புதன், 18 மார்ச், 2020

மழைத்துளி ஒன்று
மண் தொடும் முன்பே
சிறகுகள் வேண்டியது

துளி நதி ஆகும்
நதி கடல் தேடும்
வாழ்க்கைக்கு வருந்தியது

பயணம் தொலைதூரம்
பாதை பல காணும்
வழக்கம் விரும்பாதது

இச் என்ற சத்தம்
மண் தந்த முத்தம்
மனதை மாற்றியது

மணம் நிறம் சுவை
இரண்டறக் கலந்து
காதல் உருவானது

கடல் தொடும் வரை
கலவியின் முறை
எண்ணிட முடியாதது

தூக்கங்கள் இன்றி
துளி கூட துவளாமல்
துள்ளி விளையாடுது

கடல் வந்து சேர
வான் மீண்டும் போக
ஒளி வந்து கூப்பிட்டது

காதல் கண்ணீரில் முடியும்
கதை இங்கு தொடர்ந்து
கடல் எங்கும் உப்பானது

ஒரு துளி மட்டும்
ஓடி ஒளிந்து
சிப்பிக்குள் முத்தானது

முத்துக் குளித்தவன்
காதலிக் கழுத்தினில்
காதல் பரிசானது

அவள் கண்ணத்தில் முத்தம்
இச் என்ற சத்தம்
நினைவுகள் அரங்கேறுது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக