துடிக்கும் இரு இதயம் வேண்டும்
வாழ்வதற்கு...
உள்ளிருந்து ஒன்று
வெளியிலிருந்து ஒன்று
துடிக்கும் இரு இதயம் வேண்டும்
வாழ்வதற்கு...
கோவிலை நம்பி இருக்கும் புறாக்களுக்கும்
கோவிலை நம்பி இருக்கும் மனிதர்களுக்கும்
ஒரு போலயில்லை நம்பிக்கை
சர்ச்சு புறாக்கள்
மசுதிக்கும் கோவிலுக்கும் போய் வருவதுபோல
மனிதர்கள் போவதில்லை
மனிதர்களுக்கு
ஒவ்வொரு கோவிலிலும்
ஒவ்வொரு கடவுள்
புறாக்களுக்கு
எல்லா கோவிலிலும்
ஒரே கடவுள்
கலக்கக் கூடாத யாவையும் கலந்து
இயற்கையைக் கெடுத்துக் கொண்டு
லட்டுக்கு நீதி கேட்டு அலையும் மனிதர்கள்
ஊழல் செய்து சிறை சென்று
பிணையில் வரும் கயவர்களை
புனிதராக்கும் மனிதர்கள்
கவலை ஏதுமின்றி
கலவரம் ஏதுமின்றி
இயற்கையைக் கொண்டாடும் புறாக்கள்
கோவிலை நம்பி இருக்கும் புறாக்களுக்கும்
கோவிலை நம்பி இருக்கும் மனிதர்களுக்கும்
ஒரு போலயில்லை நம்பிக்கை...
உன்னை
மொத்தமாக மூடிப் பார்த்திருக்கக்கூடாது
அந்த மரணம்
உனக்கும் எனக்கும் பிடிக்காததுதான்
எப்போதும்
அந்த மரணத்திற்குப் பிடிக்கும்...
கண்களின் உள்ளிருந்து மலர்ந்து விரிகிறதா?
கண்களின் உள் வந்து யாவும் குவிகிறதா?
ஆரம்பமும் இல்லையா?
முடிவும் இல்லையா?
ஒன்று தான் இவ்வுலகா?
உயிர் ஒன்றுதானா?
மரணம் ஒன்றுதானா?
நீ நான் என்றாலும்
யாவும் ஒன்றுதானா?
மௌனமும் மீயொலியும் ஒன்றுதானா?
இருளும் பேரொளியும் ஒன்றுதானா?
அத்தனை துரோகமும்
அத்தனை நம்பிக்கையும்
ஒன்றுதானா?
அத்தனை குரோதமும்
அத்தனை அன்பும்
ஒன்றுதானா?
உயிருக்கு ஒரு எல்லை
இருப்பதுபோல்
மரணத்தின் எல்லை ஒன்று
இருக்கிறதா?
ஒன்றின் முன்
ஒன்று அழுது
ஒன்று சிரித்து
இருப்பதெல்லாம் ஒன்றா?
ஒட்டுமொத்தக் கண்களும்
ஒன்றின் கண்களா?
ஆதி இறைவனா?
ஆதி சாத்தானா?
நான் தொடும் முன்னே
என் நிழல் தொட்டு
நாணும் பெண்ணே
உன் வெட்கம்
என் சொர்க்கம்
நெஞ்சில்
வானவில் பூக்கிறது...
விழி மொட்டும்
இமை மெட்டும்
இதய
வீணை மீட்டியது...
ரயில்
பின்னணி பாடியது
வெயில்
இரவுடன் கூடியது
அந்தி மாலை
அந்த வேளை
இந்த பாலை
ஆனது சோலை...
மறு நொடியில்
காட்சி மாறியது
கண்கள் ஊறியது
சாரல் தூறியது
இறங்கிப் போகும்
பெண்ணே
இரக்கம் இல்லையோ
கண்ணே
பாதை மாறினாலும்
ஓடும் ஓடை
ராகம் மாறவில்லை
ஏன் கண்டேன்
ஆசை கொண்டேன்
ஏங்கி நின்றேன்
உள்ளம் நொந்தேன்...
நான் தொடும் முன்னே...
நான் தொடும் முன்னே...
