( சிறுகதை - 1 )
காம்பவுண்டில் 10 நாய்கள்
கடைசியாக வந்த 2 நாய்களை எதற்காகவோ அவசர அவசரமாக குலைத்துக் கொண்டே, கடிக்க வெறியுடன் துரத்தியது. அவைகளை அவை எல்லையைத் தாண்டி துரத்திக் கொண்டு இருந்தன.
நாய்களின் கடவுள்களுக்கு ஏதோ பிரச்சினை போல. நாய்களின் இந்த பிரச்சினையில் கடைசி வரை கடவுள்கள் கரிசனம் காட்ட வரவே இல்லை. பாவம் அந்த இரண்டு நாய்களும் எட்டு நாய்களால் துரத்தப்பட்டன.
இந்தியா போன்ற நாடுகளில் தான் இது நடந்து கொண்டிருக்கிறது. மேலும் நானும் அவைகளின் ஒரு கடவுள் என்ற முறையில் எனது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இவற்றை நான் பார்த்துப் பழகியது.
அந்த காம்பவுண்டில் வீற்றிருந்த 84 தெய்வங்களும் அவர்களது சொந்த வேலையில் மூழ்கிக் கிடந்தன. நாய்களுக்கு மீதியைப் பகிரும் மனிதர்கள் தானே அதன் கடவுள்கள்.
பெரும்பாலும் தெரு நாய்களில் சைவங்கள் கிடையாது. அது காம்பவுண்டைப் பொருத்தது. வீட்டில் வளரும் மேல்தட்டு நாய்களில் சைவம், அதன் கடவுளைப் பொருத்தது.
வீட்டு நாய்கள் கடவுளின் அனுக்கிரகம் பெற்றவைகள், ஆத்திக நாய்கள்.
தெரு நாய்கள் பூர்வஜென்ம பாவம் செய்தவைகள்,நாத்திக நாய்கள்.
ஆத்திக நாய்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுள். நாத்திக நாய்களுக்கு உதவியவர்கள் எல்லாம் கடவுள்.
நாத்திகம் முற்றும் போதெல்லாம் உதவாத கடவுள்களைக் குறைத்துக் கடிக்கும். எந்த கடவுளும் மறு கண்ணத்தைக் காட்டியதே இல்லை. மாறாக கல்லைக் கொண்டு எறிகிறது.
ஆத்திகம் முற்றினால் செல்லக் கடிகள் தான். தனக்கான கடவுளுக்கு மட்டுமே இந்த கரிசனம். மற்ற கடவுள்களுக்கு நாத்திக நாய்கள் காட்டும் அதே தரிசனம் தான். தன் கடவுளைக் குளிர்விக்க மற்ற கடவுள்களைப் பதம் பார்க்கும்.
நாய்களின் கடவுள்களுக்கு அப்படி என்ன பிரச்சினை... இன்னும் வராமலேயே இருக்கிறது.
அது ஆறாம் அறிவுதான்...
இந்தியா 120 கோடி மக்களை வைத்துக் கொண்டுள்ளது, மூன்று மடங்கு பெரிய நிலப்பரப்பை கொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நம்மில் ஒரு பகுதியை மக்கள் தொகையாய் கொண்டுள்ள நாடுகள் எல்லாம் வெறும் வேடிக்கை பார்க்கிறது...
விசா இல்லாத மற்ற நாடுகளின் மனிதர்களை மனிதர்களாகக் கூட இல்லை டாபர்மேன், ஜெர்மன் செப்பர்டு பொன்ற மேலான நாய்களாகக் கூட பார்க்க மறுக்கின்றனர்.
வேற்று கிரகங்களில் மனிதரைத் தேடும் அறிவு ஜீவிகள் ஆயிற்றே.
நாட்டு நாய்களை நிராகரித்ததற்கு மனிதனின் கடவுள்கள் கொடுக்கும் தண்டனையோ, சாபமோ தெரியவில்லை.
ஆனால் மனிதர்களின் கடவுள்கள் அப்படி இல்லை. மனிதனை மனிதன் நிராகரித்தால், மாறாக வரங்கள் கொடுக்கிறார்கள். மேலை நாடுகளில் அவர் தம் வரங்களை வாரி வழங்கி இருக்கிறார்கள்.
இருப்பதை எல்லாம் விட்டுவிட்டு இல்லாததை தேடுவதில் மனிதர்களுக்கு நிகர் மனிதரே. இதில் இவர்களில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.
மனிதர்கள் மனிதர்களுடன் புழங்குவது அரிதாகிவிட்டது. இயற்கையுடன், மற்ற உயிர்களுடன் பழகுவது பொழுதுபோக்கு மட்டுமே.
பொழுதைப் போக்குவதுதான் வாழ்க்கை என்போரை மட்டம் தட்டி மடித்தும் விடுவார்கள். உயிரற்ற பணத்தினூடே புழங்கிக் கொண்டு, செயற்க்கையில் திளைக்கிறார்கள். வாழ்வை விட்டுவிட்டு பிழைப்பு பிழைக்கிறார்கள்.
உயிர் பிழைக்கப்போவது 60 - 100 ஆண்டுகள் தான். காலமெல்லாம் பிறகு நாம் உயிரற்றுதானே இருக்கப் போகிறோம், அதனால் செயற்கை பழகுவோம் என்று ஆறாம் அறிவு சொல்லியதோ...
