செவ்வாய், 31 டிசம்பர், 2019

ஏதேதோ எழுத எண்ணம் கொண்டு
வெகு நேரமாக சித்தம் நிலைநிறுத்தி
காத்திருக்கிறேன்...
படைப்பில் கர்வம் கொள்வதற்கு
படைத்துவிட துடிதுடிக்கிறேன்
அன்னையைப் போல் அங்கொருத்தி
எனக்காகச் சமைத்தெடுத்து
அன்னமிட்டால் மனக் கிண்ணம் நிரம்ப
எழுதியது அவளல்லவா
வெறும் எழுதும் பொருள் நானல்லவா...
புள்ளி வைத்து முடித்து வைப்பவன்
சிறு புள்ளிக்குள் புள்ளியாகிறேன்

குழந்தையாய் பிறந்து
வளர்ந்து வளர்ந்து
மீண்டும் குழந்தையாய்
மனிதன்

குளிரில் பிறந்து
வளர்ந்து வளர்ந்து
மீண்டும் குளிரில்
முடியும் வருடம்

குழந்தைத்தனம் மாறாமல்
குளிர்ந்து வாழ்வோம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ஒரு தாவரத்தின் முகம்
அது பூவாகத்தான் இருக்கும்
சிரிக்கிறதே...

ஒரு தலை இராமனும்
பல தலைகளோடு இராவணனும்
சீதையும் பாஞ்சாலியும்
அதில் உண்டு

மனிதர்களைப் போன்றே
அவற்றுக்கும் காவியங்கள் உண்டு

வெள்ளை உள்ளம் கொண்டவைகள்
வெண் எழுத்தால் எழுதியதை
வெள்ளைக் காகிதங்கள் என்றெண்ணி
நம் காவியங்கள் நிரப்புகிறோம்

எதை எழுதிப் படித்தாலும்
வெட்டுகின்ற மனம் வளர்த்தோம்
புத்தகத்தின் வாசகம் தாண்டி
புத்தகத்தின் வாசமும் படிப்போம்...

பூக்களின் மேல் காதல் வரும்
வெட்டும் எண்ணம் விட்டுவிடும்
பாலைகள் எல்லாம் சோலையாகும்
காதல் ஒன்றே வேலையாகும்

இதழ்களில் எழுதத் தொடங்கிவிட்டால்
காகிதம் காவியம் மாயமாகும்

திங்கள், 30 டிசம்பர், 2019

உன் நிழல்
என்னைச் சுற்றிச்சுற்றி
என் நிஜம் கிறுகிறுக்கிறது...

சமூகம் சிறையானது
போதை சிறகானது
வாழ்க்கை இரையானது...

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

ஆறறிவு எதற்கு?

( சிறுகதை - 1 )

காம்பவுண்டில் 10 நாய்கள்
கடைசியாக வந்த 2 நாய்களை எதற்காகவோ அவசர அவசரமாக குலைத்துக் கொண்டே, கடிக்க வெறியுடன் துரத்தியது. அவைகளை அவை எல்லையைத் தாண்டி துரத்திக் கொண்டு இருந்தன.

நாய்களின் கடவுள்களுக்கு ஏதோ பிரச்சினை போல. நாய்களின் இந்த பிரச்சினையில் கடைசி வரை கடவுள்கள் கரிசனம் காட்ட  வரவே இல்லை. பாவம் அந்த இரண்டு நாய்களும் எட்டு நாய்களால் துரத்தப்பட்டன.

இந்தியா போன்ற நாடுகளில் தான் இது நடந்து கொண்டிருக்கிறது. மேலும் நானும் அவைகளின் ஒரு கடவுள் என்ற முறையில் எனது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இவற்றை நான் பார்த்துப் பழகியது.

அந்த காம்பவுண்டில் வீற்றிருந்த 84 தெய்வங்களும் அவர்களது சொந்த வேலையில் மூழ்கிக் கிடந்தன. நாய்களுக்கு மீதியைப் பகிரும் மனிதர்கள் தானே அதன் கடவுள்கள்.

பெரும்பாலும் தெரு நாய்களில்  சைவங்கள் கிடையாது. அது காம்பவுண்டைப் பொருத்தது. வீட்டில் வளரும் மேல்தட்டு நாய்களில் சைவம், அதன் கடவுளைப் பொருத்தது.

வீட்டு நாய்கள் கடவுளின் அனுக்கிரகம் பெற்றவைகள், ஆத்திக நாய்கள்.
தெரு நாய்கள் பூர்வஜென்ம பாவம் செய்தவைகள்,நாத்திக நாய்கள்.

ஆத்திக நாய்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுள். நாத்திக நாய்களுக்கு உதவியவர்கள் எல்லாம் கடவுள்.

நாத்திகம் முற்றும் போதெல்லாம் உதவாத  கடவுள்களைக் குறைத்துக் கடிக்கும். எந்த கடவுளும் மறு கண்ணத்தைக் காட்டியதே இல்லை. மாறாக கல்லைக் கொண்டு எறிகிறது.

ஆத்திகம் முற்றினால் செல்லக் கடிகள் தான். தனக்கான கடவுளுக்கு மட்டுமே இந்த கரிசனம். மற்ற கடவுள்களுக்கு நாத்திக நாய்கள் காட்டும் அதே தரிசனம் தான். தன் கடவுளைக் குளிர்விக்க மற்ற கடவுள்களைப் பதம் பார்க்கும்.

