கண் தெரியாதவர்களைக் கண்டால்
கைப்பற்றி அழைத்துப்போகும் சிறுவர்களை
இப்போதெல்லாம் காண முடிவதில்லை
வளர்ந்துவிட்ட பழைய சிறுவர்களும்
இப்போது அழைத்துப் போவதில்லை
கண் தெரியாதவர்களும் இப்போது
யாரையும் நம்பிக் காத்திருப்பதில்லை
உலகம் ரொம்பவும் மாறிவிட்டது
இப்போது எவரும்
பாதையில் பார்த்து நடப்பதேயில்லை
நெடுநாளாக நடந்து
தனக்குள்ளே வரைந்து வைத்திருக்கிறார்கள்
குருடர்கள் மேப்
பிறர் யாவரும்
கைபேசியில் வைத்திருக்கிறார்கள்
கூகுள் மேப்
கூகுள் ஆண்டவா
குருடர்களுக்குக் கரம் கொடு
பார்த்துப் பார்த்து நடந்த
பாதைகள் எல்லாம்
அன்று உயிரோடு இருந்தது
முன்பெல்லாம் சில பாதைகளே
கவலை போக்கும்
மகிழ்ச்சி கூட்டும்
எத்தனை உயிர்களின் பாதைகளை
நாம் நித்தமும் மாற்றுகின்றோம்
சிதறிப் போவது பல்லுயிர் மட்டுமல்ல
நம்மில் அமைதி கொடுத்த நற்குணங்களும்தான்
கண் இருந்து என்ன பயன்?
தொலைக்காட்சியை
கணினியை
அலைபேசியை
தவிர வேறென்ன பார்க்கிறோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக