ஞாயிறு, 31 ஜனவரி, 2021

 


சரிபாதி மறைந்து கொள்கிறாள்
ஒரு பாதி மட்டும் தெரிகிறாள்
மறு பாதி என் உள்ளே
என் பாதி உன் உள்ளே...

சனி, 30 ஜனவரி, 2021

 


இரு புதைக் குழிகள்
தனித் தனியே இருந்தும்
ஒன்றாக விழுங்குகின்றன...


வெள்ளி, 29 ஜனவரி, 2021

 


நினைவுப் பூக்களில்
தேனெடுத்து
இதயக் கூட்டிலே
சேகரித்தேன்

மயக்கம் கொண்டு
இயக்கமின்றி இருக்கிறேன்
இதயம் மீட்டும்
இன்னிசையில் கரைகிறேன்

ஒற்றைத் தேனியாக
அலைகிறேன்
கனவுக் காட்டினிலே
தொலைகிறேன்...

வியாழன், 28 ஜனவரி, 2021

 


ஈர்ப்பு விசை
இல்லாமலே
இப்படி ஈர்க்கிறதே

இரவெல்லாம்
அவள் கைகளைத் தேடுகிறேன்
பிடித்து இழுப்பதற்கு

துழவிய கைகளில்
ஈரம் மட்டுமே
மீதம்...


புதன், 27 ஜனவரி, 2021


 

நீயின்றி
நான்
நீரின்றி நீந்தாத படகு

உன் நினைவு அலைகளில்
நில்லாது நித்தமும்
நான் போடும் துடுப்பு

உன் கண்களில்
எனைச் சேர்க்கிறது
இமைகளை ஒன்றாய் கோர்க்கிறது...

செவ்வாய், 26 ஜனவரி, 2021

 


நீ கூப்பிடும் போதுதான்
அறிந்துகொண்டேன்
என் பெயரின் பேரழகை

நீ பேசும் போதுதான்
விளங்கிக்கொண்டேன்
இதயத்தின் மொழிப் பெயர்ப்பை

நீ பக்கம் வரும்போதுதான்
தெரிந்துகொண்டேன்
நான் தொலைந்து போனதை

நீ பார்க்கும் போதுதான்
உணர்ந்துகொண்டேன்
வேறொரு உலகை...

திங்கள், 25 ஜனவரி, 2021

 


கவிதை
எனக்காகவும் உனக்காகவும்
சிலநேரம்
நீ மறுக்கிறாய்
சிலநேரம்
நான்...

கவிதை
மழை போன்றது
எல்லா நேரமும்
நனைதல் சாத்தியம் அற்றது
சிலநேரம் மெய்யிற்கு
சிலநேரம் பார்வைக்கு
எப்போதும் தேவைக்கு
ரொம்பப் பிடிக்கும்
என் தேவதைக்கு...


ஞாயிறு, 24 ஜனவரி, 2021

 


ஒரே ஒரு முறை
பார்த்துவிட தவம் இருக்கிறேன்
இசையால்
இதயத்தை நிரப்புகிறாய்

விழிகள்
நடனம் ஆடுகிறது
உன்னை வரவேற்க

நேரம் கூடக் கூட
கண்கள்
வியர்வை விடுகிறது
நடனம்
விடாமல் தொடர்கிறது...

ஒரே ஒரு முறை
பார்த்துவிட தவம் இருக்கிறேன்
என்ற பொய்யை
நீயும் நம்பத்தான் வேண்டும்

இதய நடனம்
நிற்கும் முன்பே
விழியின் நடனம்
நிறுத்தி விடு...

சனி, 23 ஜனவரி, 2021

 


உன் நினைவுகளில்
ஒட்டி வாழ்கிறது
இந்த காய்ந்த இலை...

வெள்ளி, 22 ஜனவரி, 2021

 


தன் கை
வலிக்கும் போதெல்லாம்
தந்தை நியாபகம்...

இயற்பியலின் தந்தை
நியூட்டன்
உளவியலின் தந்தை
பிராய்ட்
கணிதவியலின் தந்தை
யூக்ளிட்...

எனது தந்தை
இல்லை என்றால்
இவர்கள் யாரும் நானறியேன்

உன் உயரம்
வளர்ந்திடவே
நான் குதித்த நாட்கள் உண்டு

நீ
தோளில் தூக்கும் போதெல்லாம்
நான் உணர்ந்ததில்லை
உன்னைத் தாண்டி நான் வளர
நீ எண்ணியதை

தோளுக்கு மேல்
வளர்ந்ததுமே
தோழன் ஆனாய்
விண்ணுக்கு மேல்
நீ வளர்ந்து போன பின்பு
வானம் எனக்கு
நண்பனனான்...

மன பாரம் கொண்டு
வானம் பார்க்கும் போதெல்லாம்
சுமையை வாங்கிக் கொள்வது
நண்பா உன் கையா...
என் தந்தையா...


வியாழன், 21 ஜனவரி, 2021

 


எனக்குத் தெரிந்த
வழிகளில் எல்லாம்
சொல்லிப் பார்க்கிறேன்

உனக்குத் தெரிந்த
வழிகளில் எல்லாம்
கேட்க மறுக்கிறாய்

நீ வரும்
வழிகளில் எல்லாம்
நின்று பார்க்கிறேன்

நான் நிற்கும்
வழிகளில் எல்லாம்
திரும்பிச் செல்கிறாய்...


புதன், 20 ஜனவரி, 2021

 


வானக் குழிப் பறித்தேன்
சில மேகங்களுக்குப் பின்னால்
கிடைத்ததொரு வெண்ணிலவு...

பத்து விரல் போதவில்லை
பத்திரமாய் ஏந்தி வந்தேன்
இரு கண்களில்...

பாதி இரவில் அரைநிலவு
பார்த்துக் கொண்டே இருந்தேன்
மறைந்தது நிலவு...

மீண்டும் குழிப் பறித்தேன்
வானம் சிரிக்கிறது
மேகம் அழுகிறது...


செவ்வாய், 19 ஜனவரி, 2021

 


உருவ வழிபாடு இல்லாதபோது
உச்சம் தொடுகிறது
கடவுளும் காதலும்...

தீண்டும் தென்றலும்
விரல்கள் போல
மெல்லப் படர்கிறது

ஒளி(ந்து) கிள்ளுவதால்
ஓயாமல் துள்ளுகிறது
இதயத்தில் உயிர் மீன்

எங்கும் நிறைந்ததாய்
எல்லா உருவுமதாய்
என்னை ஆட்கொண்டாய்



திங்கள், 18 ஜனவரி, 2021

 


உடலுக்கு ஒளியும்
உயிருக்கு இருளும்
இதனிடை சுழலும் நானும்

இருளில் ஒளியும்
ஒளியில் இருளும்
மறைந்து மலரும் நாளும்

நானும் நாளும்
பிறந்து இறந்து
காலம் போடும் கோலம்

இயற்கை கடவுள்
இமைக்கும் பொழுதில்
யாவும் இங்கு மாறும்

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

 


சப்தம் இல்லாத
பேரிசையில்
நட்சத்திரங்கள் ஜொலிக்கிறது
மலர்கள் மலர்கிறது
கடலலை எழுகிறது
நத்தை தவழ்கிறது
நானும் எழுதுகிறேன்...

சனி, 16 ஜனவரி, 2021

 


அன்னாந்து பார்க்கவே ஆசை
நீ என் மேகம்
நிற்காமல் செல்கிறாய்
பின் தொடர வைக்கிறாய்
சூரியன் சுடமால்
குடையும் பிடிக்கிறாய்
கலைந்து விடுகிறாய்
மறைந்து விடுகிறாய்
மாறுவேடம் போடுகிறாய்
தேடி அலைவதைக் கண்டு
கண்ணீரும் வடிக்கிறாய்
தடம் இல்லாமல் நடக்கிறாய்
அதை என் நெஞ்சில் பதிக்கிறாய்...
நீ  இல்லை என்றால்
வானம் கண்களுக்குச் சிறையாகிறது
நீ வந்துவிட்டால்
இமைகள் சிறகாகும்
சிறையும் பொடியாகும்...

வெள்ளி, 15 ஜனவரி, 2021

 


வெளிச்சம் பார்க்க
மறுக்கும் கண்கள்
மூடி இருந்தாலும்
வேங்கைப் புலியாய்
ஒளி பாய்ந்து
உள்ளே நுழைகிறது...

இதயம் கிழித்து
இரத்தம் குடித்து
திரும்பப் போகிறது
இருள் படர்ந்து
காயங்கள் மீது
கட்டுப் போடுகிறது...

இருட்டில் புதைந்த
இதய விதை
மீண்டும் முளைக்கிறது
இரத்த வெறி
கொண்ட ஒளி
வெளியில் காத்துக் கிடக்கிறது...

ஒளியும் இருளும்
உந்தன் நினைவுகள்
என்றும் பிரிவதில்லை
நினைவும் கனவும்
வலிதான் இருந்தும்
உனைப்போல் விலகவில்லை...

வியாழன், 14 ஜனவரி, 2021



முடிந்தவரை ஓடி
முடியாததை உண்கிறது விலங்குகள்
ஓட முடியாமல்
ஓய்ந்தே இருந்து
ஓடுபவர்களை உண்ணும் மனிதர்கள்
பெரும் முதலாளிகள்
செல்வாக் கால் ஓய்ந்திருக்க
அரசியல் வேட்டை நாய்களின்
கால்கள் பாய்ந்துத் துரத்த
பாவம் மக்கள்
பாடாய்ப் படுகிறார்
பனிப்பொழிவில் போராடி
பலரும் உயிரை விடுகிறார்...


புதன், 13 ஜனவரி, 2021

 


தை தை என்றே
குதிக்கும் மனம்
தை வந்த போதிலும்
நிற்கவில்லை
தை தை என்றே
குதிக்கிறது...

உழவர் திருநாளில்
இன்பத்(தை)
இலாபத்(தை)
நலத்(தை)
வரத்(தை)
உலகத்(தை)
வி(தை)த்த வி(தை)
பார்த்துக் கொள்ளட்டும்
என்றும் மனம்
குழந்(தை)யாகத் துள்ளட்டும்...

"விவசாயத்(தை) துதிப்போம்
 விவசாயிகளை மதிப்போம்"

 


என்னுள்ளே வேண்டும்
ஒரு போராட்டம்
என் உள் மாறினால்
என் வெளி மாறும்
உள் நுழையும் போதுதான் தெரிகிறது
இதய சிம்மாசனத்தில்
நானும் ஒரு முதலாளி என்று
இனி எல்லாப் போராட்டங்களும்
அவனுக்கு எதிராகத்தான்...

செவ்வாய், 12 ஜனவரி, 2021

 


சனி பகவான் வாகனம்
தூக்கிச் சென்ற கோவணம்
புத்தனுடையது 

திங்கள், 11 ஜனவரி, 2021

 


நீர்க் குமிழ் கடிதத்தை
நீல வானம் பார்க்கிறது
பிடிக்காமல் கிழிக்கிறதா
பிரித்து அதை படிக்கிறதா...

மேகக் கடிதம் ஒன்றை
எழுதி என்னிடம் அனுப்பாதா
மொத்தக் கடிதமும் எனக்கானதா
காற்றுக்குத்தான் கண் தெரியாதா...


ஞாயிறு, 10 ஜனவரி, 2021

 


பிஞ்சு விரல்களுக்கு
தெரிந்து இருக்கிறது
வீழ்ந்த
மலர்களுக்கு
மனங்களுக்கு
உயிர் கொடுக்க...

சனி, 9 ஜனவரி, 2021

 


பூனை வளர்ந்து
புலியானது
பயம் வளர்ந்து
மரணமானது...


வெள்ளி, 8 ஜனவரி, 2021

 


அழகு நிலையம் செல்லும்
வளர்ப்புப் பிராணிகளைப் பார்த்து
எள்ளி நகைக்கிறாள் ஒரு சீமாட்டி...

வியாழன், 7 ஜனவரி, 2021

 


கவிஞனாக விரும்பாதே...
நீ எல்லோருடனும் இணைந்திருப்பாய்
எல்லோரும் உன்னைப் பிரிந்திருப்பார்
நீ விரும்பும் வார்த்தைகள் கூட
உன்னைவிட்டு அழகாகப் பிரிந்து செல்லும்
உன் கண்ணீர் வரிகளுடன்
சிலர் சிரித்துக் கொண்டிருப்பார்
நான்கு பேர் தட்டிக் கொடுத்தாலும்
நாற்பது பேர் திட்டித் தீர்ப்பார்
தனிமை உன்னைத் தின்று தீர்க்கும்
உலகை நேசிப்பாய்
உன்னை வெறுப்பாய்
வறுமை உந்தன் கைப் பிடிக்கும்
கண்டிப்பாக காதலி உன்னைக் கைவிடுவாள்
தாடி வளர்ப்பாய்
சாராயம் குடிப்பாய்
புகைப் பிடிப்பாய்
இன்னும் இன்னும்
தேடிக் கண்டுபிடிப்பாய்
தீது யாவையும் கடைபிடிப்பாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
உன்னை நீயே தொலைப்பாய்
கவிஞனாக விரும்பாதே...


புதன், 6 ஜனவரி, 2021

 


மறைத்துக் கொண்ட
கண்ணீருக்கும் கூட
தனிமைத் தேவைப்படுகிறது

என்னையும் கூட
அன்னியம் என்றா
கனவினில் விழுகிறது...

செவ்வாய், 5 ஜனவரி, 2021

 


மழை
பொழிந்து கொண்டே இருந்தது
வெளியே நின்றதும்
உள்ளே தொடங்கியது
பொழிந்து கொண்டே இருக்கிறது...
இரண்டும்
கண்களில் தெரிகிறது
இதயத்தை நிறைக்கிறது
குளிர்ந்த நீர்த் துளி
தொட்டும் தொடாமலும்
உடல் வெப்பம் ஆகியது...
வானும் நானும்
பேசிக் கொள்கிறோம்
கார்மேகம் சூழக் காத்திருக்கிறோம்...


