திங்கள், 14 ஜனவரி, 2019

நெடுநாள் அமாவாசை
என் நிலவைக் காணவில்லை


தென்றலின்
காலைக் கட்டிப்பிடித்து
தூது செல்லக் கதறினேன்
என் கண்ணீரை உணர்ந்தாயா
அதன் ஈரத்தில்


குயிலிடம்
என் நிலை கூறினேனே
என் தனிமை உணர்ந்தாயா
அதன் கீதத்தில்


வானம் என்னைப்
பரிதாபமாகப் பார்க்கிறது
என் கண்ணில்
நீயில்லை என்றால்
இந்த மண்ணில்
நான் இல்லை
என்பதை உணர்ந்து


உணர வேண்டிய நீ
உணரவில்லை எனப்
பித்துப் பிடிக்கிறது


கடற்கரையில்
உனது பாதங்களைத் தேடிச் சென்றேன்
எங்கும் காணவில்லை


அழித்திருக்கும் என்று
கோபத்தில்
அலைகளை எட்டி உதைத்தேன்


அக்கரையில்
நீ இருந்தால்
தள்ளிப் போய் விடு
சுனாமி வந்துவிடும்


எள்ளி நகைக்கும் நட்சத்திரங்களை
தலையால் முட்டித் தகர்க்கத் தோன்றுகிறது

வேண்டாம்

காலங்களை
உனக்காக மட்டுமே
கடக்க விரும்புகிறேன்



இரவினில் கண்களைப் பதித்துவிட்டு
பகலினில் குருடனாய் உலவுகின்றேன்
தேடித் தொடரவில்லை என்றால்
நாடி நின்றுவிடும் அல்லவா


உச்சி வேளையில் கூட
என்னைச் சுற்றியுள்ள
புல்வெளிகளில் பனித்துளிகள்


இருந்தும்
துக்கத்தில் அவைகளும்
துவண்டே போகின்றன


நீ வரும் வேளையில்
நான் அயர்ந்து இருந்தாள்
எனை முத்தமிட்டு எழுப்பு
நான் மீளாத் துயில்கொள்ளும் முன்


அனுதினமும் முழுநிலவாய்
நீ வேண்டும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக