ஞாயிறு, 31 மே, 2020



ஊரே உறங்கும் சமயத்தில்
நான் தூங்க நினைக்கும் இதயம்
உன்னிடம் எப்படி இருக்கலாம்...




பள்ளி முதற்கொண்டு
விடைதெரியாது விழித்துப் பழகிவிட்டேன் 

கேள்வியின் முடிவில் வரும்
கேள்விக்குறி எனும்
அழகிய வடிவம்
தேர்வு முடியும் வரை
என்னை
விடுதலை செய்வதில்லை

கேள்விக்குறியை நேசிப்பவன்
பதில்களுக்கு காத்திருப்பதில்லை



அழகான பெண்களின்
எளிமையான வார்த்தைகள் கூட
வேட்டைக் கண்ணி தான்

எளிதில் சிக்கவைத்துக் கொள்ளும்
ஏனோ சிறுகச்சிறுகக் கொல்லும் 

சனி, 30 மே, 2020




இலைகள் இல்லாத மரத்தடியில்
இதயம் இல்லாமல் அமர்ந்திருக்கிறேன் 
காற்று கடந்து செல்கிறது ஊமையாக...



தினம் பூக்கும்
நாழிகை மலர்களை
யாரும் ஏற்பதில்லை...

என்றோ 
பதிந்த ஒற்றை மலருடன்
நாளும் வாடுகின்றார்

மலர்தலை
நறுமணத்தை
விரும்பாமல் ஏனோ
தனித்து விடுகின்றார்

நிகழ்காலச்சோலையில் அமர்ந்து
கடந்தகாலப் பாலையை
கனவு காண்கின்றார்

தேனீக்களும்
தேன்சிட்டுகளும்
இந்த நிமிடத்தை
கொண்டாடுவதால் தான்
நிகழ்காலம்
இன்னும் இறவாமல்
தொடர்கிறது...

வெள்ளி, 29 மே, 2020



நீருக்குள் பாய்ந்த வேங்கைப்புலி
வேட்டையாடியது தன்னையே
எந்தப் பசி ஆறியதோ...


புத்தகங்களில் 
வார்த்தைகளை முடித்து வைக்கும்
முற்றுப் புள்ளிகள் தான்
வானத்தில்
வார்த்தைகளைத் துவங்கி வைக்கிறது

புத்தகங்களின் முற்றுப் புள்ளிகளில்
இருள் புதைந்து கிடக்கிறது
வானத்தின் முற்றுப் புள்ளிகளில்
ஒளி படர்ந்து ஜொலிக்கிறது

எழுதிய எழுதாத வார்த்தைகளின்
புள்ளிகள் நிறைந்த பூமகள்
புதிராகவே பூத்திருக்கிறாள்

ஒருவரும் பார்க்க இயலாதப் புள்ளி
அவரவர் வாழ்க்கையின் முற்றுப்புள்ளி
முடித்து வைக்கிறதா... 
துவங்கி வைக்கிறதா... 

வியாழன், 28 மே, 2020

வெளியே கடல் இல்லை என்றாலும்
விடுதலைக்குத் தவ்விக் குதிக்கும்
வளர்ப்பு மீன்கள்

அதன் மனதில் மரணபயம் இல்லை
கடல்தான் உள்ளது

கண்ணாடி மீன் தொட்டிகள்
நாம் நேரலையாய் பார்த்து ரசிக்கும்
மரணக் குழிகள்...

நாமும் வாழ்வதில்லை
பிற யாவையும்
வாழவிடுவதும் இல்லை

எளியவர்களின் பிரதமர் எங்கே?

உனக்காகத்தான்
கனவு காணுகிறார்
எங்கள் பாரதப் பிரதமர்
என்பது போல
ஒரு கனவு கூட
சாத்தியமாக மறுக்கிறது

உன் கனவில் அவர் வருவார்
அவர் கனவில் யார் வருவார்
அவர் எந்த நாட்டில் மறைந்திருப்பார்...

புதைந்த வைரங்களை
தேடி அலையும்
புதிரான மனிதர்கள்!

புதன், 27 மே, 2020

கருவறை விட்டு
வெளிவந்த அம்மனாக
காட்சி அளிக்கிறாள்
ஒரு குட்டி தேவதை
நினைக்க நினைக்க
விஸ்வரூபம் எடுக்கிறாள்
என் சிறுவயதுத் தோழியை
நினைவு கூர்கிறாள்
நெருக்கம் ஆகிறாள்
நெகிழ வைக்கிறாள்
இறுக்கம் யாவையும்
தளரச் செய்கிறாள்

வெளியே உள்ள கடவுளை
குழந்தைகளைக் காணும்போதும்
உள்ளே உள்ள கடவுளை
குழந்தையாக மாறும்போதும்
காண முடிகிறது 
ஏற்றுக்கொள்வதைத் தவிர
காதல்
வேறு எதுவாக இருக்க முடியும்

வானம் தூவும்
வெம்மையையும் குளிரையும்
ஏற்றுக் கொள்ளும் பூமி

மலர்கள் வீசும்
நறுமணத்தை
ஏற்றுக் கொள்ளும் காற்று

குயில் பாடும்
பாடலை
ஏற்றுக் கொள்ளும் மௌனம்

வேர் கொடுக்கும்
நீரை
ஏற்றுக் கொள்ளும் தாவரம்

கடல் அளிக்கும்
நிராகரிப்பை
ஏற்றுக் கொள்ளும் அலைகள்

பசு கொடுக்கும்
பாலை
ஏற்றுக் கொள்ளும் கன்று

நீ கொடுக்கும்
நினைவுகளை
ஏற்றுக் கொள்ளும் நான்

நீ கொடுக்கும் நினைவுகள்
நேசிப்பாகவோ வெறுப்பாகவோ இருக்கலாம்
எதுவாயினும் ஏற்றுக்கொள்வேன்

ஏற்றுக்கொள்வதைத் தவிர
காதல்
வேறு எதுவாக இருக்க முடியும்


பட்டாம்பூச்சி
பிடிக்கவந்த என்னை
பட்டாம்பூச்சி
பிடித்துக் கொண்டது
கை தொடாமலே...

செவ்வாய், 26 மே, 2020

பகல் இரவு ஊடல்

இருளைத் தழுவித்தழுவி
வெப்பம் கூடி
கதிர்கள் பாய்ந்து
மெல்லமெல்ல இமைகள் மூடியது
இரவு

தாபம் தீர்ந்து
கண்கள் திறந்து
இருள் பார்க்கிறது
வெப்பக் கதிரின்
கடைசி இழையை

இரவு பகல்
ஊடலில் தான்
நொடிகள்
பிறந்துகொண்டே இருக்கின்றன...

திங்கள், 25 மே, 2020

உன் மெய்யைத் தீண்டத்தீண்ட
நீ சித்திரமாகினாய்
நான் சிலையாகினேன்
கனிந்த உதடாகத் தோன்றினாலும்
நீ என் அருகில் இல்லை
பிறை நிலவே...

நான் குவித்த இதழ்களின் ஈரத்தை
காற்று சுமந்து வருவதை
நீ உணர்ந்தாயா...

அல்லா!

உருவமில்லாமல் அனைத்துமாகிறாய்
இதயங்களின் இயக்கமாகிறாய்
மழையும் காற்றும் உன் கருணை
நிலமும் வானும் உன் கருணை
தீயும் நீயும் தான் கருணை
நின்னை நினைக்கும் தருணம்
உடன் பிறக்கும் கருணை

கடலும் கருணை அலையும் கருணை
மரமும் செடியும் கொடியும் கருணை
மூன்றாம் பிறையின் வடிவும் கருணை
முழுதாய்த் தெரியும் நிலவும் கருணை
முக்காலமும் திக்கெட்டும் கருணை
உடல் மன ஆன்ம நலமும் கருணை

கருணை ஒன்றே கடவுள்
சமயத்திற்கு சமயம் மாறுவதில்லை
இயேசுவே...
கிருஷ்ணா...
அல்லா...
என்று அழைக்கும்போதெல்லாம்
நிறைந்து வழிவது கருணை தான்
கருணை ஒன்றே கடவுள்

இந்த ஈகைத் திருநாளில்
கருணை நிறைத்திடுவோம்
கரங்கள் கோர்த்திடுவோம்
மனிதம் போற்றிடுவோம்

ஞாயிறு, 24 மே, 2020

"நவ யுக ஜோக்கர்


பிறர் சிரிப்பதற்கு
பயன்படாத அரிதாரம்
நான் சிரிப்பதற்கு
தேவைப்படுகிறது

சனி, 23 மே, 2020

மனிதன் மரமாகிப் போனாலும்
இலைகளும் பூக்களும் பூப்பதில்லை
பறவைகள் வந்து அமர்வதில்லை
நிழல் கூட விழுவதில்லை
பிறருக்காக பிறந்தவன் மனிதனில்லை...
நீ
படித்து வியக்காத வார்த்தைகளை
மீண்டும் மீண்டும்
நான் வாசித்து
வியந்து கொண்டே இருக்கிறேன்

என்னை ஸ்பரிசிக்கும் தருணத்தில்
நீ மொத்தமாக வியப்பாய்
என் கனவுகளில்
அதை நான் காண்கிறேன்...

அலைகள் கால்களை
நனைப்பதைப் போல...

நிலவொளி இருளிலே
தொடுவதைப் போல...

மலர்களின் வாசனை
சூழ்வதைப் போல...

இசையின் இனிமை
நுழைவதைப் போல...

தனிமையில் மௌனம்
அணைப்பதைப் போல...

தாகத்தை நீர்
தணிப்பதைப் போல...

என்னை ஸ்பரிசிக்கும் தருணத்தில்
நீ மொத்தமாக வியப்பாய்
என் கனவுகளில்
அதை நான் காண்கிறேன்...

வெள்ளி, 22 மே, 2020


கரும்பலகையை விட
காரிருள் போதித்த பாடங்கள்
வாழ்வில் மிக நெருக்கமானது

என்னைத் தொட்டு உணர
என் விரல்கள்
உகந்தது அல்ல

தடாகம் ஒன்று
வட்டமிட்டுக் காட்டியது
அந்த விரல்களை...

நிழலைப் பார்த்தாலும்
நீயாகத் தெரிகிறது
நீரைத் தொட்டாலும்
இதனால்தான் சிலிர்க்கிறது 

வியாழன், 21 மே, 2020


பாயும் புலியைப் பார்கையிலே
காந்தம் எனக்கு
மானாகத் தோன்றியது

வேட்டையாடிடவே
பதுங்கி இருக்கிறது
இரும்புத் துகள்கள்...

தூரத்தில் சில நினைவுகளும்
பக்கத்தில் ஒரு நினைவும்
நானும்

நெருக்கமான அந்தவொரு நினைவும்
தூரத்து நினைவுகளோடு
நெருக்கமானது இப்போது

தூர விளையாடும் நினைவுகள்
தூரல் போடும் வானம்
நானும்...

புதன், 20 மே, 2020

கொஞ்சம் உரிமை எடுத்துக் கொள்ளட்டுமா...
உன் மீது
என்று கேட்காகாமலே
நீ கேட்டுக் கொண்டிருப்பதாய்
நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உனக்கும் எனக்கும் இடையிலே
இடைவெளி மறுத்து
இந்த இடைவெளியை ஏற்றுக் கொண்டேன்
எல்லா இன்பங்களும்
இல்லாமல் போனாலும்
நான் விரும்பாத ஒன்று
நடக்காமல் இந்த
நாடகத்தை நடத்துகிறேன்...

கொஞ்சம் உரிமை எடுத்துக் கொள்ளட்டுமா...
மீண்டும் மீண்டும் விழுங்குகிறேன்
தொண்டைக் குழியில் பதுக்குகிறேன்
மாயவித்தை தெரிந்தவளே
உண்மையில் நீ நடத்தும்
நாடகம் தான் என்ன...
உன் பார்வையில்
கடிதம் நனைந்ததா எரிந்ததா
தெரியவில்லை

காற்றின்
ஈரத்தையும் வெப்பத்தையும்
எடை போடும் மனது...

செவ்வாய், 19 மே, 2020

பட்டாம்பூச்சிகளின் சிறகசைப்பைப் போலவே
குழந்தைகளின் உடலசைவும்
எதையோ தேடித்தேடி நகர்கிறது...

தொட்டு விளையாடும்
மலர்களை
மர்மங்களை
நாம் தேடும் கடவுளை...

நிச்சயம் நமக்கு
அது கிடைக்காது

மீண்டும்
குழந்தைப் பருவமும் திரும்பாது

முடிந்தால்
திரும்பிப் பார் குழந்தைகளை
நீ இழந்தது
ஒருவேளை தென்படலாம்...

திங்கள், 18 மே, 2020

நொடியில் வந்து மறையும் மின்னல்
அடுத்த மழைக்காலம் வரையிலும்
மனதுக்குள் நட்பாகவே மறைந்திருக்கிறது...

மீண்டும் சந்திக்கும் போது
அதே உற்சாகம்
அதே புன்சிரிப்பு...
உபதேசம் செய்கின்றான் ஒருவன்
கண்ணுக்குத் தெரியாமல்

எதைச் செய்யும் முன்னும்
சில ஆலோசனை
நான் கேட்கவில்லை என்றாலும்
செவிகள் கேட்டு விடுகிறது

எய்த அம்பில்
உண்மை சாய்ந்தால் மட்டும்
ஊமை ஆகிறோம் இருவரும்

தேர் இல்லாது போனாலும்
தேரோட்டியாய் மாயவன்
போர் செய்திட உதவுகிறான்

கண் துயிலக் காணும் கனவும்
கண் திறந்தே செய்திடும் கற்பனையும்
கடவுள் 

ஞாயிறு, 17 மே, 2020

எந்தப் பூனையோ
தினம் இரவுப்பாலை
விடியவிடியக் குடித்துவிட்டு
மிச்சம் மீதியையும்
நாவால் நக்கிப் போகிறது
விடியல் பாத்திரம்
சுத்தமாகப் புலர்கிறது

மாலை வேலையில் சூரியன்
குளத்தில் முகம் கழுவி
காத்திருக்கிறான்...

நிலவு வருகிறாள்
விண்மீன் தோழிகளுடன்
எப்போதும் போல தாமதமாக...

இருவர் காதலை
யாரறிவார்
இருளும் அறியாது
ஒளியும் அறியாது

அவன் காத்திருந்து
கண் சிவந்து
போகவில்லை

அவள் கண்ணீர் தான்
அவன் கண் கலந்த
காரணமோ...

மேகப் போர்வைக்குள்
இடி முழக்கம்
முத்தமாகத்தான் இருக்கும்
மின்னல் மின்சாரம் பாய்கின்றதே

ஆனந்த மழை
வந்து நனைக்கின்றது
மோகத்தில் உயிரெல்லாம்
துடிக்கின்றது 

சனி, 16 மே, 2020

காலை மாலை
பல கடந்து ஓட
காத்திருந்த காதல் தான்

காத தூரம் நெருங்கி விட்டேன்
காத்திருப்பு கலைகிறது
சிறகு படபடத்து துடிக்கிறது
இடைவெளிகள் குறைகிறது

ஒரு அடி தான்
ஒரு நொடி தான்
காத்திருக்க முடியவில்லை

இதயத் துடிப்பு நிற்கிறது
இதழ்கள் மட்டும் துடிக்கிறது...
கடந்து செல்லும் பேரழகி
கண்களைக் கவர்ந்திழுத்து
கர்வம் கொண்டாள்

பக்கம் வந்தால் பாதரசம்
பற்றிக் கொள்ளாது
என்ன செய்யும்...

வெள்ளி, 15 மே, 2020

அம்பானி குழந்தைக்குக் கிடைக்காததை
அம்மா நீ
உன் குழந்தைக்குக் கொடுத்தாயே

செல்வத்தால் பெறும் அன்பு
கண்களுக்கு எளிதாகக் கிடைக்கும்

பேரன்பு
காணக் கிடைக்காதக் கடவுள்
எளிய மனிதரிடம் மறைந்து வாழும் 
ஆண்கள் பள்ளியிலே
படித்ததெல்லாம் பெண்களை

வகுப்பறையில்
ஆசிரியை என்றால்
அதிக கவனம்
ஆசிரியர் என்றால்
மணியோசையில் தான்
கலையும் சலனம்

வறண்ட கண்களின் மனதில்
வற்றாத ஜீவ  நதி
வளைந்து நெளிந்து போகும்
பின் தொடரத்தொடர தாகம்

மதி முழுவதும்
பெண்கள் பூத்ததால்
மதிப்பெண்கள் எல்லாம்
வாடிப் போனது

கற்றறிந்த சமூகம்
எப்படிப் பிரித்து வைத்தது
இருபாலர் பிரிவினால்
முப்பாலும் கடினமானது 

வியாழன், 14 மே, 2020

குழந்தை வரையும் ஓவியம்

பூக்களுக்கு
மனிதரைப் போல
ஐம் புலன்கள் அளிக்கும்
முக வரிகள் கொடுக்கும்
குழந்தைகள்...

குழந்தைகள் மட்டும் தான்
பூக்களையும்
சக உயிர்களாகப் பார்க்கின்றனர்

அவர்கள் சித்திரங்களை விட
சிந்தனைகள் அழகானது
உயிரானது...

வண்ணக் காகிதங்களால்
பரிசுப் பொருள் ஒன்றை
ரிப்பன் கயிறு சகிதம்
பூட்டிக் கொண்டிருந்தாள்
எண்ணக் காகிதங்களால்
நானும் அவளை
பூட்டிக் கொண்டு இருந்தேன்
எனக்குப் பரிசாக...

புதன், 13 மே, 2020

மாதா பிதா குரு தெய்வம்
வகுப்பறைப் பாடங்கள் வாதம் செய்யும்
அனுபவப் பாடங்கள் மட்டுமே
அணைத்தும் இயற்கை எனச் சொல்லும்
உன்னை நம்பாதே
மண்ணை நம்பு
நீ
இருக்கும் போதும்
இறந்த போதும்
உன்னைப் பார்த்துக் கொள்ளும்

அறிவியல்
அரசியல்
சமூகம்
தலைவன்
எல்லாமே இடைச்செருகல்
இயற்கை வாழ்வு
கூவமான நீண்ட காவியம்

வயலும் வரப்பும் கூட
வன்முறை என்றால்
பைத்தியம் என்பார்கள்
எல்லி நகைப்பார்கள்

காட்டை அழித்து
உருவாக்கியது எல்லாம்
சுடுகாடு

அதில் பிணங்களைக் கண்டு
எதற்காக அஞ்சுகிறாய்...

செவ்வாய், 12 மே, 2020

வாழையிலைத் தோரணம் விலக்கி
வஞ்சி விழி கொஞ்சி ஒரு
விடியல் வந்து பிறக்காதோ
கண் சூரியன் தான் எழுப்பாதோ....
குழந்தை
வளர வளர
குழந்தை மனம்
காணமல் போகிறது

காமம்
வளர வளர
நாணம் காணமல் போகிறது

காதல்
வளர வளர
காதலர்கள் காணமல் போகின்றனர்...

வெறுமையில் தான்
பிறப்பு நிகழ்கிறது

வெறுமை ஈன்றெடுத்த
உலகக் குழந்தை
சுற்றிச்சுற்றி விளையாடுது
அதில்
இருவர் ஈன்றெடுக்கும்
குழந்தைகள் எல்லாம்
கல்வி கற்று விலை போகுது

அறிவு
வளர வளர
கருணை காணமல் போகிறது

கருணையைத் தொலைத்து விட்டு
கடவுளைத் தேடுகிறேன்
கடவுள்
வளர வளர
மனிதம் காணாமல் போகிறது...

"ஜெயஸ்ரீ எரித்துக் கொலை"

அன்பின் இன்றைய நிலைப்பாடு
ஆங்காங்கே பற்றி எரிகிறது

மனிதம் கெட்டுப் போகுமிடம்
தேசத் தலைவன் யாரும்
சிந்திப்பதற்கு இல்லை

அரசியல் ஆதாயம் ஏதுமின்றி
அவர்கள் நாற்காலியை
விட்டுப் பிரிவதில்லை

நீயும் நானும் கூட
என்ன செய்துவிட்டோம்
பாழ்பட்டுப் போன மனம் தான்
எல்லோர்க்கும் இருக்குது இங்கே

கண்ணுக்குத் தெரியாத
கிருமிகளுக்கு எல்லாம்
மருந்து காணும்
அறிவியல் யுகம்

பூமிப் பானைச் சோற்றுக்கு
எரித்த இரு பாதகர் பதம்

உலகமே ஒரு நாடக மேடை
இருப்பினும்
இறந்தவர் யாரும் மீள்வதில்லை...

திங்கள், 11 மே, 2020

ஒற்றைப் பூ
உன் கரங்களில் கொடுக்கும் வரை
என் கரங்களில் கனக்கிறது

பார்வையில் படும்போதே
பாரத்தைக் கிள்ளி எறிகிறாய்

நீ
பக்கம் வரவர
கண்களும் பூவும்
மேலும் மலர்கிறது

பற்றி எரியும்
இதய எரிமலையை
இதழ்களில் அணைத்துவிடு

நாளையும்
அதிலொரு பூ
உனக்காகப் பூக்கும்...

ஞாயிறு, 10 மே, 2020

வார்த்தைகளே இல்லாமல்
காதலைச் சொல்லும் போது
உடனே பதில் கிடைக்கிறது

உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான  காதல் மொழி
உடல்மொழி

எந்த மொழியிலும்
முழுவதுமாக
மொழிபெயர்க்க முடியாதது

சனி, 9 மே, 2020

அம்மா
நீ நிலவுக்கும் ஊட்டினாய்
என்னோடு நிலவும் வளர்ந்தது

கலங்கம் இல்லாத நிலவு
உன் கரங்களில் ஊட்டிக்கொள்ளவே
மெலிந்து மெலிந்து போகுது...

நிலவு சொன்ன இரகசியம்
முயன்று முயன்று பார்க்கிறேன்
குழந்தையாக மாறிட...

வளர்ந்து கொண்டே இருப்பவர்க்கு
முழுமை வாய்க்கப் போவதில்லை
கலங்கமின்றிக் கரைந்திடவே
நிலவை நாளும் பார்க்கின்றேன்
நிலவு உலகத்தில்
நான் இப்போதும்
குழந்தையே...

என் உலகமாகக்
கருதும் இடமெல்லாம்
நான் குழந்தை

வெள்ளி, 8 மே, 2020

இரவெல்லாம் நிலவு
பகலெல்லாம் சூரியன்
இரு பொழுதும் அம்மா

பூக்கார அம்மா

மனம் வாடிய போதும்
முகம் மலர்கிறாள்
அம்மா

மூன்று கைகளில்
பூமாலைகள் கட்டி
முழம் போடுகிறாள்
எங்கள் எதிர்காலத்தை...

வியாழன், 7 மே, 2020

உடம்பு ஒன்றுதான்
உண்மையாக இருக்கிறது

யாரும் உண்மையாக இல்லையென்று
மதுவுக்கு உண்மை ஆகின்றோம்
உண்மையான ஒன்றையும்
பொம்மையாக மாற்றுகின்றோம்

உலகும் உடலும் வேறல்ல
உண்மையில்
உலகையே அழிக்கின்றோம்

இறைவனை
பிறருக்கு ஏற்றாற்போல்
வடிவமைக்கின்றோம்

இயற்கையை
தனக்கு ஏற்றாற்போல்
தகவமைக்கின்றோம்

எட்டுப் பங்குத் தண்ணீரை
அழித்து வரும் கெடுநீரை
குடித்து அழித்து வாழ்கின்றோம்
எட்டு காலில் போகின்றோம்

இயற்கையன்னை மடி பிறந்து
தொப்புள் கொடி மறக்கின்றோம்

பனித்துளியை படர்கொடியை
வெண்மதியை நல்லிசையை
மழலை கொஞ்சும் ரதியை
விட்டு விலகி செல்கின்றோம்

இயன்றவரை இயன்றவரை
என்ன சுகம் காண்கின்றோம்...

மலர் வளர்ப்போம்
கனி வளர்ப்போம்
பனை வளர்ப்போம்

தேன் கிடைக்கும்
கனிரசம் கிடைக்கும்
கள் கிடைக்கும்

இயற்கை நன்கு செழிக்கட்டுமே
இறை அதுவாய் இருக்கட்டுமே
சென்றதெல்லாம்
திரும்பக் கிடைக்கட்டுமே

முழு நிலவே
வேண்டுகின்றேன்
முழு வரமும் தந்துவிடு...

பதுங்கிப் பதுங்கி வாழ்வது
பழக்கமாகிப் போனது
பாறை இடுக்கிலும்
பதுங்குக் குழியிலும்
ஐன்னல் நடுவிலும்
மதில் சுவர் விளிம்பிலும்
அங்கம் அசையாமல் காத்திருப்பேன்
என் நிழலில் என்னையே மறைத்திருப்பேன்

மௌனத்திற்கு ஒலி கொடுப்பேன்
அந்த மியாவ் மியாவ் வார்த்தைகளும்
அமைதியைக் குலைப்பதில்லை...

அசைவம் தவிர்க்க முடியவில்லை
திருட்டை விட்டுத் திருந்தவில்லை
இருந்தும்
புத்தனாக முயலுகிறேன்
பதுங்கிப் பதுங்கிப் பயிலுகிறேன்...

புதன், 6 மே, 2020

மூடி மூடித் திறக்கிறது
ஒரு மாயக்கதவு

கைகளால்
அது சாத்தியமில்லை
கண்கள் மூடத் திறக்கிறது
கண் திறந்தால்
பூட்டிக்கொள்கிறது

என்னை மட்டும்
அனுமதிக்கிறது
மனதில் யாரும் இருந்தாலும்
வெளியில் தள்ளி விடுகிறது

மௌனமாக இருந்தால்
பேசுகிறது
நான் பேசினால்
மௌனமாக இருக்கிறது

சிரிக்கிறது
அழுகிறது
கண்துடைக்க அருகில் சென்றால்
கானலாகிவிடுகிறது

நீதான் என்று தெரிந்தும்
கண்கள் மூடியே இருக்கிறேன்
உன்னுடன் இருப்பதற்கு

மீண்டும்
என்னைப் பிரிந்து விடாதே
மாயக் கதவுகளை
பூட்டிவிடாதே...

நிரந்தரமாய்
கண் மூடிடவே
நித்தமும் முயல்கிறேன்

செவ்வாய், 5 மே, 2020

வண்ணங்களின் கலவை
அதி அற்புதமானது
எண்ணங்களைப் போலவே
உடன் சேர்கிறது

முத்தமிடத் துடிக்கும்
வண்ணங்களைச் சேர்ப்பவன்
ஓவியன்

திங்கள், 4 மே, 2020

ஒற்றைக் கண்ணில்
உன்னைப் பார்த்து ரசிக்கின்றேன்

மீதம் முழுதும்
கைகள் கொண்டு
மறைக்கின்றேன்

ஒரு கண்
சிரிக்கும் போது கூட
மறு கண்
வலியில் துடிக்கிறது

என்ன செய்யப் போகிறாய்...

ஞாயிறு, 3 மே, 2020

அவள் காதினில் தினம் சொல்கிறேன்...

பெண்கள் இருப்பார்கள்
அன்னையாக
சகோதரியாக
தாயாக
பிள்ளையாக
தோழியாக...
நிரந்தரமாய் இருப்பார்கள்

காதலியாய் மட்டும் இருப்பதில்லை
நிரந்தரமாக

நிரந்தரமாய்
நீ இல்லாததால்
ஆண்கள் இருப்பதில்லை
தந்தையாக
சகோதரனாக
பிள்ளையாக
நண்பனாக...

என்னை இழந்து
உன்னைத் தருவாய்
உன் உறவுகளுக்கு

நான்
உன்னை இழந்து
என்னைத் தருவேன்
தனிமைக்கு

பெண்ணே
நீ ஒருவரை வெறுத்தால்
ஒருவரை மட்டும் தான்
வெறுக்கிறாய்

நீ ஒருத்தி
எனை வெறுப்பதால்
நான் அணைவரையும்
வெறுக்கிறேன்

அவள் காதினில் தினம் சொல்கிறேன்...
அவள் கேட்பதில்லை

சனி, 2 மே, 2020

காலனி இல்லாமல்
நடக்காதவர்களுக்கு
பாதங்களின் வேதனை புரியாது

பிறக்கும் போது
இருக்கும் பாதம்
இறக்கும் போது
இருக்காது

நிழலைத் தேடி
அலையும் பாதங்கள் தான்
சுடும் மணலுக்கு நட்பாகும்

நிழலில் சில நேரம்
முட்கள்
காத்திருந்து முத்தமிடும்

காத்திருந்த பரிதவிப்பில்
பல் பதித்து
இரத்தம் தரும்

வறுமை கூட
விதவிதமாய்
பந்தங்களைத் தருகின்றன

மண் இட்டு
மூடிமறைத்தால்
முள்ளே
முத்தம் தருவாயா...


கொள்ளி இட்டு
எனைச் சுடும் போது
சுடு மணலே
நினைவில் வந்தணைப்பாயா...

வெள்ளி, 1 மே, 2020

நரகம்
எல்லா விளக்குகளையும்
அணைக்கும் நேரத்தில்

சொர்க்கம்
அதன் விளக்குகளை
ஏற்றிக்கொண்டு இருக்கிறது 
நீ தடவிக் கொள்ளும்
அழகுப் பொருட்கள் எல்லாம்
உன்னை அழகி ஆக்கும்

என்னை அனுமதித்துப் பார்
உன்னைப் பேரழகி ஆக்குகிறேன்
தடவிக் கொல்லவா...