கயிற்று மாலை அணிந்து
தனிப் பயணம் தொடங்கிவிட்டார்
எங்கள் குருசாமி
உபவாசம் மட்டும் அல்ல
சுவாசத்தையும் நிறுத்திவிட்டார்
மெய்க் கதவுகளை பூட்டிவிட்டார்
மணிகண்டன் தாழ் சேர்ந்துவிட்டார்
மிக எளிமையான மனிதர்
மிதிவண்டியில் பவனி வரும்
புனிதர்
கண்களிலே கைக் கொடுப்பார்
மனதினையும் சேர்த் தணைப்பார்
குருவாக மட்டுமல்ல
நட்பின் உருவாகவும்
உடன் வருவார்
திறம்படவே பூஜைகள் செய்வார்
உடல் பலம் காத்திடுவார்
ஜயன் மலையாகவும் அறிந்திருப்பார்
எங்கள் பாதங்கள் பற்றி சோதிப்பார்
பெரிய சிறிய பாதைகள் தேர்ந்தெடுத்து
எங்களை முன் அனுப்பி பின் நடப்பார்
நாங்கள் வந்து சேரும் முன்னரே
முன்னிருப்பார் விரி பிடித்து காத்திருப்பார்
ஓய்வெடுக்க உதவி செய்து
ஓயாமல் உழைத்திடுவார்
பயணம் திரும்பிவந்து சேர்ந்தபின்னும்
எங்களை நல் வழியில் நடத்திடுவார்
பார்க்கும் இடத்தில் எல்லாம்
பார்வையிலே மிரட்டிடுவார்
அடுத்த கணமே
கனிவை சோழிகளாய் உருட்டிடுவார்
புன்சிரிப்பால் பண் செய்வார்
இன் சொல்லே வழங்கிடுவார்
இனி சொல்ல யார் இருப்பார்
தனிப் பயணம் தொடங்கிவிட்டார்
தன்னந்தனியாக எங்களை விட்டுவிட்டார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக