ஆயுத இரைச்சல்களை நிறுத்துங்கள்
இரவு வரும்
தூக்கம் வரும்
விடியல் வந்து எழுப்பும்
நாம் எல்லோரும்
ஓர் பிரபஞ்சப் பிள்ளைகளே...
ஆறு வறண்டு விட்டது
குளம் வற்றி வட்டது
என்று
இரத்தம் நிரப்பப் பார்க்கிறீர்கள்
வானம் இருப்பதை மறந்துவிட்டீர்கள்
மழைக்காலம் வரும்
வியர்வை சிந்தக் காத்திருங்கள்
ஆறு ஓடும்
குளம் நிரம்பும்
மீன்கள் விளையாடும்
பறவைகள் இசை பாடும்
எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கும்
அரை வயிறு தாண்டி
எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்
குழந்தைகளைக் கட்டிப் போடாதீர்கள்
இயற்கையிடம் பாடம் படியுங்கள்
ஆயுதங்களை மறந்துவிடுங்கள்
ஆலயங்களில் பூட்டி வையுங்கள்
தெய்வம் பார்த்துக்கொள்ளும்
நிம்மதியாய் வாழுங்கள்
இரவு வரும்
தூக்கம் வரும்
விடியல் வந்து எழுப்பும்
நாம் எல்லோரும்
ஓர் பிரபஞ்சப் பிள்ளைகளே...