சனி, 30 நவம்பர், 2019

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
பணமும் பாசமும்

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
பணமும் மௌனமும்

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
பணமும் ஆலோசனையும்

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
ஆலோசனை

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
வசை

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
அவமானம்

பணம் பற்றாக்குறை
நண்பனிடம் கேட்டான்
கிடைத்தது
தனிமை

பணப் பற்றாக்குறை
வளர்ந்து வளர்ந்து
கிடைத்தது
போதிமரம்

வெள்ளி, 29 நவம்பர், 2019


வருகின்ற
மழையையும் அன்பையும்
சேர்த்து வைப்பதே இல்லை...

இரண்டிற்காகவும்
காத்துக்கொண்டே இருக்கிறோம்...
இறக்கிறோம்
மண்
பூவையும் பெண்ணையும்
அழகாகவே வரைகிறது

இருவருமே சிரிப்பது
இதயத்திலிருந்து

பெண்
பூவை வரைகிறாள்

பூ
பெண்ணை வரைகிறது

இரண்டும் சேர்ந்த
இந்தக் கதம்பம்
என்னில்
உன்னை வரைகிறது
கண்கள் கரைகிறது...

வியாழன், 28 நவம்பர், 2019

அப்படியே
திரும்பிப் போய்விடு
உனது
அதிகபட்சக் கண்டுபிடிப்பு
அதுவாகவே இருக்கட்டும்

சைக்கிள் இதயத்திற்கு
மோட்டார் மாற்றாக வேண்டாம்
உன் இதயமும்
இரும்பாகிவிடும்

வேகம் வேண்டாம்
தார்ச்சாலை வேண்டாம்
பூஞ்சோலை உனது
புதுக்கட்டிடம் வேண்டாம்

இறைவன்
அள்ளி அள்ளிக்
கொடுத்தவைப் போதும்
வேறு ஏதும்
வேண்டவே வேண்டாம்

உன்னைப் போலவே
புத்தகங்கள் ஏராளம்

முடிந்தால்
தேடிப்போய்ப் படி
முடிந்தவரை
உன்னையே படி

படி
தாண்டு
பரவாயில்லை
தவறுகளுக்கும்
அடைக்கலம் கொடு

மரணம்
உனக்கும் காத்திருக்கும்
யாவும்
மெதுவாகவே செய்...

இரவில் விதைத்துவிட்டு
விடியலில் அறுவடை செய்யாதே
அவையும் வாழ்ந்து முடிக்கட்டும்
உன் முடிவில்
நீயும் உணவுதான்

புதன், 27 நவம்பர், 2019

உன்னை நானும்
என்னை நீயும்
பருகும் நேரம்

கால வெளியில்
காட்சி எல்லாம்
மறைந்து போகும்

பிரிவின் அதிர்வு
நீரின் மேலே
தாளம் போடும்

உன்னைப் பூட்டிக்கொண்ட
மௌனம் இதழ் திறந்து
மெல்லப் பாடும்

இறங்கி வந்து
கண்ணீர் யாவும்
உன்னைத் தேடும்

தேடித்தேடி ஆவியாகும்
நீல வானில்
மேகம் ஆகும்

மேகம் மீண்டும்
நீராய் மாறும்
திரும்பத் திரும்பத்
தீராத தாகம்

பிழைப்பேனா தெரியவில்லை
நம்பிக்கை இருக்கிறது
I C U 

செவ்வாய், 26 நவம்பர், 2019

கழுகாய்
வேட்டையாடிடும் நினைவுகள்

வைரப் புன்னகையால்
இதயம் அறுக்கிறாள்
உயிரை எடுக்காமல்
வலியை வளர்க்கிறாள்

ஆழமாக
நகம் பதிக்கிறாள்
ஆசையெல்லாம்
அதில் புதைக்கிறாள்

கூர்விழிப் பார்வையிலே
கொத்திப்போகப் பாய்கின்றாள்

நிழல்
என்னை அணைக்கிறது
நிஜம்
உயிரைப் பறிக்கிறது...

திங்கள், 25 நவம்பர், 2019

உன்னை
மொத்தமாகத் தாங்கி நடப்பேன்

கல்லும் முள்ளும்
வலித்தது இல்லை
மழையும் வெயிலும்
துன்பம் இல்லை
சிகரெட் மரணத்தில்
அழுதது இல்லை
அன்னம் ஆகாரம்
அருந்தியது இல்லை
இறுதிவரை வீட்டினுள்
அனுமதி இல்லை

பயணம் முழுவதும்
பின்னணி இசைக்கிறேன்
எந்த இதயமும்
கேட்பது இல்லை

மண்ணையும்
உன்னையும்
பிரித்த பாவம்
எனது இல்லை

எடுப்பார் கால்பிள்ளை
நான் எக்கேடும்
செய்வது இல்லை

எனக்கு
நீ வைத்தப் பெயர்
செருப்பு
நான்
உனக்கு வைத்தப் பெயர்
அலட்சியம்

தெரு ஓரத்தில்
குப்பை மேட்டில்
சாக்கடையில்
தூக்கி எறியும் வரை...

உன்னை
மொத்தமாகத் தாங்கி நடப்பேன்

ஞாயிறு, 24 நவம்பர், 2019

புகைத்தேன்
புகை தேன்
புகைத்தேன்

எண்ணங்கள்
உருவம் ஆகின்றன
எண்ணுபவன்
அருவம் ஆகிறேன்...

சனி, 23 நவம்பர், 2019

நிழலாக நினைவாகத்
தொடர்கின்றாய் நாளும்,
என் நடையாவும்
உன் நிஜம் காணத்தான்...

காற்றின்றி அசையாமல்
கொடிபோல நானும்,
நீ வர வேண்டும்
நாம் சாய்ந்தாடத்தான்...

என் விதி
தொடர்ந்தாலும் முடிந்தாலும்,
என் நேசம்
உன்னோடுதான்...

வானவில் 
வந்து மறைந்தாலும்,
அதன் வண்ணங்கள்
நெஞ்சோடு தான்...

வாழ்க்கை
தொடர் ஓட்டப் பந்தயம்
பெற்றோர் விட்ட இடத்திலிருந்து
பிள்ளைகள் துவக்கம்

சிலர்
கார், பிலேன்
கொண்டு ஓடுகிறார்கள்
சுவிஸ் வரை
ஓடியவர்களும் உண்டு
பூமியைத் தாண்டக்
காத்திருப்பவர்களும் உண்டு

இருந்தும் கால்நடையாகக்
காலம் கடப்பவர்களே
கூட்டம் கூட்டமாகப்
பிரிவினைப் பிரிவினையாகப்
பிரிந்துத் தனித்து

பாவம்
எத்தனையோ பேர்
தன் கால்களை இழந்து
தவழ்கின்றனர்

வெற்றி
யாவையும் தரலாம்
ஆனால் விரும்பிப் பெறும்
தோல்வி மட்டுமே
ஞானம் தரும்

வெள்ளி, 22 நவம்பர், 2019


மலர்த் தூவி
காத்திருக்கும் திருப்பங்கள்
திருப்பாவை பாதம் பதிக்க

மலரோடு மலராக என்
இதழ்களைக் குவித்து வைப்பேன்
உன் பாதத்தில் முத்தமிட

நீ வரும் சப்தம் கேட்கிறது
உயிர் மூச்சும் மௌனமாகிறது
என் வாழ்வின் முக்கியத் திருப்பம்...

வியாழன், 21 நவம்பர், 2019


ஆசை அலை ஆர்ப்பரிக்கும்
கடலும் படகும்
பிரிந்திருக்கும்

படகு தன்னை எரித்துக்கொள்ள
நிலவைத் தொட்டு
காத்திருக்கும்

நிலவு சுடவில்லை
நீ ஏன் சுடுகிறாய்
அலைகடலே...


புதன், 20 நவம்பர், 2019


மழையினில்
உனைப் பார்க்க வருவேன்
மழையினில்
நீ காத்து இருப்பாய்

நனையாமல்
நான் வருவேன்
நனைந்து
நீ நடுங்கிடுவாய்

ஈரமில்லாதவன்
தலைத் துடைப்பாய்
இந்தப் பாறைக்கு ஏனோ
நீர் வடிப்பாய்

ஏதொன்றும் உணராமல் இருந்துவிட்டேன்
உயிரோடு உன்னை நான்
கொன்றுவிட்டேன்

நீ இல்லாது
நான் வாழும் இந்நாட்கள்
மனதைக் கடித்துக் குதறும்
ஆயிரம் செந்நாய்கள்

சுற்றிலும் உதிரம்
நினைவுகளாய் உதிரும்...



எனக்கு
விளங்காமல் போனதுதான்
விலகிப் போனதும்
கைவிலங்காகிப் போனது
அன்பு

இறங்கி வந்து
பார்க்கும் வரை
மலையின் உயரம்
வியப்பதில்லை

கண் மறைந்து போனாலும்
மலை
மனதில் மறைவதில்லை...

செவ்வாய், 19 நவம்பர், 2019


வலிகளைத் தாங்குபவர்கள்
பிழைத்துக் கொள்கிறார்கள்
விபத்திலும் வாழ்விலும்



கால் முளைத்த
வெண் நுரைகள்
வெள்ளைக் குதிரை ஆனது

எத்தனை நாள் ஏக்கமிது
கரையைத் தாண்டி ஓடுது
யாரைச் சென்று தேடுது

கடிவாளம் இல்லை
கண் கட்டவில்லை
கட்டுப்படுத்துவது யாரோ...

சிறகு முளைத்த
என் மனச் சிட்டுக்குருவி
கீச்சிட்டு சொல்லியது

அது யாரென்று...

திங்கள், 18 நவம்பர், 2019

அவள் வந்து சேர்ந்து
வாழ்க்கை கவிதை ஆகும்வரை
சொற்களின் வழி வந்து
சொப்பனமாகிறாள்

என்ன கொண்டுவரப் போனாயோ
உன்னிடம் இருப்பதுவே
என்னில் நிரம்பி வழிகிறது

கண்கள்
உள்ளே கனவுகளாய்
வெளியே அருவிகளாய்...

இரவில்
கலந்து கலந்து
இரவாகிப்போனேன்...

இரவைப்
பகலாக்கத் தெரிந்த விரல்களுக்கு
வசப்படவில்லை
பகலை இரவாக்குவது

பகல்
பழகிப்போன சொப்பனம்
இரவு
பரிட்சயம் இல்லாதது

பகல்
வேடமிட்டு உலவுகிறது

இரவு
நிர்வாணம்

பகல் பொய்
இரவு மெய்
பகல் சிறையறை
இரவு கருவறை

பகல் பிரிவு
இரவு கலவை
பகல் அரசியல்
இரவு ஆன்மிகம்

பகல் வியர்வை
இரவு ஓய்வு
பகல் காமம்
இரவு காதல்

பகல் சமுதாயம்
இரவு அந்தரங்கம்
பகல் முயற்சி
இரவு வளர்ச்சி

விதைகள் வளர்வதும்
மொட்டு மலர்வதும்
இரவினில் தான்

வளர்கிறேன்
மலர்கிறேன்
இரவையே தொடர்கிறேன்

பாவை இல்லாத பகலை
பார்வை தேடுவதில்லை

ஞாயிறு, 17 நவம்பர், 2019

டால்பின்னும்
டால்பெண்ணும்
பார்த்துக்கொள்வது எளிதாகிப்போனது

பழகிய
இரு மனங்கள்
பார்த்துக்கொள்வது அரிதாகிப்போனது

பறவை வாழ்க்கைப் பழகிப்போனது
அமர்ந்தாலும் பறந்தாலும்
தேடல் மட்டும் தொடர்கிறது...

உறங்கிடும் போதும்
தேடல் வந்து
உறவு கொள்கிறது

விழித்துக்கொண்ட கண்களில்
தேடல் மாயமானது
ஈரமானது

பழகிப் போனது
தேடுவதே
பழகிப்போனது

சனி, 16 நவம்பர், 2019

நீ
சிரிக்கும் போதெல்லாம்
இதயத்தில் சேர்த்துவைத்த வெளிச்சங்கள்
நீ
இல்லாத தருணங்களில்
நினைவில் மின்மினியாய் பறக்கின்றன

இரவு முழுவதும்
என்னை வழிநடத்தும் வெளிச்சம்

விடியல் வந்தவுடன்
விரல் நழுவும்

பகல் முழுவதும்
என்
உடல் எரிக்கும்

இரவு
மீண்டும் வந்து
எனை அணைக்கும்

பகல் இரவாய்
தொடர் பயணம்
மனம் யாவும்
விரல் தொடும் தருணம்...

வெள்ளி, 15 நவம்பர், 2019

கடவுள் இரண்டு
ஒன்று முழுவதுமாக நம்புவது
இன்னொன்று முழுவதுமாக மறுப்பது

சிலைகள் என்றாலும்
கடைசிவரை 
கண்கள் தேடிக்கொண்டே இருக்கிறது 
உயிர் சினேகிதியை...

சிலையாகிப் போகும் வரை
திரும்பத் திரும்பத் தேடுவேன்
சீக்கிரம் வந்துவிடு

இதயம் இல்லாத வெரும் சிலைகள்
ஆறுதல் கூட சொல்வதில்லை

வியாழன், 14 நவம்பர், 2019

மறைத்துக் கொண்ட மேகங்களுக்கு 
ஒருபொழுதும் தெரியாது
எப்பொழுதும் நிலா எனக்கு
உயிர் ஊட்டிக்கொண்டிருப்பது

வலி தெரிந்தோ தெரியாமலோ
வழி விடுகிறது
உயிர் தொடர்கிறது...

ஆட்டுக்குட்டியையும்
கன்றுக்குட்டியையும்
பிறை நிலவையும்
அறிமுகப்படுத்தாமல்

இயேசுவும்
கிருஷ்ணனும்
அல்லாவும்
அறிமுகம்

சிரிக்காமல்
என்ன செய்வார்கள்
குழந்தையும்
கடவுளும்

புதன், 13 நவம்பர், 2019

புத்தம்


மண் கூட்டை இழந்த குளவியின் தவிப்பு
பட்டு மாளிகையைத் துறந்த பட்டாம்பூச்சியிடம்
மவுனமாகச் சரணடைகிறது


" சற்குரு ச(ஜெ)ன் கணக்கு "

நீரில் தெரிவதும்
நிஜமாகும் தருணம்

நீ
அங்கு இருந்தாலும்
நிஜங்கள் இரண்டும்
இரு நிழலாகும்

வேறொருவர் வந்துவிட்டால்
நான்கு நிழல்கள்
கணக்காகும்

அவள்
வந்து சேரந்தாலோ
யாவும் அங்கு
ஒன்றாகும்

சில மாதம் கழித்து...
மீண்டும்
இரண்டு
நான்கு
ஒன்று

தொடர் கணக்கு
தொடர் வினையால்
தொடரும் வாழ்வில்
தொடரும் கணக்குகள்

பிழை ஆவதும்
திருத்தம் ஆவதும்
சுழியில் வந்து
முடிந்துவிடும்

திங்கள், 11 நவம்பர், 2019

"சிட்னியில் காட்டுத் தீ"

காட்டை நெருப்பாக்கி
கடலை அடுப்பாக்கி
நிலவு அப்பளம் சுடும்
சைக்கோ எவனோ?

உணர்வை நெருப்பாக்கி
வயிற்றை அடுப்பாக்கி
பசியைச் சமைக்கும்
அவனோ?

தாய்

நாம் நேராக பிறப்பதற்கு
தான் தலைகீழாக
தவம் கிடந்தவள்...
படைத்தவனுக்கும் தெரிவதில்லை
பிரசவ வலி
வேதனைகள்...

ஓவியர்
அமைதியின்மையையோ
பேரமைதியையோ
விட்டுச் செல்லும்
ஓவியமும்


இசைஞர்
வேதனையையும்
பரவசத்தையும்
அதிர்வுகளாய் காற்றில் கலக்கும்
இசையும்

கவிஞர்
சிரிப்புடனோ
கண்ணீருடனோ
முடித்துக் கொள்ளும்
கவிதையும்

போல அல்ல...

தாய் ஈன்றெடுக்கும்
குழந்தை ஒரு
மரண வலி




இதழில் இருந்து தவறி
முள்ளில் விழுந்தது ஒரு
பனித்துளி

இதழும் மாலை ஆனது
பொழுதும் மாலையானது
கண்களெல்லாம் கண்ணீரானது
மூங்கில்கள் எல்லாம் முகாரி பாடுது...

Jaisingh Photography 1

கைகள் தானே தூக்கிச்சென்றது
இடையினில் எப்படி
சுவடுகள் வந்தது...

ஓ...
அவர் சென்ற பாதைகளை
திரும்பத் தர முனையும்
நினைவுக் கரம் அதுவோ

கடல் சென்றதே
புது அலைகளில்
நினைவினைக் கரைப்பதற்குத் தான்

இதோ அவள்
அலையலையாக நுரைத்துச் சிரித்து
ஓடி வருகிறாள்
என்னைக் கரைப்பதற்கு

ஞாயிறு, 10 நவம்பர், 2019

பூங்காவின் இருக்கையில்
நமக்குப் பதிலாக அமர்ந்திருக்கும்
உதிர்ந்த சருகுகள்

உன்னை அழைத்து வரும் வரையில்
இடத்தைப் பிடித்திருக்க
வாக்குத் தருகிறது

காற்றும் சேர்ந்து தலை அசைத்தது
நமக்காக இரண்டும்
தவம் இருக்குது

சின்னஞ் சிறிய நிகழ்வுகள் தான்
சிறகைச் சொடுக்குது
சேர்ந்து பறக்குது...

சனி, 9 நவம்பர், 2019

பூனைக்குட்டி

மியாவ் மியாவ் பூனைக்குட்டி
என் செல்லத் திருட்டுக் குட்டி
புலி மாதிரி வேஷம் கட்டி
பயமுறுத்தும் பட்டுக் குட்டி

மெல்லிசையால் பாட்டுக் கட்டி
புடுச்சுவப்பா என்னக் கட்டி
மியாவ் மியாவ் பாட்டுக்குத்தான்
நான் போவதில்லை வீட்டுக்குத்தான்

பொட்டல் வெளிக் காட்டுக்குள்ள
பொட்டு வச்சப் பருவப் புள்ள
படுத்துக்கிட்டே பார்த்திருக்கு
என் உயிர் உறிஞ்சக் காத்திருக்கு...

சடலம் மட்டும் விட்டுவிடு
சங்கடங்கள் எடுத்துவிடு
சங்கெடுத்து ஊதும் போதும்
உன் மெல்லிசைய கலந்துவிடு

வெள்ளி, 8 நவம்பர், 2019

"தீவிரவாதம்"

தேவர்களைக் காத்தவன்
கடவுள் என்றால்
அசுரர்களைக் கொன்றவன்
யார்?

அசுரர்களைக் காக்கும்
கடவுள் எங்கே?

கடவுளைப் பற்றிப் பேசிப்பேசியே
இதயக் கோவிலை மறந்த
மனிதக் கடவுள்கள்

இதயத் தராசுகளில்
தீர்ப்புகள்
எந்தப் பக்கமும் சாய்வதில்லை...

என்னதான் கவிஞன்
வார்த்தைகளை எடுத்துக் கொஞ்சினாளும்
ஒரு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சும்
கொஞ்சல் உண்மையானது
ஊமையானது...
நீ
ஒரு முறைப் படித்திட
நான்
அனுப்பிடும் வார்த்தைகள்
என்னால்
ஆயிரமாயிரம் முறைகள் வாசிக்கப்பட்டது
தனிமையில்... 
பழுத்த இலை விழும் வரையில்
கிளைகள் தள்ளி விடுவதில்லை
வீழ்ந்தும் சருகு உரமாக
பூக்கள் சேர்க்கும் உறவாக

தொட்டிச் செடிகள் வளர்க்கும் சமூகம்
ஈவு இரக்கம் இல்லாமல்
வெட்டி விடுகின்றனர் பாவம்
பாதிப் பழுத்த இலைகள்...

தொட்டில் கட்டியவர்களை
அவிழ்த்து விட்டுவிட்டு
ஆழ்ந்து உறங்குகிறார்கள்

தாலாட்டுப் பாடியவர்கள்
ஆழத்தில் உறங்குகிறார்கள்...

வியாழன், 7 நவம்பர், 2019

குகைப் போன்ற
நெடும் பாதையிலே
யாருடைய அழைப்புக் குரல்
மெலிதாக எதிரொலிக்க
அதைத் தேடி நான் நடக்க

இதுவரையில் யாருமில்லை
இறுதி எது தெரியவில்லை
திரும்பிடவும் மனமுமில்லை
திரும்பத்திரும்பத் தேடுகிறேன்

தேடித்தேடித் தொலைந்து போனேன்
எனக்கு நானே கானல் ஆனேன்
எதிரொலியாய் மீதமானேன்
என்னை நீயும் தேடுவாயா...

புதன், 6 நவம்பர், 2019

சிறகசைத்தும் பறக்க முடியாத
கடலின் மீது தினந்தோறும்
பறந்து செல்கின்றன பறவைகள்

தளும்பும் கடல் தழும்பை
கதிர் கொண்டு சேர்க்க
உப்புக் கரித்ததோ

வானம்
இறங்கி வந்து
முத்தமிடுகிறது

பாறைகளில் மோதினாலும்
கால்கள் மிதித்தாலும்
சிறகுகள் ஓய்வதில்லை

கடல்
சிறகசைத்துக் கொண்டே இருக்கிறது
காலமெல்லாம்...

