செவ்வாய், 22 அக்டோபர், 2019

சுமை

சுருண்டு போன
வெண்முடி கண்டதும்
சுருட்டி வைத்தனர்
பாயைப்போல மூலையில்

எப்போதாவது
விரித்து வைப்பர்
விசாலமாய்
வீட்டில் விருந்தினர்
வரும்போது

நாட்கள்
இப்படியே போனது
முகத்தில்
சுருக்கங்கள் பலவானது

மேலோட்டமாய்
சிலர் பார்த்துவிட்டுக்
கூறினர்...
முகத்தில்
சுருக்கங்கள் அதிகமென்று
மன
இறுக்கங்களைக் காண
இயலாது போனதால்

யார்
வந்து சென்றாலென்ன...

சுழலும்
காற்றாடிக் காற்றினில்
புரளும்
நாட்காட்டி வரிசையில்
இவள் கண்கள்

அந்த
மார்கழி மாதத்தின்
மரண தினத்தை
எண்ணியவாறு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக