வெள்ளி, 30 ஏப்ரல், 2021

 


ஓயாமல் உழைத்தேன்
கடும் பாறை உடைத்தேன்
தேனாக வந்த நீர்
தானாக நிறைந்தது என்கிறார்
என் கண்களில் கசியும்
உப்பு நீருக்கு மட்டும்
காரணம் நான்தான் என்கிறார்


 


என் முன்னே
கை வீசி போகிறாய்
பின் கை வீசி
உனைத் தொடர்வதாய்
என் மனது...
கண்
எங்கெங்கோ போகிறது
உடல்
எதிலோ மோதி விழுகிறது...
இப்போதும்
என் முன்னே
கை வீசி போகிறாய்
பின் கை வீசி
உனைத் தொடர்வதாய்
என் மனது...
கண்
எங்கெங்கோ போகிறது
உடல்
எழுந்து மீண்டும்
எதிலோ மோதப் போகிறது...


வியாழன், 29 ஏப்ரல், 2021

 


தன்னைத் தானே சுற்றும் போதெல்லாம்
வந்த மயக்கம் போல் விளையாட்டல்ல
உன்னைச் சுற்றி வந்த மயக்கம்...

தெளிந்த நிலையே
ஏதென்று மறந்து போனேன்
மது உண்ட வண்டைப் போல
மலர் உன்னைச் சுற்றுகின்றேன்...


புதன், 28 ஏப்ரல், 2021

 


உன் பெயரை எழுதி
என் பெயரால் அழிக்கிறேன்
வெளியே
உள்ளே உன்னை அணைப்பது
உனக்கு மட்டும் தெரியும்
என்று என்னை நானே
ஏமாற்றிக்கொண்டு
கிறுக்கிக்கொண்டே இருக்கிறேன்
கிறுக்குப் பிடிக்கிறது...


செவ்வாய், 27 ஏப்ரல், 2021

 


நிலவுப் பொட்டாகும்
மேகம் கூந்தலாய் ஆடும்
வானம் நீயாகும் தருணம்
மனம் வானவில் ஆகும்

உள் எங்கும்
உன் நினைவு நதி ஓடும்
கண் எங்கும்
கண்மாய் ஆகும்

ஒற்றை மீனொன்று
தன் இணையை நிதம் தேடும்
நிலவுப் பொட்டெனக்கு
நீ விரித்த தூண்டிலாகும்...


திங்கள், 26 ஏப்ரல், 2021

 


உன் விழி வில்லின் அம்புகள்
நேரில் பார்த்தவரை விட்டுவிட்டு
மறைந்திருந்து பார்க்கும்
எனை மட்டும் பதம் பார்ப்பதேன்...


ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

 


நிழலில் படுத்திருந்த அணில்
வெயிலை பார்த்துக்கொண்டே இருக்கிறது
உடல் மட்டும் தான் நிழலில்
உள்ளம் பாய்ந்து அலைகிறது வெயிலில்

தேனைக் குடிக்கும் பட்டாம்பூச்சி
தாகத்தை நினைத்துக்கொண்டே இருக்கிறது
ஒரு துளி குடிப்பதற்குள்
ஓராயிரம் நினைவுகளைக் குடிக்கிறது

இரவில் வந்த நிலவு
சூரியனுக்கு காத்துக்கொண்டே இருக்கிறது
காத்திருந்ததை காட்டிக் கொள்ளாமல்
காற்று வாங்குவதைப் போல கடக்கிறது

நானும்
வெயிலை பார்த்துக்கொண்டு
தாகத்தை நினைத்துக்கொண்டு
நிலவாக காத்திருக்கிறேன்...


சனி, 24 ஏப்ரல், 2021

 


கடைசி இலை ஒன்று
வீழ்வதற்கு மனம் இல்லாமல்
சிறகை வளர்த்துக் கொண்டது
பழகியக் கிளையை
விட்டுப் பறக்கவுமிலை
சிறகுகள் முளைத்த
அந்த ஒற்றையிலை...


வெள்ளி, 23 ஏப்ரல், 2021

 


பாலை மனத்தில்
எங்கும் கானல் நீராய்
நீ...

அனல் காற்று எழுதும்
மண்ணில் காதல் கடிதம்
பாதம் வேகமாகப் படிக்கும்
என்னில் தீயை வளர்க்கும்

இரவு மெல்லப் படர்ந்து
கட்டி என்னை அணைக்கும்
பற்றி எரியும் தீயை
பக்குவமாய் அணைக்கும்

அந்த நொடியில் உள்ளம்
உலகை முழுதும் மறக்கும்
இரவாக உன்னை நினைக்கும்
இன்பம் பனி மழையாய் நனைக்கும்....


வியாழன், 22 ஏப்ரல், 2021

 


பட்டாம்பூச்சிக்கு பேராசை
அவள் இதழ்களை நாடியது
சிறகுகள் படபடக்கிறதா...
உன் உயிரும் துடிதுடிக்கிறதா...


புதன், 21 ஏப்ரல், 2021

 


பறவைகளைக் காணும் போதெல்லாம்
சிறகுகளால் ஆசிர்வதித்து செல்கிறது
ஒரு மரம் விதைப்போம் காணிக்கையாக...


செவ்வாய், 20 ஏப்ரல், 2021

 



முன்னும்
பின்னும்
இல்லாமல் போனது
இடையில்
நீ வந்தபோது...


திங்கள், 19 ஏப்ரல், 2021

 


நாளெல்லாம் சிறகசைத்தும்
நதியோ கடலோ
நானோ நாணலோ
பறக்கவில்லை
ஏதும் அசைக்காமல்
வானில் பருந்து
யாருக்கு வட்டமிட்டுக் காட்டுகிறது
எங்களை...


ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

 


மருத்துவர் கடவுள் என்றால்
ஏன் காசு கேட்கிறார்
உண்டியல் வைத்தால் போதாதா...

டோக்கன் இல்லாத
சிறப்பு தரிசன வரிசை இல்லாத
மருத்துவமனையும் இல்லை
பெரிய கடவுளும் இல்லை


சனி, 17 ஏப்ரல், 2021

 


மனிதன் போட்ட பாதைகள் எல்லாம்
அழிவை நோக்கிக் கொண்டு செல்லும்
இயற்கைப் பாதைக்கு திரும்பிடுங்கள்
என மான்களிடம் சொல்லிவிட்டு
என் அழிவை நோக்கித் தொடருகிறேன்...


வெள்ளி, 16 ஏப்ரல், 2021

 


ஒரு மரம் வீழ்ந்தால்
சில பறவைகள் தவிக்கும்
ஆயிரமாயிரம் மரங்கள் வீழ்ந்தது போல்
பல்லாயிரம் பறவைகள்
மன வானில் ஒன்றாய் பறக்கின்றன
சிறகுகள் அத்தனையும்
நில்லாமல் தவித்துத் துடிக்கின்றன...

திரை வானில்
புன்னகை மழைப் பொழிந்தாய்
நிஜ வானில் மழை பொழிய
மண் நகை மரம் விதைத்தாய்
தன் கை தடுப்பூசி ஏற்றதும்
உயிர்த் துறந்தாய்
ஊர் கை உயிரோடு இருக்கவா
உனை இழந்தாய்...

இலைகளின் அசைவிலே
நீ சிரிப்பாய்
இறந்தும் நீ
ஓசோனில் ஓட்டை அடைப்பாய்
மரங்களின் நிழல்களால்
உயிர்களை அணைப்பாய்
கலையுலகில் கலைவாணர் வாரிசு
பூவுலகம் உள்ளவரை பூங்காற்றாய் நீ வீசு...


 


அடிவானில் தான்
இருளும் ஒளியும் சந்திக்கின்றன
இருளிடமும் கேட்டு விட்டேன்
ஒளியிடமும் கேட்டு விட்டேன்
இதுவரை ஏதும் சொன்னதில்லை

என் உள் மனதில்
உன்னை சந்திகின்றதை
யாரேனும் கேட்டால்
நானும்தான் என்ன சொல்வேன்...

அடிவானம்
யாருடைய உள் மனதோ...

வியாழன், 15 ஏப்ரல், 2021

 


சிறகுகள் படபடக்க
ஒரு வண்ணத்துப்பூச்சி
ஜன்னலில் மோதிக்கொண்டே இருந்தது

ஜன்னல் திறந்தும்
வெளியில் செல்லாமல்
தொடர்ந்து இருந்தது

இதயப் பட்டாம்பூச்சிகள்
வாசல் திறந்தாலும்
வந்துகொண்டே இருக்கிறது
ஜன்னலைத் தேடி

வீட்டு ஜன்னல்களை
தோட்ட மலரென்று
நம்பி வாழ்கிறதோ...


புதன், 14 ஏப்ரல், 2021

 


நகரத்தில்
விடியவிடிய தேடியும்
இரவு காணவில்லை...

இமைகள் மூடிய பின்
வந்து போவது
இரவா கனவா...
தெரியவில்லை

கிராமத்தில்
இரவென்று சொல்வதிலும்
அரிதாரம் இல்லாமலில்லை

அடர்ந்த காட்டினுள்
இரவு இருக்கலாம்
அதன் அடையாளம்
நியாபகமில்லை

கடைசியாக
பார்த்த இரவு
கண்டிப்பாக இப்போது இல்லை


செவ்வாய், 13 ஏப்ரல், 2021

 



உலகின் அனைத்து மக்களும்
முதலில் பேசிய மொழி
நமது மொழி

பிறமொழி திணிப்பு
நம் தாய்மொழி இனிப்பு
மீண்டும் மீண்டும் வேண்டும்
தமிழனாய் பிறப்பு...

திங்கள், 12 ஏப்ரல், 2021

 


பிரபஞ்சத்தின் வேர்கள் எல்லாம்
அன்னை மார்பில்
அனைத்தும் வழங்கி இருக்கிறது

நம் உமிழ் நீருக்கு
உயிர் பாலை அல்லவா
விலையாகத் தந்திருக்கிறது

தன் உறக்கத்தையும்
விழித்திருந்து
நமக்குத் தந்தவள்

நாம் அழுதால்
தான் கலங்கும்
கண்கள் உடையவள்

கண்கள் கண்ட
ஓர் கடவுள்
அவளே உமையவள்


ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

 


பச்சைப் புல் வெளியில்
நட்பு மலர்ந்து
காற்றில் இங்கும் அங்கும் அசைந்தாடுது
பனித்துளிகளை எல்லாம் பந்தாடுது...


சனி, 10 ஏப்ரல், 2021

 


ஒரு ராத்திரி பொழுதில்
நீ எனக்கு அறிமுகம்
எப்போது என்று நியாபகமில்லை
ஒருபோதும் நீயும் கேட்டதில்லை
வார்த்தை இல்லாத உலகத் தாய்மொழியில்
இதுவரை தொடர்பு கொண்டோம்
கண்களில் விழுகிறாய்
கைகளில் விலகுகிறாய்
கண்களுக்கு மெய்யானாய்
மெய்யிற்க்குப் பொய்யானாய்
என் மெய் இங்கு பொய்யானால்
இந்த பொய் உன் மெய் சேர்ந்திடுமா...
இப்படி நான் கேட்டிட
உனக்கு என்மேல் கோபமா
அதனால்தான் இன்று
அமாவாசை தினமா...
இதுகூட உன் பாசாமா
மாதமொரு முறை
மெல்லப் பொங்கி வருமா...


வெள்ளி, 9 ஏப்ரல், 2021

 


எட்டும் தொலைவு வரை
எதுவுமே இல்லை
கண்கள் விழித்து இருக்கிறது
இதயம் காத்துக் கிடக்கிறது
மௌனமாக
பசித்த வேங்கை போல...


வியாழன், 8 ஏப்ரல், 2021

 


செல்ஃபி எடுத்துக்கொள்ளும்
நதியின் கரைகள்
என்னைப்போல் இல்லை
எதையும் சேர்த்து வைக்காத சூஃபிகள்
என் மனதெல்லாம் செல்ஃபிஸ்
நதி மனதெல்லாம் உயிர் மீன்கள்...


புதன், 7 ஏப்ரல், 2021

 


நான் வாசித்துக் கொண்டே இருக்கிறேன்
கண்கள் வழியாக
காதுகள் வழியாக
நாசி வழியாக
நாக்கு வழியாக
மேனி வழியாக
மனதின் வழியாக
இதயம் வழியாக
அனைத்தையும் ஒன்றாய் வாசிப்பது
அன்பே உன் வழியாக...


செவ்வாய், 6 ஏப்ரல், 2021

 


காற்று மட்டும் தான்
காசு கேட்பதில்லை
காற்றைச் சேமிக்க கலன் இருந்தால்
ரேஷனில் நெடும் வரிசை நிற்கும்
திருட்டும் பிச்சையும்
பெரும்பான்மை கொண்டிருக்கும்
கனவில் காதலியை பின்னுக்குத் தள்ளும்
மனமெல்லாம் மரங்கள் முளைக்கும்
காற்றின் கால் கொலுசுகள்
இலைகளின் இசை எழுப்பும்
காற்றுக்காக தாடிகள் வளரும்
கண்கள் இமைக்காமல் காத்திருக்கும்
காட்சி இல்லை எனத் தெரிந்தும்...


திங்கள், 5 ஏப்ரல், 2021

 


கறுப்பு எறும்பும்
சிகப்பு எறும்பும்
சிட்டெறும்பும் கட்டெறும்பும்
பங்கு போட்டே உண்கிறது

உடல் வருந்தி நிற்கும்
எறும்புகளின் சோமாலியா
எங்குமே இல்லை...

வயிறு பெருத்த
தின்று கொழுத்த எறும்புகளை
இதுவரை எங்குமே கண்டதில்லை

பிரிவினைகள் இல்லாத ஊரிலே
பிரதிநிதிகள் தேவையில்லை
பெரும் நிதியை இலக்காக்கி
பனித்துளிகள் வாழ்வதில்லை...


ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

 


முஸ்லிம்களும்
கிருஸ்துவர்களும்
இந்துக்களும்
பகலெல்லாம் இரை தேடி
இரவானால் வீடு திரும்பும்
பறவைகளாய்த் தான் வாழ்கின்றனர்
பேதம் ஏதும் இல்லை
மதம் என்று மனிதர்களை
பிரித்தாளும் கயவர்களை
ஒருபோதும் ஏற்காதீர்கள்...



கடவுளிடம்
கேட்டுக் கொண்டிருப்பது சொர்க்கம்
என்றால் இருப்பது நரகம் தானே...


சனி, 3 ஏப்ரல், 2021

 


கடவுளுக்கு
வாய்ப்புகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்
என்னிடம் மட்டும் தோற்றுக் கொண்டே இருக்கிறான்...
வாய்ப்பை மறுத்தாலும்
அவன் போகமாட்டான்


வெள்ளி, 2 ஏப்ரல், 2021

 


நாகரிகமான மனிதர்கள்
குப்பைகளை விட்டெரிந்து
தான் சுத்தமாய் வாழுகிறார்
குப்பைகளை பொறுக்கி
அழுக்காய் அலைகிறான்
அவன் யாரோ...

தானும் தன் குடும்பமும்
நல்லா இருக்க வேண்டி
கோவிலில் வணங்கிய தெய்வம்
சாலையில் குப்பைகளை
பொறுக்கி அலைவதை
சாக்கடையில் இறங்கி
முங்கி எழுவதை
கண்டும் காணாமல் போகின்றார்
கண் மூடியே கடவுளைக் காண்கின்றார்


வியாழன், 1 ஏப்ரல், 2021

 


தாத்தா   சைக்கிளில்
நொண்டி அடித்துப பழகினேன்
தாத்தா சைக்கிள் இல்லாமல்
நொண்டி அடித்துப் பழகினார்
ஓய்வாக மர நிழலில்
ஓய்வில்லாமல் மன நிழலில்
நொண்டி அடிக்காமல்
நான் எதிர்காலத்தில்
தாத்தா கடந்தகாலத்தில்...