செவ்வாய், 5 நவம்பர், 2019

நாய்க்குட்டியுடன் குழந்தை

உன்னைச் சங்கிலியாலும்
என்னைக் கட்டுப்பாடுகளாலும்
கட்டிப் போட்டு வளர்க்கின்றார்கள்

அவர்களாவது
சுதந்திரமாக இருக்கிறார்களா...

வரம்பை
மீறாமல் இருப்பதற்கு
சின்ன வீட்டைக்
கட்டி இருக்கலாமே
இறைவன்

எதற்காக
இவ்வளவு பெரிய
உலகத்தைப் படைத்தான்

மூச்சு உள்ளவரைதான் 
உடலை உணரமுடியும்
அவள் இருந்தவரைதான்
வாழ்வை உணரமுடிந்தது

செயற்கை சுவாசம் போல்
வாழ்க்கைத் தொடர்கிறது...

எதுவுமே நிரந்தரமில்லைதான்

உயிருள்ளவரை
இதய ஓசையும்
அவள் மீதான
எனது ஆசையும்
தவிர

ஞாயிறு, 3 நவம்பர், 2019

ஆயிரம் அலைகளைத்
தாங்கியக் கடலென
சுருக்கங்கள் நிறைந்த
அந்தக் கிழவியை
நிலவொளி போல் தழுவி
முத்தமிட்டு அணைத்திருந்தேன்

விடியல் வந்து
எழுப்பி
வாசித்துக் காட்டியது
நூறு வருடம்
அவளோடு
வாழ்ந்துப் பார்த்த
என்
நெடுங் கனவை...

இரத்தக் காட்டேரியின்
காதலை உணர்ந்தேன்
அவள் இதழில் பருகிய
ஒரு துளியில்

புரிதல்
இல்லாத இடங்களில்
அவை
முகம் காட்டுவதில்லை

உயிரைத் தருவோர்க்கு
உறவைத் தருகிறது...

சனி, 2 நவம்பர், 2019

"பத்தமடை பாய்"

தாமிரபரணிக் கரையிலே
படுத்திருக்கும் நினப்பிலே
பத்தமடை பாயிலே
படுத்துறங்க கொடுப்பில்லே

காதிலே பாய்ந்திடுமே
நதி கொலுசுச் சத்தம்
மெல்லமெல்ல நடந்து வந்து
ரதி உருவா நிக்கும்

பாயுமில்லே ரதியுமில்லே
பாயுமந்த நதியுமில்லே
வெளிச் சத்தம் கேட்பதில்லே
உறக்கம் உறங்கப் போனதெங்கோ...

செயற்கயாகிப் போகுது
இந்த பூமி
இயற்கை சாமி(யே)
நீ யாருன்னு காமி

நாணலைச் சேகரித்து
பனவோலையில் நாரெடுத்து
காலத்தில் தவமிருந்து
நயமுடன் பாய் முடைந்து

வண்ணக் கனவுகள்
வழங்கிவந்தான் நெசவன்
அவன் கனவுகள்
திருடிய நாம் களவன்



வெள்ளி, 1 நவம்பர், 2019

பத்தமடை பாய்

மரத்தை
தொட்டுச் செல்லும் காற்று
சிறு நாணலை மட்டும்
வளைத்து முத்தமிடும்

யாருடைய பேராசை
புயலாகிப் போனதோ...

இயற்கைப் பாயின்
இன்பக் கனவுகளை
ஃபோம் மெத்தைகள்
தருவதில்லை

உணர்வுகள் வழி
பேசிய காலங்கள் மறைந்து
சைகைகளில்
பேசிய காலங்கள் தொலைந்து
வார்த்தைகளில்
பேசிய காலங்கள் கடந்து
காட்சிகள் வழி
பேசிக்கொண்டு இருக்கிறேன்
உன்னோடு

எங்கே
என்னோடு
யார் பேசுவாரோ...

நெருப்பு
காற்றில் ஊசலாடி
புகையாகி
சாம்பலாய் மீண்டும்
காற்றில் கரைந்து
காணாமல் போகிறது...

மறைந்த உணர்வுகளின் காலடியில்
மண்டியிட்டு அழுகிறேன்
இல்லாத கால்களை
ஈரம் எப்போது நனைக்கும்...