புதன், 30 செப்டம்பர், 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (19)

 


சிலந்தியாய் வாழ்ந்தால் சிக்கல்தான்
பறவையாய் வாழ்வோம்
நூல் இல்லாமல் பறப்போம்...

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

திருடன்

 


எப்படி அறிந்து கொண்டேன்
திருடன் என
என்னில் ஒரு அங்கம் தானே
விரலைப் போல
இதழைப் போல
செவியைப் போல
விழியைப் போல
இதயம் போல
இன்னமும் பல போல...
அன்னையிடம் திருடாத
அண்ணனிடம் திருடாத
தந்தையிடம் திருடாத
தங்கையிடம் திருடாத
நண்பனிடம் திருடாத
பொதுவுடைமை திருடாத
மனிதன் நீ என்றால் சொல்
சொல்லமுடியாது...
அப்படி ஒருவன் நீ என்றால்
நான் சொன்னது புரியாது...
நல்லவன் என்று
ஒருவன் இல்லை
கெட்டவன் என்று
ஒருவன் இல்லை
எல்லோரும் எல்லாமும்
கலந்த கலவை
உலகமே 
பொது ஒன்றின் பிளவை

திங்கள், 28 செப்டம்பர், 2020

 


இரவு வெகுநேரம் 
கதவைத் தட்டியும்
திறக்கவேயில்லை

காலை
கதவைத் திறந்து பார்த்தேன்
வெளியே
மௌனமாக படுத்துக் கிடக்கிறது
மழை

இரவெல்லாம்
விழித்திருந்தும்
நினைவென்று இருந்துவிட்டேன்

மனமுருகி
மண்டியிட்டேன்
காத்திருக்கும்
உன் ஈர உதடுகள்
என்னை விழுங்க திறக்கின்றன...

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

 


என்னைக் காட்ட
கண்ணாடிகள் மறுக்கிறது
உன்
முக புத்தகம் தான்
திறக்கிறது 
என் இதயம்
மண்டியிட்டுப் படிக்கிறதா
மன்னிப்பு கேட்கிறதா
தெரியவில்லை
என்னோடு
பேச மறுக்கிறது
அதுவும்

அந்தப் 
பள்ளாங் குழியில் 
உன் நினைவுகளை
அள்ளி எடுத்து
விளையாடுகிறேன்
விளையாட்டு
இன்னும் முடியவில்லை...

சனி, 26 செப்டம்பர், 2020

 


வெண் தாடிக் கவிச் சிங்கம்
நடக்கும் பாதை எங்கும்
கவி வேட்டையாடி
உண்பதைச் சிந்தும்

குடித்து விழுந்த சந்தும் 
கவிதை வெள்ளம் பொங்கும்
களத்து மேட்டையும்
குளத்து மேட்டையும்
சொல்லவா வேணும்...

சிலருக்கு சித்தன்
பலருக்கு பித்தன்
சரியான கலவைதான் 
இவன் தான் கவிஞன்

கேள்விப்பட்ட வரையில்
இன்றிருக்கும் புத்தன்
நானும்
பார்க்க விரும்பும் மனிதன்
அவனோ
மறைந்து வாழும் புனிதன்

நீ
பெரிய மனிதன் 
என்றாலும்
உனக்கு மரியாதை
தர விரும்பாத 
சிறிய நண்பன்
நான்

இனிய பிறந்தநாள் 25/9/1947
வாழ்த்துகள்

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

 

மரண வீட்டில்

மௌனப் பேச்சுகள் சொன்னது

அவன் யாரென்று...


மாமனிதனைப் பற்றி

கூடியிருந்தவர்கள் பேசுவதற்கில்லை

கூடியிருந்தும் கூட யாருமில்லை 

கூடவே முடியாத உன்னைத் தவிர


உச்சம் தொட்ட கலைஞன்

மிச்சம் தேடிப் போனாயோ

பேரிசை மௌனம்

நீ துவங்கி விட்டாய்

அதைப் பாடும் பயணம்


மூச்சு விடாமல் பாடுவது

உனக்கு பழக்கமானது தான்

வார்த்தைகளையும் விட்டுவிட்டாய்

உமக்கு சுலபமானது தான்


ஞானசூன்யம் நான்

பேரிசையை உணர்தல்

எனக்கு கடினமானது தான்

எனினும்

ஞானி நீ

இனி சூன்யமும் நீ

என்னை நிறைக்கப்போவது நீதான் 

ஆதலால் உணர்வேன்

உனைத் தொடுவேன்


யுகம் பல கடந்தாலும்

ஜகம் உனை மறவாது

உன்

உடல் உயிரைப் பிரிந்தாலும்

குரல் உயிரை இழக்காது...

வியாழன், 24 செப்டம்பர், 2020

 


நிலவே
மனதை மாயம் செய்தாய்
புகையாக்கினாய் 
பறக்கும் முத்தங்களாய்
அனுப்பி வைத்தேன்
உனைத் தொட்ட 
மேக மனது
பித்துப் பிடித்து அலைகிறது...
உன் பிஞ்சு விரல்களால் 
கொஞ்சம்  கோதினால் என்ன?

புதன், 23 செப்டம்பர், 2020

 


வான் ஒளியும்
பூ இதழும்
முத்தம் பார்த்த 
என் வரண்ட விழிகளில்
இரு துளி நினைவு...

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

சில்க்ஸ்மிதா

 


உன்னைப் போலவே
உன் பெயரும்
ஆடை தாண்டி
கவர்ந்து இழுக்கிறது

உன்னை மட்டுமல்ல
உன் பெயரைக் கூட
ஆடை கவர்ச்சியுடன் 
அணைத்து இருக்கிறது 

கம்பன் எழுதாத
அழகை எல்லாம்
உன் அங்கம் எழுதியது
நானும் படித்தேன்

கண்ணதாசன் எழுதாத
வர்ணனைகள்
உன் கன்னக் குழி முழுதும்
அந்தக் கற்பனைகள்

விண்ணை அலங்கரிக்க 
உன்னை ஏன் கொடுத்தாய்
கண்ணடிக்கும் வின்மீனே 
வானில் மின்னுவதெல்லாம் நீதானே...

 


தன் இலைகளை
நீரில் கப்பல் விட்டு
விளையாடும் வளர்ந்த மரங்கள்
காற்றசைத்து தள்ளியும் விடுகிறது  
என்மனத் துயரங்களையும் சேர்த்து...

திங்கள், 21 செப்டம்பர், 2020

 


எவ்வளவு சொல்லிக் கொடுத்தும்
ஒரே பாடலைப் பாடுகிறது
பறவைகள்

நம் ஒரு பாடலை 
நாமும் அறிந்து கொண்டால் 
வானில் பறந்திடலாமோ...

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

 

இரவெல்லாம் விழிகள்
கொட்டித் தீர்க்கும் மழையில்
தலையணை சப்தமில்லாமல் நனைகின்றது...

சனி, 19 செப்டம்பர், 2020


பருவ மங்கை 
பாதத்தில்
முள் குத்தியது 

அவள் கத்தியது
என் நெஞ்சத்தைத்
தைத்தது 

மண்ணில் கலந்தது
சிறு துளி உதிரமும்
என்னில் நிறைந்தது
கடலெனக் காமமும்...

அவளின்
'ஆ' என்ற சப்தம் கூட
எனை 
ஆகாயம் வரை 
தூக்கிச்செல்கிறது...

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

 


காற்று வந்து விளையாட
காகிதங்கள் 
கிழித்துப் போட்டு வைத்தேன்

காற்றும் எனக்கு 
ஒரு ஒற்றை இறகை
விளையாடத் தந்தது...

வியாழன், 17 செப்டம்பர், 2020

 

காம்பை வைத்துக் கொண்டு
காத்திருக்கிறேன்
பூவிடம் சேர்த்துவிட...

ஆச்சரியங்களை வைத்துக் கொண்டு
ஒளிந்திருக்கிறேன் 
அழகிடம் சேர்த்துவிட...

வந்து கொண்டு இருக்கிறாள்
என்னையும் சேர்த்துக்
கொண்டுசெல்ல...

புதன், 16 செப்டம்பர், 2020

 


வெண் தாளைத் தழுவி
மை இல்லாமல்
உனை வரைந்தேன்
கற்பனையில் பிடித்திழுத்தேன் 
கட்டிப் பிடிக்க எத்தனித்தாய்
கண் இமைக்கும் நேரத்திலே
காகிதத்தை ஏன் கிழித்தாய்...

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

 


மழலை மொழியைப் படித்திருந்தால்

மறவாமல் இன்றும் தொடர்ந்திருந்தால்

மானங்கெட்ட இனபேதம் இருந்திருக்காது


அன்பைத் தவிர வேறெதையும் தேடாத

மழலை விதைக்கு மொழி நஞ்சேற்றி

நாடு காடு என்று பிரித்தது யாரோ...

 


தெரிந்த மொழியில்
நீ பேசினாலும்
புரியாமலே கேட்கிறேன்
உன் பேச்சையும் தாண்டி
உன்னில்
நான் என்ன பார்க்கிறேன்...

உனை பார்க்காத நாட்களில்
நான் அதனைப் பார்க்கிறேன்
அன்று புரியாத
நீ பேசிய வார்த்தைளை
அது தெளிவாக பேசுகிறது 
மௌனமாக...

திங்கள், 14 செப்டம்பர், 2020

 


மனதிலே பூ பூக்கும் போது
எங்கிருந்து வருகிறதோ 
இத்தனைச் சிட்டுக்குருவிகள்...

மனதிலே சிட்டுக்குருவிகள் சிறகசைத்தால்
வானிலே சிறகின்றி பறக்க முடிகிறது

கீச்சிட்டு அழைக்கிறது
எங்கேயோ கூட்டிச் செல்ல 
எல்லை தாண்டும் போது
தொல்லை செய்கிறது ஏதோ...

பூக்கள் மறைகிறது
சிட்டுக்குருவிகள் கலைகிறது
நான் மட்டும் இருக்கிறது
நடுவானில் தவிக்கிறது...




 


என் இரு உதடு மத்தியில்
எப்போதும் நீ
எப்போதும் முத்தம்
மௌனம் புரிகிறதா...


ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

 


கடந்த நொடியில் புதைந்துவிடுகிறது
துன்பமும் மரணமும்
இந்த நொடியில் கையிலிருக்கிறது
இன்பமும் வாழ்வும்
அடுத்த நொடியில் உயிர்த்திருக்கிறது கனவும் கற்பனையும்...

 


வானத்தில்
என் கண்களைப்
புதைத்துவிட்டேன் 
இங்கு
பெய்து கொண்டிருப்பது
மழையல்ல...

கரிக்காததால்
இது 
கண்ணீர் அல்ல
என்றால்
இல்லையில்லை
இனிப்பானது 
அவள் நினைவுகள்...

ஈரம் இல்லாத
நீர்த் துளிகள்
காரணம்
சூடான
என் ஆசைகள்...

விழுந்த
துளிகளை எல்லாம்
இதயத்தால்
உறிஞ்சி எடுக்கிறேன்
அது
துடியாய்த் துடிக்கிறது...

சனி, 12 செப்டம்பர், 2020

சேது மாதவன் எங்கள் குருசாமி

 தனக்குத் தானே
கயிற்று மாலை அணிந்து
தனிப் பயணம் தொடங்கிவிட்டார்
எங்கள் குருசாமி

உபவாசம் மட்டும் அல்ல
சுவாசத்தையும் நிறுத்திவிட்டார் 
மெய்க் கதவுகளை பூட்டிவிட்டார் 
மணிகண்டன் தாழ் சேர்ந்துவிட்டார்

மிக எளிமையான மனிதர்
மிதிவண்டியில் பவனி வரும்
புனிதர்

கண்களிலே கைக் கொடுப்பார்
மனதினையும் சேர்த் தணைப்பார்

குருவாக மட்டுமல்ல
நட்பின் உருவாகவும்
உடன் வருவார்
திறம்படவே பூஜைகள் செய்வார்
உடல் பலம் காத்திடுவார்
ஜயன் மலையாகவும் அறிந்திருப்பார்
எங்கள் பாதங்கள் பற்றி சோதிப்பார்
பெரிய சிறிய பாதைகள் தேர்ந்தெடுத்து
எங்களை முன் அனுப்பி பின் நடப்பார்
நாங்கள் வந்து சேரும் முன்னரே
முன்னிருப்பார் விரி பிடித்து காத்திருப்பார்
ஓய்வெடுக்க உதவி செய்து
ஓயாமல் உழைத்திடுவார்
பயணம் திரும்பிவந்து சேர்ந்தபின்னும் 
எங்களை நல் வழியில் நடத்திடுவார் 
பார்க்கும் இடத்தில் எல்லாம்
பார்வையிலே மிரட்டிடுவார்
அடுத்த கணமே
கனிவை சோழிகளாய் உருட்டிடுவார்
புன்சிரிப்பால் பண் செய்வார்
இன் சொல்லே வழங்கிடுவார்
இனி சொல்ல யார் இருப்பார்
தனிப் பயணம் தொடங்கிவிட்டார்
தன்னந்தனியாக எங்களை விட்டுவிட்டார்...

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

 


கடல் தான்
மழையாக
ஓடையாக
நதியாக
உரு மாறி
விளையாடுது

ஒரு துளி
ஆன போதும்
அதில் மறைவாக
உப்புள்ளது
என்றால்
ஏன்
என் துன்பத்தில்
விளையாடுது

சோகம்
சிறிதென்ற போதும்
கடலாகத் தோன்றும்
இயற்கை
இவ்வாறு உருவானதோ...

கண்ணீர்
விளையாடுதோ...


 


நிழலுக்கு தெரிந்து இருக்கிறது
அவை நீரில் நனைவதில்லை
தீயில் எரிவதில்லை
நிஜம் மட்டும் பாவம்
கண்ணீரில் நனைகிறது
உளத் தீயில் எரிகிறது
நினைவுகள் சுகமாய் இருக்கிறது...

வியாழன், 10 செப்டம்பர், 2020

 


பார்த்துக் கொண்டே இருந்தேன் மலர்களை
காலை மலர்ந்தது மாலை உதிரவில்லை
இதழ்களை சிறகாக்கி
பறக்கிறது வான் நோக்கி
சொல்லாமல் சொல்கிறது பாரதி வரிகளை
"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"
வேடிக்கை மனிதன் நானும்
சிறகுகளை வேண்டுகிறேன்...


 


கடலின் விளிம்புகளில்
வானம் தொடங்குவதைப் போல
மலரின் விளிம்புகளில்
வாசம் தொடங்குவதைப் போல
தீயின் விளிம்புகளில்
வெளிச்சம் தொடங்குவதைப் போல
இலையின் விளிம்புகளில்
காற்று தொடங்குவதைப் போல
இசையின் விளிம்புகளில்
மௌனம் தொடங்குவதைப் போல
பார்வை விளிம்புகளில்
வெறுமை தொடங்குவதைப் போல
என்னின் விளிம்புகளில்
தொடங்குவது எல்லாம் நீ...

நீ மாறினாலும்
நான் மாறினாலும்
இயற்கை மாறப்போவதில்லை


புதன், 9 செப்டம்பர், 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (18)

 


வார்த்தைகளால் பிறரை பலி கொடுத்து
மௌனமாக கை ஏந்துகின்றேன்
இறைவனிடம்...

 


மலர் என்று பட்டாம்பூச்சி
உனை அறியாது தொட்டாலும்
என் மனம் கெட்டுப் போகுதடி...


செவ்வாய், 8 செப்டம்பர், 2020

" பாராலிம்பிக்ஸ் "

 


கண் இல்லை
குறி உண்டு
கை இல்லை
அம்பில் விசை உண்டு
கால் இல்லை
உறுதி உண்டு
அன்பில்லை ஆதரவில்லை
கடவுளையும் வேண்டவில்லை
உள்ளத்தில் ஒளி உண்டு
உதிரத்தில் தீ உண்டு
எண்ணத்தில் இலக்கு உண்டு
தோல்வியெனும் குரு உண்டு
நம்பிக்கை நதி உண்டு
வெற்றிக் கடல் உண்டு
நில்லாது ஓடுகிறேன்
அலையோசை கேட்கிறது...

 


ஏற்றி வைத்தேன் தீபத்தை
ஒளியாய் பூத்து நிற்கிறாய்
எட்டி நின்று பார்த்ததற்கே
என்னைச் சுட்டெரிக்கிறாய்

இமைத் திரிகள் பற்றாமலே
உன் விழி விளக்கும் எரிகிறதே
ஒரு இரவு போதுமடி
இந்த விட்டில் பூச்சி ஏங்குதடி...


திங்கள், 7 செப்டம்பர், 2020

 


இரவுப் போர்வைக்குள்
உன்னுடன் தான் உறங்குகிறேன்
கண் விழித்ததும்
போர்வையும் இல்லை
பாவையும் இல்லை
பார்வை மட்டும்
பார்த்துக்கொண்டே இருக்கிறது
கனவின் கண்கள்
இமைப்பதே இல்லை...


 


கண்ணாடி கடவுளாக மாறுதடி
என்னுருவம் உன்னுருவாய் ஆகுதடி
வளையாமல் இமைத்தூரிகை வரையுதடி
இமைக்காமல் நொடியுகமாய் நீளுதடி...


ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

 


எளிமையான வாழ்க்கை
எவ்வளவு இனிமையானதென்று
யாருக்குத் தெரியும்...

எருமை மீது படுத்திருக்கும்
இந்தச் சிறுவனுக்கு தெரிந்திருக்கலாம்

நாம் சொல்வதைக் கேட்கும் 
கடவுளிடம் கேட்டுப் பழகிவிட்டதனால்
இவன் சொல்லிக் கேட்க
ஏனோ மனத் தயக்கம்...

கிருஷ்ணனாகவோ அல்லாஹாகவோ இயேசுவாகவோ கூட 
அவன் இருக்கலாம்

நாம்தான்
கண்ணுக்குத் தெரியாததை நம்புகிறோம்
தெரிவதை எல்லாம் நம்ப மறுக்கிறோம்

 


மண்ணில்
அவள் முகம் கண்டால்
மழலையாகித் தவழ்கின்றேன்

விண்ணில்
அவள் முகம் கண்டால்
சிறு பிள்ளையாகிக் குதிக்கின்றேன்

பூவில்
அவள் முகம் கண்டால்
வண்டாய் மாறிப் பறக்கின்றேன் 

தீயில்
அவள் முகம் கண்டால்
நாவில் கொஞ்சம் ருசிக்கின்றேன்

இசையில்
அவள் முகம் கண்டால்
இதயத்தில் சேர்க்கின்றேன்

கண்ணில்
அவள் முகம் கண்டால்
இமைகள் மூடி அணைக்கின்றேன் 

நிலவில்
அவள் முகம் கண்டால்
மேகம் ஆகி தொடுகின்றேன்

நதியில்
அவள் முகம் கண்டால்
நீந்த மாட்டேன் மூழ்கிடுவேன்

உன்னில்
அவள் முகம் கண்டால்
உனக்கும் முத்தம் கொடுத்திடுவேன்

என்னில்
அவள் முகம் காண்பதாலே
இன்னும் உயிர் வாழ்கின்றேன்

உலகில்
அவள் முகம் அன்றி
வேறு ஏது யாமறிவேன் 

நினைவில்
அவள் முகம் மறைந்தால்
நொடியில் உலகை நீங்கிடுவேன்...

சனி, 5 செப்டம்பர், 2020

 


கனவாகவே இருந்து விடாதா
கண்விழித்தால் தென்படாதா
திறந்து திறந்து பார்க்கிறேன்
நிஜம் என்னைக் கொல்கிறது


வெள்ளி, 4 செப்டம்பர், 2020

 


நினைவாற்றல் இல்லாத சுமாரான
அல்லது கடைநிலை மாணவர்கள்கூட
மறக்க முடியாமல் தவிக்கின்றனர்
காதலியை

கல்விக் கூடங்களின் தவறான மதிப்பீடு
இளையராஜாக்களின் கைகளில்
சமூக கூஜாக்களை தந்துவிடுகின்றன

கண்கள் இல்லாத ஆசிரியர்களிடம்
நேர் வளை கோடுகளைக் கற்று
ஓவியம் வரையும் மாணவர்கள்...


 



நீ
திரும்பிப் பார்த்தது
குற்றமா...

நீ
திரும்பியதும்
நான் பார்த்தது
குற்றமா...