காதலிக்க
எது வேண்டும்?
எதுவுமே வேண்டாம்
நட்புக்கு
எது வேண்டும்?
எதுவுமே வேண்டாம்
தொழுவதற்கு
எது வேண்டும்?
எதுவுமே வேண்டாம்
போதைக்கு
எது வேண்டும்?
எதுவுமே வேண்டாம்
அமைதிக்கு
எது வேண்டும்?
எதுவுமே வேண்டாம்
வாழ்வதற்கு
எது வேண்டும்?
எதுவுமே வேண்டாம்
இறப்பதற்கு
எது வேண்டும்?
எதுவுமே வேண்டாம்
வியாபாரத்திற்கு
எது வேண்டும்?
எல்லாம் வேண்டும்
வேண்டிப் பெற்ற எல்லாமும்
வேண்டாதவை எனத் தெரியும் வரை
எல்லாம் வேண்டும்
மண்ணில்
ஒரு உயிர்
மறையும்போது
நீரில்
ஒரு உயிர்
பிறக்கிறது
நீரில்
ஒரு உயிர்
மறையும்போது
மண்ணில்
ஒரு உயிர்
பிறக்கிறது
வெளியில்
காற்று போய்விடாமல்
வெளியில் காற்று இருக்கிறது
காண முடியா
தூரம் விளங்க
உள்ளே வெளியே மறைகிறது
இடைவிடாமல்
இமைத்திடாமல்
நெருப்பு ஒன்று எரிகிறது
பஞ்சபூதம்
பச்சிளம் உயிராய்
உறங்கிக் கொண்டே சிரிக்கிறது...
மரணமே
காத்திரு
காதலைச் சொன்ன பொழுதில்
முடிந்துவிடும் காதல்
முடித்து வைக்கும் உனக்கு
முற்றுப் புள்ளியை பிடிக்கும் தான்
இருந்தாலும்
மரணமே
காத்திரு
முற்றுப்புள்ளியை
முத்தமாக்குகிறேன் உனக்கு
காத்திரு
காதலோடே இரு
முடிந்து முடிந்து தோன்றும்
இந்த வழக்கமான
காதலை எல்லாம்
நீயே தந்தவை
மரண வலிகள்
எனக்கதை சொல்லியது
வலிகளைக் கொண்டு
மிரட்டுகிறாய்
வழிகளை
காதலாய் அமைக்கிறாய்
வந்து சேருவேன்
காத்திரு
நீ அறியாமலே
வந்துனை
தொட வேண்டும்
அந்த ஸ்பரிசம்
உனை எழுப்பும்
எனை தூங்க வைக்கும்
மரணமே
காத்திரு
காதலைச் சொன்ன பொழுதில்
முடிந்துவிடும் காதல்
உன்னை
உன்னை நான்
ஏன் பார்த்தேன்
என்னை
என்னை நான்
ஏன் இழந்தேன்
கண்ணை
கண்ணை அவள்
திறந்து வைத்தாள்
நெஞ்சை
நெஞ்சை அவள்
சிறை பிடித்தாள்
மழைக் காலமும்
இது இல்லையே
நனைகிறேன் நனைகிறேன்
குளிர் காயவே
உன் எல்லையை
நெருங்கினேன் நெருங்கினேன்
அட என்னடா
இது மானிடா
தயக்கமாய் தயக்கமாய்
ஒரு சிலந்தியின்
சிறு இரையென
துடிக்கிறேன் துடிக்கிறேன்...
உன்னை
உன்னை நான்
ஏன் பார்த்தேன்
என்னை
என்னை நான்
ஏன் இழந்தேன்
கண்ணை
கண்ணை அவள்
திறந்து வைத்தாள்
நெஞ்சை
நெஞ்சை அவள்
சிறை பிடித்தாள்
முதல் காதலும்
இது இல்லையே
தவிக்கிறேன் தவிக்கிறேன்
நீ போகிறாய்
உன் நிழலைப் போல்
தொடர்கிறேன் தொடர்கிறேன்
அட என்னடா
இது நரகமா
தெரியல தெரியல
சிலந்தி வலையில
இந்த இரை இன்னும்
சாகல சாகல...