எத்தனை நாள் பிரிவோ
இத்தனை ஆரத் தழுவல்
இடைவிடாமல் இடைவிடாமல்
இரவு முழுதும் பேசுகின்றது...
கண்ணப்பா தாத்தாவின் அன்பு மனைவி
ஐந்து பிள்ளைகளை உழைத்து வளர்த்த
பொறுப்புமிகு குடும்பத் தலைவி
என் அன்னைக்குச் சித்தி
பேரன் என்னை அனைத்து
நெற்றியில் தருவாள் செல்ல முத்தி
அன்பும் ஆசியும்
பாசமும் நேசமும்
கூடி வாழும் குணமும்
தோள் கொடுக்கும் தோழமையும்
நிறைந்த சிறிய வீடு
ஆயிரம் விளக்கில்
மறக்க முடியாத
மார்டன் ஸ்கூல் ரோடு...
தாரா சித்தாவின் ஆன்மா சாந்தி அடைய இயற்கையை வேண்டுவோம்
நேரமில்லை
எனும் வார்த்தை
உண்மையில்லை
நேரம் கொட்டிக் கிடக்கிறது
நேரத்தில் தான்
எவரும் இல்லை...
நேரமில்லை
என நானும் இருந்தால்
நேரம் சொல்வார் சந்திப்பதற்கு
நேரம் இல்லாத
என் வித்தையை அறிவதற்கு
நேரம் தருவார் நேரமில்லாதவர்
சிரிப்பை தவிர வேறு வித்தை
ஏதுமில்லை என்றுணர்த்த மறுகணமே
வீண் என்று கைக்கடிகாரம் பார்த்து
சொல்லாமல் சொல்வான்
ஏதும் சொல்லாமலே செல்வான்
இது வித்தை காட்டும் தருணம்
அவன் அடிக்கும் குட்டிக்கரணம்...
நேரம் இல்லாதவன்
தன்னைத்தானே தூக்கி அலையும்
பிணம் அன்றி வேறில்லை
நேரம் கொட்டிக் கிடக்கிறது
நேரத்தில் தான்
எவரும் இல்லை...
புளிய மரம் வசியம் செய்யும்
சின்னஞ் சிறு இலைகள்
நிறைய நிறைய இலைகள்
எல்லாம் சேர்ந்து உற்றுப் பார்க்கும்
இரு கண்களை மிரட்டும்
உன் பயத்தை ஊடுருவும்
அதில் பேய் ஏதும் கிடையாது
எல்லாம் உன் மனப் பேய்
அது சரணடையும் சந்நிதி புளியமரம்
தலைமுடியை ஆணியால் அதில் பதிப்பார்கள்
பாவம் வழுக்கைத் தலைகள்
பேய் வழுக்கி விழுந்தால்தான் உண்டு
சிரிக்கும் புளியமரம்
அதில் சிக்கி இருக்கும் முடிகள் கண்டு
அதனைப் பார்த்தாலே போதும்
செயற்கை படிந்த மனதை இயற்கை ஆக்கும்
மனப் பேய் ஓட்டும்
'இயற்கை
இயற்கையாய்
மாற்றுவதே வசியம்'
புளிய மரம் வசியம் செய்யும்
எல்லா மரமும் வசியம் செய்யும்
எல்லா மலைகளும், நீர் நிலைகளும்
கள்ளம் கபடம் இல்லாதக் கண்களும்
வசியம் செய்யும்
இயற்கை யாவும் வசியம் செய்யும்
மனப் பேய் ஓட்டும்...
ஒரு பீடியுண்டோ சகாவே...
ஓவியர் ஜீவாவின் புத்தகம்
வாங்கித் தருமாறு தம்பி கேட்டான்
ஒரு பொழுதெல்லாம்
தலைப்பு
தலையில் இங்கும் அங்கும் ஓடி
ஒரு கணத்தில்
தலையில்லாமல் தரையிறங்கியது இவ்வாறு...
"நீ புகைப்பிடிக்கும் 10 ரூபாயும்
நான் புகைவண்டிக்குக் கொடுக்கும் 10 ரூபாயும்
எப்படிச் சமமாகும்?
உன்னுடையது நரகத்திற்கும்
என்னுடையது நகரத்திற்கும்
உடலை நகர்த்தும்
நான் 10 ரூபாய் கொடுத்து
100 ரூபாய் வாங்கி வருவேன்
நாளை உனக்கும் எனக்கும் போக
மீதம் 80 குடும்பத்தை நகர்த்த...
நானும் புகை பிடித்தவன் தான்
நரகம் சென்று பார்த்தவன் தான்
இப்போது பிடிப்பதில்லை
இது சொர்க்கத்தின் கருணை
அறிவை விட்டவனுக்கு நிச்சயம் கிட்டும்...
வலி வலிமையான வாத்தியார்
மதி அளவு பேர் உருவெடுக்கும்
அருகிருந்து பார்த்தவன் நான் சொல்கிறேன்
வேண்டாம் தம்பி அந்த தரிசனம்
வீம்பு வேண்டாம் உன் அறிவை விடு
நீயும் சொர்க்கத்தின் கருணை பெறு"