திங்கள், 4 ஜனவரி, 2021

 


விடிந்து சாயும்
ஒவ்வொரு நாளும்
கண்கள் திறந்து மூட
இடையினில் புதிராய் வாழ்க்கை

மலர்ந்து விழும்
பூக்களிலும்
ஒரு உலகம் இருக்கிறது...

பார்வையாளனாய் மாறினால்
அங்கும் நாடகம் நடக்கிறது
வண்டு தும்பி தேனி பட்டாம்பூச்சிகள்
இயல்பாய் நடிக்கிறது...
தூர இருந்து
மூங்கிலொன்று
பின்னணி இசைக்கிறது
காதல் காட்சியில்
வான தேவதைகளாக
வண்ணக் கிளிகள் பறக்கிறது
வெட்டுக்கிளி ஒன்று
வில்லத்தனத்தோடு
சட்டெனத் தாவியது
அது ஒற்றை ஆளில்லை
பல லட்சம் படையாக
போர்க்களம் ஆகியது
தன்னந்தனியாக
வெண்புறா வந்து
ஏதோ பேசியது...
வெட்டுக்கிளி கூட்டம்
பசிக்கு உணவருந்தி
அமைதிப்படையானது
அடுத்த வேளை உணவுக்கு
அடுத்த ஊர் போனது...

அணு ஆயுதங்கள் இல்லை
ஜநா சபை இல்லை
யாரும் நோகவில்லை
யாதும் ஊரே யாவரும் கேளிர்


ஞாயிறு, 3 ஜனவரி, 2021

பெயரில்லாப் பெருவாழ்வு (50)

 


தனக்காக இல்லாமல்
பிறருக்காக ஒளிரும்
புன்னகை விளக்கு பொதுவுடைமை


சனி, 2 ஜனவரி, 2021

 


 யாரிடமும் சண்டை போடாதே

குழந்தைகளே
யாரிடமும் சண்டை போடாதே
எனச் சொல்பவர்தான்
நாளும் சண்டை போடுகின்றார்
வீட்டில் மட்டும் சட்டம் போடுகின்றார்

யாரிடமும் சண்டை போடாதே
மக்களே
யாரிடமும் சண்டை போடாதே
எனச் சொல்பவர்தான்
நாளும் சண்டை போடுகின்றார்
நாட்டில் மட்டும் சட்டம் போடுகின்றார்

யாரிடமும் சண்டை போடாதே
அரசே
யாரிடமும் சண்டை போடாதே
எனச் சொல்பவர்தான்
நாளும் சண்டை போடுகின்றார்
உலகில் மட்டும் சட்டம் போடுகின்றார்

யாரிடமும் சண்டை போடாதே
யாரிடமும் சண்டை போடாதே
எனக் குழந்தைகளைச்
சொல்லி வளர்க்கவில்லை என்றால்
குழந்தை சண்டை நன்கு நடந்திருக்கும்
சுய சிந்தனைகள் வளர்ந்திருக்கும்
சில புரிதல்கள் தானே வந்திருக்கும்
உலக யுத்தங்கள் கூட மறைந்திருக்கும்

குழந்தைகளை
இயற்கையாக வளர விடுங்கள்
நம்போல்
இயற்கைகளை அழிக்க மாட்டார்கள்
இயற்கையோடு இயைந்து வாழ்வார்கள்



வெள்ளி, 1 ஜனவரி, 2021

 


கொடுத்ததும்
திரும்பக் கிடைக்கிறது
புன்னகை

தானும் தருவதில்லை
திரும்பத் தருவதும் இல்லை
பிச்சைக்காரர்கள்

உண்மையான புன்னகையில்
கடவுள் தெரிகிறாள்
கொஞ்சநேரம் காட்சித் தந்து
மறைந்து விடுகிறாள்
கடவுள் தோன்றுமிடம்
மீண்டும் மீண்டும்
வந்துப் பார்க்கிறேன்
அவள் வேறு வேறு
இடத்தில் தோன்றிக்
காட்சித் தருகிறாள்...

நிலைக் கண்ணாடியில்
தெரிவதில்லை
நிலையில்லாத
கண் ஆடிகளில் தெரிகின்றாள்
எங்கும் நிறைந்து இருக்கின்றாள்
ஓரிடத்தில் தங்க மறுக்கின்றாள்
கனவில் வந்துச் சிரிக்கின்றாள்
உனக்குள் நானே என்கின்றாள்...