பட்டாம்பூச்சி
குடித்துவிட்டு சென்ற நீர்
தேனாக இனித்தது
மறுநாளும் காத்திருந்தேன்
பட்டாம்பூச்சி வரவில்லை
தாகம் வந்துவிட்டது
பட்டாம்பூச்சி
குடிக்காத நீர்
கடலாக நிறைகிறது என்னில்...
தேனாக ஓடும் நதியை
வீணாகச் செய்யும் மதியை
தானாகப் புரிந்துகொள்ளும்
காலம் வரும்
கார்மேகம் வருமா
தண்ணீரைத் தருமா
கான்கிரீட்டும் கரன்சியும்
கற்றுத் தரும்
அன்பில்லாமல் போகும்
பண்பில்லாமல் போகும்
யாதும் பாழாய் போகும்
அதுவும் பழகிப் போகும்
நீர் வங்கிகள் வேண்டும்
நீர்க் கோவில்கள் வேண்டும்
நீர் மதமாக வேண்டும்
நீர் மாற வேண்டும்...
இரவு
கண்கள் வழியாக நுழைய
காத்திருக்கிறது
உறக்கம்
இமைக் கதவுகளை தாழிட
காத்திருக்கிறது
இதயம் இடைமறித்து
நித்தம் துடிதுடித்து
போர்த் தொடுக்கிறது
இரவும் உறக்கமும்
மெல்ல மெல்ல
பொறுமை இழக்கிறது
வான தூரம்
விட்டுப் பிரிந்து
கோபத்தில் சிவக்கிறது
விடியல் வேடம்
போட்டுக் கொண்டு
திரும்பி வருகிறது
இதயம் இடைமறித்து
நித்தம் துடிதுடித்து
போர்த் தொடுக்கிறது
விடியலும், விழிப்பும்
மெல்ல மெல்ல
பொறுமை இழக்கிறது
வான தூரம்
விட்டுப் பிரிந்து
கோபத்தில் சிவக்கிறது
இரவும் பகலும்
மாறிமாறி வந்துபோகுது
எனக்கு ஒன்றுதான் அது
உறக்கம் இல்லை
விழிப்பும் இல்லை
வெறும் சடலம் தான் இது
துடிக்கும் இதயம்
எனது இல்லை
உனது தான் அது
நீயே
போர் தொடுப்பது
இடைமறிப்பது...
காத்திருப்புடன் காத்திருக்கிறேன்
இரயில் நிலையம் வரும் முன்பிருந்தே
இரயில் நிலையம் வந்த பின்னும்
இரயில் வரும் முன்பிருந்தே
இரயில் வந்து நின்ற பின்னும்
இரயிலில் ஏறியது காத்திருப்பு
அதனை பின்தொடர்ந்து
நான் இருக்கையில் அமர
காத்திருப்பு அமர மறுக்கிறது
ரயில் முன்னோக்கி
நான் பின்னோக்கி
காத்திருப்பு குறுக்கும் நெடுக்குமாய் நடக்கிறது
நிலையம் வந்து சேரும்வரை
நிலையில்லாத காத்திருப்பு
குறும்பு நாய்க்குட்டி போல
குதித்து இறங்குகிறது முதலில்
நான் காத்திருப்புடன்
என்பதைக் காட்டிலும்
காத்திருப்புடன் நான்
வழித் தவறி
வழிநடத்தி
எங்கெங்கோ
எப்போதும்
என்னைக் கூட்டிக்கொண்டு அலைகிறது காத்திருப்பு
காத்திருப்புடன் காத்திருக்கிறேன்
காத்திருப்பு கடவுள்
கடவுளைக் கைவிடும் போதெல்லாம்
சாத்தான் கைப்பிடிக்கிறது...
காத்திருக்கும் காலங்களில் தான்
காதலும் காமமும் உச்சம் தொடுகிறது
காத்திருப்பு கடந்துவிட்டால்
கீழ் விழுந்து விடுகிறது
காத்திருப்புடன் காத்திருக்கிறேன்
கடவுள் காலம் முழுதும்
தூக்கி விடவே கரம் பிடிக்கிறார்...
ராமனுஜரோ
புத்தரோ
காந்தியோ
வாழ்ந்து காட்டிய எவரும்
சிலைகள் கட்டிய சரித்திரமில்லை
சிலைகள் தான்
மகான்களைக் காக்கும் என்றால்
அது சிலைகள் அல்ல பிழைகள்
பெரிய சிலைகள்
நிறுவனங்களின் கிளைகள்
சிறிதென்றும்
பெரிதென்றும்
சிலையில் கூட
பேதங்கள் நிறுவுகிறார்
ராமானுஜரை வைத்து
ராமனை வைத்து
ராஜ்ஜியம் செய்கிறார்
பூஜ்ஜியம் பிறந்த மண் இது
மறந்துவிட்டார்
அல்லது
மறைத்துவிட்டார்
அகிலம் மறைந்தாலும்
அண்டம் மறைந்தாலும்
பூஜ்ஜியம் மறையாதது
இறைவன் ராஜ்ஜியம்
அது தான் அது...
உன்னைச் சொந்தம் என்று சொல்லும்
நானே எனக்குச் சொந்தமில்லை
நித்தம் முத்தமிடும் பாதங்களுக்கும்
பாதச்சுவடுகள் சொந்தமில்லை
தாந்தான் சுரந்தெடுத்தத் தேன்தான்
மலர் இதழ்களுக்கு சொந்தமில்லை
கட்டிவைத்த மழைமாலை
காற்றடித்தால் கொட்டிவிடும்
கார்மேகத்திற்குச் சொந்தமில்லை
செய்த சரி
செய்யும் பிழை
ஏதும் எனக்குச் சொந்தமில்லை
மெய்யுள்ளே பூத்திருக்கும் உயிர்
ஒருநாள் உதிர்ந்துவிடும்
உன்னைச் சொந்தம் என்று சொல்லும்
நானே எனக்குச் சொந்தமில்லை...
மியாவ்... மியாவ்...
நாரதர் போலவே
கலகம் செய்துவிட்டு போகிறது
ஏதுமே தெரியாததை போல
நாராயண... நாராயண...
நல்ல சகுனம் தான்
பூனை குறுக்கே போவது
மியாவ்... மியாவ்...
தன்னை மட்டுமல்ல
கேட்போரையும்
தட்டியெழுப்பிக் கொண்டே போகிறது
மியாவ்... மியாவ்...
பசி இல்லை
பக்கம் வா என்கிறது
பாசத்தோடு எலியிடம்
மியாவ்... மியாவ்...
கதாநாயகன் போல
தன்னுடைய நடைக்கு
தானே பின்னணி இசைக்கிறது
மியாவ்... மியாவ்...
மியாவ்... மியாவ்...
சொல்லாத பூனையும்
கேட்காமல் நாமும்
தூங்கிப் போகிறோம்
தாத்தாவின் முதுமை மொத்தத்தையும்
ரகசியமாக மறைத்துவிட்டு
ஏதும் அறியாதவளை போல
எங்கோ பார்க்கிறாள் பூக்குட்டி
தான் குழந்தை ஆனது தெரியாமல்
மகனின் மகள் பூக்குட்டி அறியாமல்
ரகசியமாக செல்ஃபி எடுக்கும்
செல்லத் தாத்தா
எங்கோ பார்ப்பதைப் போல
நம்மைப் பார்ப்பதுவும்
விளையாட மறுப்பதைப் போல
நம்முடன் விளையாடுவதுவும்
குழந்தைக்கு உரித்தான குறும்பு
ராஜநாயஹம் சார்
உங்கள் முகத்திலும்
மெல்ல துளிர்க்கிறது
அந்த அரும்பு...
https://poovannans.blogspot.com/