நாய்களின் கடவுள்களுக்கு அப்படி என்ன பிரச்சினை... இன்னும் வராமலேயே இருக்கிறது.

அது ஆறாம் அறிவுதான்...

இந்தியா 120 கோடி மக்களை வைத்துக் கொண்டுள்ளது, மூன்று மடங்கு பெரிய நிலப்பரப்பை கொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நம்மில் ஒரு பகுதியை மக்கள் தொகையாய் கொண்டுள்ள நாடுகள் எல்லாம்  வெறும் வேடிக்கை பார்க்கிறது...

விசா இல்லாத மற்ற நாடுகளின் மனிதர்களை  மனிதர்களாகக் கூட இல்லை டாபர்மேன், ஜெர்மன் செப்பர்டு பொன்ற மேலான   நாய்களாகக் கூட பார்க்க மறுக்கின்றனர்.

வேற்று கிரகங்களில் மனிதரைத் தேடும் அறிவு ஜீவிகள் ஆயிற்றே.
நாட்டு நாய்களை நிராகரித்ததற்கு மனிதனின் கடவுள்கள் கொடுக்கும் தண்டனையோ, சாபமோ தெரியவில்லை.

ஆனால் மனிதர்களின் கடவுள்கள் அப்படி இல்லை. மனிதனை மனிதன் நிராகரித்தால், மாறாக வரங்கள் கொடுக்கிறார்கள். மேலை நாடுகளில் அவர் தம் வரங்களை வாரி வழங்கி இருக்கிறார்கள்.

இருப்பதை எல்லாம் விட்டுவிட்டு இல்லாததை தேடுவதில் மனிதர்களுக்கு நிகர் மனிதரே. இதில் இவர்களில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.

மனிதர்கள் மனிதர்களுடன் புழங்குவது அரிதாகிவிட்டது. இயற்கையுடன், மற்ற உயிர்களுடன் பழகுவது பொழுதுபோக்கு மட்டுமே.

பொழுதைப் போக்குவதுதான்  வாழ்க்கை என்போரை மட்டம் தட்டி மடித்தும் விடுவார்கள். உயிரற்ற பணத்தினூடே  புழங்கிக் கொண்டு, செயற்க்கையில் திளைக்கிறார்கள். வாழ்வை விட்டுவிட்டு பிழைப்பு பிழைக்கிறார்கள்.

உயிர் பிழைக்கப்போவது 60 - 100 ஆண்டுகள் தான். காலமெல்லாம் பிறகு நாம் உயிரற்றுதானே இருக்கப் போகிறோம்,  அதனால் செயற்கை பழகுவோம் என்று ஆறாம் அறிவு சொல்லியதோ...


கண்டுபிடிப்புகள் எல்லாமே ஆறாம் அறிவுதானாம். தேடலில் வல்லவர்கள் இதுவரை தேடிக் கண்டதெல்லாம் பிரச்சினைகளின் மறு உருவம் தான். ஞானம் தேடி அலைந்த இடம் நம் இந்தியா. தேடியவர்களுக்கு எல்லாம் ஞானம் கிடைத்த இடம்.

இருக்கும் மரங்களை எல்லாம் அழித்ததில் இருந்து, தேடலில் பிரச்சினைகள் மட்டும் தான் கிடைக்கிறது. 

பிரச்சினைகளைத் தேடித் தேடி சேர்த்தவர்கள், பின்னொரு நாளில் அதைத் தான் தேர்ந்து எடுத்தார்கள். அதுதான் ஆறாம் அறிவு எதற்கு?

ஆறாம் அறிவுதான் அணைத்து குறைபாடுகளுக்கும் காரணமாக இருக்கும் என்று முடிவெடுத்து நாடாளுமன்றமும் சட்டமனறங்களும் ஒரு முடிவுக்கு வந்தது.

ஆறாம் அறிவை நீக்கிவிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதனை அமல்படுத்த டாக்டர்கள் கமிட்டியிடம் பரிந்துரைத்தது.
டாக்டர்கள் கமிட்டியில் புதிதாக ஒரு குழப்பம் உருவாயிற்று.

அதாவது மொத்த மனிதப் பிரச்சினைகளும் தீர்க்கும் இந்த ஆப்ரேஷன், தனக்கு முதலில் நடக்க வேண்டும் என்று டாக்டர்கள் கமிட்டி தலைவர் மற்றும் பிறர் அணைவரும் தர வரிசையில், தனக்கு தனக்கு என்று முதலுக்கு போட்டி போட்டனர்.

பெரிய பதவிக்காரர்கள் எல்லாம் தர வாரியாக, படித்தவர்களை விட பணத்தால் அடித்து வந்தவர்களே. அவர்களுக்கு தேவை முதன்மை. பின்தங்கிப் பழக்கம்  இல்லாதவர்கள்.

ஒருவழியாக அதிலிருந்த 90 சதவீதம் பேர், மெரிட்டில் வந்த 10 சதவீதத்தை சரிகட்டினர். மெரிட் மருத்துவர்கள் துறை வாரியாக, மேலிருந்து கீழாக தரவரிசையின் அடிப்படையில் அணைத்து தரப்பினர்களுக்கும் வெற்றிகரமாக ஆறாம் அறிவு நீக்க ஆப்ரேஷன் செய்யத் தொடங்கினர். அதை அற்புதமாக செய்தும் வந்தனர்.

பெருந்தன்மை கொண்ட பாராளு, நாடாளு மன்றங்கள், ஒருமனதாக மக்கள் பிரச்சினைகளை தீர்த்து, கடைசியாக தன் பிரச்சினையை சரிசெய்து கொள்ள, தாராளம் தளராமல் தள்ளி நின்று, ஆனந்தக் கண்ணீரில் நீராடின.

10 சதவீத மெரிட் டாக்டர்கள் குழு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஆப்ரேஷன் செய்து முடித்தது. மீதமிருந்த பாராளு, நாடாளு மன்ற மகான்களுக்கும் ஆப்ரேஷன் செய்ய, அவர்களை அனுகினார்கள்.

அவர்களுக்கு மகான்கள் பெட்டிப் பெட்டியாய் எதையோ கொடுத்து,  ஒரு விருந்து விழாவில் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை, ஐந்தறிவு உயிர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

அதில் சில தரவரிசை கூட்டங்கள் தன்னை அறியாமலேயே பழக்க தோஷத்தில், விருந்து விழாவில் ஆறறிவு மனிதர்கள் தூக்கிப் போட்ட எலும்புத் துண்டுகளுடன் குப்பை மேட்டுக்கு ஓடின. அதிலும் சில விஸ்வாச ஐந்தறிவுகள் வாலாட்டிக் கொண்டு அங்கேயே இருந்தன.

மற்ற எல்லா ஐந்தறிவு மனிதர்களும், வழக்கம் போல அவரவர் அலுவலகங்களுக்கு நேரத்திற்கு கிளம்ப, நேரத்திலேயே வீடடைந்து தூங்கச் சென்றன. எந்தப் பிரச்சனையும் இன்றி...



நாய்கள் கூட பத்தில் இரண்டைத்தான்  விரட்டி விடுகின்றன. மேலும் அவைகளோடு சேர்ந்து வாழ்வதில்லை.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் ஆறறிவு மனிதர்களாக தனை மட்டும் நினைத்துக்கொண்ட 20 சதவீதக் கூட்டம், மீத 80 சதவீதத்தினூடே வாழ்ந்து, 80 சதவீதத்தையும்  ஐந்தரிவாக்கி, தொடர்ந்து மேய்க்கும் திறமை கொண்டதாக இருக்கிறது.

இங்கேயும் மனிதர்களின் கடவுள்கள் இந்த 80 சதவீத மனிதர்களின் பிரச்சினையை கண்டுகொள்வதே இல்லை.


கடவுள்களை எல்லாம் மேலை நாடுகள் விலைக்கு வாங்கியும் இருக்கலாம்...
மாறாக மனிதனின் கடவுள்களுக்கு வேறு பிரச்சனைகள் இருக்கலாம்...
இல்லை கடவுள்களின் கடவுள்கள் கைவிட்டும் இருக்கலாம்...

சனி, 28 டிசம்பர், 2019

பிறந்து
அழுகை நின்றவுடன்
அவளுக்காக எழுதியது
அவளிடத்தில் கொடுத்து விடுங்கள்

அவள்
அடுத்த வருடம் தான்
பிறப்பாள் என்றாலும்
நான் இருப்பேனா தெரியாது

அவளும்
பிறந்தவுடன் படித்து
தெரிந்து கொள்ளட்டும்

அவளுக்காக
ஒரு உயிர்
வாழ்ந்ததென்று...

கனவில் மரணம்

கானகத்திலிருந்து
வானகத்திற்கு
நெருப்பு வழிப் பயணம்

ஜன்னல் சீட்டில் தலைச்சாய்ந்து
உன் நினைவுகளைப்
பார்த்து ரசிக்கிறேன்

ஊரே அழுகிறது
நீ மட்டும் சிரிக்கிறாய்
எனைப் பார்த்துக்கொண்டே

எப்போதும் போலவே
என்னோடு வருவதற்கு
சந்தோஷ மூட்டையுடன்...
எவ்வளவு ஓடினாலும்
அடையப் போவது மரணம்தான்

பெயரை தேடுகிறாய்
வசதி தேடுகிறாய்
பிறரிடம் இல்லாததையும்
தேடுகிறாய்
உறவைத் தேடுகிறாய்
எல்லாம் கிடைக்கப் பெற்று
எல்லாமும் கெட்டு
தூக்கம் தேடுகிறாய்

உடன் இருப்போர் இறந்தாலும்
உடன் அதன்பேர் சடலம்தான்

கட்சி இருக்கும்
பதவி இருக்கும்
கூட்டமும் இருக்கும்
கூவலும் இருக்கும்
எப்போதும் போலங்கு
நடிப்பும் இருக்கும்

வந்தவர் எல்லாம்
உன்னை அணைப்பார்கள்
நீ இருந்து
அணைத்தாயே அப்படி

பயம் இருக்காது
அழைப்பு இருக்காது

பாசம் இருக்கும்
நேசம் இருக்கும்
ஆனால் உன்மீது
வைக்க முடியாது

காதல் இருக்கும்
மரியாதை இருக்கும்
ஆனால் உன்னிடம்
காட்ட முடியாது

நீ பணக்காரனாக
இருக்கலாம்
ஆனால்
உன் நெற்றிப் பொட்டில்
வைக்கப் போவது
ஒத்த ரூபா தான் 

உன் பெயர் வாழும்
சிலை வாழும்
உன்னைக் கையில் ஏந்தி
சிலர் வாழ்வார்கள்
நீ வாழ்வாயா

நீ இறந்து
பின் எப்பொழுதும்
வாழப் போவதில்லை...

இப்போதே வாழ்ந்துவிடு
குழந்தைகள் போல்
ஒளிந்து விளையாடு
யார் உன்னை கண்டுபித்தாலும்
எது உனக்கு
நீ தேடாமல் கிடைத்தாலும்
மகிழ்ச்சி கொள்
நேசம் கொள்
பாசம் கொள்
வேசம் கொள்ளாதே

உன்னைத் தேடி வருவோரை
நீயும் தேடிப் போ...
நீ கொடுத்தது எல்லாம்
உனக்கும் கிடைக்கும்
இதுதான் விளையாட்டு

எல்லோர்க்கும் எல்லாமும்
எப்போதும் கிடைக்கும்
மூடி வைக்காதே
உலக அட்சயப் பாத்திரத்தை

எப்பொருள் கிடைத்தாலும்
பிறருக்கும் கொடு
பாரம் குறையும்

உனதை விழுங்கிவிடு
மீதம் தந்துவிடு
கையில் எதுவும்
இல்லாமல் பார்த்துக்கொள்

பொருள் இருப்போரை
மரணமும் தேடி வரும்
அதுவும் வாழ வேண்டுமே...

எடுத்து விளையாடாதே
கொடுத்து விளையாடு

உன்னைத் தேடியும்
மரணம் வரும்
முடிந்தால் மறைந்துகொள்
மாட்டிக்கொண்டாய
மிக்க மகிழ்ச்சி கொள்
இனி உன்னை யாரும்
கண்டுபிடிக்க முடியாது
நீ கடைசியில்
வென்று விட்டாய்

மரணம்
தேடி வரட்டுமே
கொஞ்சம் மறைந்து விளையாடலாம்...

வெள்ளி, 27 டிசம்பர், 2019

திருட்டுப் பூனை

என்னைப் போல் ஒருவன்
ஏதும் அறியாத சிறுவன்
திருட்டும் உருட்டும் பழக்கம்
எங்களுக்கு இல்லை கலக்கம்

இயல்பு எங்கள் பழக்கம்
அதனால் இல்லை தயக்கம்
இயன்ற வரை அமைதி
குலைத்து விட்டால் எதிரி

தம்பி ஓடுவதே பழக்கம்
கூரை ஏறுவதே வழக்கம்
மியாவ் மியாவ் எப்போதும்
மிரட்டுச் சீற்றம் எப்பவாச்சும்

சோம்பலாய் தான் இருப்போம்
இலக்கு இல்லாமல் நடப்போம்
பசி வந்தால் பயணம்
அதுவரையில் இல்லை சலனம்

பூனையாகவே இருந்து இருக்கலாம்
புலி வேஷம் போட்டிருக்கலாம்
மனிதனாக ஏன் பிறந்தேனோ
யாருக்கும் என்னைப் புரியவில்லை

காலை முதல் மாலைவரை
கடும் உழைப்பு பிடிக்கவில்லை
இரவில் கண்விழிக்க முடிவதில்லை
இது என்னதான் வாழ்க்கையோ

இரவில் தான் நிலவுண்டு
அதைத்தவிர கண்கள் இல்லை
வான் எல்லாம் மின்மினிகள்
இயற்கை இசைக்கும் நேரமிது

பகல் போல சுடுவதில்லை
பதறி ஓடும் வேகமில்லை
பகல் கனவு கூடயில்லை
நிஜமே கனவாய் இருந்திடுமே

பூனையாக பிறக்க வேண்டும்
திருடி பாலைக் குடிக்கவேண்டும்
காலை கெட்டுப்போகும் பாலை
நாங்கள் குடித்தால் தப்பென்ன

குளிர் சாதனப் பெட்டியெல்லாம்
எங்கள் அறிவுக்குத் தெரியாது
அதுபோலக் கேடு தரும்
பழக்கம் கிடையவே கிடையாது 

பூவின் நடனம்

நல்ல இசைகள்
எந்த பூவையும்
கிழிப்பது இல்லை

இப்போது
வரும் இசைகள்
பெரும்பாலும்
காதுகளையே கிழித்து விடுகிறது

கேட்போரை
கடந்து செல்லும் போதுகூட
இது நடந்து விடுகிறது

என்ன சொல்லியும்
அவர்கள் நமது பேச்சைக்
கேட்கப் போவதும் இல்லை

பாவம்
காது கிழிந்தவர்கள்...

அடையாளம் சொல்கிறேன்
எச்சரிக்கையாக இருங்கள்:

உயர்ந்த ஆடை
ஆனால் கிழிந்து இருக்கும்
நிறைய முடிகள்
ஆனால் பேணாது இருக்கும்
தப்பித்தவறி கைவைத்தால்
கூராகக் கிழிக்கும்
காக்கை எச்சம்போல் கூட
கலர்க்கலராய் இருக்கும்
பாரதியைத் தெரிந்து இருக்காது
பாப் மார்லியைப் பிடிக்கும்
ராம், மிஷ்கின், கதிர்...
போன்றோர் படங்கள் ஏனோ கசக்கும்
இளிச்சவாயன் படமெடுத்தால்
இவர்களுக்கு இனிக்கும்

இந்த சகோதரர்கள்
நல்ல இசை கேட்டுவிட்டால்
அது அதன் வேலை செய்யும்
என்றே இதனைப் பகிருகிறோம்
உங்கள் சகோதரர்களுக்கும் உதவலாம்...

https://www.facebook.com/100003237418992/posts/2641246155993272/

வியாழன், 26 டிசம்பர், 2019

ஒரு நாள் காதலுக்கும்
நெடு நாள் காதலுக்கும்
எந்த வேறுபாடும் இல்லை
எல்லாம் காதலே

ஒரு நாள் பிரிவுக்கும்
நெடு நாள் பிரிவுக்கும்
எந்த வேறுபாடும் இல்லை
எல்லாம் மரணமே 
மாற்றி மாற்றிப் பேசுகிறாள்

தனிமையில்
எதையோ கிறுக்கினேன்
கவிதை என்று சொன்னாள்

பிடித்தும் இருப்பதாகச் சொன்னாள்

நீ
என்னோடு வந்துவிடு
இன்னும் அழகாகும் என்றேன்

பிடிக்கவில்லை என்று சென்றாள்

எதையாவது
எப்படியாவது
எழுத முயல்கிறேன்

அவளுக்கு
பிடித்த மாதிரி... 

புதன், 25 டிசம்பர், 2019

சிலுவையில் அறையப்பட்டும்
பட்டாம்பூச்சி
சிரித்துக்கொண்டே இருக்கிறது
இரண்டாயிரம் ஆண்டுகளாக...

பாவமன்னிப்பு
கதைகள் எல்லாம்
நகைச்சுவையானதோ

மலரினைப் படைத்ததும்
அதில் தேனினை மறைத்ததும்
தேனீக்கள் தேடுவதும்

உன் கதையை
உன்னிடமே சொல்வோம்
தன் கதையாக

உன் நடன பாவம்
தன்னுடையதாய் நினைப்பது தான்
நிழல்களின் பாவம் 

செவ்வாய், 24 டிசம்பர், 2019

அருகில் சந்திக்காதவள்
கண்கள் நிறைகின்றாள்
சிந்தை கலைக்கின்றாள்
விந்தை செய்கின்றாள்

தினம் ரசிக்க வைத்து
விலகிச் செல்லும் நிலவு
வானுக்குச் சொந்தம் நீ
எதற்காக இந்தக் கலவு

என் மனதைக் காணவில்லை
யாரிடம் சொல்வேன்
ஏறி வரப் பாதையில்லை
ஏக்கம் கொண்டு நின்றேன்

சென்ற தடத்தைத் தேடி
இங்கும் அங்கும் ஓடி
என்னைக் கடக்கும் தேதி
நினைவு மட்டுமே மீதி

நினைவைப் பிடித்துக் கொண்டே
இமயம் ஏறி விட்டேன்
இன்னும் கூட தொலைவு
இமியும் குறையவில்லை ஏனோ...

திங்கள், 23 டிசம்பர், 2019

காலியாக உள்ளவரை
உனது இடம் அதில்
சிலந்தி வலை கண்டாலும்
கொடுத்துவிடு சிலந்தியிடம்

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

தந்தை போடும் கோடுகள் கூட
நாம் தாண்டிப் பழகத்தான்
என்றேத் தாண்டினேன் 
பழகினேன்
பாழாய்ப் போனேன்
பழகுகிறேன்
பாழாய்ப் போகிறேன் 

பரவாயில்லை
மனம் வரையும் ஓவியத்தை
ரசித்தே பழகுகிறேன் 

பழகியதால்
இறைவன் போடும் கோடுகளையும்
இயல்பாய்க் கடக்கிறேன்...

அவ்வை சொன்ன வார்த்தைகளை
நான் மறவேன்
"பாழாகாமல் ஆயுதங்கள்
 பார்வென்றக் கதைகளில்லை" 

பால் ஒழுகும்
முகத்தில் மட்டுமல்ல
பாழான முகங்களிலும்
குழந்தை உண்டு

ஆழ்ந்து பார்த்தால்
அழகு உண்டு
மேலாகப் பார்த்தால்
மறத்தல் நன்று 

சனி, 21 டிசம்பர், 2019

கொடுப்பதுதான் வாழ்க்கை
இயற்கை கொடுத்துக்கொண்டே இருக்கிறது
கண் இருந்தால் கடினம் ஆகும்
அவை முகம் பார்த்துக் கொடுப்பதில்லை
எவர் பறித்துக் கொண்டாலும் பதற்றமில்லை
பழிவாங்கத் துடிப்பதும் இல்லை
அணு ஆயுத அறிவும் இல்லை
வங்கிக் கணக்கில் சேர்ப்பதும் இல்லை
வட்டிக் கணக்குப் போட்டதும் இல்லை
தன் தலைமுறைக்குத் தன்னைத் தரும்
வார்த்தை இன்றிக் கற்றுத் தரும்
ஆறறிவு எனச் சொல்லிக் கொள்ளும்
மனிதன் மட்டும் விதிவிலக்கு
அத்தனையும் தனது என்றதனால்
தேடுது இங்கு மதுவிலக்கு...
எடுத்தது எல்லாம் திரும்பக் கொடு
சும்மா இருக்கப் பாடுபடு
இதற்கு நல்ல உபயம் அன்று
மகாகவி பாரதி வரிகள் உண்டு
ஆதலினால் காதல் செய்வீர்
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்...

வெள்ளி, 20 டிசம்பர், 2019

சைதாப்பேட்டை மான் சுதாகர்

அரசு பண்ணைபுரத்து ராஜாவே
அன்புத் தோட்டத்தின் ரோஜாவே
எனக்கு தெரிந்த அண்ணன்தான்
மான்களுக்கு நீ கண்ணன்தான்

விரல்கள் கூப்பி இசைக்கின்றாய்
பசி ஆறச் செய்கின்றாய்
புள்ளி மான்கள் மனதினிலே
பெரும் புள்ளி ஆகிவிட்டாய்

பெண் மான்கள் நடந்துவர
நானும் கூட இசைத்ததுண்டு
என் பசிக்கு நானிசைத்தேன்
நானும் சைதை புள்ளி(ங்கோ)

பெரும்புள்ளி உன் முன்னே
நான் சிறும்புள்ளி ஆனேனே
மாகோலம் போடும் இறைவாநீ
வரையும் ஓவியம்தான் என்னவோ?

வியாழன், 19 டிசம்பர், 2019

மெழுகுவர்த்தியின்
ஒற்றைச் சிறகு
இரவெல்லாம் சிறகசைத்தும்
பறக்க முடியாமல்
உருகியது

பற்றவைத்த விழிகள்
பக்கத்தில் இல்லை
பற்றியெறியும் மனமும்
விடுவதாய் இல்லை

புதன், 18 டிசம்பர், 2019

வீட்டுக்குள் நுழைந்தவுடன்
வெளியில் மழை பொழிகிறது
ஆசையுடன் நனைய வந்தால்
சட்டென்று நிற்கிறது

தொட மறுக்கிறது
அவளைப் போல்
மழையும்

எப்போதும்
விட்டுக் கொடுப்பதில்லை
கண்கள்
பொழிகிறது
உடல் நனைகிறது...

பறவைக்கு
அலகு தந்து
அளவாய் சாப்பிட வைத்த
இறைவன்
அலகு இல்லாமல்
எனைப் படைத்து
எப்போதும் அலைய வைத்தான்

உண்மையில்
அலைந்து திரிவது
பறவை அல்ல
அவை எப்போதும்
இங்கு தான் இருக்கிறது
நான் தான்
எப்போதும் எங்கேயோ இருக்கிறேன்

செவ்வாய், 17 டிசம்பர், 2019

நினைவுப் புல் கட்டுடன்
இரவெல்லாம் நடந்துச் செல்கிறாள்
தின்ன முடியாது எனினும்
பின்தொடரும் இந்த ஆடு...

அதிகாலைக் கனவுகளில்
பால் புகட்டி உறங்க வைப்பாள்
இரவெல்லாம் பசி தாங்கிப்
பின் நடக்கத் தெம்பளிப்பாள்...

பகலைக் கால் கடக்க தினம்
கருணைக் கொலைச் செய்கிறாள்
தனி ஒருத்தியாய்ப் பாடையில்
தூக்கி அலைகிறாள்

எரிக்கவும் முடியாமல் புதைக்கவும் முடியாமல்
பாவம் சுற்றித் திரிகிறாள்
நினைவுப் புல் கட்டைக் காட்டியே
என்னை இரவில் உயிர்க்கிறாள்...

சிறுவன்
கன்னத்தில் அறைந்தான்
உண்மையை உணர
அது தான் தருணம் எனில்
வரத்தை ஏன் மறுப்போம்
பணிந்து ஏற்றுக்கொண்டேன்
துணிந்து ஓட்டம் கண்டேன்
புதிய பாதையிலே
புதிய பார்வையிலே
பயணம் தொடர்கிறது...

வருத்தம் இப்போதும் உள்ளது
அந்த சிறுவன் மட்டும்
அங்கேயே உள்ளது

அவனைவிட
சிறியவனோ பெரியவனோ
அவனுக்கும் ஒரு வரம்
வேண்டுகிறேன்
அவனுக்கும் ஒரு
புதிய பாதை...
பூக்களோடு பேசாதவனிடம்
புத்தர்
பேசுவது இல்லை 

திங்கள், 16 டிசம்பர், 2019

கனவில்
உன் கண்ணைப் பார்க்கிறேன்
உன் கண்ணில்
உலகைப் பார்க்கிறேன்

என்னைக் குளிரச் செய்த
உன் விழிகளைச் சுற்றி
கிளைகளும் இலைகளும்
வரைந்து வைத்தேன்

பார்வைக் குளிர் உயருதடி
பார்க்கப் பார்க்க
இதயம் உறையுதடி

கண்ணை மூடி
என்னைப் பிடி
விடியல் வரப்போகுதடி 

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

உயிர்நாடி பார்த்துவிட்டு
பறந்துவிட்டது பட்டாம்பூச்சி
மௌனமாக...

