சரிபாதி மறைந்து கொள்கிறாள்
ஒரு பாதி மட்டும் தெரிகிறாள்
மறு பாதி என் உள்ளே
என் பாதி உன் உள்ளே...
ஒரே ஒரு முறை
பார்த்துவிட தவம் இருக்கிறேன்
இசையால்
இதயத்தை நிரப்புகிறாய்
விழிகள்
நடனம் ஆடுகிறது
உன்னை வரவேற்க
நேரம் கூடக் கூட
கண்கள்
வியர்வை விடுகிறது
நடனம்
விடாமல் தொடர்கிறது...
ஒரே ஒரு முறை
பார்த்துவிட தவம் இருக்கிறேன்
என்ற பொய்யை
நீயும் நம்பத்தான் வேண்டும்
இதய நடனம்
நிற்கும் முன்பே
விழியின் நடனம்
நிறுத்தி விடு...
தன் கை
வலிக்கும் போதெல்லாம்
தந்தை நியாபகம்...
இயற்பியலின் தந்தை
நியூட்டன்
உளவியலின் தந்தை
பிராய்ட்
கணிதவியலின் தந்தை
யூக்ளிட்...
எனது தந்தை
இல்லை என்றால்
இவர்கள் யாரும் நானறியேன்
உன் உயரம்
வளர்ந்திடவே
நான் குதித்த நாட்கள் உண்டு
நீ
தோளில் தூக்கும் போதெல்லாம்
நான் உணர்ந்ததில்லை
உன்னைத் தாண்டி நான் வளர
நீ எண்ணியதை
தோளுக்கு மேல்
வளர்ந்ததுமே
தோழன் ஆனாய்
விண்ணுக்கு மேல்
நீ வளர்ந்து போன பின்பு
வானம் எனக்கு
நண்பனனான்...
மன பாரம் கொண்டு
வானம் பார்க்கும் போதெல்லாம்
சுமையை வாங்கிக் கொள்வது
நண்பா உன் கையா...
என் தந்தையா...
அன்னாந்து பார்க்கவே ஆசை
நீ என் மேகம்
நிற்காமல் செல்கிறாய்
பின் தொடர வைக்கிறாய்
சூரியன் சுடமால்
குடையும் பிடிக்கிறாய்
கலைந்து விடுகிறாய்
மறைந்து விடுகிறாய்
மாறுவேடம் போடுகிறாய்
தேடி அலைவதைக் கண்டு
கண்ணீரும் வடிக்கிறாய்
தடம் இல்லாமல் நடக்கிறாய்
அதை என் நெஞ்சில் பதிக்கிறாய்...
நீ இல்லை என்றால்
வானம் கண்களுக்குச் சிறையாகிறது
நீ வந்துவிட்டால்
இமைகள் சிறகாகும்
சிறையும் பொடியாகும்...
வெளிச்சம் பார்க்க
மறுக்கும் கண்கள்
மூடி இருந்தாலும்
வேங்கைப் புலியாய்
ஒளி பாய்ந்து
உள்ளே நுழைகிறது...
இதயம் கிழித்து
இரத்தம் குடித்து
திரும்பப் போகிறது
இருள் படர்ந்து
காயங்கள் மீது
கட்டுப் போடுகிறது...
இருட்டில் புதைந்த
இதய விதை
மீண்டும் முளைக்கிறது
இரத்த வெறி
கொண்ட ஒளி
வெளியில் காத்துக் கிடக்கிறது...
ஒளியும் இருளும்
உந்தன் நினைவுகள்
என்றும் பிரிவதில்லை
நினைவும் கனவும்
வலிதான் இருந்தும்
உனைப்போல் விலகவில்லை...
கவிஞனாக விரும்பாதே...
நீ எல்லோருடனும் இணைந்திருப்பாய்
எல்லோரும் உன்னைப் பிரிந்திருப்பார்
நீ விரும்பும் வார்த்தைகள் கூட
உன்னைவிட்டு அழகாகப் பிரிந்து செல்லும்
உன் கண்ணீர் வரிகளுடன்
சிலர் சிரித்துக் கொண்டிருப்பார்
நான்கு பேர் தட்டிக் கொடுத்தாலும்
நாற்பது பேர் திட்டித் தீர்ப்பார்
தனிமை உன்னைத் தின்று தீர்க்கும்
உலகை நேசிப்பாய்
உன்னை வெறுப்பாய்
வறுமை உந்தன் கைப் பிடிக்கும்
கண்டிப்பாக காதலி உன்னைக் கைவிடுவாள்
தாடி வளர்ப்பாய்
சாராயம் குடிப்பாய்
புகைப் பிடிப்பாய்
இன்னும் இன்னும்
தேடிக் கண்டுபிடிப்பாய்
தீது யாவையும் கடைபிடிப்பாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
உன்னை நீயே தொலைப்பாய்
கவிஞனாக விரும்பாதே...
விடிந்து சாயும்
ஒவ்வொரு நாளும்
கண்கள் திறந்து மூட
இடையினில் புதிராய் வாழ்க்கை
மலர்ந்து விழும்
பூக்களிலும்
ஒரு உலகம் இருக்கிறது...
பார்வையாளனாய் மாறினால்
அங்கும் நாடகம் நடக்கிறது
வண்டு தும்பி தேனி பட்டாம்பூச்சிகள்
இயல்பாய் நடிக்கிறது...
தூர இருந்து
மூங்கிலொன்று
பின்னணி இசைக்கிறது
காதல் காட்சியில்
வான தேவதைகளாக
வண்ணக் கிளிகள் பறக்கிறது
வெட்டுக்கிளி ஒன்று
வில்லத்தனத்தோடு
சட்டெனத் தாவியது
அது ஒற்றை ஆளில்லை
பல லட்சம் படையாக
போர்க்களம் ஆகியது
தன்னந்தனியாக
வெண்புறா வந்து
ஏதோ பேசியது...
வெட்டுக்கிளி கூட்டம்
பசிக்கு உணவருந்தி
அமைதிப்படையானது
அடுத்த வேளை உணவுக்கு
அடுத்த ஊர் போனது...
அணு ஆயுதங்கள் இல்லை
ஜநா சபை இல்லை
யாரும் நோகவில்லை
யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாரிடமும் சண்டை போடாதே
குழந்தைகளே
யாரிடமும் சண்டை போடாதே
எனச் சொல்பவர்தான்
நாளும் சண்டை போடுகின்றார்
வீட்டில் மட்டும் சட்டம் போடுகின்றார்
யாரிடமும் சண்டை போடாதே
மக்களே
யாரிடமும் சண்டை போடாதே
எனச் சொல்பவர்தான்
நாளும் சண்டை போடுகின்றார்
நாட்டில் மட்டும் சட்டம் போடுகின்றார்
யாரிடமும் சண்டை போடாதே
அரசே
யாரிடமும் சண்டை போடாதே
எனச் சொல்பவர்தான்
நாளும் சண்டை போடுகின்றார்
உலகில் மட்டும் சட்டம் போடுகின்றார்
யாரிடமும் சண்டை போடாதே
யாரிடமும் சண்டை போடாதே
எனக் குழந்தைகளைச்
சொல்லி வளர்க்கவில்லை என்றால்
குழந்தை சண்டை நன்கு நடந்திருக்கும்
சுய சிந்தனைகள் வளர்ந்திருக்கும்
சில புரிதல்கள் தானே வந்திருக்கும்
உலக யுத்தங்கள் கூட மறைந்திருக்கும்
குழந்தைகளை
இயற்கையாக வளர விடுங்கள்
நம்போல்
இயற்கைகளை அழிக்க மாட்டார்கள்
இயற்கையோடு இயைந்து வாழ்வார்கள்
கொடுத்ததும்
திரும்பக் கிடைக்கிறது
புன்னகை
தானும் தருவதில்லை
திரும்பத் தருவதும் இல்லை
பிச்சைக்காரர்கள்
உண்மையான புன்னகையில்
கடவுள் தெரிகிறாள்
கொஞ்சநேரம் காட்சித் தந்து
மறைந்து விடுகிறாள்
கடவுள் தோன்றுமிடம்
மீண்டும் மீண்டும்
வந்துப் பார்க்கிறேன்
அவள் வேறு வேறு
இடத்தில் தோன்றிக்
காட்சித் தருகிறாள்...
நிலைக் கண்ணாடியில்
தெரிவதில்லை
நிலையில்லாத
கண் ஆடிகளில் தெரிகின்றாள்
எங்கும் நிறைந்து இருக்கின்றாள்
ஓரிடத்தில் தங்க மறுக்கின்றாள்
கனவில் வந்துச் சிரிக்கின்றாள்
உனக்குள் நானே என்கின்றாள்...