நீரினுள் படிக்கட்டு
ஏறவா? நீந்தவா?
எண்ணிக் கொண்டிருக்கையில்
ஏதும் இல்லாத
வானில் போகிறேன் பறந்து
ஏதேதோ நினைக்கிறேன்
வேறேதோ நடக்கிறது
இது வாழ்வா? இல்லை கனவா?
எல்லாமே
கனவில் கனவில்... கனவு!
இறங்கி வந்த செங்கதிரில் சில
வான் திரும்ப மறுத்து
ஒற்றைப் புல்லை அணைத்துக் கொண்டது
வானம் இழுக்கிறது
திரும்பத் திரும்ப
ஒற்றைப் புல்லை அணைக்கிறது...
விமானம் வருவதைப் பார்த்து
ஓடி வருகிறது குழந்தைகள்
ரொட்டித் துண்டிற்காக
விமானம் வருவதைப் பார்த்து
மெல்ல நடந்து வருகிறது குழந்தைகள்
ரொட்டித் துண்டிற்காக
விமானம் வருவதைப் பார்த்து
ஊர்ந்து வருகிறது குழந்தைகள்
ரொட்டித் துண்டிற்காக
விமானம் வருவதைக் கேட்டு
வேண்டிக் கொள்கின்றனர் குழந்தைகள்
குண்டு மழைக்காக...
விமானங்கள் வருகின்றன போகின்றன
என்ன செய்துகொண்டு இருக்கிறார்களோ
புதையுண்ட 15000 குழந்தைகளும்...
அந்தக் குழந்தைகளின் ஆன்மாக்கள் வேண்டிடும்
இஸ்ரேலின் குழந்தைகளும் இனி பலியாகிடக் கூடாது என்று
வேறென்ன வேண்டிடும் குழந்தைகள்...
இன்று:
எல்லோரையும் கடித்துக் குதறுகிறேன்
எல்லோரையும்...
என்னை எனக்கே பிடிக்காமல் போனதால்
எல்லோரையும் கடித்துக் குதறுகிறேன்
கல்லெறிந்து கொல்லுங்கள்
நானும் தப்பித்துக் கொள்கிறேன்
மாறாக போகட்டும் என்று விட்டு விட்டீர்கள் ஏனோ...
நாளை:
எல்லோரையும் நேசிப்பேன்
எல்லோரையும்...
என்னை எனக்குப் பிடித்துப் போகும்
எல்லோரையும் நேசிப்பேன்
நீங்களும் நேசியுங்கள்
நாளை இல்லாவிட்டாலும் பரவாயில்லை
நாளை மறுநாள் நிச்சயம் மாறி விடுவீர்கள்...
கண்களைத் தாக்கினாய்
கட்டவிழ்ந்த கன்றுக்குட்டி ஆனேன்
இதயத்தைத் தாக்கினாய்
இமயம் தாண்டும் பட்டாம்பூச்சி ஆனேன்
விண்ணைத்தாண்டி போகும் வரை
தொடர்ந்து நீ தாக்கு
தொடர்ந்து எனை மாற்று...
கடவுள் இரண்டு
எல்லாமும் இருப்பவர்கள்
பார்க்கும் கடவுள்
ஏதும் இல்லாதவர்கள்
பார்க்கும் கடவுள்
நியாயம் இரண்டு
ஏமாற்றுபவர்கள்
பார்க்கும் நியாயம்
ஏமாற்றம் அடைந்தவர்கள்
பாக்கும் நியாயம்
தவறு இரண்டு
தவறு செய்யாதவர்கள்
பார்க்கும் தவறு
தவறு செய்தவர்கள்
பார்க்கும் தவறு
காதல் இரண்டு
காதல் வசப்பட்டவர்கள்
பார்க்கும் காதல்
காதல் வசப்படாதவர்கள்
பார்க்கும் காதல்
உலகம் இரண்டு
கண்கள் உடையோர்
பார்க்கும் உலகம்
கண்கள் இல்லாதவர்கள்
பார்க்கும் உலகம்
ஒன்றா
இல்லை இரண்டா
என்று பார்ப்பதை விட
நடுவில் நின்று பார்ப்பது
நன்று!
ஆயுத இரைச்சல்களை நிறுத்துங்கள்
இரவு வரும்
தூக்கம் வரும்
விடியல் வந்து எழுப்பும்
நாம் எல்லோரும்
ஓர் பிரபஞ்சப் பிள்ளைகளே...
ஆறு வறண்டு விட்டது
குளம் வற்றி வட்டது
என்று
இரத்தம் நிரப்பப் பார்க்கிறீர்கள்
வானம் இருப்பதை மறந்துவிட்டீர்கள்
மழைக்காலம் வரும்
வியர்வை சிந்தக் காத்திருங்கள்
ஆறு ஓடும்
குளம் நிரம்பும்
மீன்கள் விளையாடும்
பறவைகள் இசை பாடும்
எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கும்
அரை வயிறு தாண்டி
எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்
குழந்தைகளைக் கட்டிப் போடாதீர்கள்
இயற்கையிடம் பாடம் படியுங்கள்
ஆயுதங்களை மறந்துவிடுங்கள்
ஆலயங்களில் பூட்டி வையுங்கள்
தெய்வம் பார்த்துக்கொள்ளும்
நிம்மதியாய் வாழுங்கள்
இரவு வரும்
தூக்கம் வரும்
விடியல் வந்து எழுப்பும்
நாம் எல்லோரும்
ஓர் பிரபஞ்சப் பிள்ளைகளே...
போருக்குத் தேவையில்லை
போரைத் தவிர்ப்பதற்குத் தான் தேவை
மூளை
இருநாட்டு மக்களிடையே
இல்லாதப் பகையை
அந்தப் புகையை
யார் ஊதிப் பெருக்குவது?
இந்தியா - பாகிஸ்தான்
ஒன்றாயிருந்த சகோதரத்துவம் தான்
யாரும் மறந்துவிட வேண்டாம்
மூளை இருந்தால்
முற்றிலும் சரி செய்யலாம்
பொதுவான தீர்வை
எல்லோரும் கொண்டாடலாம்
போருக்குத் தேவையில்லை
போரைத் தவிர்ப்பதற்குத் தான் தேவை
மூளை