நீ
திரும்பிப்
போய்விட்ட போதும்
நான்
திரும்பாமல்
பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
நீ
திரும்பி
வருவாய் என...

இதுதான்
குற்றம் என்றால்
திரும்பத் திரும்பச் செய்வேன்
இதுவே
எனக்கு தண்டனையும் கூட...

இதற்காக
வருந்தும் சிலர்
குற்றம் செய்யாதவர்கள்
என்றால்
என்னால்
நம்ப முடியவில்லை...


வியாழன், 3 செப்டம்பர், 2020

 



விஞ்ஞானம் தூங்க விடாது
மெய்ஞானம் தூங்க வைக்கும்
விஞ்ஞானம் கானல் நீர்
மெய்ஞானம் சுனை நீர்
விஞ்ஞானம் அறிவு
மெய்ஞானம் ஆன்மா
விஞ்ஞானம் சப்தம்
மெய்ஞானம் மௌனம்
விஞ்ஞானம் கருவி
மெய்ஞானம் துறவி
விஞ்ஞானம் பகல்
மெய்ஞானம் இருள்
விஞ்ஞானம் ஆண்
மெய்ஞானம் பெண்
விஞ்ஞானம் யுத்தம்
மெய்ஞானம் முத்தம் 
விஞ்ஞானம் முதிர்ச்சி
மெய்ஞானம் குழந்தை
விஞ்ஞானம் தெளிவு
மெய்ஞானம் பித்து
விஞ்ஞானம் தேடல்
மெய்ஞானம் முழுமை
விஞ்ஞானம் வேண்டிடும்
மெய்ஞானம் வழங்கிடும்
விஞ்ஞானம் சிலை
மெய்ஞானம் கடவுள்
விஞ்ஞானம் செலவு
மெய்ஞானம் சேமிப்பு
விஞ்ஞானம் பதவி
மெய்ஞானம் உதவி
விஞ்ஞானம் மனைவி
மெய்ஞானம் காதலி

 


எங்கோ இருந்து இயக்குகிறாய்
இங்கே என்னை வருத்துகிறாய்
கண்கள் தாண்டி மனதிற்குள்
எப்படி மாயமாக நுழைகின்றாய்

அரவம் போல படுக்கின்றாய்
அடிக்கடி ஏனோ கடிக்கின்றாய்
உச்சந்தலையில் விஷத்தை ஏற்றி
வலியாய் முழுதும் நிறைகின்றாய்

சவமாய் மாற்றிக் கிடத்துகிறாய்
மௌனச் சங்கை ஊதுகிறாய்
காலக் கால்களை ஊனமாக்கி
மெல்ல மெல்ல நகர்த்துகிறாய்

ஏனோ நாடகம் நடத்துகிறாய்
எதற்குப் பாடாய்ப் படுத்துகிறாய்
நின்னைக் கேள்விகள் கேட்கின்றேன்
துயில் கலைந்து மறைகின்றாய்...


புதன், 2 செப்டம்பர், 2020

 


புள்ளிகளை வானத்தில் வைத்து விட்டு
என் மனதில் கோலம் போடுகிறாள்
பகலிலும் அழியாமல் பார்த்துக் கொள்பவன் 
கண்கலங்கி அழியாமல் பார்த்துக்கொள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

 


மண்ணில் உயிர் இருந்தால்
புல் ஏனும் முளைத்திருக்கும்
உன்னில் நான் இருந்தால்
என்னில் உயிர் பூத்திருக்கும்...


மரணம்

 

சிறகுகள் ஓய்ந்ததும் 
சில பயணங்கள் தொடர்கின்றன...
உடலை விட்டுவிட்டு
உயிர் மட்டும் பறக்கிறது
உறவுகளின் கண்ணீரைப் படித்தும்
இறங்கி வர மறுக்கிறது...
உடலாக இருக்கும் வரைதானே தூரங்கள்
உலகோடு மட்டுமல்ல
உறவோடும் கலந்திருப்பாய்
அந்த கடைசி துளி கண்ணீரையும்
நீதான் துடைத்திருப்பாய்...
மரணம் என்னும் மறுவாழ்வு
மூன்றாம் நாளிலே உயிர்த்தெழும்...