் மாறாமல்
குளிர்ந்து வாழ்வோம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ஒரு தாவரத்தின் முகம்
அது பூவாகத்தான் இருக்கும்
சிரிக்கிறதே...

ஒரு தலை இராமனும்
பல தலைகளோடு இராவணனும்
சீதையும் பாஞ்சாலியும்
அதில் உண்டு

மனிதர்களைப் போன்றே
அவற்றுக்கும் காவியங்கள் உண்டு

வெள்ளை உள்ளம் கொண்டவைகள்
வெண் எழுத்தால் எழுதியதை
வெள்ளைக் காகிதங்கள் என்றெண்ணி
நம் காவியங்கள் நிரப்புகிறோம்

எதை எழுதிப் படித்தாலும்
வெட்டுகின்ற மனம் வளர்த்தோம்
புத்தகத்தின் வாசகம் தாண்டி
புத்தகத்தின் வாசமும் படிப்போம்...

பூக்களின் மேல் காதல் வரும்
வெட்டும் எண்ணம் விட்டுவிடும்
பாலைகள் எல்லாம் சோலையாகும்
காதல் ஒன்றே வேலையாகும்

இதழ்களில் எழுதத் தொடங்கிவிட்டால்
காகிதம் காவியம் மாயமாகும்

திங்கள், 30 டிசம்பர், 2019

உன் நிழல்
என்னைச் சுற்றிச்சுற்றி
என் நிஜம் கிறுகிறுக்கிறது...

சமூகம் சிறையானது
போதை சிறகானது
வாழ்க்கை இரையானது...

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

ஆறறிவு எதற்கு?

( சிறுகதை - 1 )

காம்பவுண்டில் 10 நாய்கள்
கடைசியாக வந்த 2 நாய்களை எதற்காகவோ அவசர அவசரமாக குலைத்துக் கொண்டே, கடிக்க வெறியுடன் துரத்தியது. அவைகளை அவை எல்லையைத் தாண்டி துரத்திக் கொண்டு இருந்தன.

நாய்களின் கடவுள்களுக்கு ஏதோ பிரச்சினை போல. நாய்களின் இந்த பிரச்சினையில் கடைசி வரை கடவுள்கள் கரிசனம் காட்ட  வரவே இல்லை. பாவம் அந்த இரண்டு நாய்களும் எட்டு நாய்களால் துரத்தப்பட்டன.

இந்தியா போன்ற நாடுகளில் தான் இது நடந்து கொண்டிருக்கிறது. மேலும் நானும் அவைகளின் ஒரு கடவுள் என்ற முறையில் எனது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இவற்றை நான் பார்த்துப் பழகியது.

அந்த காம்பவுண்டில் வீற்றிருந்த 84 தெய்வங்களும் அவர்களது சொந்த வேலையில் மூழ்கிக் கிடந்தன. நாய்களுக்கு மீதியைப் பகிரும் மனிதர்கள் தானே அதன் கடவுள்கள்.

பெரும்பாலும் தெரு நாய்களில்  சைவங்கள் கிடையாது. அது காம்பவுண்டைப் பொருத்தது. வீட்டில் வளரும் மேல்தட்டு நாய்களில் சைவம், அதன் கடவுளைப் பொருத்தது.

வீட்டு நாய்கள் கடவுளின் அனுக்கிரகம் பெற்றவைகள், ஆத்திக நாய்கள்.
தெரு நாய்கள் பூர்வஜென்ம பாவம் செய்தவைகள்,நாத்திக நாய்கள்.

ஆத்திக நாய்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுள். நாத்திக நாய்களுக்கு உதவியவர்கள் எல்லாம் கடவுள்.

நாத்திகம் முற்றும் போதெல்லாம் உதவாத  கடவுள்களைக் குறைத்துக் கடிக்கும். எந்த கடவுளும் மறு கண்ணத்தைக் காட்டியதே இல்லை. மாறாக கல்லைக் கொண்டு எறிகிறது.

ஆத்திகம் முற்றினால் செல்லக் கடிகள் தான். தனக்கான கடவுளுக்கு மட்டுமே இந்த கரிசனம். மற்ற கடவுள்களுக்கு நாத்திக நாய்கள் காட்டும் அதே தரிசனம் தான். தன் கடவுளைக் குளிர்விக்க மற்ற கடவுள்களைப் பதம் பார்க்கும்.

நாய்களின் கடவுள்களுக்கு அப்படி என்ன பிரச்சினை... இன்னும் வராமலேயே இருக்கிறது.

அது ஆறாம் அறிவுதான்...

இந்தியா 120 கோடி மக்களை வைத்துக் கொண்டுள்ளது, மூன்று மடங்கு பெரிய நிலப்பரப்பை கொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நம்மில் ஒரு பகுதியை மக்கள் தொகையாய் கொண்டுள்ள நாடுகள் எல்லாம்  வெறும் வேடிக்கை பார்க்கிறது...

விசா இல்லாத மற்ற நாடுகளின் மனிதர்களை  மனிதர்களாகக் கூட இல்லை டாபர்மேன், ஜெர்மன் செப்பர்டு பொன்ற மேலான   நாய்களாகக் கூட பார்க்க மறுக்கின்றனர்.

வேற்று கிரகங்களில் மனிதரைத் தேடும் அறிவு ஜீவிகள் ஆயிற்றே.
நாட்டு நாய்களை நிராகரித்ததற்கு மனிதனின் கடவுள்கள் கொடுக்கும் தண்டனையோ, சாபமோ தெரியவில்லை.

ஆனால் மனிதர்களின் கடவுள்கள் அப்படி இல்லை. மனிதனை மனிதன் நிராகரித்தால், மாறாக வரங்கள் கொடுக்கிறார்கள். மேலை நாடுகளில் அவர் தம் வரங்களை வாரி வழங்கி இருக்கிறார்கள்.

இருப்பதை எல்லாம் விட்டுவிட்டு இல்லாததை தேடுவதில் மனிதர்களுக்கு நிகர் மனிதரே. இதில் இவர்களில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.

மனிதர்கள் மனிதர்களுடன் புழங்குவது அரிதாகிவிட்டது. இயற்கையுடன், மற்ற உயிர்களுடன் பழகுவது பொழுதுபோக்கு மட்டுமே.

பொழுதைப் போக்குவதுதான்  வாழ்க்கை என்போரை மட்டம் தட்டி மடித்தும் விடுவார்கள். உயிரற்ற பணத்தினூடே  புழங்கிக் கொண்டு, செயற்க்கையில் திளைக்கிறார்கள். வாழ்வை விட்டுவிட்டு பிழைப்பு பிழைக்கிறார்கள்.

உயிர் பிழைக்கப்போவது 60 - 100 ஆண்டுகள் தான். காலமெல்லாம் பிறகு நாம் உயிரற்றுதானே இருக்கப் போகிறோம்,  அதனால் செயற்கை பழகுவோம் என்று ஆறாம் அறிவு சொல்லியதோ...


கண்டுபிடிப்புகள் எல்லாமே ஆறாம் அறிவுதானாம். தேடலில் வல்லவர்கள் இதுவரை தேடிக் கண்டதெல்லாம் பிரச்சினைகளின் மறு உருவம் தான். ஞானம் தேடி அலைந்த இடம் நம் இந்தியா. தேடியவர்களுக்கு எல்லாம் ஞானம் கிடைத்த இடம்.

இருக்கும் மரங்களை எல்லாம் அழித்ததில் இருந்து, தேடலில் பிரச்சினைகள் மட்டும் தான் கிடைக்கிறது. 

பிரச்சினைகளைத் தேடித் தேடி சேர்த்தவர்கள், பின்னொரு நாளில் அதைத் தான் தேர்ந்து எடுத்தார்கள். அதுதான் ஆறாம் அறிவு எதற்கு?

ஆறாம் அறிவுதான் அணைத்து குறைபாடுகளுக்கும் காரணமாக இருக்கும் என்று முடிவெடுத்து நாடாளுமன்றமும் சட்டமனறங்களும் ஒரு முடிவுக்கு வந்தது.

ஆறாம் அறிவை நீக்கிவிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதனை அமல்படுத்த டாக்டர்கள் கமிட்டியிடம் பரிந்துரைத்தது.
டாக்டர்கள் கமிட்டியில் புதிதாக ஒரு குழப்பம் உருவாயிற்று.

அதாவது மொத்த மனிதப் பிரச்சினைகளும் தீர்க்கும் இந்த ஆப்ரேஷன், தனக்கு முதலில் நடக்க வேண்டும் என்று டாக்டர்கள் கமிட்டி தலைவர் மற்றும் பிறர் அணைவரும் தர வரிசையில், தனக்கு தனக்கு என்று முதலுக்கு போட்டி போட்டனர்.

பெரிய பதவிக்காரர்கள் எல்லாம் தர வாரியாக, படித்தவர்களை விட பணத்தால் அடித்து வந்தவர்களே. அவர்களுக்கு தேவை முதன்மை. பின்தங்கிப் பழக்கம்  இல்லாதவர்கள்.

ஒருவழியாக அதிலிருந்த 90 சதவீதம் பேர், மெரிட்டில் வந்த 10 சதவீதத்தை சரிகட்டினர். மெரிட் மருத்துவர்கள் துறை வாரியாக, மேலிருந்து கீழாக தரவரிசையின் அடிப்படையில் அணைத்து தரப்பினர்களுக்கும் வெற்றிகரமாக ஆறாம் அறிவு நீக்க ஆப்ரேஷன் செய்யத் தொடங்கினர். அதை அற்புதமாக செய்தும் வந்தனர்.

பெருந்தன்மை கொண்ட பாராளு, நாடாளு மன்றங்கள், ஒருமனதாக மக்கள் பிரச்சினைகளை தீர்த்து, கடைசியாக தன் பிரச்சினையை சரிசெய்து கொள்ள, தாராளம் தளராமல் தள்ளி நின்று, ஆனந்தக் கண்ணீரில் நீராடின.

10 சதவீத மெரிட் டாக்டர்கள் குழு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஆப்ரேஷன் செய்து முடித்தது. மீதமிருந்த பாராளு, நாடாளு மன்ற மகான்களுக்கும் ஆப்ரேஷன் செய்ய, அவர்களை அனுகினார்கள்.

அவர்களுக்கு மகான்கள் பெட்டிப் பெட்டியாய் எதையோ கொடுத்து,  ஒரு விருந்து விழாவில் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை, ஐந்தறிவு உயிர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

அதில் சில தரவரிசை கூட்டங்கள் தன்னை அறியாமலேயே பழக்க தோஷத்தில், விருந்து விழாவில் ஆறறிவு மனிதர்கள் தூக்கிப் போட்ட எலும்புத் துண்டுகளுடன் குப்பை மேட்டுக்கு ஓடின. அதிலும் சில விஸ்வாச ஐந்தறிவுகள் வாலாட்டிக் கொண்டு அங்கேயே இருந்தன.

மற்ற எல்லா ஐந்தறிவு மனிதர்களும், வழக்கம் போல அவரவர் அலுவலகங்களுக்கு நேரத்திற்கு கிளம்ப, நேரத்திலேயே வீடடைந்து தூங்கச் சென்றன. எந்தப் பிரச்சனையும் இன்றி...



நாய்கள் கூட பத்தில் இரண்டைத்தான்  விரட்டி விடுகின்றன. மேலும் அவைகளோடு சேர்ந்து வாழ்வதில்லை.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் ஆறறிவு மனிதர்களாக தனை மட்டும் நினைத்துக்கொண்ட 20 சதவீதக் கூட்டம், மீத 80 சதவீதத்தினூடே வாழ்ந்து, 80 சதவீதத்தையும்  ஐந்தரிவாக்கி, தொடர்ந்து மேய்க்கும் திறமை கொண்டதாக இருக்கிறது.

இங்கேயும் மனிதர்களின் கடவுள்கள் இந்த 80 சதவீத மனிதர்களின் பிரச்சினையை கண்டுகொள்வதே இல்லை.


கடவுள்களை எல்லாம் மேலை நாடுகள் விலைக்கு வாங்கியும் இருக்கலாம்...
மாறாக மனிதனின் கடவுள்களுக்கு வேறு பிரச்சனைகள் இருக்கலாம்...
இல்லை கடவுள்களின் கடவுள்கள் கைவிட்டும் இருக்கலாம்...

சனி, 28 டிசம்பர், 2019

பிறந்து
அழுகை நின்றவுடன்
அவளுக்காக எழுதியது
அவளிடத்தில் கொடுத்து விடுங்கள்

அவள்
அடுத்த வருடம் தான்
பிறப்பாள் என்றாலும்
நான் இருப்பேனா தெரியாது

அவளும்
பிறந்தவுடன் படித்து
தெரிந்து கொள்ளட்டும்

அவளுக்காக
ஒரு உயிர்
வாழ்ந்ததென்று...

கனவில் மரணம்

கானகத்திலிருந்து
வானகத்திற்கு
நெருப்பு வழிப் பயணம்

ஜன்னல் சீட்டில் தலைச்சாய்ந்து
உன் நினைவுகளைப்
பார்த்து ரசிக்கிறேன்

ஊரே அழுகிறது
நீ மட்டும் சிரிக்கிறாய்
எனைப் பார்த்துக்கொண்டே

எப்போதும் போலவே
என்னோடு வருவதற்கு
சந்தோஷ மூட்டையுடன்...
எவ்வளவு ஓடினாலும்
அடையப் போவது மரணம்தான்

பெயரை தேடுகிறாய்
வசதி தேடுகிறாய்
பிறரிடம் இல்லாததையும்
தேடுகிறாய்
உறவைத் தேடுகிறாய்
எல்லாம் கிடைக்கப் பெற்று
எல்லாமும் கெட்டு
தூக்கம் தேடுகிறாய்

உடன் இருப்போர் இறந்தாலும்
உடன் அதன்பேர் சடலம்தான்

கட்சி இருக்கும்
பதவி இருக்கும்
கூட்டமும் இருக்கும்
கூவலும் இருக்கும்
எப்போதும் போலங்கு
நடிப்பும் இருக்கும்

வந்தவர் எல்லாம்
உன்னை அணைப்பார்கள்
நீ இருந்து
அணைத்தாயே அப்படி

பயம் இருக்காது
அழைப்பு இருக்காது

பாசம் இருக்கும்
நேசம் இருக்கும்
ஆனால் உன்மீது
வைக்க முடியாது

காதல் இருக்கும்
மரியாதை இருக்கும்
ஆனால் உன்னிடம்
காட்ட முடியாது

நீ பணக்காரனாக
இருக்கலாம்
ஆனால்
உன் நெற்றிப் பொட்டில்
வைக்கப் போவது
ஒத்த ரூபா தான் 

உன் பெயர் வாழும்
சிலை வாழும்
உன்னைக் கையில் ஏந்தி
சிலர் வாழ்வார்கள்
நீ வாழ்வாயா

நீ இறந்து
பின் எப்பொழுதும்
வாழப் போவதில்லை...

இப்போதே வாழ்ந்துவிடு
குழந்தைகள் போல்
ஒளிந்து விளையாடு
யார் உன்னை கண்டுபித்தாலும்
எது உனக்கு
நீ தேடாமல் கிடைத்தாலும்
மகிழ்ச்சி கொள்
நேசம் கொள்
பாசம் கொள்
வேசம் கொள்ளாதே

உன்னைத் தேடி வருவோரை
நீயும் தேடிப் போ...
நீ கொடுத்தது எல்லாம்
உனக்கும் கிடைக்கும்
இதுதான் விளையாட்டு

எல்லோர்க்கும் எல்லாமும்
எப்போதும் கிடைக்கும்
மூடி வைக்காதே
உலக அட்சயப் பாத்திரத்தை

எப்பொருள் கிடைத்தாலும்
பிறருக்கும் கொடு
பாரம் குறையும்

உனதை விழுங்கிவிடு
மீதம் தந்துவிடு
கையில் எதுவும்
இல்லாமல் பார்த்துக்கொள்

பொருள் இருப்போரை
மரணமும் தேடி வரும்
அதுவும் வாழ வேண்டுமே...

எடுத்து விளையாடாதே
கொடுத்து விளையாடு

உன்னைத் தேடியும்
மரணம் வரும்
முடிந்தால் மறைந்துகொள்
மாட்டிக்கொண்டாய
மிக்க மகிழ்ச்சி கொள்
இனி உன்னை யாரும்
கண்டுபிடிக்க முடியாது
நீ கடைசியில்
வென்று விட்டாய்

மரணம்
தேடி வரட்டுமே
கொஞ்சம் மறைந்து விளையாடலாம்...

வெள்ளி, 27 டிசம்பர், 2019

திருட்டுப் பூனை

என்னைப் போல் ஒருவன்
ஏதும் அறியாத சிறுவன்
திருட்டும் உருட்டும் பழக்கம்
எங்களுக்கு இல்லை கலக்கம்

இயல்பு எங்கள் பழக்கம்
அதனால் இல்லை தயக்கம்
இயன்ற வரை அமைதி
குலைத்து விட்டால் எதிரி

தம்பி ஓடுவதே பழக்கம்
கூரை ஏறுவதே வழக்கம்
மியாவ் மியாவ் எப்போதும்
மிரட்டுச் சீற்றம் எப்பவாச்சும்

சோம்பலாய் தான் இருப்போம்
இலக்கு இல்லாமல் நடப்போம்
பசி வந்தால் பயணம்
அதுவரையில் இல்லை சலனம்

பூனையாகவே இருந்து இருக்கலாம்
புலி வேஷம் போட்டிருக்கலாம்
மனிதனாக ஏன் பிறந்தேனோ
யாருக்கும் என்னைப் புரியவில்லை

காலை முதல் மாலைவரை
கடும் உழைப்பு பிடிக்கவில்லை
இரவில் கண்விழிக்க முடிவதில்லை
இது என்னதான் வாழ்க்கையோ

இரவில் தான் நிலவுண்டு
அதைத்தவிர கண்கள் இல்லை
வான் எல்லாம் மின்மினிகள்
இயற்கை இசைக்கும் நேரமிது

பகல் போல சுடுவதில்லை
பதறி ஓடும் வேகமில்லை
பகல் கனவு கூடயில்லை
நிஜமே கனவாய் இருந்திடுமே

பூனையாக பிறக்க வேண்டும்
திருடி பாலைக் குடிக்கவேண்டும்
காலை கெட்டுப்போகும் பாலை
நாங்கள் குடித்தால் தப்பென்ன

குளிர் சாதனப் பெட்டியெல்லாம்
எங்கள் அறிவுக்குத் தெரியாது
அதுபோலக் கேடு தரும்
பழக்கம் கிடையவே கிடையாது 

பூவின் நடனம்

நல்ல இசைகள்
எந்த பூவையும்
கிழிப்பது இல்லை

இப்போது
வரும் இசைகள்
பெரும்பாலும்
காதுகளையே கிழித்து விடுகிறது

கேட்போரை
கடந்து செல்லும் போதுகூட
இது நடந்து விடுகிறது

என்ன சொல்லியும்
அவர்கள் நமது பேச்சைக்
கேட்கப் போவதும் இல்லை

பாவம்
காது கிழிந்தவர்கள்...

அடையாளம் சொல்கிறேன்
எச்சரிக்கையாக இருங்கள்:

உயர்ந்த ஆடை
ஆனால் கிழிந்து இருக்கும்
நிறைய முடிகள்
ஆனால் பேணாது இருக்கும்
தப்பித்தவறி கைவைத்தால்
கூராகக் கிழிக்கும்
காக்கை எச்சம்போல் கூட
கலர்க்கலராய் இருக்கும்
பாரதியைத் தெரிந்து இருக்காது
பாப் மார்லியைப் பிடிக்கும்
ராம், மிஷ்கின், கதிர்...
போன்றோர் படங்கள் ஏனோ கசக்கும்
இளிச்சவாயன் படமெடுத்தால்
இவர்களுக்கு இனிக்கும்

இந்த சகோதரர்கள்
நல்ல இசை கேட்டுவிட்டால்
அது அதன் வேலை செய்யும்
என்றே இதனைப் பகிருகிறோம்
உங்கள் சகோதரர்களுக்கும் உதவலாம்...

https://www.facebook.com/100003237418992/posts/2641246155993272/

வியாழன், 26 டிசம்பர், 2019

ஒரு நாள் காதலுக்கும்
நெடு நாள் காதலுக்கும்
எந்த வேறுபாடும் இல்லை
எல்லாம் காதலே

ஒரு நாள் பிரிவுக்கும்
நெடு நாள் பிரிவுக்கும்
எந்த வேறுபாடும் இல்லை
எல்லாம் மரணமே 
மாற்றி மாற்றிப் பேசுகிறாள்

தனிமையில்
எதையோ கிறுக்கினேன்
கவிதை என்று சொன்னாள்

பிடித்தும் இருப்பதாகச் சொன்னாள்

நீ
என்னோடு வந்துவிடு
இன்னும் அழகாகும் என்றேன்

பிடிக்கவில்லை என்று சென்றாள்

எதையாவது
எப்படியாவது
எழுத முயல்கிறேன்

அவளுக்கு
பிடித்த மாதிரி... 

புதன், 25 டிசம்பர், 2019

சிலுவையில் அறையப்பட்டும்
பட்டாம்பூச்சி
சிரித்துக்கொண்டே இருக்கிறது
இரண்டாயிரம் ஆண்டுகளாக...

பாவமன்னிப்பு
கதைகள் எல்லாம்
நகைச்சுவையானதோ

மலரினைப் படைத்ததும்
அதில் தேனினை மறைத்ததும்
தேனீக்கள் தேடுவதும்

உன் கதையை
உன்னிடமே சொல்வோம்
தன் கதையாக

உன் நடன பாவம்
தன்னுடையதாய் நினைப்பது தான்
நிழல்களின் பாவம் 

செவ்வாய், 24 டிசம்பர், 2019

அருகில் சந்திக்காதவள்
கண்கள் நிறைகின்றாள்
சிந்தை கலைக்கின்றாள்
விந்தை செய்கின்றாள்

தினம் ரசிக்க வைத்து
விலகிச் செல்லும் நிலவு
வானுக்குச் சொந்தம் நீ
எதற்காக இந்தக் கலவு

என் மனதைக் காணவில்லை
யாரிடம் சொல்வேன்
ஏறி வரப் பாதையில்லை
ஏக்கம் கொண்டு நின்றேன்

சென்ற தடத்தைத் தேடி
இங்கும் அங்கும் ஓடி
என்னைக் கடக்கும் தேதி
நினைவு மட்டுமே மீதி

நினைவைப் பிடித்துக் கொண்டே
இமயம் ஏறி விட்டேன்
இன்னும் கூட தொலைவு
இமியும் குறையவில்லை ஏனோ...

திங்கள், 23 டிசம்பர், 2019

காலியாக உள்ளவரை
உனது இடம் அதில்
சிலந்தி வலை கண்டாலும்
கொடுத்துவிடு சிலந்தியிடம்

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

தந்தை போடும் கோடுகள் கூட
நாம் தாண்டிப் பழகத்தான்
என்றேத் தாண்டினேன் 
பழகினேன்
பாழாய்ப் போனேன்
பழகுகிறேன்
பாழாய்ப் போகிறேன் 

பரவாயில்லை
மனம் வரையும் ஓவியத்தை
ரசித்தே பழகுகிறேன் 

பழகியதால்
இறைவன் போடும் கோடுகளையும்
இயல்பாய்க் கடக்கிறேன்...

அவ்வை சொன்ன வார்த்தைகளை
நான் மறவேன்
"பாழாகாமல் ஆயுதங்கள்
 பார்வென்றக் கதைகளில்லை" 

பால் ஒழுகும்
முகத்தில் மட்டுமல்ல
பாழான முகங்களிலும்
குழந்தை உண்டு

ஆழ்ந்து பார்த்தால்
அழகு உண்டு
மேலாகப் பார்த்தால்
மறத்தல் நன்று 

சனி, 21 டிசம்பர், 2019

கொடுப்பதுதான் வாழ்க்கை
இயற்கை கொடுத்துக்கொண்டே இருக்கிறது
கண் இருந்தால் கடினம் ஆகும்
அவை முகம் பார்த்துக் கொடுப்பதில்லை
எவர் பறித்துக் கொண்டாலும் பதற்றமில்லை
பழிவாங்கத் துடிப்பதும் இல்லை
அணு ஆயுத அறிவும் இல்லை
வங்கிக் கணக்கில் சேர்ப்பதும் இல்லை
வட்டிக் கணக்குப் போட்டதும் இல்லை
தன் தலைமுறைக்குத் தன்னைத் தரும்
வார்த்தை இன்றிக் கற்றுத் தரும்
ஆறறிவு எனச் சொல்லிக் கொள்ளும்
மனிதன் மட்டும் விதிவிலக்கு
அத்தனையும் தனது என்றதனால்
தேடுது இங்கு மதுவிலக்கு...
எடுத்தது எல்லாம் திரும்பக் கொடு
சும்மா இருக்கப் பாடுபடு
இதற்கு நல்ல உபயம் அன்று
மகாகவி பாரதி வரிகள் உண்டு
ஆதலினால் காதல் செய்வீர்
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்...

வெள்ளி, 20 டிசம்பர், 2019

சைதாப்பேட்டை மான் சுதாகர்

அரசு பண்ணைபுரத்து ராஜாவே
அன்புத் தோட்டத்தின் ரோஜாவே
எனக்கு தெரிந்த அண்ணன்தான்
மான்களுக்கு நீ கண்ணன்தான்

விரல்கள் கூப்பி இசைக்கின்றாய்
பசி ஆறச் செய்கின்றாய்
புள்ளி மான்கள் மனதினிலே
பெரும் புள்ளி ஆகிவிட்டாய்

பெண் மான்கள் நடந்துவர
நானும் கூட இசைத்ததுண்டு
என் பசிக்கு நானிசைத்தேன்
நானும் சைதை புள்ளி(ங்கோ)

பெரும்புள்ளி உன் முன்னே
நான் சிறும்புள்ளி ஆனேனே
மாகோலம் போடும் இறைவாநீ
வரையும் ஓவியம்தான் என்னவோ?

வியாழன், 19 டிசம்பர், 2019

மெழுகுவர்த்தியின்
ஒற்றைச் சிறகு
இரவெல்லாம் சிறகசைத்தும்
பறக்க முடியாமல்
உருகியது

பற்றவைத்த விழிகள்
பக்கத்தில் இல்லை
பற்றியெறியும் மனமும்
விடுவதாய் இல்லை

புதன், 18 டிசம்பர், 2019

வீட்டுக்குள் நுழைந்தவுடன்
வெளியில் மழை பொழிகிறது
ஆசையுடன் நனைய வந்தால்
சட்டென்று நிற்கிறது

தொட மறுக்கிறது
அவளைப் போல்
மழையும்

எப்போதும்
விட்டுக் கொடுப்பதில்லை
கண்கள்
பொழிகிறது
உடல் நனைகிறது...

பறவைக்கு
அலகு தந்து
அளவாய் சாப்பிட வைத்த
இறைவன்
அலகு இல்லாமல்
எனைப் படைத்து
எப்போதும் அலைய வைத்தான்

உண்மையில்
அலைந்து திரிவது
பறவை அல்ல
அவை எப்போதும்
இங்கு தான் இருக்கிறது
நான் தான்
எப்போதும் எங்கேயோ இருக்கிறேன்

செவ்வாய், 17 டிசம்பர், 2019

நினைவுப் புல் கட்டுடன்
இரவெல்லாம் நடந்துச் செல்கிறாள்
தின்ன முடியாது எனினும்
பின்தொடரும் இந்த ஆடு...

அதிகாலைக் கனவுகளில்
பால் புகட்டி உறங்க வைப்பாள்
இரவெல்லாம் பசி தாங்கிப்
பின் நடக்கத் தெம்பளிப்பாள்...

பகலைக் கால் கடக்க தினம்
கருணைக் கொலைச் செய்கிறாள்
தனி ஒருத்தியாய்ப் பாடையில்
தூக்கி அலைகிறாள்

எரிக்கவும் முடியாமல் புதைக்கவும் முடியாமல்
பாவம் சுற்றித் திரிகிறாள்
நினைவுப் புல் கட்டைக் காட்டியே
என்னை இரவில் உயிர்க்கிறாள்...

சிறுவன்
கன்னத்தில் அறைந்தான்
உண்மையை உணர
அது தான் தருணம் எனில்
வரத்தை ஏன் மறுப்போம்
பணிந்து ஏற்றுக்கொண்டேன்
துணிந்து ஓட்டம் கண்டேன்
புதிய பாதையிலே
புதிய பார்வையிலே
பயணம் தொடர்கிறது...

வருத்தம் இப்போதும் உள்ளது
அந்த சிறுவன் மட்டும்
அங்கேயே உள்ளது

அவனைவிட
சிறியவனோ பெரியவனோ
அவனுக்கும் ஒரு வரம்
வேண்டுகிறேன்
அவனுக்கும் ஒரு
புதிய பாதை...
பூக்களோடு பேசாதவனிடம்
புத்தர்
பேசுவது இல்லை 

திங்கள், 16 டிசம்பர், 2019

கனவில்
உன் கண்ணைப் பார்க்கிறேன்
உன் கண்ணில்
உலகைப் பார்க்கிறேன்

என்னைக் குளிரச் செய்த
உன் விழிகளைச் சுற்றி
கிளைகளும் இலைகளும்
வரைந்து வைத்தேன்

பார்வைக் குளிர் உயருதடி
பார்க்கப் பார்க்க
இதயம் உறையுதடி

கண்ணை மூடி
என்னைப் பிடி
விடியல் வரப்போகுதடி 

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

உயிர்நாடி பார்த்துவிட்டு
பறந்துவிட்டது பட்டாம்பூச்சி
மௌனமாக...

இதயம் இருந்தால்
உனைநாடி வந்து சொல்லும்
கேட்டுக்கொள் 

சனி, 14 டிசம்பர், 2019

நினைவுகளில் அமரும்
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
நினைவே தேன்

நிஜம் கசந்தாலும்
நினைவெல்லாம் இனிக்கிறது
நிழல் கூடச் சிலிர்க்கிறது 
கொன்றுவிட்ட மீனை
நேசம் கொண்ட பூனை
மறக்கமுடியாமல் தினம் வாடுது...

அவள் வாழ்ந்த இடங்களில்
நடைப் போடுது
நினைவு அலை மோதுது...

வெள்ளி, 13 டிசம்பர், 2019

நாணயம்

தலைக்குப் பின்னால் பூ
பாடாய் படுத்துகிறது வேறு
கண்டிப்பாக அது பெண்தான்

வாழ்நாள் முழுவதும்
அவள் பின்னால் சுற்றி
திரும்பியே பார்க்காதவள்

எப்படித்தான் மனம் வந்ததோ
விட்டுப் பிரியும் வேலையில்
நெற்றிப் பொட்டில் முத்தம்

இறந்தும்
நான் மறவேன்
இந்த நாணயத்தை

கடந்த 365 நாட்களும்
ஒரே இரவாகத் தான் தொடர்கிறது

நிலவாகிப் போனவள்
திரும்பி வந்தால் தான்
மறு இரவு

வானம் நிரம்பி வழியும்
கசப்பினை மாற்றிட
ஒரு காலை வரும்...

காத்திருப்பேன்
அந்த நாளில் மலரும்
இனிய இரவுக்காக

வியாழன், 12 டிசம்பர், 2019

தினமும்
வந்தென்னை செதுக்குகிறாள்
உயிரை
உறிஞ்சியே மயக்குகிறாள்

காற்றினில்
அசையும் சிற்ப்பங்களாய்
முத்தங்களில்
தினம் வார்த்தெடுப்பாள்

கண்களிலே
போர்த் தொடுப்பாள்
தோல்விக்கு
கனிகளைப் பரிசளிப்பாள்

கண் மூடிடும்
கணத்தினில் மறைந்திடுவாள்
துடித்திடும்
மனதிற்குத் தீயிடுவாள்

நீ திரும்பிடும் வரையில்
தகித்து இருப்பேன்
கண் மூடி உள்ளாக
விழித்து இருப்பேன்

உன் கால் தடத்தில்
முகம் புதைத்து
மண்ணில் புதையும்வரை
காத்திருப்பேன்...

நீலமும் சாம்பலும்
வானத்தில் இருந்து
குருவிகளாய்

இலைகளைப் பிரிந்த கிளைகளுக்கு  சிறகுகளால் மூச்சு வழங்கிட
வந்து அமர்ந்தன

மரம் மட்டும் அல்ல
மனதும் துளிர்க்கிறது
வானமாய் விரிகிறது...

செவ்வாய், 10 டிசம்பர், 2019

உன்னைத் தொடர்ந்த நிழலல்லவா
என்னைப் பார்த்ததும்
ஒளிந்து விளையாடுது 

திங்கள், 9 டிசம்பர், 2019

டீ மாஸ்டர்

நீர்
பால்
டீத்தூள்
கூடவே நிழலையும் சேர்த்து
மாயவித்தை செய்திடுவார்
இதழில் சுவையையும்
இதயத்தில் நிழலையும்
கொண்டு சேர்ப்பவர்
உண்மையில் மாஸ்டர் தான் 
ஒரு நொடியில்
எண்ணற்ற நீர்க் குமிழிகள்
ஒவ்வொன்றும்
வண்ணக் கனவுகள் தாங்கி
காற்றில் ஆடும் நடனம்

இங்கொன்றும் அங்கொன்றுமாய்
காணாமல் போகின்றன
மையம் அழிந்து
வையம் ஆகின்றன...

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

புகைப்படங்களை
அணுவணுவாக ரசிக்கிறோம்
நிஜங்களை மட்டும் தவறவிடுகிறோம்

தவறென்ற விதையை
எங்கே எப்போது
யார் தூவினாரோ...

பாவம் கண்கள்
பகலெல்லாம்
படாதபாடு படுகிறது
ஈரம்
கசிய கசியத் தான் தெரிந்தது
நான் பாறையல்ல...

கேமரா

கண்வழியாகப் பயணித்து
புது உலகில் நுழைந்துவிட்டேன்
கண்டதும் காதல்...

புத்தர்

மரத்தடி வகுப்பறையில்
கவனம் சிதறியதாக
தண்டிக்கப்பட்டார்
வகுப்பு ஆசிரியரால்
உலக ஆசிரியர்

கனவுகளில்  பூக்கிறாள்
நினைவுகளில் குத்துகிறாள்
ரோஜாச் செடி

நான் இவள்
இதழ் தொட்டுக் குளிர்ந்திடும்
பனித்துளி

உனை
பிரிகையில் இறந்திடும்
தினம்
உனக்காகவே பிறந்திடும்

வேர்
எந்தன் கருவறை
வேறெல்லாமே சிறையறை

என்னை
பிரிந்துக் கொல்லாமல்
உறிஞ்சிக் கொள்

சனி, 7 டிசம்பர், 2019

மரம்
யார் முகத்தைப் பார்க்கிறதோ
நிலவில்

மழலை வார்த்தைகளில்
சிலிர்ப்பதைப் போல
துளிர்க்கிறது மரம்

நிலவின் வார்த்தைகளை
கொண்டு சேர்க்கிறதோ
மழை

என் முகம்
மௌனமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறது
என்னை

கடந்து கொண்டே இருக்கிறேன்
பிரிந்து கொண்டே இருக்கிறது

ஒரு உருவம் மட்டும்
தொடர்ந்து வருகிறது
உயிர் போல 

வெள்ளி, 6 டிசம்பர், 2019

5ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

நேசிக்கும் குழந்தைக்கு
வாசிக்கத் தெரியாததால்
வருத்தப்படுவதே இல்லை வயலின்

வருத்தப்படும் பெற்றோர்களால்
நேசம் இழந்து
வாசிக்கக் கற்றுக்கொள்கிறது குழந்தை

வேதனை தாங்காமல்
அழுகிறது வயலின்...

வெண் பனிக் கூட்டம்
சத்தம் போடாமல்
ஒரு கூட்டுப் பிரார்த்தனை

பகல் இரவு பிரிவிற்கு
நித்தமும் இவர்களின்
இரங்கற்க் கூட்டம்

வெண்ணாடை தேவதைகளிடம்
தினம் வேண்டி நிற்பேன்
என் தேவதைக்காக...

வியாழன், 5 டிசம்பர், 2019

ஆண் தேனி
கூடு கட்டி
தனியாகத் தேன் தேடுது...

புதன், 4 டிசம்பர், 2019

உன்னைப் பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும்
எனது ஆசை

நீ
என்னைப் பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும்
எனது பேராசை

ஆசைக்கு
கைக்கொடுக்கும் கனவு
பேராசைக்கு
கனவாய்ப் போனது

கனவில்
கனவை வேண்டுகிறேன்

கனவு
கைக்கொடுக்குமா
எனது பேராசைக்கும்...

நிலவும் நானும்
ஸ்பரிசித்தோம்
வியர்வை படிந்தது
மனக் கண்ணாடியில்...

செவ்வாய், 3 டிசம்பர், 2019

பூனையாக மாறி 
புகலிடம் தேடினேன்
குழந்தையாக நீ கிடைத்தாய்

பத்து விரல்களில்
சொப்பன உலகிற்கு
என்னை கூட்டிச் சென்றாய்

கனவு தொடர்ந்தது
பலவும் மறந்தது
பத்து விரல்கள் கொல்கிறது

திங்கள், 2 டிசம்பர், 2019

உன்
குடை நான்

மழை
இல்லாமல் போனால்
என்னை மறந்துவிடாதே

வெயிலிலும்
என்னை தாங்கிப்பிடி...
எறும்பின் பேராசை
சர்க்கரையில் ஊர்ந்து போகலாம்
தேனில் ஊறலாமோ...

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

தேன் நீர் அருந்தும்
பட்டாம்பூச்சி
தன்னையே அருந்தியது

புத்தகம் படிக்காத
யாவுமே புத்தனாய்
உலகையே விரும்புகிறது

தேடி நீர் அருந்தும்
நிலைமை வந்தும் மனிதம்
சந்ததிகளை விழுங்குகிறது

குக்கூ காட்டுப் பள்ளிக்கூடம்

வாழ அழைக்கும்
ஒரு காடு

தொட்டில்  செடிகளுக்கு
பரிவுடன் பாலூட்டத் தவிக்கும்
இயற்கை அன்னை

கனவில்
அணைவரும் குழந்தைகளே

வெறித்துப் பார்க்கும்
தான் உவந்து பழகும்

பூ போல்
புன்னகைப் பூக்கும்

மழை போல்
அழுகையைக் கொட்டித் தீர்க்கும்

வானில் பறந்திட
சிறகுகள் தேடும்

தான்
அறிமுகம் இல்லாத
பொதுவுடைமை
குழந்தை

ஆம்

கனவில்
அணைவரும் குழந்தைகளே

குக்கூ
கனவினில் இணைவதற்கோர்
அழைப்பு...
என் தேவதை

மலர் கொடுத்தாள்
வரம் கொடுத்தாள்
முகத்தை மட்டும்
மறைத்துக் கொண்டாள்

தள்ளி நின்றாள்
தாகம் தந்தாள்
கானல் நீர் அனுப்பி
ஏங்க வைத்தாள்

கெஞ்சுகின்றேன்
கொஞ்சுகின்றேன்
மறைந்துக்கொண்ட மலர்களுக்கு
முத்தம் தந்தேன்

அவள் தான்
இரங்கவில்லை
பூக்கள் ஆவது
இறங்கட்டுமே...

சனி, 30 நவம்பர், 2019

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
பணமும் பாசமும்

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
பணமும் மௌனமும்

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
பணமும் ஆலோசனையும்

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
ஆலோசனை

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
வசை

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
அவமானம்

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
தனிமை

பணப் பற்றாக்குறை
வளர்ந்து வளர்ந்து
கிடைத்தது
போதிமரம்

வெள்ளி, 29 நவம்பர், 2019


வருகின்ற
மழையையும் அன்பையும்
சேர்த்து வைப்பதே இல்லை...

இரண்டிற்காகவும்
காத்துக்கொண்டே இருக்கிறோம்...
இறக்கிறோம்
மண்
பூவையும் பெண்ணையும்
அழகாகவே வரைகிறது

இருவருமே சிரிப்பது
இதயத்திலிருந்து

பெண்
பூவை வரைகிறாள்

பூ
பெண்ணை வரைகிறது

இரண்டும் சேர்ந்த
இந்தக் கதம்பம்
என்னில்
உன்னை வரைகிறது
கண்கள் கரைகிறது...

வியாழன், 28 நவம்பர், 2019

அப்படியே
திரும்பிப் போய்விடு
உனது
அதிகபட்சக் கண்டுபிடிப்பு
அதுவாகவே இருக்கட்டும்

சைக்கிள் இதயத்திற்கு
மோட்டார் மாற்றாக வேண்டாம்
உன் இதயமும்
இரும்பாகிவிடும்

வேகம் வேண்டாம்
தார்ச்சாலை வேண்டாம்
பூஞ்சோலை உனது
புதுக்கட்டிடம் வேண்டாம்

இறைவன்
அள்ளி அள்ளிக்
கொடுத்தவைப் போதும்
வேறு ஏதும்
வேண்டவே வேண்டாம்

உன்னைப் போலவே
புத்தகங்கள் ஏராளம்

முடிந்தால்
தேடிப்போய்ப் படி
முடிந்தவரை
உன்னையே படி

படி
தாண்டு
பரவாயில்லை
தவறுகளுக்கும்
அடைக்கலம் கொடு

மரணம்
உனக்கும் காத்திருக்கும்
யாவும்
மெதுவாகவே செய்...

இரவில் விதைத்துவிட்டு
விடியலில் அறுவடை செய்யாதே
அவையும் வாழ்ந்து முடிக்கட்டும்
உன் முடிவில்
நீயும் உணவுதான்

புதன், 27 நவம்பர், 2019

உன்னை நானும்
என்னை நீயும்
பருகும் நேரம்

கால வெளியில்
காட்சி எல்லாம்
மறைந்து போகும்

பிரிவின் அதிர்வு
நீரின் மேலே
தாளம் போடும்

உன்னைப் பூட்டிக்கொண்ட
மௌனம் இதழ் திறந்து
மெல்லப் பாடும்

இறங்கி வந்து
கண்ணீர் யாவும்
உன்னைத் தேடும்

தேடித்தேடி ஆவியாகும்
நீல வானில்
மேகம் ஆகும்

மேகம் மீண்டும்
நீராய் மாறும்
திரும்பத் திரும்பத்
தீராத தாகம்

பிழைப்பேனா தெரியவில்லை
நம்பிக்கை இருக்கிறது
I C U 

செவ்வாய், 26 நவம்பர், 2019

கழுகாய்
வேட்டையாடிடும் நினைவுகள்

வைரப் புன்னகையால்
இதயம் அறுக்கிறாள்
உயிரை எடுக்காமல்
வலியை வளர்க்கிறாள்

ஆழமாக
நகம் பதிக்கிறாள்
ஆசையெல்லாம்
அதில் புதைக்கிறாள்

கூர்விழிப் பார்வையிலே
கொத்திப்போகப் பாய்கின்றாள்

நிழல்
என்னை அணைக்கிறது
நிஜம்
உயிரைப் பறிக்கிறது...

திங்கள், 25 நவம்பர், 2019

உன்னை
மொத்தமாகத் தாங்கி நடப்பேன்

கல்லும் முள்ளும்
வலித்தது இல்லை
மழையும் வெயிலும்
துன்பம் இல்லை
சிகரெட் மரணத்தில்
அழுதது இல்லை
அன்னம் ஆகாரம்
அருந்தியது இல்லை
இறுதிவரை வீட்டினுள்
அனுமதி இல்லை

பயணம் முழுவதும்
பின்னணி இசைக்கிறேன்
எந்த இதயமும்
கேட்பது இல்லை

மண்ணையும்
உன்னையும்
பிரித்த பாவம்
எனது இல்லை

எடுப்பார் கால்பிள்ளை
நான் எக்கேடும்
செய்வது இல்லை

எனக்கு
நீ வைத்தப் பெயர்
செருப்பு
நான்
உனக்கு வைத்தப் பெயர்
அலட்சியம்

தெரு ஓரத்தில்
குப்பை மேட்டில்
சாக்கடையில்
தூக்கி எறியும் வரை...

உன்னை
மொத்தமாகத் தாங்கி நடப்பேன்

ஞாயிறு, 24 நவம்பர், 2019

புகைத்தேன்
புகை தேன்
புகைத்தேன்

எண்ணங்கள்
உருவம் ஆகின்றன
எண்ணுபவன்
அருவம் ஆகிறேன்...

சனி, 23 நவம்பர், 2019

நிழலாக நினைவாகத்
தொடர்கின்றாய் நாளும்,
என் நடையாவும்
உன் நிஜம் காணத்தான்...

காற்றின்றி அசையாமல்
கொடிபோல நானும்,
நீ வர வேண்டும்
நாம் சாய்ந்தாடத்தான்...

என் விதி
தொடர்ந்தாலும் முடிந்தாலும்,
என் நேசம்
உன்னோடுதான்...

வானவில் 
வந்து மறைந்தாலும்,
அதன் வண்ணங்கள்
நெஞ்சோடு தான்...

வாழ்க்கை
தொடர் ஓட்டப் பந்தயம்
பெற்றோர் விட்ட இடத்திலிருந்து
பிள்ளைகள் துவக்கம்

சிலர்
கார், பிலேன்
கொண்டு ஓடுகிறார்கள்
சுவிஸ் வரை
ஓடியவர்களும் உண்டு
பூமியைத் தாண்டக்
காத்திருப்பவர்களும் உண்டு

இருந்தும் கால்நடையாகக்
காலம் கடப்பவர்களே
கூட்டம் கூட்டமாகப்
பிரிவினைப் பிரிவினையாகப்
பிரிந்துத் தனித்து

பாவம்
எத்தனையோ பேர்
தன் கால்களை இழந்து
தவழ்கின்றனர்

வெற்றி
யாவையும் தரலாம்
ஆனால் விரும்பிப் பெறும்
தோல்வி மட்டுமே
ஞானம் தரும்

வெள்ளி, 22 நவம்பர், 2019


மலர்த் தூவி
காத்திருக்கும் திருப்பங்கள்
திருப்பாவை பாதம் பதிக்க

மலரோடு மலராக என்
இதழ்களைக் குவித்து வைப்பேன்
உன் பாதத்தில் முத்தமிட

நீ வரும் சப்தம் கேட்கிறது
உயிர் மூச்சும் மௌனமாகிறது
என் வாழ்வின் முக்கியத் திருப்பம்...