இதயம் இருந்தால்
உனைநாடி வந்து சொல்லும்
கேட்டுக்கொள் 

சனி, 14 டிசம்பர், 2019

நினைவுகளில் அமரும்
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
நினைவே தேன்

நிஜம் கசந்தாலும்
நினைவெல்லாம் இனிக்கிறது
நிழல் கூடச் சிலிர்க்கிறது 
கொன்றுவிட்ட மீனை
நேசம் கொண்ட பூனை
மறக்கமுடியாமல் தினம் வாடுது...

அவள் வாழ்ந்த இடங்களில்
நடைப் போடுது
நினைவு அலை மோதுது...

வெள்ளி, 13 டிசம்பர், 2019

நாணயம்

தலைக்குப் பின்னால் பூ
பாடாய் படுத்துகிறது வேறு
கண்டிப்பாக அது பெண்தான்

வாழ்நாள் முழுவதும்
அவள் பின்னால் சுற்றி
திரும்பியே பார்க்காதவள்

எப்படித்தான் மனம் வந்ததோ
விட்டுப் பிரியும் வேலையில்
நெற்றிப் பொட்டில் முத்தம்

இறந்தும்
நான் மறவேன்
இந்த நாணயத்தை

கடந்த 365 நாட்களும்
ஒரே இரவாகத் தான் தொடர்கிறது

நிலவாகிப் போனவள்
திரும்பி வந்தால் தான்
மறு இரவு

வானம் நிரம்பி வழியும்
கசப்பினை மாற்றிட
ஒரு காலை வரும்...

காத்திருப்பேன்
அந்த நாளில் மலரும்
இனிய இரவுக்காக

வியாழன், 12 டிசம்பர், 2019

தினமும்
வந்தென்னை செதுக்குகிறாள்
உயிரை
உறிஞ்சியே மயக்குகிறாள்

காற்றினில்
அசையும் சிற்ப்பங்களாய்
முத்தங்களில்
தினம் வார்த்தெடுப்பாள்

கண்களிலே
போர்த் தொடுப்பாள்
தோல்விக்கு
கனிகளைப் பரிசளிப்பாள்

கண் மூடிடும்
கணத்தினில் மறைந்திடுவாள்
துடித்திடும்
மனதிற்குத் தீயிடுவாள்

நீ திரும்பிடும் வரையில்
தகித்து இருப்பேன்
கண் மூடி உள்ளாக
விழித்து இருப்பேன்

உன் கால் தடத்தில்
முகம் புதைத்து
மண்ணில் புதையும்வரை
காத்திருப்பேன்...

நீலமும் சாம்பலும்
வானத்தில் இருந்து
குருவிகளாய்

இலைகளைப் பிரிந்த கிளைகளுக்கு  சிறகுகளால் மூச்சு வழங்கிட
வந்து அமர்ந்தன

மரம் மட்டும் அல்ல
மனதும் துளிர்க்கிறது
வானமாய் விரிகிறது...

செவ்வாய், 10 டிசம்பர், 2019

உன்னைத் தொடர்ந்த நிழலல்லவா
என்னைப் பார்த்ததும்
ஒளிந்து விளையாடுது 

திங்கள், 9 டிசம்பர், 2019

டீ மாஸ்டர்

நீர்
பால்
டீத்தூள்
கூடவே நிழலையும் சேர்த்து
மாயவித்தை செய்திடுவார்
இதழில் சுவையையும்
இதயத்தில் நிழலையும்
கொண்டு சேர்ப்பவர்
உண்மையில் மாஸ்டர் தான் 
ஒரு நொடியில்
எண்ணற்ற நீர்க் குமிழிகள்
ஒவ்வொன்றும்
வண்ணக் கனவுகள் தாங்கி
காற்றில் ஆடும் நடனம்

இங்கொன்றும் அங்கொன்றுமாய்
காணாமல் போகின்றன
மையம் அழிந்து
வையம் ஆகின்றன...

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

புகைப்படங்களை
அணுவணுவாக ரசிக்கிறோம்
நிஜங்களை மட்டும் தவறவிடுகிறோம்

தவறென்ற விதையை
எங்கே எப்போது
யார் தூவினாரோ...

பாவம் கண்கள்
பகலெல்லாம்
படாதபாடு படுகிறது
ஈரம்
கசிய கசியத் தான் தெரிந்தது
நான் பாறையல்ல...

கேமரா

கண்வழியாகப் பயணித்து
புது உலகில் நுழைந்துவிட்டேன்
கண்டதும் காதல்...

புத்தர்

மரத்தடி வகுப்பறையில்
கவனம் சிதறியதாக
தண்டிக்கப்பட்டார்
வகுப்பு ஆசிரியரால்
உலக ஆசிரியர்

கனவுகளில்  பூக்கிறாள்
நினைவுகளில் குத்துகிறாள்
ரோஜாச் செடி

நான் இவள்
இதழ் தொட்டுக் குளிர்ந்திடும்
பனித்துளி

உனை
பிரிகையில் இறந்திடும்
தினம்
உனக்காகவே பிறந்திடும்

வேர்
எந்தன் கருவறை
வேறெல்லாமே சிறையறை

என்னை
பிரிந்துக் கொல்லாமல்
உறிஞ்சிக் கொள்

சனி, 7 டிசம்பர், 2019

மரம்
யார் முகத்தைப் பார்க்கிறதோ
நிலவில்

மழலை வார்த்தைகளில்
சிலிர்ப்பதைப் போல
துளிர்க்கிறது மரம்

நிலவின் வார்த்தைகளை
கொண்டு சேர்க்கிறதோ
மழை

என் முகம்
மௌனமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறது
என்னை

கடந்து கொண்டே இருக்கிறேன்
பிரிந்து கொண்டே இருக்கிறது

ஒரு உருவம் மட்டும்
தொடர்ந்து வருகிறது
உயிர் போல 

வெள்ளி, 6 டிசம்பர், 2019

5ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

நேசிக்கும் குழந்தைக்கு
வாசிக்கத் தெரியாததால்
வருத்தப்படுவதே இல்லை வயலின்

வருத்தப்படும் பெற்றோர்களால்
நேசம் இழந்து
வாசிக்கக் கற்றுக்கொள்கிறது குழந்தை

வேதனை தாங்காமல்
அழுகிறது வயலின்...

வெண் பனிக் கூட்டம்
சத்தம் போடாமல்
ஒரு கூட்டுப் பிரார்த்தனை

பகல் இரவு பிரிவிற்கு
நித்தமும் இவர்களின்
இரங்கற்க் கூட்டம்

வெண்ணாடை தேவதைகளிடம்
தினம் வேண்டி நிற்பேன்
என் தேவதைக்காக...

வியாழன், 5 டிசம்பர், 2019

ஆண் தேனி
கூடு கட்டி
தனியாகத் தேன் தேடுது...

புதன், 4 டிசம்பர், 2019

உன்னைப் பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும்
எனது ஆசை

நீ
என்னைப் பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும்
எனது பேராசை

ஆசைக்கு
கைக்கொடுக்கும் கனவு
பேராசைக்கு
கனவாய்ப் போனது

கனவில்
கனவை வேண்டுகிறேன்

கனவு
கைக்கொடுக்குமா
எனது பேராசைக்கும்...

நிலவும் நானும்
ஸ்பரிசித்தோம்
வியர்வை படிந்தது
மனக் கண்ணாடியில்...

செவ்வாய், 3 டிசம்பர், 2019

பூனையாக மாறி 
புகலிடம் தேடினேன்
குழந்தையாக நீ கிடைத்தாய்

பத்து விரல்களில்
சொப்பன உலகிற்கு
என்னை கூட்டிச் சென்றாய்

கனவு தொடர்ந்தது
பலவும் மறந்தது
பத்து விரல்கள் கொல்கிறது

திங்கள், 2 டிசம்பர், 2019

உன்
குடை நான்

மழை
இல்லாமல் போனால்
என்னை மறந்துவிடாதே

வெயிலிலும்
என்னை தாங்கிப்பிடி...
எறும்பின் பேராசை
சர்க்கரையில் ஊர்ந்து போகலாம்
தேனில் ஊறலாமோ...

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

தேன் நீர் அருந்தும்
பட்டாம்பூச்சி
தன்னையே அருந்தியது

புத்தகம் படிக்காத
யாவுமே புத்தனாய்
உலகையே விரும்புகிறது

தேடி நீர் அருந்தும்
நிலைமை வந்தும் மனிதம்
சந்ததிகளை விழுங்குகிறது

குக்கூ காட்டுப் பள்ளிக்கூடம்

வாழ அழைக்கும்
ஒரு காடு

தொட்டில்  செடிகளுக்கு
பரிவுடன் பாலூட்டத் தவிக்கும்
இயற்கை அன்னை

கனவில்
அணைவரும் குழந்தைகளே

வெறித்துப் பார்க்கும்
தான் உவந்து பழகும்

பூ போல்
புன்னகைப் பூக்கும்

மழை போல்
அழுகையைக் கொட்டித் தீர்க்கும்

வானில் பறந்திட
சிறகுகள் தேடும்

தான்
அறிமுகம் இல்லாத
பொதுவுடைமை
குழந்தை

ஆம்

கனவில்
அணைவரும் குழந்தைகளே

குக்கூ
கனவினில் இணைவதற்கோர்
அழைப்பு...
என் தேவதை

மலர் கொடுத்தாள்
வரம் கொடுத்தாள்
முகத்தை மட்டும்
மறைத்துக் கொண்டாள்

தள்ளி நின்றாள்
தாகம் தந்தாள்
கானல் நீர் அனுப்பி
ஏங்க வைத்தாள்

கெஞ்சுகின்றேன்
கொஞ்சுகின்றேன்
மறைந்துக்கொண்ட மலர்களுக்கு
முத்தம் தந்தேன்

அவள் தான்
இரங்கவில்லை
பூக்கள் ஆவது
இறங்கட்டுமே...