வெள்ளி, 31 ஜூலை, 2020



 

இயற்கை அரண்
எப்போதும் இருக்கிறது
மனம்தான் எப்போதும்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது


வியாழன், 30 ஜூலை, 2020



இருளில்
சப்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது
விடியலின் பிரசவம்...



கனத்த மழையிலும்
நிரம்பாத விழிக் குளங்களை
உன் நினைவுகள் நிறைத்து விடுகின்றன...

புதன், 29 ஜூலை, 2020



நா வளைந்திட
வார்த்தை வரும்
பேநா வளைந்திட வருவதில்லை...


என்னை நானே நேசித்த தருணங்களை
நீரின் மீது எழுதி வைத்தேன்
நீங்கிப் போனதும்
நீரும் என்னை மறந்து போனது
நீ மறந்ததைப் போல...

நீயும் இல்லை
நீரும் இல்லை
தாகம் மட்டும் இருக்கிறது
இதயம் இன்னும் துடிக்கிறது...

செவ்வாய், 28 ஜூலை, 2020

https://youtu.be/fJ6vprF7Sog

உலக அடுப்பு பற்றி எரிகிறது
சாமானியரும் சகவுயிரிகளும் பசியுடனே திரிகிறது
கொடுப்பதற்காக பிறந்தவன் கர்ணன் துடிக்கிறான்
பறிப்பதற்காக இருக்கும் எவரையும் முடிக்கிறான்
முடங்கிய கைகளை மூர்க்கமாக்கி இணைக்கிறான் 


திங்கள், 27 ஜூலை, 2020



ஒற்றைக் காலில்
தவம் செய்தும்
கொக்குக்கு
விண்மீன்கள் கிடைப்பதில்லை
என்ற எந்த ஏக்கமுமில்லை
மனிதரைப் போல...


ஒரு பட்டாம்பூச்சி தருவதை
திரும்பத் தரப் பார்க்கிறேன்
திரும்பியே பாராமல் செல்கிறது

காற்று தந்த உயிரை
திரும்பத் தரப் பார்க்கிறேன்
திரும்பியே பாராமல் செல்கிறது

நீ கொடுத்தக் காதலை
திரும்பத் தரப் பார்க்கிறேன்
திரும்பியே பாராமல் செல்கிறாய்...

ஞாயிறு, 26 ஜூலை, 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (11)



பணம் புகழ் தன் சொந்தங்கள்
எதுவுமே இல்லாத இறகு ஒன்று
பரவசமாய் தன் வாழ்வைக் கடக்கிறது...



வீடில்லாதவர்களின் சமூக இடைவெளி
அம்பானி வீட்டில்  இருப்பதைப் போல இருக்காது
என்பது கூட தெரியாத
கள்ளம் கபடம் இல்லாத அரசு 


வயிறு அடுப்பாகுது
அவயங்கள் உணவாகுது
வறுமையை ஒழித்துவிட்டது அரசு 

சனி, 25 ஜூலை, 2020




சிகரம் தொட்ட அனுபவம்
என் உச்சம் நீ
இறங்க மனமில்லை




வெள்ளி, 24 ஜூலை, 2020



சிறுவர்கள் குளத்தில் எறியும்
கற்கள் எல்லாம்
யாருக்கு விண்மீன்கள்

நான் பார்க்கும் விண்மீன்கள்
யார் எறிந்ததோ...

கண்கள் காணும் தூரம்வரை
என் உலகைக் காணவில்லை
தாண்டிச் சென்று காணும் உலகில்
கண்களுக்கு வேலையில்லை



கால அலையின் அதிர்வுகளில் 
மறைந்து நின்று பார்க்கிறாய்
சிறு புன்னகையால் சாய்க்கிறாய்
விரல்களும் விழிகளும் இதழ்களும்
மலர்ந்து கொண்டே இருக்கிறது
மௌனமாக வாசம் என்னை நிறைக்கிறது
மூழ்கிக் கொண்டே இருக்கிறேன்...

வியாழன், 23 ஜூலை, 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (10)



கண்கள் திறந்து ஓர் பயணம்
கண்கள் மூடி மறு பயணம்
முதலும் பயணம் முடிவும் பயணம்


யாருக்கு யார் சொந்தம்...
அன்னைக்கு மகனா
அன்புக் காதலனா
நடுவில் வந்த நண்பனா
காத்திருக்கும் எமனா
எனக்கே நானா
உனக்கே நீயா
யாருக்கு யார் சொந்தம்...
வந்து போகும் உலகில்
வந்து போகும் எவையும்
சொந்தம் இல்லை என்றால்
சொர்க்கம் ஆகும் பூமி
கவிதை கூட அதுவே
நம் கையில் எதுவும் இல்லை
வந்து போகிறது
கண்டு களித்திருப்போம்...

புதன், 22 ஜூலை, 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (9)



ஒவ்வொரு நொடியும் பிறப்பு
முதல் பிறப்பு தாய்மடி
இரண்டாம் பிறப்பு மரணம்


ஓணானின் கண் 
அசையும் நேரத்தில்
தன்னையே வேட்டைக்குக் கொடுக்கிறது
அசையாத தருணத்தில்
வேட்டையாடுகிறது 

நீ என்னை
வேட்டையாடிய தருணங்கள்
மனதில் வந்து போகிறது...

செவ்வாய், 21 ஜூலை, 2020



எந்த நேரமும் காதலென்றால்
எப்படி வாய்மொழிப் பேசும்
இதயங்கள் பேசும் போது
இதழ்கள் இரண்டும் மௌனமாகும்
ஒன்றில் ஒன்று தேன் பருகும்
இரண்டு ஒன்றாய் மாறும் தருணம்
ஒன்றாய் மாறிப் போனபோது
இதயமும் மறையும்
காதலும் மறையும்
காலமும் மறையும்
எந்த நேரமும் காதலென்றால்
எப்படி வாய்மொழிப் பேசும்...

பெயரில்லாப் பெருவாழ்வு (8)



வளரும் தேயும் வளரும் நிலவு
தேயும் வளரும் தேயும் மனது
வளரும் தேயும் முடியும் உடம்பு 

திங்கள், 20 ஜூலை, 2020


காற்று 
கற்பனையில் இருந்தாலும்
சித்திரத்தில் நுழையாது

உன்னைத் தவிர
உலகில்
உயிரோவியம் கிடையாது


சிறகு இல்லாத பறவையொன்று
விறகுப் புகையை மேகமாக்கி
நாளெல்லாம் பறக்கிறது...

வானம் வந்து சேர்ந்துவிட்ட
வட்ட நிலவாகச் சிரிக்கிறது

ஞாயிறு, 19 ஜூலை, 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (7)



வெளிவேசம் போடும் மூளை
உள்வேசம் போடும் மனது
நடக்கும் நாடகம் பார்ப்பது இதயம்


நாத்துக் கட்ட 
தூக்கிக் கிட்டு
நடந்துக்கிட்டுப் போகையில
பாத்திக் கட்ட
மண் எடுத்து
பல் இழுச்சா பருவப்புள்ள

பிரிஞ்சி வரும் நாத்தழுது
புரிஞ்சி அத பாக்கவில்ல
புத்தன் கூட வாழ்க்கையில
கைவிட்டவன் தான் நம்பி வந்தவள...

சனி, 18 ஜூலை, 2020



நெருப்பு மட்டும் இல்லை
சாம்பலும் சுடுகிறது
காதலில்...
சுட்டெரிக்கும் வெம்மையில்
இன்பமும் 
துன்பமும்

வெள்ளி, 17 ஜூலை, 2020



நினைத்துப் பார்க்காத தருணங்களில்
நினைத்துப் பார்ப்பது நின்று விடுகிறது
நினைத்துப் பார்க்க
உன் நினைவு இருந்தால்
சொர்க்கமா...
நரகமா...
தெரியாமலே தொடர்கிறது
மரித்தது போல் இருக்கிறது
உடல் விட்டுப் போகும் போது
நினைவு விட்டுப் போய்விடுமா?
இல்லை என்றே படுகிறது
நீ இருப்பது போலவே 
எங்கும் தெரிகிறது...

பெயரில்லாப் பெருவாழ்வு (6)



மருந்தில்லா உடல் மருத்துவன்
வயிறு தான் அடுப்பு
பசி தான் நெருப்பு...

வியாழன், 16 ஜூலை, 2020



மண்ணில் கலைந்துவிடும் பாதச்சுவடுகள்
மனதில் புதைந்துவிடும்
அதில் உன் முகம் வரைந்துவிடும்
சுடுமணலும் ஈரம் கசிந்திடும்
சுந்தர கானம் காற்றில் தவழ்ந்திடும்
இங்கணமே நடந்திடும் யாவும்
இக்கணம் வரையிலும் உன் சொப்பனமே...

பெயரில்லாப் பெருவாழ்வு (5)



பழக்கப் படுத்தும் எவையும்
பழாய்ப் போன தந்திரம்
உறக்கம் கூட அந்த கிரக்கம் தான்...

புதன், 15 ஜூலை, 2020



உன்னைப் பிடிக்காமல் போன
சில நாட்களில் தான்
என்னையும் பிடிக்காமல் போனது...

பெயரில்லாப் பெருவாழ்வு (4)



மண்டை ஓடுகளுக்கு இருக்கும் சமத்துவம்
மண்டை ஓட்டுக்குள் இருப்பதில்லை
மண்ணை விட்டுப் போகும்வரை. புரிவதில்லை...

செவ்வாய், 14 ஜூலை, 2020



நிலவை அடைய பாதையுண்டு
திரும்பி வர இருப்பதில்லை
நீயும் நிலவும் வேறல்ல...

திங்கள், 13 ஜூலை, 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (3)


அகமும் புறமும் வளர்த்தெடுக்கும்
அருவம் ஒன்றின்
உருவம் நான் 




உன் பக்கத்தில் இருக்கும்போது
நான் நானாக இருப்பதில்லை
நீ நீயாகவே இருக்கிறாய்
பக்கம் இருந்தாலும்
விலகி இருந்தாலும்...
நீ நீயாக இருக்கும்வரை
நான் நானாக விரும்பவில்லை 

ஞாயிறு, 12 ஜூலை, 2020



மலர்கள் மலர்ந்து ரகசியம் சொல்கிறது
மனிதர்களுக்கு அக்கறையே இல்லை
மணம் கைப்பற்றாமல் அழைக்கிறது
மனம் கைக்கொள்ளாமல் அலைகிறது

பெண் மொட்டுகள் கவர்ந்து இழுக்கிறது
மலராமல் மணம் வீசாமல்
உள்ளிருக்கும் இரகசியங்கள் தான்
உயிர் பற்றி இழுக்கிறது...

பெயரில்லாப் பெருவாழ்வு (2)




பெயரை மறுப்பதொன்றே புரட்சி
பெயரில்லா உலகம் பிரபஞ்சம்
மௌனம் மட்டுமே ஆசான்...

சனி, 11 ஜூலை, 2020



எளிய உண்மைகள் புரியாதவர்கள்
எளிய மனிதர்களுக்காக வாழ்வதாய்
எப்படி நம்பப்படுகிறது?


பசித்த நிஜம்
கொல்கிறது
பசிக்காத நிழல்
பாதுகாக்கிறது
ஒன்றாகத் தெரியும் எல்லாமே
இரண்டாகக் தான் இருக்கிறது
சிவனும் சக்தியும்
நானும் நிழலும்...




காவல் இருக்கிறேன்
உன் நினைவுகளுக்கு
காத்துக் கிடக்கிறேன்
உன் நிஜங்களுக்கு...


வெள்ளி, 10 ஜூலை, 2020



எது தேவையோ அதுவே தர்மம்
தேவையும் அறியவில்லை
தர்மமும் அறியவில்லை
அறிவியல் உலகம்
எதனைத் தேடுதோ...


மலர்கள் தேடி அலையும்
வண்டுகளையும்
வண்ணத்துப்பூச்சிகளையும்
பார்க்கும் போதெல்லாம்
அதைச் சூடிச் செல்லும்
பெண்களைப் பார்த்துக் 
கோபம் வருகிறது

மறைந்த மலர்களின்
மணம் எல்லாம் பழிவாங்கும்
திருமணமோ...

மீண்டும் மீண்டும்
அவள் மலர் சூடிட
மறுமணமோ...

தேடி அலையும்
என் கண்களிடம்
வாடிக் கிடந்த 
ஒரு மலர் சொன்னது...

நான்
மலர் வாங்கவில்லை
திரும்பி வந்துவிட்டேன்


எண்ண முதுமையின் கைத்தடி சிகரெட்
இல்லாமல் கடக்கமுடிவதில்லை நாட்களை
இளமையான எண்ணங்கள் இறகு போன்றது...

வியாழன், 9 ஜூலை, 2020



விடிய விடிய பேசிவிட்டு
சட்டென்று மௌனமானது
மழை

வானும் நானும்
கண் சிவந்தோம் 
ஏனென்று தெரியவில்லை...


கால்கள் நடந்துகொண்டே இருக்கிறது
காலங்கள் கடந்துகொண்டே இருக்கிறது
தொடுவானம் தொலைவிலேயே இருக்கிறது...


புதன், 8 ஜூலை, 2020



எனது பைத்தியமான செய்கைகளை எல்லாம்
யாரிடம் பகிர்ந்து கொள்வது
சேர்த்து வைக்கும் அத்தனையும்
சேட்டைகள் செய்கிறது

இயல்பான மனிதர்களைப் போல
நடிப்பு வசமாகவில்லை
இயந்திரங்கள் போல
இயங்குவதில் விருப்பமில்லை

காற்றோடு பேசுகிறேன்
மழையோடு நனைகிறேன்
விழி திறந்து துயில்கிறேன்
கண் மூடி உலவுகிறேன்
ஆனந்தத்தில் அழுகிறேன்
துக்கத்தில் சிரிக்கிறேன்

நீ இல்லாத காரணத்தால்
இவையாவும் பயித்தியமாம்
எனது பைத்தியமான செய்கைகளை எல்லாம்
யாரிடம் பகிர்ந்து கொள்வது
சேர்த்து வைக்கும் அத்தனையும்
சேட்டைகள் செய்கிறது...

மடி தேடும் கன்றுக்குட்டி
பைத்தியமா...
தேன் தேடும் பட்டாம்பூச்சி
பைத்தியமா...
இணை தேடும் குயில் பாட்டு
பைத்தியமா...
உனைத் தேடும் நான்கூட
பைத்தியமா...

ஜீவிதத்திற்கு  
உணவு மட்டும் போதவில்லை
பைத்தியமான உணர்வுகளும் தேவையுண்டு
சேகரிக்கிறேன்...


செவ்வாய், 7 ஜூலை, 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (1)



பெயர் சூட்டுதல் வன்முறை
குழந்தைப் படுகொலை
உலகின் ஒட்டுமொத்தப் பிரிவினை...


எல்லோர்க்கும் பொதுவாகவே
உலகம் விடிகிறது
தனக்காக மட்டும் என்று
மனம் யாவும் நினைக்கிறது

பொழுது சாயும் வேளையிலும்
மனது சாயவில்லை
உடல் சாகும் போதினிலும்
மனம் சாவதில்லை

உயிர் உள்ள போதே
மனம் இன்றி போனால்
உடல் என்னவாகும்...

அன்பே
நீ இல்லாதது போல்
நோகும்...


திங்கள், 6 ஜூலை, 2020



உன்னை
மறக்க நினைக்கும் போதெல்லாம்
நினைத்து விடுகிறேன் 

நான்
இறக்க நினைக்கும் போதெல்லாம்
பிழைத்து விடுகிறேன்

உன்னை
அணைக்க நினைக்கும் போதெல்லாம்
விலகி விடுகிறேன்

நான்
திருந்த நினைக்கும் போதெல்லாம்
தவறி விடுகிறேன்

உன்னை
முத்தமிட நினைக்கும் போதெல்லாம்
மூச்சுவிட மறக்கிறேன்

நான்
சத்தமிட நினைக்கும் போதெல்லாம்
சாந்தமாகி விடுகிறேன்

உன்னை
நான்
நினைக்கும் போதெல்லாம்
என்னை
நான்
மறந்து விடுகிறேன்


நதியின் சலசலப்பு சங்கீதம்
நீண்ட நேரம் கேட்டு நின்றேன்
திரும்பி வந்தது நான் மட்டும்தான்
இதயம் இடம் மாறிப்போனது நதியிடம்...

தூர இருந்தாலும்
உடல் குளிர்ந்து போனது என்னிடம்
ஜீவனானது என்னுள் உந்தன் சங்கீதம்...


ஞாயிறு, 5 ஜூலை, 2020



கைகள் இல்லாதவை தான்
சுதந்திரமாய் இருக்கின்றது
இருப்பதெல்லாம்
பொருள் தேடி அலைகின்றது...