வியாழன், 21 நவம்பர், 2019


ஆசை அலை ஆர்ப்பரிக்கும்
கடலும் படகும்
பிரிந்திருக்கும்

படகு தன்னை எரித்துக்கொள்ள
நிலவைத் தொட்டு
காத்திருக்கும்

நிலவு சுடவில்லை
நீ ஏன் சுடுகிறாய்
அலைகடலே...


புதன், 20 நவம்பர், 2019


மழையினில்
உனைப் பார்க்க வருவேன்
மழையினில்
நீ காத்து இருப்பாய்

நனையாமல்
நான் வருவேன்
நனைந்து
நீ நடுங்கிடுவாய்

ஈரமில்லாதவன்
தலைத் துடைப்பாய்
இந்தப் பாறைக்கு ஏனோ
நீர் வடிப்பாய்

ஏதொன்றும் உணராமல் இருந்துவிட்டேன்
உயிரோடு உன்னை நான்
கொன்றுவிட்டேன்

நீ இல்லாது
நான் வாழும் இந்நாட்கள்
மனதைக் கடித்துக் குதறும்
ஆயிரம் செந்நாய்கள்

சுற்றிலும் உதிரம்
நினைவுகளாய் உதிரும்...



எனக்கு
விளங்காமல் போனதுதான்
விலகிப் போனதும்
கைவிலங்காகிப் போனது
அன்பு

இறங்கி வந்து
பார்க்கும் வரை
மலையின் உயரம்
வியப்பதில்லை

கண் மறைந்து போனாலும்
மலை
மனதில் மறைவதில்லை...

செவ்வாய், 19 நவம்பர், 2019


வலிகளைத் தாங்குபவர்கள்
பிழைத்துக் கொள்கிறார்கள்
விபத்திலும் வாழ்விலும்



கால் முளைத்த
வெண் நுரைகள்
வெள்ளைக் குதிரை ஆனது

எத்தனை நாள் ஏக்கமிது
கரையைத் தாண்டி ஓடுது
யாரைச் சென்று தேடுது

கடிவாளம் இல்லை
கண் கட்டவில்லை
கட்டுப்படுத்துவது யாரோ...

சிறகு முளைத்த
என் மனச் சிட்டுக்குருவி
கீச்சிட்டு சொல்லியது

அது யாரென்று...

திங்கள், 18 நவம்பர், 2019

அவள் வந்து சேர்ந்து
வாழ்க்கை கவிதை ஆகும்வரை
சொற்களின் வழி வந்து
சொப்பனமாகிறாள்

என்ன கொண்டுவரப் போனாயோ
உன்னிடம் இருப்பதுவே
என்னில் நிரம்பி வழிகிறது

கண்கள்
உள்ளே கனவுகளாய்
வெளியே அருவிகளாய்...

இரவில்
கலந்து கலந்து
இரவாகிப்போனேன்...

இரவைப்
பகலாக்கத் தெரிந்த விரல்களுக்கு
வசப்படவில்லை
பகலை இரவாக்குவது

பகல்
பழகிப்போன சொப்பனம்
இரவு
பரிட்சயம் இல்லாதது

பகல்
வேடமிட்டு உலவுகிறது

இரவு
நிர்வாணம்

பகல் பொய்
இரவு மெய்
பகல் சிறையறை
இரவு கருவறை

பகல் பிரிவு
இரவு கலவை
பகல் அரசியல்
இரவு ஆன்மிகம்

பகல் வியர்வை
இரவு ஓய்வு
பகல் காமம்
இரவு காதல்

பகல் சமுதாயம்
இரவு அந்தரங்கம்
பகல் முயற்சி
இரவு வளர்ச்சி

விதைகள் வளர்வதும்
மொட்டு மலர்வதும்
இரவினில் தான்

வளர்கிறேன்
மலர்கிறேன்
இரவையே தொடர்கிறேன்

பாவை இல்லாத பகலை
பார்வை தேடுவதில்லை

ஞாயிறு, 17 நவம்பர், 2019

டால்பின்னும்
டால்பெண்ணும்
பார்த்துக்கொள்வது எளிதாகிப்போனது

பழகிய
இரு மனங்கள்
பார்த்துக்கொள்வது அரிதாகிப்போனது

பறவை வாழ்க்கைப் பழகிப்போனது
அமர்ந்தாலும் பறந்தாலும்
தேடல் மட்டும் தொடர்கிறது...

உறங்கிடும் போதும்
தேடல் வந்து
உறவு கொள்கிறது

விழித்துக்கொண்ட கண்களில்
தேடல் மாயமானது
ஈரமானது

பழகிப் போனது
தேடுவதே
பழகிப்போனது

சனி, 16 நவம்பர், 2019

நீ
சிரிக்கும் போதெல்லாம்
இதயத்தில் சேர்த்துவைத்த வெளிச்சங்கள்
நீ
இல்லாத தருணங்களில்
நினைவில் மின்மினியாய் பறக்கின்றன

இரவு முழுவதும்
என்னை வழிநடத்தும் வெளிச்சம்

விடியல் வந்தவுடன்
விரல் நழுவும்

பகல் முழுவதும்
என்
உடல் எரிக்கும்

இரவு
மீண்டும் வந்து
எனை அணைக்கும்

பகல் இரவாய்
தொடர் பயணம்
மனம் யாவும்
விரல் தொடும் தருணம்...

வெள்ளி, 15 நவம்பர், 2019

கடவுள் இரண்டு
ஒன்று முழுவதுமாக நம்புவது
இன்னொன்று முழுவதுமாக மறுப்பது

சிலைகள் என்றாலும்
கடைசிவரை 
கண்கள் தேடிக்கொண்டே இருக்கிறது 
உயிர் சினேகிதியை...

சிலையாகிப் போகும் வரை
திரும்பத் திரும்பத் தேடுவேன்
சீக்கிரம் வந்துவிடு

இதயம் இல்லாத வெரும் சிலைகள்
ஆறுதல் கூட சொல்வதில்லை

வியாழன், 14 நவம்பர், 2019

மறைத்துக் கொண்ட மேகங்களுக்கு 
ஒருபொழுதும் தெரியாது
எப்பொழுதும் நிலா எனக்கு
உயிர் ஊட்டிக்கொண்டிருப்பது

வலி தெரிந்தோ தெரியாமலோ
வழி விடுகிறது
உயிர் தொடர்கிறது...

ஆட்டுக்குட்டியையும்
கன்றுக்குட்டியையும்
பிறை நிலவையும்
அறிமுகப்படுத்தாமல்

இயேசுவும்
கிருஷ்ணனும்
அல்லாவும்
அறிமுகம்

சிரிக்காமல்
என்ன செய்வார்கள்
குழந்தையும்
கடவுளும்

புதன், 13 நவம்பர், 2019

புத்தம்


மண் கூட்டை இழந்த குளவியின் தவிப்பு
பட்டு மாளிகையைத் துறந்த பட்டாம்பூச்சியிடம்
மவுனமாகச் சரணடைகிறது


" சற்குரு ச(ஜெ)ன் கணக்கு "

நீரில் தெரிவதும்
நிஜமாகும் தருணம்

நீ
அங்கு இருந்தாலும்
நிஜங்கள் இரண்டும்
இரு நிழலாகும்

வேறொருவர் வந்துவிட்டால்
நான்கு நிழல்கள்
கணக்காகும்

அவள்
வந்து சேரந்தாலோ
யாவும் அங்கு
ஒன்றாகும்

சில மாதம் கழித்து...
மீண்டும்
இரண்டு
நான்கு
ஒன்று

தொடர் கணக்கு
தொடர் வினையால்
தொடரும் வாழ்வில்
தொடரும் கணக்குகள்

பிழை ஆவதும்
திருத்தம் ஆவதும்
சுழியில் வந்து
முடிந்துவிடும்

திங்கள், 11 நவம்பர், 2019

"சிட்னியில் காட்டுத் தீ"

காட்டை நெருப்பாக்கி
கடலை அடுப்பாக்கி
நிலவு அப்பளம் சுடும்
சைக்கோ எவனோ?

உணர்வை நெருப்பாக்கி
வயிற்றை அடுப்பாக்கி
பசியைச் சமைக்கும்
அவனோ?

தாய்

நாம் நேராக பிறப்பதற்கு
தான் தலைகீழாக
தவம் கிடந்தவள்...
படைத்தவனுக்கும் தெரிவதில்லை
பிரசவ வலி
வேதனைகள்...

ஓவியர்
அமைதியின்மையையோ
பேரமைதியையோ
விட்டுச் செல்லும்
ஓவியமும்


இசைஞர்
வேதனையையும்
பரவசத்தையும்
அதிர்வுகளாய் காற்றில் கலக்கும்
இசையும்

கவிஞர்
சிரிப்புடனோ
கண்ணீருடனோ
முடித்துக் கொள்ளும்
கவிதையும்

போல அல்ல...

தாய் ஈன்றெடுக்கும்
குழந்தை ஒரு
மரண வலி




இதழில் இருந்து தவறி
முள்ளில் விழுந்தது ஒரு
பனித்துளி

இதழும் மாலை ஆனது
பொழுதும் மாலையானது
கண்களெல்லாம் கண்ணீரானது
மூங்கில்கள் எல்லாம் முகாரி பாடுது...

Jaisingh Photography 1

கைகள் தானே தூக்கிச்சென்றது
இடையினில் எப்படி
சுவடுகள் வந்தது...

ஓ...
அவர் சென்ற பாதைகளை
திரும்பத் தர முனையும்
நினைவுக் கரம் அதுவோ

கடல் சென்றதே
புது அலைகளில்
நினைவினைக் கரைப்பதற்குத் தான்

இதோ அவள்
அலையலையாக நுரைத்துச் சிரித்து
ஓடி வருகிறாள்
என்னைக் கரைப்பதற்கு

ஞாயிறு, 10 நவம்பர், 2019

பூங்காவின் இருக்கையில்
நமக்குப் பதிலாக அமர்ந்திருக்கும்
உதிர்ந்த சருகுகள்

உன்னை அழைத்து வரும் வரையில்
இடத்தைப் பிடித்திருக்க
வாக்குத் தருகிறது

காற்றும் சேர்ந்து தலை அசைத்தது
நமக்காக இரண்டும்
தவம் இருக்குது

சின்னஞ் சிறிய நிகழ்வுகள் தான்
சிறகைச் சொடுக்குது
சேர்ந்து பறக்குது...

சனி, 9 நவம்பர், 2019

பூனைக்குட்டி

மியாவ் மியாவ் பூனைக்குட்டி
என் செல்லத் திருட்டுக் குட்டி
புலி மாதிரி வேஷம் கட்டி
பயமுறுத்தும் பட்டுக் குட்டி

மெல்லிசையால் பாட்டுக் கட்டி
புடுச்சுவப்பா என்னக் கட்டி
மியாவ் மியாவ் பாட்டுக்குத்தான்
நான் போவதில்லை வீட்டுக்குத்தான்

பொட்டல் வெளிக் காட்டுக்குள்ள
பொட்டு வச்சப் பருவப் புள்ள
படுத்துக்கிட்டே பார்த்திருக்கு
என் உயிர் உறிஞ்சக் காத்திருக்கு...

சடலம் மட்டும் விட்டுவிடு
சங்கடங்கள் எடுத்துவிடு
சங்கெடுத்து ஊதும் போதும்
உன் மெல்லிசைய கலந்துவிடு

வெள்ளி, 8 நவம்பர், 2019

"தீவிரவாதம்"

தேவர்களைக் காத்தவன்
கடவுள் என்றால்
அசுரர்களைக் கொன்றவன்
யார்?

அசுரர்களைக் காக்கும்
கடவுள் எங்கே?

கடவுளைப் பற்றிப் பேசிப்பேசியே
இதயக் கோவிலை மறந்த
மனிதக் கடவுள்கள்

இதயத் தராசுகளில்
தீர்ப்புகள்
எந்தப் பக்கமும் சாய்வதில்லை...

என்னதான் கவிஞன்
வார்த்தைகளை எடுத்துக் கொஞ்சினாளும்
ஒரு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சும்
கொஞ்சல் உண்மையானது
ஊமையானது...
நீ
ஒரு முறைப் படித்திட
நான்
அனுப்பிடும் வார்த்தைகள்
என்னால்
ஆயிரமாயிரம் முறைகள் வாசிக்கப்பட்டது
தனிமையில்... 
பழுத்த இலை விழும் வரையில்
கிளைகள் தள்ளி விடுவதில்லை
வீழ்ந்தும் சருகு உரமாக
பூக்கள் சேர்க்கும் உறவாக

தொட்டிச் செடிகள் வளர்க்கும் சமூகம்
ஈவு இரக்கம் இல்லாமல்
வெட்டி விடுகின்றனர் பாவம்
பாதிப் பழுத்த இலைகள்...

தொட்டில் கட்டியவர்களை
அவிழ்த்து விட்டுவிட்டு
ஆழ்ந்து உறங்குகிறார்கள்

தாலாட்டுப் பாடியவர்கள்
ஆழத்தில் உறங்குகிறார்கள்...

வியாழன், 7 நவம்பர், 2019

குகைப் போன்ற
நெடும் பாதையிலே
யாருடைய அழைப்புக் குரல்
மெலிதாக எதிரொலிக்க
அதைத் தேடி நான் நடக்க

இதுவரையில் யாருமில்லை
இறுதி எது தெரியவில்லை
திரும்பிடவும் மனமுமில்லை
திரும்பத்திரும்பத் தேடுகிறேன்

தேடித்தேடித் தொலைந்து போனேன்
எனக்கு நானே கானல் ஆனேன்
எதிரொலியாய் மீதமானேன்
என்னை நீயும் தேடுவாயா...

புதன், 6 நவம்பர், 2019

சிறகசைத்தும் பறக்க முடியாத
கடலின் மீது தினந்தோறும்
பறந்து செல்கின்றன பறவைகள்

தளும்பும் கடல் தழும்பை
கதிர் கொண்டு சேர்க்க
உப்புக் கரித்ததோ

வானம்
இறங்கி வந்து
முத்தமிடுகிறது

பாறைகளில் மோதினாலும்
கால்கள் மிதித்தாலும்
சிறகுகள் ஓய்வதில்லை

கடல்
சிறகசைத்துக் கொண்டே இருக்கிறது
காலமெல்லாம்...

செவ்வாய், 5 நவம்பர், 2019

நாய்க்குட்டியுடன் குழந்தை

உன்னைச் சங்கிலியாலும்
என்னைக் கட்டுப்பாடுகளாலும்
கட்டிப் போட்டு வளர்க்கின்றார்கள்

அவர்களாவது
சுதந்திரமாக இருக்கிறார்களா...

வரம்பை
மீறாமல் இருப்பதற்கு
சின்ன வீட்டைக்
கட்டி இருக்கலாமே
இறைவன்

எதற்காக
இவ்வளவு பெரிய
உலகத்தைப் படைத்தான்

மூச்சு உள்ளவரைதான் 
உடலை உணரமுடியும்
அவள் இருந்தவரைதான்
வாழ்வை உணரமுடிந்தது

செயற்கை சுவாசம் போல்
வாழ்க்கைத் தொடர்கிறது...

எதுவுமே நிரந்தரமில்லைதான்

உயிருள்ளவரை
இதய ஓசையும்
அவள் மீதான
எனது ஆசையும்
தவிர

ஞாயிறு, 3 நவம்பர், 2019

ஆயிரம் அலைகளைத்
தாங்கியக் கடலென
சுருக்கங்கள் நிறைந்த
அந்தக் கிழவியை
நிலவொளி போல் தழுவி
முத்தமிட்டு அணைத்திருந்தேன்

விடியல் வந்து
எழுப்பி
வாசித்துக் காட்டியது
நூறு வருடம்
அவளோடு
வாழ்ந்துப் பார்த்த
என்
நெடுங் கனவை...

இரத்தக் காட்டேரியின்
காதலை உணர்ந்தேன்
அவள் இதழில் பருகிய
ஒரு துளியில்

புரிதல்
இல்லாத இடங்களில்
அவை
முகம் காட்டுவதில்லை

உயிரைத் தருவோர்க்கு
உறவைத் தருகிறது...

சனி, 2 நவம்பர், 2019

"பத்தமடை பாய்"

தாமிரபரணிக் கரையிலே
படுத்திருக்கும் நினப்பிலே
பத்தமடை பாயிலே
படுத்துறங்க கொடுப்பில்லே

காதிலே பாய்ந்திடுமே
நதி கொலுசுச் சத்தம்
மெல்லமெல்ல நடந்து வந்து
ரதி உருவா நிக்கும்

பாயுமில்லே ரதியுமில்லே
பாயுமந்த நதியுமில்லே
வெளிச் சத்தம் கேட்பதில்லே
உறக்கம் உறங்கப் போனதெங்கோ...

செயற்கயாகிப் போகுது
இந்த பூமி
இயற்கை சாமி(யே)
நீ யாருன்னு காமி

நாணலைச் சேகரித்து
பனவோலையில் நாரெடுத்து
காலத்தில் தவமிருந்து
நயமுடன் பாய் முடைந்து

வண்ணக் கனவுகள்
வழங்கிவந்தான் நெசவன்
அவன் கனவுகள்
திருடிய நாம் களவன்



வெள்ளி, 1 நவம்பர், 2019

பத்தமடை பாய்

மரத்தை
தொட்டுச் செல்லும் காற்று
சிறு நாணலை மட்டும்
வளைத்து முத்தமிடும்

யாருடைய பேராசை
புயலாகிப் போனதோ...

இயற்கைப் பாயின்
இன்பக் கனவுகளை
ஃபோம் மெத்தைகள்
தருவதில்லை

உணர்வுகள் வழி
பேசிய காலங்கள் மறைந்து
சைகைகளில்
பேசிய காலங்கள் தொலைந்து
வார்த்தைகளில்
பேசிய காலங்கள் கடந்து
காட்சிகள் வழி
பேசிக்கொண்டு இருக்கிறேன்
உன்னோடு

எங்கே
என்னோடு
யார் பேசுவாரோ...

நெருப்பு
காற்றில் ஊசலாடி
புகையாகி
சாம்பலாய் மீண்டும்
காற்றில் கரைந்து
காணாமல் போகிறது...

மறைந்த உணர்வுகளின் காலடியில்
மண்டியிட்டு அழுகிறேன்
இல்லாத கால்களை
ஈரம் எப்போது நனைக்கும்...


வியாழன், 31 அக்டோபர், 2019

பணத்தைப் பெருக்குவதும்
குப்பையைப் பொறுக்குவதும்
மகிழ்சியை அனாதை ஆக்குகிறது

புதன், 30 அக்டோபர், 2019

கவிதைகள்
என் வழி வந்து
இறங்கையில்
நம்பத் தோன்றுகிறது
சாமி
சிலரில் வந்து
இறங்கும் என

சாமி இறங்கியவன்
இறந்து விடுகிறான்
வேறு ஒருவனாய்
பிறந்து விடுகிறான்

பிறந்தவனுக்கு
சாமி
கற்ப்பிக்கப் படுகிறது

தன்னை உணர்ந்தவனை
உயிர்பலி கேட்கும் சாமி
அறிந்தவனுக்கு மட்டும்
அடைக்கலம் கொடுக்கிறது

சொர்க்கத்தில் வாழ்பவர்கள்
இதயத்தில் இருக்கிறார்கள்
நரகத்தில் வாழ்பவர்கள்
கண்ட இடங்களில் எல்லாம்
இருக்கிறார்கள்

அடைக்கலம் சிறை
உயிர்பலி சுதந்திரம்

பறந்துத் திரிபவர்கள்
வணங்குவது இல்லை
வணங்கும் கைகள்
பறப்பது இல்லை


மூளைகளின் முயற்சி
ஒரு குழந்தையைப் புதைத்தது
இதயங்களின் முனைப்பு
ஒரு ஆட்டுக்குட்டியை மீீீட்டது



செவ்வாய், 29 அக்டோபர், 2019

பத்து லட்சம் என்பதால்
பரிதாபமாகிப் போனாயோ...

பல ஆயிரம் கோடிகளெல்லாம்
பகட்டாய் உலவுகிறது
பல நூறு தவறு செய்து

வெறும் கையுடன் பிறந்த
ஒரு குற்றத்திற்காகவே
இங்கு பலர்
கொல்லப்படுகிறார்

இரண்டு கைகளில்
கிடைப்பது போதும்
ஒரு கைக்கும் கிடைக்காமல்
பறிப்பது பாவம்

பேராசையால்
பறிக்கும் குழிகளில் தான்
எத்தனைச் சடலங்கள்...

எவர் சேர்த்துவைத்த
ஒவ்வொரு பத்து லட்சமும்
ஒரு படுகொலை

எந்த
சட்டமும் பேசாது
சாமியும் பேசாது

பல்கிப் பெருகிக்
கொழுத்தப் பணக்காரர்களே
உங்களுக்கு
ஒருபோதும் கூசாதா

வலி
வரும்போது மட்டும் உணரும்
உங்கள் இதயம்
பிறர் வலி பற்றிப்
பேசாதா...

திங்கள், 28 அக்டோபர், 2019

சுர்ஜித்

88 அடிக்குள்
இறங்க முடியாதவனா
கடவுள்

6 அடிக்குள்
இறங்கிய நீதான்
கடவுள்

மூடி விடுங்கள்
எல்லாச் சவக் குழிகளையும்
3 நாட்களில்
உயிர்த்தெழுவான்...

மூன்று நாட்களாய்
சூரியன் வந்தும்
விடியல் இல்லை

சுர்ஜித்
வந்து விடியட்டும்
நாளை...

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

தண்ணீர்
விலையாகிப் போனது
கண்ணீர்
மதிப்பில்லாமல் போனது

நிலாவில்
நீர்த் தேடுகிறார்கள்
குழாயில்
குழந்தைத் தவிக்கிறது

 கண்கள்
மூடாமல் காத்திருக்கிறோம்
கடவுள்
இருக்கிறாரா பார்த்துவிடுவோம்

சனி, 26 அக்டோபர், 2019

எவர்
மண்ணிலும் நெஞ்சிலும்
ஈரமில்லை

குழிப் பறிப்பதற்கு
பழகிவிட்ட சமூகம்
பணத்தை மட்டுமே
பூட்டி வைக்கிறது

தலைக் கவசம்
விற்க்கச் சென்றுவிட்டாள்
எங்கள் நீதி தேவதை

ஆழ்குழாய்க் கிணறுகள்
கீழே இருப்பதால்
அரசியல்வாதிகள் அதிகாரிகள்
நேர்கொண்டப் பார்வையில்
விழாமல் போனது

விளம்பரம் தேடும்
பணியின் ஊடாக
பெரும் மனதோடு
உறவாடும் ஊடகங்கள்

இளைஞர்கள் எல்லோரும்
மேலேத் தூக்கிக்கொண்டு இருக்கிறார்கள்
ஏதோவொரு கதாநாயகனை

தலை குனிந்து
நிற்பது வீண்
தேடுதலோ தேர்தலோ
நாம் தேடுபவர்கள்
ஆழ்குழிக்குள்...

வெள்ளி, 25 அக்டோபர், 2019

நான்
என்ற சிறு கனவு
எப்போதோ முடிந்திருக்கும்

நீ
வந்து சேர்ந்ததால்
இன்னும் தொடர்கிறது...

நான் வளர்ந்து
நாம் ஆனது
பெருங்கனவு

வியாழன், 24 அக்டோபர், 2019


பறவைகளும் பூச்சுகளும்
பாடசாலை போவதில்லை
வண்ணத்துப்பூச்சிகளும்
தேவசாலை போவதில்லை
மண்ணில் உயிரோவியமாய்
விவசாயம் செய்துவிடும்
விளையும் யாவையுமே
பொதுவென்று விட்டுவிடும்
சாலையிட்டு வாழும் நீயோ
விஷச்சாயம் மண்ணிலிட்டாய்
சுணக்கமின்றி தந்த மண்ணை
இரக்கமின்றி கொன்றுவிட்டாய்
புழுவாய் பூச்சாய்
மாறும் மனிதா
உணவு ஊட்டி
வளர்த்த உன்னை
இறந்தும் மீண்டும்
உணவாய் உறவாய்
உன் முன்னோர் தானே
காணும் இயற்கை

புதன், 23 அக்டோபர், 2019

அழகில் மயங்கி அமர்ந்தேன்
தேனில் மயங்கிப் பறந்தேன்
மலரைக் காணவில்லை
மயக்கம் தேடுகிறேன்...

செவ்வாய், 22 அக்டோபர், 2019

சுமை

சுருண்டு போன
வெண்முடி கண்டதும்
சுருட்டி வைத்தனர்
பாயைப்போல மூலையில்

எப்போதாவது
விரித்து வைப்பர்
விசாலமாய்
வீட்டில் விருந்தினர்
வரும்போது

நாட்கள்
இப்படியே போனது
முகத்தில்
சுருக்கங்கள் பலவானது

மேலோட்டமாய்
சிலர் பார்த்துவிட்டுக்
கூறினர்...
முகத்தில்
சுருக்கங்கள் அதிகமென்று
மன
இறுக்கங்களைக் காண
இயலாது போனதால்

யார்
வந்து சென்றாலென்ன...

சுழலும்
காற்றாடிக் காற்றினில்
புரளும்
நாட்காட்டி வரிசையில்
இவள் கண்கள்

அந்த
மார்கழி மாதத்தின்
மரண தினத்தை
எண்ணியவாறு...

திங்கள், 21 அக்டோபர், 2019

என்னை நான் அறிவேன்
அந்த உன்னதமான தருணத்திலே...
சிந்தை நீ

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

நட்சத்திரங்களே இல்லாத வானத்தில்
நிலவின் சோகம்
நிரம்பி இருக்கிறது

சனி, 19 அக்டோபர், 2019


இட்லி
வெந்து கொண்டு இருக்கும்
இருந்தும் பிள்ளை
அழுது அடம் பிடிக்கும்
அம்மாவிடம்

நீ
வந்து விடுவாய்
இருந்தும்
அழுது புலம்புகிறேன்
தனிமையிடம்

வியாழன், 17 அக்டோபர், 2019

நதி சுமந்து செல்லும்
ஒளியைப் போல
உன் நினைவுகளோடு நான்

புதன், 16 அக்டோபர், 2019

நிலவு
தேடிப் பார்க்கிறது
படித்துறையில்...

பகலெல்லாம் உன்னைத்
தேடி அலைந்து விட்டு
உறங்கிப் போனானோ

இல்லை
நீ தோன்றி இருப்பது
அவன் கனவிலா...

செவ்வாய், 15 அக்டோபர், 2019


சுவாசம் இல்லை
உணவு இல்லை
உடை இல்லை
மொழி இல்லை
மதம் இல்லை
ஜாதி இல்லை
கண்ணீர் இல்லை
சிரிப்பு இல்லை
பொறாமை இல்லை
கோபம் இல்லை
ரத்தம் இல்லை
காதல் இல்லை
காமம் இல்லை
நம்ப முடியவில்லை
இது என் நிழலா...

திங்கள், 14 அக்டோபர், 2019

அவன்
ஏக்கம் தாங்காமல் எங்கள்
இலைகள் எல்லாம் இறங்கியது

நீ
இறங்க மாட்டாயா
வெண்ணிலவே

மண் பிடித்துள்ள எங்களை
அவன் பித்து பிடிப்பதற்குள்
வந்துவிடு
ஏழைப் படும்
பாடு எல்லாம்
பணக்காரர் ஆக்காதா

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

காத்திருப்புகள்
அழகாகவே தொடங்குகிறது
விடியலைப் போல

நேரம் கூடக் கூட
வாடிப் போகும்
பூவினைப் போல

ஆறுதலாய்
உன் கனவு வரும்
நிலவினைப் போல

கண் விழித்தால்
விடியல் வரும்
வழக்கத்தைப் போல...




சனி, 12 அக்டோபர், 2019

நிலவு:
நான் உன்னைப் பார்க்கத்தான் வருகிறேன்
ஆனால் நீயோ
நான் போகும் வரை
உன் இமைகளைத் திறப்பதே இல்லை

நான்:
என் இமைகள் மூடிய
இரவுக்குள் தான்
நீ இருக்கிறாய்

வெள்ளை ரோஜா

மொத்த சிவப்பையும்
உறிஞ்சி எடுத்ததொரு
முத்தம்

வியாழன், 10 அக்டோபர், 2019

தேனீர் கோப்பையினில்
தினம் உந்தன் நினைவுகள்
அருந்துகிறேன்...

புதன், 9 அக்டோபர், 2019

மூன்று நாட்கள்
சுவாசத்தைத் தந்து சென்றாய்
காலம் முழுவதும் வாழ்வதற்கு...

செவ்வாய், 8 அக்டோபர், 2019

ஷேடோ...

அவள் இனிமையானவள்
முழுமையானவள்

முன்னிருந்து இழுப்பவள்
பின்னிருந்து மேய்ப்பவள்

விஸ்வரூபம் எடுப்பவள்
என்னைத் தாங்கி நடப்பவள்

பாதம் குத்த பாயும் முள்ளின்
மீது பாய்ந்து விழுபவள்
அவள் காயம்கொண்டு ரத்தம்
நனைக்க என்னில் வலியின் யுத்தம்

எப்போதும் என்னைத் தொடர்பவள்
இருட்டில் ஒளிந்து ரசிப்பவள்
நான் துயில போர்த்தி அணைப்பவள்

என் உதட்டை நானே கடித்தேனா
உன் இதழின் தேனைக் குடித்தேனா
நிழல் உந்தன் மாயங்கள்
நிழலுலகின் மர்மங்கள்

எரித்தாலும் புதைத்தாலும்
இறுதிவரை தொடர்ந்து வரும்
நிழல் அவள்

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
எனக்காகவே பிறப்பவள்

அவள் நிஜப் பெயரை
வெளியில் சொல்வதில்லை
அவள் பெயர் கூட என்னை
விட்டு வெளியேறிட விரும்புவதில்லை

அவள் நிஜம் வாழும் என் இதயம்
அதனால் தான் எனக்கு உதயம்

நிஜங்கள் பிரிந்த போது எங்கள்
நிழல்களைப் பகிர்ந்து கொண்டோம்
தினம் உதயம் எங்களைப் பார்க்கிறது
நாங்கள் நிழலைப் பார்த்தே வாழ்கிறோம்

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

உன்னையே உலகமாக நினைத்தேன்
வளர்ந்து வளர்ந்து
உலகமே நீயாகிப் போனாய்

வற்றிய நதியில் கற்கள்

பாறை மனம் உடைந்து
உன்னை வரைகிறது

கானல் நீர் வடித்து
ஜீவநதி உயிர்க்கிறது

உன்
நெளிவு சுழிவுகளை
மனம்
நீந்திக் களிக்கிறது

சனி, 5 அக்டோபர், 2019

பச்சையிலிருந்து நீலத்திற்கு
ஒரு பயணம்
வாழ்க்கை
தனிமையின் விரல் பிடித்து
அழைத்துச் செல்கின்றன
நினைவுக் கரங்கள்

புன்னகையால் கிள்ளிவிட்டு
கண்ணீரில் மூழ்கச் செய்யும்
விசித்திரக் கரங்கள்

எந்த வயதிலும்
நடைபழக ஏந்திச் செல்லும்
நம்பிக்கைக் கரங்கள்

பழகிய நடையை
கைபிடித்துக் கூட்டிச் செல்லும்
மாயக் கரங்கள்

உன்னை உதறிவிட்டு
நடந்து திரிகின்றன சில
நடைப் பிணங்கள்

இரவைத் தவறவிட்ட
விட்டில் பூச்சிகள்
வெளிச்சம் தேடியே
மாய்த்துக் கொள்கின்றன 

வியாழன், 3 அக்டோபர், 2019

மூழ்கும் போது
சிலர் இறக்கிறார்கள்
சிலர் பிறக்கிறார்கள்

செவ்வாய், 1 அக்டோபர், 2019

அரை ஆடையின் பொன் சிரிப்பு

பெரும்பான்மையான மக்களின்
பிரதிபலிப்பு தலைவன்
உன் சிரிப்பில்
பார்க்க முடிகிறது அந்த
கள்ளம் கபடம் அற்ற மக்களை


இன்று
இந்தியாவின்
அரை நிர்வாணத்தை
ஆடம்பர ஆடை கொண்டும்
அறை நிர்வாணத்தை
ஆடம்பர மாளிகை கொண்டும்
மறைத்து விட்டார்
எங்கள் தலைவர்
எங்கள் பிரதிபலிப்பு...


உன்
அரை நிர்வாணத்தின்
அர்த்தம் விளங்காதவர்கள்
அந்த
முழு நிலவின்
ஆடை அவிழ்க்கிறார்கள்


பெரும்பான்மை
சிறுபான்மையை
மறைத்துவிட்டதா...
மறந்துவிட்டதா...


உத்தமர் உன்னை
மறைத்தார்களா...
மறந்தார்களா...


எத்தனை
நாடுகளுக்கு சென்றாலும்
மீட்டுவர முடியாது
உலக வங்கியிலும் கிடைக்காது
அரை ஆடையின்  பொன் சிரிப்பு

திங்கள், 30 செப்டம்பர், 2019

பெண்ணின் புற அழகைத் தாண்டிய இரகசியங்கள்

இமயத்தை ரசிக்காமல்
எப்படி தாண்ட முடியும்

கானகத்தில் தொலைந்தால் தான்
அதன் இரகசியங்களை அறியமுடியும்

புத்திசாலிகளுக்கு
தொலைந்து போவது
அவமானம்

முட்டாள்களுக்கு
தொலைந்து போவதில்
பயம்

இரகசியங்கள்
இரகசியமாகவே...

மனப்பிறழ்வு

உடலென்னும் சிறையில்
நாம் அவர்களைப் பார்க்கலாம்
உலகென்னும் சிறையில்
அவர்கள் நம்மைப் பார்க்கலாம்

அவர்கள்
புறத்தை அலங்கரிப்பதில்லை
அகத்தின் அலங்காரம்
நமக்குப் புரிவதில்லை

யார் இங்கு
மெய்யை மெய்யாய் அறிந்தவர்
நிஜங்கள் பொதுவானது அல்ல

சமூகம் ஒரு புனைவு
சக மனிதர்களின் கனவு
யாரிடம் இல்லை மனப்பிறழ்வு
சித்தன் கூட பித்தன் தானே

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

என்னுடன்
தோற்க நினைப்பதாலேயே
நீ வென்றுவிடுகிறாய்
உன்னை
வெல்லும் துடிப்பிலேயே
நான் தோல்வியுறுகிறேன்

முட்டி மோதிய
எனக்குத் தெரியும்
உனது வலிமை

விழச் செய்யும்
உன் பார்வைதான்
எழவும் செய்யும்

இந்தக்
காகிதப் படகைத்
தாங்கிக் கொண்ட
கருணைக் கடல்
நீ

உன்
வெப்பங் கலந்த
மூச்சுதான் என்னை
முட்டி முட்டி இயக்கும்

எனது
வீழ்ச்சிக்கு காத்திருக்கும்
மண்ணில்
வெற்றி கொண்டு
வாழுகின்றேன்
இந்தப் பெண்ணில்...

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

அரசு மதுபானம் எனும் கல்

நிஜம்: குழந்தைப் பருவத்தில்
              மண்ணைத் தின்றேன்
              வளர்ந்து இப்போது
               கல்லைத் தின்றேன்
   
              என் வளர்ச்சி
              யாருக்கும் பிடிக்கவில்லை

நிழல்: மண் மூட வேண்டியதை
             கல் மூடப் போகிறது


நிழல் கண்டு
நிஜம் இங்கு
குழம்பியது

நிஜத்தையே
நிஜம் தொட்டு
வினவியது

நிஜத்தையே
நிஜம் இன்னும்
அறியவில்லை

நிஜம்
நிழலினைத் தொடர்ந்திட
முடியவில்லை

நிழல்
அதன் பயணத்தை
நிறுத்தவில்லை...

நிஜம் இங்கு
நிஜமாகவே தவிக்கிறது

நிழல்
நீங்கிப்போகும் முன்னே
கல்
நீக்க வேண்டும்

பனங்கல்
மாற்றாக வேண்டும்
மண்ணில்
நீர் ஊற்றாக 
வேண்டும்



செவ்வாய், 24 செப்டம்பர், 2019

நான்

நதியைப் பிரிந்து
நினைவில் நீந்தும்
படகு

வானம் பார்த்து
தவிக்கும் ஒற்றைச்
சிறகு

தடம் தவறி
சுற்றித் திரியும்
எறும்பு

குழந்தை ஒன்றின்
அரவணைக்கப் படாத
குறும்பு

பத்து மாதம்
கலையாமல் தொடரும்
கனவு

பிரசவ வலியுடன்
ஏங்கித் தவிக்கும்
கவிதை

உன் பேச்சுக்காக
தவம் கிடக்கும்
மௌனம்

புதன், 18 செப்டம்பர், 2019

உன்னைப் பிரிந்த தருணத்தில்
உனது புகைப்படங்கள்
வரமா சாபமா

கனத்துப் போன
இதயத்தில்
நிறைந்திருப்பது
இன்பமா துன்பமா

பிரிந்து வாழும்
நரகத்தில் ஏது
வரமும் இன்பமும்

திங்கள், 16 செப்டம்பர், 2019

கடவுளின் வார்த்தைகள்

யார் வளர்த்தால் என்ன
யார் பறித்தால் என்ன
சேர்ந்து உண்ணும் போது
எல்லாம் நியாயம் பெறுகிறது

எட்டு கால்களில்
நடப்பதைப் போலவே
அலைந்து திரியுங்கள்
உடலுக்கும் பாரம் இல்லை
உள்ளத்திற்கும் பாரம் இல்லை

உன்னையே பயன்படுத்தவில்லை
உனக்கு எதற்கு எந்திரத்தின் பயன்பாடு

காதலில் மட்டுமல்ல
வாழ்விலும் பைத்தியமாகு
உன்னைச் சுற்றியும்
வானவில் உருவாகும்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

உன் நினைவுகளின்
பேச்சுகள்தானே
பொன் வார்த்தைகள் ஆகின்றன

அந்த வார்த்தைகள் வாங்கும்
மூச்சினில்தானே
வாழ்க்கை இங்கு நீள்கின்றன

கானல் நீரை
அள்ளிக் குடித்து
தாகப் போரைத்
தள்ளிப் போட்டேன்

காலம் ஊனம் ஆகிறது
ஊர்ந்து ஊர்ந்து போகிறது
ஆலம் விழுதுகள் ஆசையைப் போல்
மண்ணைச் சேர்ந்திடத் தவழ்கிறது...

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

மூச்சாகினாய் நீ
மூச்சு விட்டதனால்
மூர்ச்சையானேன்

முக்காலமும் நீ
காலம் கைவிட்டதால்
காலமாகிவிட்டேன்

சொர்க்கம்
நரகம்
இரண்டுமே
உன் நினைவுகள்...

வியாழன், 12 செப்டம்பர், 2019

இரவின் பக்கங்களில்
உன்னை எழுதிக்கொண்டே இருக்கிறேன்

விடியல் சிந்தும்
கண்ணீர்ப் பனித்துளிகளில்
படித்துப் பார்
என் இதயத்தை...

குழந்தை மனம் வேண்டும்

அவர்கள் விரும்பியது கிடைக்கவில்லை எனில்
உயிர் விட்டு அழுகின்றனர்
கண்ணீரில் கரைகின்றனர்

அன்பை முழம் போடத் தெரியாதவர்கள்

பயத்தின் ஆழம் அறியாதவர்கள்

பரவசப் பட்டாம்பூச்சிகள்

அவர்கள்
ஒவ்வொரு வார்த்தையும்
மலரும்
தேன் சிந்தும்

ஆரவாரங்களில்
மூழ்கித் தொலைபவர்கள்


மெய்யாக வாழ்வதை அவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்


குழந்தைகளை வளருங்கள் கடமை

குழந்தை மனதை வளர்ப்பது மடமை

குழந்தை மனம் வேண்டும்

வாழ்வதற்கு...


புதன், 11 செப்டம்பர், 2019

உன் நினைவுகளோடு
குழந்தையைப் போல் விளையாடுகிறேன்,
கண்ணாமூச்சி தவிர...
நல்லவர்களால் செய்யப்பட்டச் சட்டம்
எப்படித் தீயவர்களுக்குப் பொருந்தும்

நல்லவர்கள் இடரி வீழ்வதைக் கூட
தாங்கிப் பிடிக்காது

நடந்துவந்த பாதையை நாமறியாமல் யாரறிவார்

அமைதி என்றுமே சாட்சியாய்
கூடவே பயணிக்கிறது

குற்றவாளிகள் என யாரும் இல்லை
குற்றச் சூழ்நிலைகள் தான் உருவாக்கப்படுகின்றன

இதில் பங்களிக்காதவர் பிறக்கவே இல்லை
பட்டாம்பூச்சியின் சிறகசைப்பிற்கும் பங்குண்டு
பட்டப்பகல் நட்டநடுஇரவு எதற்குமே விதிவிலக்கல்ல

கொடுக்குச் சுத்தியலால் தட்டித்தட்டி
அமைதியை மென்மேலும் குலைத்து
சட்டச் சிலந்திகள் கொழுத்துக் கொண்டே போகிறது

பாவம் இரைகள்...


செவ்வாய், 10 செப்டம்பர், 2019

வில் ஆகினாள்
காமன் அம்பில்
விசைக் கூட்டினாள்

விழி மின்சாரம் வீசி
என்னை விளக்காக்கினாள்

அவளைத் தவிர
அனைத்தையும் இருட்டாக்கினாள்

நனைக்காத அருவியொன்றை
உச்சந்தலையில் பாய்ச்சினாள்

கூடுவிட்டுக் கூடுபாயும்
மாயவித்தைக் காட்டினாள்

என்னில் அவளைத் தேடினாள்
அவளில் என்னைத் தேடினேன்
இருவருமே ஒன்றாய்த் தொலைந்தோம்
இதுவரமே இனிதாய்த் தொடர்ந்தோம்...

நிழலின் முத்தங்களில்
ஈரமானது கன்னமல்ல
நெஞ்சம்

சனி, 7 செப்டம்பர், 2019


நீ பார்த்த நான்
நான் அல்ல

முதன்முதலில்
நீ பார்த்த நான்
நான் அல்ல

முதன்முதலில்
உனைப் பார்த்த நான்
நான் அல்ல

பேசிப் பழகிய நான்
நான் அல்ல

சுற்றித் திரிந்த நான்
நான் அல்ல

தொட்டுப் பழகிய நான்
நான் அல்ல

உன் நெற்றிக் குங்குமம் வரைந்த நான்
நான் அல்ல

உன் இரத்தக் கடிதங்கள் படித்த நான்
நான் அல்ல

உன் காதில் பாடிய நான்
நான் அல்ல

நீ பாடிக் கேட்ட நான்
நான் அல்ல

உன் நிழலாக தொடர்ந்த நான்
நான் அல்ல

உன்னை விரும்பிய நான்
நான் அல்ல

உன்னோடு கோபித்த நான்
நான் அல்ல

சந்தேகம் கொண்ட நான்
நான் அல்ல

தீக் காயம் தந்த நான்
நான் அல்ல

தினம் பார்க்கக் காத்திருந்த நான்
நான் அல்ல

மறுநாள் பார்க்கும்வரை 
நினைத்திருந்த நான்
நான் அல்ல

ஏமாந்த நான்
நான் அல்ல

ஏமாற்றிய நான்
நான் அல்ல

வாக்குகள் கொடுத்த நான்
நான் அல்ல

வாக்கைத் தவறிய நான்
நான் அல்ல

நீ நம்பிய நான்
நான் அல்ல

நம்பிக்கை துரோகம் செய்த நான்
நான் அல்ல

நீ இல்லாமல் வாழும் நாட்களில்
நான் இல்லாமல் போனேன்
உன்னைத் தேடித்தேடி
நான் நீயாகிப் போனேன்

நீயாகிப் போன
நீதான் நான்
நிழற்கண்ணாடி வேண்டாம்
நேரில் உனை வந்து காண்

நான் நீயாகிப் போனேன்
நீ நான் ஆகினாயா?
உன்னை உணரச் செய்தாயே
என்னை உணரச் செய் தாயே...

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

கற்பனையில்
கடல் வார்த்து

உன்
நினைவு அலைகளில்
கால் நனைத்து

கனவுப் பூக்களுடன்
காத்திருப்பேன்...

எப்பொழுதும்
என்னைக் கட்டி அணைத்திருக்கும்
மௌனமே

ஒரு
வார்த்தை முத்தம்
தந்தாலென்ன...

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

எனக்கு மட்டும்
இரண்டு நிலவுகள்
பகலிலும் ஒன்று
என்னைப் பிரிவதேயில்லை

இடைவெளிகள் இருந்தும்
இறுக்கங்கள் தளராத அணைப்பு
மனக் குளத்தில்
நிலவின் பிம்பம் போல


நீங்காத வாசம்
நெஞ்சோடு தினம் பேசும்
யாரும் கேட்காத
ஊமை மொழி
கேட்டுக் கொண்டிருக்கையில்
இறைவா என்னை அழி

எதுவுமே நிரந்தரமில்லைதான்

உயிருள்ளவரை
இதய ஓசையும்
அவள் மீதான
எனது ஆசையும் தவிர...


என் உதடுகளில்
உன் உதட்டின் சுவடுகளை
நாவால் துழவுகிறேன்

சுவடறியாத காற்றை
தடம் தேடியே சுவாசிக்கிறேன்...

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

சொந்த வாழ்க்கைச்
சொல்லும் அறிவுரை,
பிறர் சொல்லிக்
கேட்பது வீண்...

ஒவ்வொரு நாழிகையும் கல்வி,
இறந்த காலத்திலும்
எதிர் காலத்திலும்
படித்து என்ன பயன்...

இயற்கையின் குழந்தையாய் இரு
உன் மூன்றாம் கண்ணைத் திறக்கும்

உண்மை அன்பை
நீ அறியாததுவே சோகம்...

புதன், 31 ஜூலை, 2019

மலரைப் போல
மௌனமாக உதிர்ந்துவிட்டாய்

நாட்கள்
நகர நகர தான்
நரகம் தெரிகிறது

சிறகைப் பிரிந்த
இறகின் தவிப்பு

மனதின் உள்ளே
எரிமலைக் குழம்பு

நரம்பு வெளிகளிலே
வலி வெள்ளம்

சுடு மணல்
மீன்யெனத் துள்ளும்

எங்கு ஓடியும்
உள்ளுக்குள் நீ

காசில்லாதவன்
உனக்காக மூச்சு வாங்கினேன்...

திங்கள், 22 ஜூலை, 2019

வாத்து

நீர் வானில் பறக்கும்
உன்னதப் பறவை

காலத்தைப் போல
சலனமில்லாத பயணம்

பறப்பதற்கு ஆசைப்பட்டு
இருப்பதை இழக்காத
யதார்த்தவாதி

தாமரைஇலைத் தண்ணீர் போல்
ஒட்டி ஒட்டாமல்
துறவி


திங்கள், 15 ஜூலை, 2019

மண்ணை அல்ல
என்னை முத்தமிடும்
மலைத் துளிகள்


விடிய விடிய
முத்தச் சத்தம்
இரவு முழுதும்
இன்ப யுத்தம்...


இன்பங்கள் மார்மீது
குவித்து வைப்பாள்
மூழ்கி முத்தெடுத்திட
முகம் அணைப்பாள்


பலமுறை மறித்தோம்
தொடத்தொட உயிர்த்தோம்
பிரிந்திட மனமில்லை
இருளுக்குள் புதைந்தோம்...


வெருமெனவே ஒளித்துவைப்பாள்
நித்தமெனைத் தேடவைப்பாள்
வேண்டுமென்றே தோற்க்கவைப்பாள்
இரகசியங்கள் பரிசளிப்பாள்


மொத்தமும் உன்னை
கொட்டித் தீர்த்துவிடு
என்னை முழுவதுமாய்
உன்னில் மூழ்கவிடு...


என்னை வாழவைக்க
தன்னை மாய்த்துக் கொள்வாள்
நீயெந்தன் இறைவியடி
உனைப்பிரிந்தனான் துறவியடி


வியாழன், 11 ஜூலை, 2019


இமைச் சிறகை
நீ சொடுக்க
இமயம் தாண்டி
நான் பறக்க...

தேன் இதழை
நீ பிதுக்க
ஆசை அணை
அது உடைக்க...

பாய்ந்துவரும் வெள்ளம்
சேரத்துடிக்கும் உள்ளம்
எதிர்காலம் கிடையாது
இறுதிவரை விளையாடு...

துணையென்ற வார்த்தைக்கு
உனையன்றி வேறேது
மண்வாரி இறைத்தாலும்
வேரன்பு மாறாது...

புதன், 10 ஜூலை, 2019

அறைப் பொட்டுத் தீப்பிழம்பு
புகைச் சேலைப் பூட்டினாள்

மையல் தோய்ந்த கண்களால்
மெய்யில் சூட்டைக் கூட்டினாள்

இடை வெளியைக் காட்டினாள்
இன்ப வீணை மீட்டினாள்

நாதம் காதினைக் கொஞ்சிட
நெஞ்சம் என்னில் சில்லிட
நெருங்கி நெருங்கி வந்தேன்
நெருடலோடு நின்றேன்

நான் இருள்

என்வெண்ணிலா
ஓர்நாள் மறைந்ததடி...

காமம் கொண்டு
காலம் கண்டு
விழுங்கி விட்டேன்
எனப் பிறர் நினைப்பார்

பிறிந்து நிற்கும்
என் துயர் யாரறிவார்

வளர்பிறை தேய்பிறை சுழலுதடி
என்வெண்ணிலா
ஓர்நாள் மறைந்ததடி...


செவ்வாய், 9 ஜூலை, 2019

நான் சேர்த்துவைத்த
உன் புன்னகைப் பூக்களுக்கு
தினம் கண்ணீர் வார்க்கிறேன்


உன் பெயரை மட்டுமே
மீண்டும் மீண்டும்
சொல்லிப் பார்க்கிறேன்


ஒலி அலைகள்
உன் உருவாய்
மாறக் கண்டேன்


கட்டி அணைக்க
எட்டிக் குதித்தேன்
இன்னும் மண்ணைச் சேரவில்லை


என்னைத் தொலைத்துவிட்டு
உன் இதழ்கள்
துளவுகிறேன்


மீண்டும் எனை
மீட்டெடுக்கும் உந்தன்
முத்தம்...

ஞாயிறு, 7 ஜூலை, 2019

என் அறை
முழுவதும் ஏக்கம்,
கண்கள் எதையோ
தேடித்தேடித் தோற்கும்...


இதயம் நிரம்ப
வலிகள் பூக்கும்,
விடியவிடிய நினைவுகள்
மணமாய் கமழும்...


இரண்டு எழுத்துகள்தான்
அவள் பெயர், 
ஏனோ என் மனதில்
நீண்டு கொண்டே போகிறது


நினைவிலும் கனவிலும்
கலந்துவிட்டாய்
கண்களில் இருந்து
ஏன் மறைந்துவிட்டாய்


சுவடுகள் இல்லாமல்
நடந்து போகிறாய்
வலிகளை மட்டும் விதைகளாய்
மனதில் பதிந்து போகிறாய்


விதைகள் விளைகின்றன
இன்ப மின்னல் பூக்கின்றன
உன் கனவைக் கைபிடித்து
காத்திருப்பேன் உயிர்ப்பிழைத்து...

ஞாயிறு, 23 ஜூன், 2019

மழை...
அந்த நேரம்
என் விழி
ஐன்னல் ஓரம்


எனைத் தொடும்
குளிர் காற்று
நெஞ்சில் எழும்
கவிதை ஊற்று


யாரும் இல்லை வெளியே
என சாரல் வந்து அழைக்கும்


அதை வெளியில் சென்று காண
இருளும் என்னை அணைக்கும்


தெரியாத
எனைக் கண்டு
மின்னல் கூட சிரிக்கும்


அறியாத
எந்தன் காதில்
இடி கூட இசைக்கும்


மழை நீரில்
எழும் குமிழ்கள்
அவள் நினைவை எழுப்பும்


வானவில்லின்
காட்சி கூட
அவள் முகமாய் ஜொலிக்கும்


மனம்
இவையாவும் பிரியாத
வரம் கேட்டுத் தவிக்கும்


மழையே
நீ தொடர்வாயா
நான் கேட்ட
வரம் தருவாயா...

ஞாயிறு, 9 ஜூன், 2019

இரவெல்லாம்
உன்னோடுப் பேசிக்கொண்டே
தூங்கிப் போகிறேன்...


விழித்தவுடன் நீ இல்லாது,
மனம் கனத்துப் போகிறேன்...


உடன் நான்
வேண்டுவது ஒன்றுதான்
"பகலெல்லாம் கனவாகிப் போகட்டும்,
இரவே மெய்யாகித் தொடரட்டும்..."


ஒற்றை மரத்தின்
உயிரே உறவே குயிலே,
உன் ராகம் கேட்க ஏங்கினேன்.


நீர் இன்றி இல்லை,
நீ இன்றி வாடும்
கோடை இது...

 

சனி, 8 ஜூன், 2019

உன் நினைவுச் சிகரங்களில்
உருகி வரும் கண்ணீர்
உதடுகளை முத்தமிடும்
மொத்த காயங்களுக்கும் மருந்திடும்


காத்துக்கிடக்கும் உதடுகள்
வரங்கள் கேட்பது கண்ணீரை
நீ வந்து சேரும்வரை...


வற்றிப்போகாத விழிக் குளங்கள்
தங்க மீனூக்குக் காத்திருக்கும்
இரவு பகலெல்லாம் விழித்திருக்கும்
நீ நீந்தி விளையாடப் பிழைத்திருக்கும்...

வியாழன், 16 மே, 2019

அதிகாலைப் பனியின் பிரிவில்
இலைகள் சிந்தும் கண்ணீர்,
மண்ணில்
என் இரவுத் துயரங்களையும்
சுமந்து கல்லறையானது...


தன்னந்தனியாக
குளத்தில் கல் எறிந்து கொண்டே இருக்கிறேன்,
நீயும் மறைவதாய் இல்லை
நானும் விடுவதாய் இல்லை...


உன் நியாபகங்கள் எல்லாம்
அலையலையாய் வட்டமிடும்,
நீர்த் துளிகள் தாவிவந்து
கண்ணத்தை முத்தமிடும்...


அன்பே
உன் உதட்டுடன் உறவாடினேன்
முத்தத்தில் உறைந்த நீ
மறைந்து போனாய்
வெளிச்சம் இன்றி,
நிஜம் மட்டுமல்ல
நிழலையும் நேசிக்கிறேன்.

    

வியாழன், 18 ஏப்ரல், 2019

பாடல் 3

ராசாத்தி
என் ராசாத்தி
என் ராசாத்தி
உன்னாலே நெஞ்செல்லாம்
காதல் தீ

உனக்காகவே
நான் வாழ்கிறேன்
நீ வேண்டுமே

உறங்காமலே
நான் பாடினேன்
உன் உறவு வேண்டுமே

ராசாத்தி
என் ராசாத்தி



கட்டியணைத்தேன்
முத்தம் கொடுத்தேன்
முடிவு இல்லையே

உன்னை
விட்டு விலகி
வந்த பிறகும்
பிரிவு இல்லையே

மீண்டும் மீண்டும் காணவே
காதல் வானில் போகவே
நீ வர வேண்டும்
வரம் தர வேண்டும்

ராசாத்தி
என் ராசாத்தி
என் ராசாத்தி
உன்னாலே நெஞ்செல்லாம்
காதல் தீ



உள்ளம் கலந்த
உயிர் இணைந்த
உறவு நீயம்மா

உன்னை இழந்த
சிறகு ஒடிந்த
பறவை நானம்மா

காயம் என்னில் ஆறவே
காலம் முழுதும் வாழவே
உன் மடி வேண்டும்
அதில் துயில் வேண்டும்
    

சனி, 13 ஏப்ரல், 2019

பாடல் 2

உனைத் தொட்ட காற்று
எந்தன் காதில் சொன்னது
உணர்வுகளைத் தீண்டி
நெஞ்சில் வெட்கம் தந்தது

அது சொன்னதை அறிவாயா...
எந்தன் உணர்வுகள் புரிவாயா...

கண்ணை மூடி திறக்கும் முன்னே
கண்ணெதிரே நீ வருவாயா

(உனைத் தொட்ட காற்று
எந்தன் காதில் சொன்னது
உணர்வுகளைத் தீண்டி
நெஞ்சில் வெட்கம் தந்தது)





காற்று சொன்ன வார்த்தைகள்
உளியாய் மாறி இதயத்தை
காதல் என்னும் காலம் அழியா
சிற்பம் செய்தது

பல்லவரின் சிற்பங்கள்
என் இதயத்தைக் கண்டு சென்று
கடற்கரையில் கண்ணீராய்
அதன் கர்வம் தீர்ந்தது

நீ கொஞ்சம் கொஞ்சமாய்
நான் வளர்த்த நிலவடி
தேய்பிறையே இருக்காது
என்னைக் காதலி...





தேனீகளாய்
என் மனங்களடி
உன்னைத் தேடிச் சென்று
என்னில் சேர்த்ததடி

உயிரைக் கொடுத்து
உனைக் காக்குமடி
உன் உறவைக் கொண்டு
உயிர் வளர்க்குதடி

நீ கொஞ்சம் கொஞ்சமாய்
நான் வளர்த்த நிலவடி
தேய்பிறையே இருக்காது
என்னைக் காதலி...





நிலமாய் இங்கு நானடியே
நிலத்தடி நீராய் நீயடியோ
என்னில் நீயும் வற்றிப்போனால்
நிலம் அதிர்வு காணுதே

நிலம் நான்
பூக்கள் பூக்கவா
பூகம்பம் வார்க்கவா

நீ கொஞ்சம் கொஞ்சமாய்
நான் வளர்த்த நிலவடி
தேய்பிறையே இருக்காது
என்னைக் காதலி...


    

வியாழன், 11 ஏப்ரல், 2019

பாடல் 1

அறியாத ஒன்றாலே மனம் ஆர்வமாச்சி
அதைத்தேடிப் பின்னாலே கால்கள் போச்சு
முடியாத பயணம் ஒன்று தொடர்கதையாச்சு
அடிப்பெண்ணே உன்னால் என்மனம் அடிமையாச்சு


என்னுள்ளே உரையாடல்
ஏதேதோ விதிமீறல்
ஏதொன்றும் புரியாமல்
மனம் ஏங்கிப் போச்சு
என்னை நான் அறியாமல்
உடல் தூங்கிப் போச்சு


உன் சுவாசம் எந்தன் தென்றலாச்சு
என்னோடு ஏனோ கண்ணாம்பூச்சி


இரு கண்கள் இணை சேரும்
முடிவில்லா துளி நேரம்
முடிவுண்டு எனத் தோன்றும்
இது முடிவில்லா நீள் வானம்


கரைகாணாக் கண்கள்
இங்கு கண்ணீராச்சு
கடல் நீரே இல்லாமல்
ஒரு உப்பளமாச்சு


என் வாழ்க்கை
ஏனோ இங்கு சொப்பனமாச்சு
நீ வந்து சேர்ந்தால்தான்
நீளும் மூச்சு


உன் சுவாசம் எந்தன் தென்றல் ஆச்சு
என்னோடு ஏனோ கண்ணாம்பூச்சி

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

நீ இருந்தவரை
கண்ணீரும் இனித்ததடி
தேவதையைப் பிரிந்து விட்டேன்
தேன் கூடக் கசக்குதடி

நாழிகைகள் அம்பாகி
நெஞ்செல்லாம் பாயுதடி
அட்சதைகள் தூவும் வானம்
அமில மழைப் பொழியுதடி

உன்னைச் சேர
துடிக்கும் இதயம்
நித்தம் தேடும்
இமைக்கா இமையும்

சப்தம் போடும்
ஊமை மனதும்
யுத்தம் செய்யும்
உந்தன் நினைவும்

சூழல் எல்லாம்
சிறையாகிப் போனது
காலம் எனக்கு
கல்லறை வார்க்குது

 
    

சனி, 16 மார்ச், 2019

காதல் மாறுவதே இல்லை
வயதுக்கேற்ப
நமது பார்வைதான்
மாறுகிறது


காதல்
காதலாகவே காத்துக்கிடக்கும்
ஓர் இயற்கை


இயற்கை
மனிதர்களால் கைவிடப்பட்ட
அனாதை


அனாதை இல்லங்களில்
அபூர்வ கொண்டாட்டங்கள் போல, அரிதாகவே அரிதாரம் கொள்கிறது
காதல்...

சனி, 23 பிப்ரவரி, 2019

எங்கு வேண்டுமானாலும்
பயணப்படலாம்
எங்கே லகிக்கிறோமோ
அங்கே நிலை பெறலாம்

நிலை என்பதே
நிரந்திரம் இல்லாத பொழுது
வாழ்க்கை மெல்ல நகர்ந்து
நித்தியக் கலையாய் மாறும்

இலக்கணம் இல்லாத
ஓவியங்கள்தான்
நாளை இலக்கியம் ஆகின்றது


தம்மை அறியவைக்கும்
படைப்பை விட
உம்மை உணரவைக்கும்
கவித்துவம் தனித்துவம்


நீதான் பெண்ணே எனக்கு
இலக்கியம்
கவித்துவம்
என்றும் தனித்துவம்...

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

காதல்

ஒவ்வொரு நொடியும்
காத்துக்கொண்டிருக்கிறேன்


அனாதை ஆக்கிவிட்டு
அனைவருமே பொருளைத் தேடி


பொருட்களால் நிரப்பி
வாழ்க்கையைப்
பொருளற்றதாக்கிவிட்டார்


மின்னலை இழந்தக்
கண்களைக் காட்டிலும்
மின்னலால்
கண்களை இழந்திடலாம்


தென்றலை மறுத்த
ஜன்னலைக் காட்டிலும்
தென்றலால்
ஜன்னல்கள் பொடிபடலாம்


ஜீவனைப் பிரிந்து
ஜீவிதம் எதற்கு... 
    

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

காதினில் சலங்கையின்
ஓர் பரல் அசைத்து
எனை அணைத்திடும்
நிசப்தத்தைக் கலைத்திடுவாள்

காற்றினும் மேவிய
தழுவல்கள் தந்து
என்னுள்
உயிர் மூச்சினைத்
தாழிட்டுப் பூட்டுகிறாள்

உதட்டோடு உறவாடி
உயிர் மூச்சை உறிஞ்சுகிறாள்
ஜீவச் சூடேற்றி
மொத்தமெனை ஆளுகின்றாள்

ஜீவன் சூடேறி
மேலேறி போகிறது
காலன் கண் பார்த்து
மெதுவாகச் சிரிக்கிறது...

செவ்வாய், 29 ஜனவரி, 2019

அணைதனை மீறிடும் வெள்ளம் போல
இமைகளைக் கடந்திடும் கண்ணீர்


நான்குகடல் சூழ்ந்தன
நடுவினில் தனியென
வலியினில் புழுவென
நரம்புகள் துடித்தன


நீங்காத கூந்தல் வாசம்
நெஞ்சோடு தினம் பேசும்


யாரும் கேட்காத
ஊமை மொழி
நான் கேட்டுக்கொண்டிருக்கையிலேயே
என்னை அழி


உன்
விரல்களை இதழ்களை
பிரிந்திருக்க முடியவில்லை


புவி ஈர்ப்புவிசை தளர்ந்து
உடற்க்கூட்டை உள்ளம் பிரிந்து
தேடி அலைகிறது உன்னை
விரைவில் சேர்ந்துவிடு என்னை






    

புதன், 23 ஜனவரி, 2019

சர்க்கரையால் உன் பெயரெழுதிப் பார்த்திருந்தேன் இனிதாக
சீண்டிய சிற்றெறும்பு எல்லாம்
சிறகுகள் முளைத்துச்
சிட்டுக்குருவிகளாய்
வட்டம் அடிக்கின்றது என்னை


அறிந்ததிலிருந்து அறியாததற்க்குப் பயணம்
ஒவ்வொரு நொடியும் புதுமை ஆகிறாள்


இறந்த காலங்களை அழித்துக்கொண்டே
என்னில்  நிகழ்காலம் தீட்டுகின்றாள் 


ஓவியம் வரைந்துவிட்டு
ஓடி ஒளிந்துக் கொண்டாள்
கண்கள் வர மறுத்தாள்
கண்ணீர்க் குடம் நிறைத்தாள்


என்னையிழந்த தூக்கம் தந்த
உன் மடிதான் கிடைத்திடுமா
அந்த நிம்மதிதான் திரும்பிடுமா...


உன் புருவ மத்தியின் புதைக்குழிக்குள்
என்னைப் புதையல் ஆக்கிவிடு





திங்கள், 21 ஜனவரி, 2019

நெஞ்சம் நிறைந்தவளே
உன் பிரிவால்
என் மஞ்சம் நனையுதடி

உள்ளம் உருகுதடி
உடல் யாவும் எரியுதடி

ஓராயிரம் கோடி முறை
உன் பெயர்ச் சொல்லி ஓயவில்லை
ஈராயிரம் கோடித் துளி
கண்ணீர்ப் பெருகுதடி

உள்ளம் கிறுக்குதடி
எனக்குள்ளே உன் பெயர் செதுக்குதடி
மண்டைக் குடையுதடி
உள்ளுக்குள் பூகம்பம் வெடிக்குதடி


எரிமலைக் குழம்பெனவே
நெஞ்சுக்குள் வேதனைப் பொங்குதடி
காலத்தால் பசுமை பூக்குமடி
உனை என்னிடம் சேர்க்குமடி 

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

கட்டந்தரையில் தலையணையாய் உன் நினைவு
கட்டெறும்பு எனைக் கடித்தது போல் உணர்வு


நீ கண் இமைத்து
வந்த தென்றலில் மனம் களவு
காரிருள் சூழ்ந்திடக்
காண்பதெல்லாம் உந்தன் கனவு


உவமை கூற உன் அழகிற்கு உலகில் பொருளில்லை
உனைக் கண்டு கவியெழுதாத் தூரிகை எனதில்லை


உளி கொண்டு உணர்வின்றி வடிப்பது சிலையில்லை
உனையன்பே இழந்துவிட்டாள் என் வாழ்வில் உயிரில்லை

சனி, 19 ஜனவரி, 2019

நதியின் தேடல் போல
என் ரதியைத் தேடுகிறேன்
நினைவுப் பாறையில்
முட்டி மோதி
பயணம் தொடருகிறேன்


மழையால் அல்ல
விழியால் உண்டான
நதி இது


விழிகளைப் பிடுங்கி
எறியத் தோன்றுகிறது
நீ இருக்கும் இடத்திற்கு
முகவரி இல்லாததால்
விழித்துக் கொண்டிருக்கிறேன்


நீ காதோடு பேசிய
வார்த்தைகள் யாவும்
என் வாழ்க்கைப் படத்தின்
பின்னணி இசையாகிறது


வண்ணமிழந்த வானவில்லானேன்
பிரிவு போதுமடி
உன்னோடு சேர்ந்து இறப்பதும்
என் வாழ்வின் தொடக்கமடி



வெள்ளி, 18 ஜனவரி, 2019

தூரச் சென்ற என்னை
துரத்தி வந்த காற்று

தொட்டணைத்த நேரம்
கண்கள்
திரும்பி உற்றுத் தேடும்

மனதில் நின்ற உருவம்
மாயை ஆகிப் போகும்

மனதின் இந்த தாகம்
என்றும் தீரா சோகம்

செவ்வாய், 15 ஜனவரி, 2019

புத்தகத்தில் மறைத்து வைத்த
மயிலிறகின் கவிதை


குழந்தைகளோடு விளையாடிய எனக்கு
புது அனுபவம்
உன்னோடு விளையாடியது


உன் ஸ்பரிசத்தில் தான்
என் கலைக் குறியீடு
விளங்கியது


எனைக் கொண்டு
உன் மேனியில்
அவன் வரைந்த
ஓவியங்களின் அர்த்தங்கள்
விரிந்துகொண்டே போகிறது


முன்பெல்லாம்
அவன் சிரிப்பினில்
உன்னைக் காண்பேன்

இப்போதெல்லாம்
கண்ணீரை மட்டும் தான்
பார்க்க முடிகிறது


பிரிவின் ஏக்கத்தை
என்னைவிட யார் அறிவார்
புத்தகத்தை அவன்
திறந்து மூடும் போதெல்லாம்
எந்தன் பழைய ஞாபகங்கள்


அழுகைச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
என் மாயக் கண்களின்
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
முகம் கொடுப்பேன்
அவன் முத்தமிட

அந்த முத்தங்கள்
எனக்கானதல்ல


குழந்தைகளின் பிடிவாதங்களை
நன்கு அறிந்ததால் சொல்கிறேன்
நீ அவனை சேர்ந்து விடு
காதல் துயரத்தால் இறந்தவர்களின்
கல்லறைகளிலும்
எனக்கு அனுபவம் உண்டு


அடுத்த முறை
அவன் புன்னகைக்
காணக் காத்திருக்கிறேன்
எனது சுயநலத்தோடும்...

திங்கள், 14 ஜனவரி, 2019

நெடுநாள் அமாவாசை
என் நிலவைக் காணவில்லை


தென்றலின்
காலைக் கட்டிப்பிடித்து
தூது செல்லக் கதறினேன்
என் கண்ணீரை உணர்ந்தாயா
அதன் ஈரத்தில்


குயிலிடம்
என் நிலை கூறினேனே
என் தனிமை உணர்ந்தாயா
அதன் கீதத்தில்


வானம் என்னைப்
பரிதாபமாகப் பார்க்கிறது
என் கண்ணில்
நீயில்லை என்றால்
இந்த மண்ணில்
நான் இல்லை
என்பதை உணர்ந்து


உணர வேண்டிய நீ
உணரவில்லை எனப்
பித்துப் பிடிக்கிறது


கடற்கரையில்
உனது பாதங்களைத் தேடிச் சென்றேன்
எங்கும் காணவில்லை


அழித்திருக்கும் என்று
கோபத்தில்
அலைகளை எட்டி உதைத்தேன்


அக்கரையில்
நீ இருந்தால்
தள்ளிப் போய் விடு
சுனாமி வந்துவிடும்


எள்ளி நகைக்கும் நட்சத்திரங்களை
தலையால் முட்டித் தகர்க்கத் தோன்றுகிறது

வேண்டாம்

காலங்களை
உனக்காக மட்டுமே
கடக்க விரும்புகிறேன்



இரவினில் கண்களைப் பதித்துவிட்டு
பகலினில் குருடனாய் உலவுகின்றேன்
தேடித் தொடரவில்லை என்றால்
நாடி நின்றுவிடும் அல்லவா


உச்சி வேளையில் கூட
என்னைச் சுற்றியுள்ள
புல்வெளிகளில் பனித்துளிகள்


இருந்தும்
துக்கத்தில் அவைகளும்
துவண்டே போகின்றன


நீ வரும் வேளையில்
நான் அயர்ந்து இருந்தாள்
எனை முத்தமிட்டு எழுப்பு
நான் மீளாத் துயில்கொள்ளும் முன்


அனுதினமும் முழுநிலவாய்
நீ வேண்டும்...


வெள்ளி, 11 ஜனவரி, 2019

நீ
காத்திருந்த இடங்களை
கால்கள் கடக்க முடியவில்லை
உலகம் மறந்து நிற்கிறேன்
உன் நினைவால்
மண்ணை நனைக்கிறேன்

உனை
கடந்து போவது
மேகங்கள் இல்லை
என் நெஞ்சத்தின்
வலிப் புகைகள்

கானலாய்
உன் நினைவுகளை
பருகப் பருக
இதயத்தின் தாகம்
தீர்வதேயில்லை


கண்ணீர் குளத்தில்
கனவு குமிழ்கள்
உடைய உடைய
குளம்
நிறைந்து கொண்டேயிருக்கிறது

உனது
நினைவுச் சரணாலயத்தில்
காத்திருக்கிறேன்
காற்றில்லாமல்
மூச்சுத்திணறுவது போல்
நீ இல்லாமல் தவிக்கிறேன்
கல்லறையாகும் முன்
வந்துவிடு



புதன், 9 ஜனவரி, 2019

தளர விடு
தடவி கொடுப்பதற்கு
நான் இருக்கிறேன்

உன்
நெளிவு சுளிவுகளை
மனம்
நீந்திக் களிக்கிறது

உள்ளம் கலக்கிறது
உதடுகள் துடிக்கிறது
விரல்கள் விடுதலை கேட்கிறது

காத்திருப்பு
ஏனென்று தெரியவில்லை
கதகதப்பு குறையவில்லை

காதல் தனது
அரிதாரத்தை மெல்லக்கூட்டி
ரூபம் மாற்றுகிறது

அழகியல் கூடுகிறது
ஆழம்
மெல்ல ஈர்க்கிறது

தயக்க உடை கலைந்து
தாவி என்னை அணைக்கிறது

தப்பிப் பிழைக்கவே
பழகிய மனது
தற்கொலைக்கு தயாராகிறது

கட்டி அணைக்கும் போதுதான்
கனவு கலைந்தது
கண்கள் நனைந்தது...

செவ்வாய், 8 ஜனவரி, 2019

வாழ்க்கை பிரவாகத்தில்
சிறு துளி நான்

அதில்
ஆனந்த கூத்தும்
துயரத் தாண்டவமும்
எனது அனுபவங்கள்

மகா அனுபவம்
எங்கேயோ கடலாக
காத்திருக்கிறது

எல்லோரும்
அங்கே சங்கமிப்போம்
இப்போதைக்கு
பயணிப்போம்...

    

சனி, 5 ஜனவரி, 2019

உன்னை காதலிப்பது பாவம்
உனக்கு நரகம் தான்
என்று சொன்னவர்கள்
தீர்க்கதரிசிகள்

நீ இல்லாமல் இப்போது
நரகத்தில் தானே வாழ்கிறேன்

உன்னிடம்
நான் கொடுத்த
இதயத்தையாவது
சொர்க்கத்தில் வாழவிடு
புறக்கணித்து விடாதே






வெள்ளி, 4 ஜனவரி, 2019

பிரிந்த பிறகுதான்
காதலின் அடர்த்தி
உணர்கிறேன்

உள்ளே செல்ல செல்ல
அதன் மையத்தை
அடையவே முடியவில்லை

காலம் கடந்து
என் காலம் முடிந்தாலும்
எனது ஆன்மா
அந்த
மையத்தை நோக்கி
பயணித்துக் கொண்டே
இருக்கும்


இந்த
பயணம் முழுவதும்
உனது நினைவுகள்
இதுவே எனது
பெரும் ஆனந்தம்...

புதன், 2 ஜனவரி, 2019

அவளின்
மந்திரப்புன்னகை

காயம் ஆற்றும்
காதல் கூட்டும்
மண்ணிலிருந்து
என்னை
மெல்ல தூக்கும்

தாபங்கள் ஊட்டும்
தாகங்கள் தீர்க்கும்
நெஞ்சுக்குள்
வானவில் வந்து
பூக்கும்

மேனி சிலிர்க்கும்
சிறகுகள் முளைக்கும்
காதினில்
இன்ப கீதங்கள்
சுரக்கும்

கண்கள் குளிரும்
ஆனந்தக்
கண்ணீர் நிறையும்
மனம்
பரிசல் ஏறி
பயணம் தொடரும்

கதவுகள் திறக்கும்
கனவுகள் பிறக்கும்
கற்பனை வில்லினில்
கவிதைகள்
தொடுக்கும்

இந்த
மந்திரப் புன்னகை தான்
என்னை
விட்டு விலகிவிட்டாள்
கொட்டும் மழை
நின்றதுபோல்
நிசப்தத்தில்
ஆழ்த்திவிட்டாள்...

செவ்வாய், 1 ஜனவரி, 2019

என்
மூளை சிலந்திக்கு
நானே உணவாகிறேன்

என்னை
சுற்றிச்சுற்றி பின்னிய
உன் நினைவு வலையில்
இறந்து கொண்டே
நிதம் வாழ்கிறேன்

நான் களவாடிய
உன் மனது தான்
என்னைக்
காத்து நிற்கிறது