கண்டுபிடிப்புகள் எல்லாமே ஆறாம் அறிவுதானாம். தேடலில் வல்லவர்கள் இதுவரை தேடிக் கண்டதெல்லாம் பிரச்சினைகளின் மறு உருவம் தான். ஞானம் தேடி அலைந்த இடம் நம் இந்தியா. தேடியவர்களுக்கு எல்லாம் ஞானம் கிடைத்த இடம்.
இருக்கும் மரங்களை எல்லாம் அழித்ததில் இருந்து, தேடலில் பிரச்சினைகள் மட்டும் தான் கிடைக்கிறது.
பிரச்சினைகளைத் தேடித் தேடி சேர்த்தவர்கள், பின்னொரு நாளில் அதைத் தான் தேர்ந்து எடுத்தார்கள். அதுதான் ஆறாம் அறிவு எதற்கு?
ஆறாம் அறிவுதான் அணைத்து குறைபாடுகளுக்கும் காரணமாக இருக்கும் என்று முடிவெடுத்து நாடாளுமன்றமும் சட்டமனறங்களும் ஒரு முடிவுக்கு வந்தது.
ஆறாம் அறிவை நீக்கிவிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதனை அமல்படுத்த டாக்டர்கள் கமிட்டியிடம் பரிந்துரைத்தது.
டாக்டர்கள் கமிட்டியில் புதிதாக ஒரு குழப்பம் உருவாயிற்று.
அதாவது மொத்த மனிதப் பிரச்சினைகளும் தீர்க்கும் இந்த ஆப்ரேஷன், தனக்கு முதலில் நடக்க வேண்டும் என்று டாக்டர்கள் கமிட்டி தலைவர் மற்றும் பிறர் அணைவரும் தர வரிசையில், தனக்கு தனக்கு என்று முதலுக்கு போட்டி போட்டனர்.
பெரிய பதவிக்காரர்கள் எல்லாம் தர வாரியாக, படித்தவர்களை விட பணத்தால் அடித்து வந்தவர்களே. அவர்களுக்கு தேவை முதன்மை. பின்தங்கிப் பழக்கம் இல்லாதவர்கள்.
ஒருவழியாக அதிலிருந்த 90 சதவீதம் பேர், மெரிட்டில் வந்த 10 சதவீதத்தை சரிகட்டினர். மெரிட் மருத்துவர்கள் துறை வாரியாக, மேலிருந்து கீழாக தரவரிசையின் அடிப்படையில் அணைத்து தரப்பினர்களுக்கும் வெற்றிகரமாக ஆறாம் அறிவு நீக்க ஆப்ரேஷன் செய்யத் தொடங்கினர். அதை அற்புதமாக செய்தும் வந்தனர்.
பெருந்தன்மை கொண்ட பாராளு, நாடாளு மன்றங்கள், ஒருமனதாக மக்கள் பிரச்சினைகளை தீர்த்து, கடைசியாக தன் பிரச்சினையை சரிசெய்து கொள்ள, தாராளம் தளராமல் தள்ளி நின்று, ஆனந்தக் கண்ணீரில் நீராடின.
10 சதவீத மெரிட் டாக்டர்கள் குழு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஆப்ரேஷன் செய்து முடித்தது. மீதமிருந்த பாராளு, நாடாளு மன்ற மகான்களுக்கும் ஆப்ரேஷன் செய்ய, அவர்களை அனுகினார்கள்.
அவர்களுக்கு மகான்கள் பெட்டிப் பெட்டியாய் எதையோ கொடுத்து, ஒரு விருந்து விழாவில் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை, ஐந்தறிவு உயிர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.
அதில் சில தரவரிசை கூட்டங்கள் தன்னை அறியாமலேயே பழக்க தோஷத்தில், விருந்து விழாவில் ஆறறிவு மனிதர்கள் தூக்கிப் போட்ட எலும்புத் துண்டுகளுடன் குப்பை மேட்டுக்கு ஓடின. அதிலும் சில விஸ்வாச ஐந்தறிவுகள் வாலாட்டிக் கொண்டு அங்கேயே இருந்தன.
மற்ற எல்லா ஐந்தறிவு மனிதர்களும், வழக்கம் போல அவரவர் அலுவலகங்களுக்கு நேரத்திற்கு கிளம்ப, நேரத்திலேயே வீடடைந்து தூங்கச் சென்றன. எந்தப் பிரச்சனையும் இன்றி...
நாய்கள் கூட பத்தில் இரண்டைத்தான் விரட்டி விடுகின்றன. மேலும் அவைகளோடு சேர்ந்து வாழ்வதில்லை.
ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் ஆறறிவு மனிதர்களாக தனை மட்டும் நினைத்துக்கொண்ட 20 சதவீதக் கூட்டம், மீத 80 சதவீதத்தினூடே வாழ்ந்து, 80 சதவீதத்தையும் ஐந்தரிவாக்கி, தொடர்ந்து மேய்க்கும் திறமை கொண்டதாக இருக்கிறது.
இங்கேயும் மனிதர்களின் கடவுள்கள் இந்த 80 சதவீத மனிதர்களின் பிரச்சினையை கண்டுகொள்வதே இல்லை.
கடவுள்களை எல்லாம் மேலை நாடுகள் விலைக்கு வாங்கியும் இருக்கலாம்...
மாறாக மனிதனின் கடவுள்களுக்கு வேறு பிரச்சனைகள் இருக்கலாம்...
இல்லை கடவுள்களின் கடவுள்கள் கைவிட்டும் இருக்கலாம்...