புதன், 6 மே, 2020

மூடி மூடித் திறக்கிறது
ஒரு மாயக்கதவு

கைகளால்
அது சாத்தியமில்லை
கண்கள் மூடத் திறக்கிறது
கண் திறந்தால்
பூட்டிக்கொள்கிறது

என்னை மட்டும்
அனுமதிக்கிறது
மனதில் யாரும் இருந்தாலும்
வெளியில் தள்ளி விடுகிறது

மௌனமாக இருந்தால்
பேசுகிறது
நான் பேசினால்
மௌனமாக இருக்கிறது

சிரிக்கிறது
அழுகிறது
கண்துடைக்க அருகில் சென்றால்
கானலாகிவிடுகிறது

நீதான் என்று தெரிந்தும்
கண்கள் மூடியே இருக்கிறேன்
உன்னுடன் இருப்பதற்கு

மீண்டும்
என்னைப் பிரிந்து விடாதே
மாயக் கதவுகளை
பூட்டிவிடாதே...

நிரந்தரமாய்
கண் மூடிடவே
நித்தமும் முயல்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக