ஓயாமல் உழைத்தேன்
கடும் பாறை உடைத்தேன்
தேனாக வந்த நீர்
தானாக நிறைந்தது என்கிறார்
என் கண்களில் கசியும்
உப்பு நீருக்கு மட்டும்
காரணம் நான்தான் என்கிறார்
நிழலில் படுத்திருந்த அணில்
வெயிலை பார்த்துக்கொண்டே இருக்கிறது
உடல் மட்டும் தான் நிழலில்
உள்ளம் பாய்ந்து அலைகிறது வெயிலில்
தேனைக் குடிக்கும் பட்டாம்பூச்சி
தாகத்தை நினைத்துக்கொண்டே இருக்கிறது
ஒரு துளி குடிப்பதற்குள்
ஓராயிரம் நினைவுகளைக் குடிக்கிறது
இரவில் வந்த நிலவு
சூரியனுக்கு காத்துக்கொண்டே இருக்கிறது
காத்திருந்ததை காட்டிக் கொள்ளாமல்
காற்று வாங்குவதைப் போல கடக்கிறது
நானும்
வெயிலை பார்த்துக்கொண்டு
தாகத்தை நினைத்துக்கொண்டு
நிலவாக காத்திருக்கிறேன்...
பாலை மனத்தில்
எங்கும் கானல் நீராய்
நீ...
அனல் காற்று எழுதும்
மண்ணில் காதல் கடிதம்
பாதம் வேகமாகப் படிக்கும்
என்னில் தீயை வளர்க்கும்
இரவு மெல்லப் படர்ந்து
கட்டி என்னை அணைக்கும்
பற்றி எரியும் தீயை
பக்குவமாய் அணைக்கும்
அந்த நொடியில் உள்ளம்
உலகை முழுதும் மறக்கும்
இரவாக உன்னை நினைக்கும்
இன்பம் பனி மழையாய் நனைக்கும்....
ஒரு மரம் வீழ்ந்தால்
சில பறவைகள் தவிக்கும்
ஆயிரமாயிரம் மரங்கள் வீழ்ந்தது போல்
பல்லாயிரம் பறவைகள்
மன வானில் ஒன்றாய் பறக்கின்றன
சிறகுகள் அத்தனையும்
நில்லாமல் தவித்துத் துடிக்கின்றன...
திரை வானில்
புன்னகை மழைப் பொழிந்தாய்
நிஜ வானில் மழை பொழிய
மண் நகை மரம் விதைத்தாய்
தன் கை தடுப்பூசி ஏற்றதும்
உயிர்த் துறந்தாய்
ஊர் கை உயிரோடு இருக்கவா
உனை இழந்தாய்...
இலைகளின் அசைவிலே
நீ சிரிப்பாய்
இறந்தும் நீ
ஓசோனில் ஓட்டை அடைப்பாய்
மரங்களின் நிழல்களால்
உயிர்களை அணைப்பாய்
கலையுலகில் கலைவாணர் வாரிசு
பூவுலகம் உள்ளவரை பூங்காற்றாய் நீ வீசு...
ஒரு ராத்திரி பொழுதில்
நீ எனக்கு அறிமுகம்
எப்போது என்று நியாபகமில்லை
ஒருபோதும் நீயும் கேட்டதில்லை
வார்த்தை இல்லாத உலகத் தாய்மொழியில்
இதுவரை தொடர்பு கொண்டோம்
கண்களில் விழுகிறாய்
கைகளில் விலகுகிறாய்
கண்களுக்கு மெய்யானாய்
மெய்யிற்க்குப் பொய்யானாய்
என் மெய் இங்கு பொய்யானால்
இந்த பொய் உன் மெய் சேர்ந்திடுமா...
இப்படி நான் கேட்டிட
உனக்கு என்மேல் கோபமா
அதனால்தான் இன்று
அமாவாசை தினமா...
இதுகூட உன் பாசாமா
மாதமொரு முறை
மெல்லப் பொங்கி வருமா...
காற்று மட்டும் தான்
காசு கேட்பதில்லை
காற்றைச் சேமிக்க கலன் இருந்தால்
ரேஷனில் நெடும் வரிசை நிற்கும்
திருட்டும் பிச்சையும்
பெரும்பான்மை கொண்டிருக்கும்
கனவில் காதலியை பின்னுக்குத் தள்ளும்
மனமெல்லாம் மரங்கள் முளைக்கும்
காற்றின் கால் கொலுசுகள்
இலைகளின் இசை எழுப்பும்
காற்றுக்காக தாடிகள் வளரும்
கண்கள் இமைக்காமல் காத்திருக்கும்
காட்சி இல்லை எனத் தெரிந்தும்...
கறுப்பு எறும்பும்
சிகப்பு எறும்பும்
சிட்டெறும்பும் கட்டெறும்பும்
பங்கு போட்டே உண்கிறது
உடல் வருந்தி நிற்கும்
எறும்புகளின் சோமாலியா
எங்குமே இல்லை...
வயிறு பெருத்த
தின்று கொழுத்த எறும்புகளை
இதுவரை எங்குமே கண்டதில்லை
பிரிவினைகள் இல்லாத ஊரிலே
பிரதிநிதிகள் தேவையில்லை
பெரும் நிதியை இலக்காக்கி
பனித்துளிகள் வாழ்வதில்லை...
நாகரிகமான மனிதர்கள்
குப்பைகளை விட்டெரிந்து
தான் சுத்தமாய் வாழுகிறார்
குப்பைகளை பொறுக்கி
அழுக்காய் அலைகிறான்
அவன் யாரோ...
தானும் தன் குடும்பமும்
நல்லா இருக்க வேண்டி
கோவிலில் வணங்கிய தெய்வம்
சாலையில் குப்பைகளை
பொறுக்கி அலைவதை
சாக்கடையில் இறங்கி
முங்கி எழுவதை
கண்டும் காணாமல் போகின்றார்
கண் மூடியே கடவுளைக் காண்கின்றார்