பிடித்ததைச் செய்யும் போது
கரங்கள் சிறகாகிறது
வானம் உறவாகிறது...
மண்ணின் மைந்தன்
மண்புழுக்களின் நண்பன்
விவசாயக் காதலன்
பச்சைத் துண்டு பைந்தமிழன்
விதைகளை நேசித்தான்
பயிர்கள் வளர்ந்துவர பூரித்தான்
அதன் உடனிருந்தே சுவாசித்தான்
இயற்கை கடவுளையே பூசித்தான்
செயற்கை உரங்களைத் தவிர்த்தான்
பூச்சுக் கொல்லிகளை எதிர்த்தான்
என்னத்தான் செய்தாலும்
எண்ணமெலாம் பசுமையை நிறைத்தான்
உலகெல்லாம் சுற்றி வந்தான்
உழவெல்லாம் கற்றுத் தேர்ந்தான்
ஊருக்கெல்லாம் சொல்லித் தந்தான்
உயிர் நீங்கும்வரை சொல்லில் நின்றான்
விவசாயம் என்பது வாழ்வியல்
விவசாயி என்பவன் வியாபாரியல்ல
இலாபம் பார்ப்பவன் விவசாயியல்ல
இயற்கை நேசன் விவசாயி
என்ற கோட்பாட்டை நிறுவியவர்
விவசாய மும் மசோதா
எனும் சிந்தைக்கு வழியின்றி
வாழ்நாளில் சிங்கமாய் உறுமியவர்
வேம்புக்கு காப்புரிமை மீட்டுக்கொடுத்தவர்
இன்று மட்டும் இருந்திருந்தால்
வீம்புக்கு உரிமைகள் பறிக்கும்
வீணர்கள் விழித் திறந்திருப்பார்
விவசாயத்தில் மசானபு ஃபுகோகா
சித்தாந்தத்தில் கார்ல் மார்க்ஸ்
போராட்டத்தில் கரம்சந்த் காந்தி
மூன்றும் சேர்ந்தவர் நம்மாழ்வார்
பார்த்துப் பார்த்துக்
கண்ணில் புதைத்தாய்
பார்க்காமல் இப்போது
நினைவில் புதைக்கிறாய்
பேசிப் பேசி
வார்த்தைகளில் அணைத்தாய்
பேசாமல் இப்போது
மௌனத்தில் அணைக்கிறாய்
தொட்டுத் தொட்டு
வளர்பிறை ஆக்கினாய்
தொடாமல் இப்போது
தேய்பிறை ஆக்குகிறாய்
பழகிப் பழகிப்
பைத்தியம் ஆக்கினாய்
விலகி இப்போது
வைத்தியம் பார்க்கிறாயா?
நாடகம் முடிந்ததும்
ஒப்பனை கலைத்து விடுகிறேன்
அந்த நொடியிலே
மறு நாடகத்தை துவக்கி விடுகிறேன்
ஒப்பனைக்கு நாடகமா
நாடகத்திற்கு ஒப்பனையா
ஒப்பேதும் இல்லாத
புது நாடகம் என நினைப்பேன்
ஒப்பிட்டுப் புரிந்து கொள்வேன்
புதிய நாடகமே இல்லையென்று
முதலும் நாடகமா
முடிவும் நாடகமா
எப்போது புரிந்து கொள்வேன்...
என் ஒப்பனை
நான் பார்க்க இயலாத நாளை
கற்பனை செய்கிறேன்
முடிவும் கற்பனையோ
முதலும் கற்பனையோ
பிறர் அறிய இயலாத
இறுதிக் கற்பனையில்
கர்வம் தெரிவதில்லை
உயிராக இருக்கும் மட்டில்
அது எப்போதும் மறைவதில்லை
ஒப்பனை மறுப்பது
அரிதாரம் ஏற்ப்பது
ஒப்பனை நாத்திகம்
அரிதாரம் ஆத்திகம்
ஒப்பனை நான்
அரிதாரம் நான் அற்றது
வாழ்நாள் ஒப்பனை
இறுதிநாள் அரிதாரம்
யாவும் அலங்கோலம் ஆனபின்
நாடகமா... கற்பனையா...
சேரியில் வாழ
ஊரில் இல்லை
தலைவன்
சேற்றினிலும்
எந்தத் தாமரையும்
புதிதாய் பூப்பதில்லை
ஏட்டினிலே கூட
நாட்டின் துயர்
கதையாவதில்லை
ஆண்டுகள்
பல ஆகியும்
நாற்காலியில் நல்லவரில்லை...
சேரிகளில் தலைவர்கள் வாழட்டும்
புது அரசியல் சிந்தனை தழைக்கட்டும்
ரேஷன் மேம்படும்
தீ விபத்துகள் பயப்படும்
சாக்கடைகள் பயன்பெறும்
கல்வி, சாலைகள் நடை பெறும்
ராணுவத்தில் கட்டாயம்
ஒரு குடும்ப உறுப்பினர்
நூறுநாள் நூறு துறையில்
கட்டாயம் கடைநிலை வேலை
அரசியல்வாதிகளுக்கு அனுபவம் தேவை
நாட்டின்
கடைசி குடிசை
கடைசி உறக்கம்
கடைசி பசி
கடைசி ஊதியம்
கடைசி பேருந்து இருக்கை
முதல் விழிப்பு
முதல் திரையரங்கு இருக்கை
முதல் தடுப்பூசி
பொதுக் கழிப்பிடம்
பொதுக் குளிப்பிடம்
பொதுக் கல்லறை
அரசுப் பள்ளிக்கூடம்
அரசு மருத்துவமனை
அரசு போக்குவரத்து
அரசு மதுபானம்
கார்ப்பரேஷன் குடிநீர்
அடிபம்பில் பிறநீர்
தலைவர்களுடையது ஆகட்டும்
தியாகிகளை உருவாக்க
சட்டம் வேண்டும்
அரசு ஊழியர்கள் அதில்
முதல் பயனுற வேண்டும்
இனி வரும் காலம்
பெரும்பான்மையினரது அரசாகட்டும்
இதை இனிது உவப்பவரே
நம்மை ஆளட்டும்...
கார்ப்பரேட்
ஒரு மோசடி
சித்தாந்தம்
சிலந்தி வல்லரசுகளின்
சூழ்ச்சி வலைக் கட்டுமானம்
உயிரோடு கொல்லும் எந்திரம்
விவசாய நிலங்களுக்கும்
விவசாயி மனங்களுக்கும்
விஷமூட்டும் விஷமம்
நம் ஆழ்வாரை
ஏற்காத ஆளும் கூட்டம்
நாளும் நம்பவைத்து ஏமாற்றும்
ஆசை வார்த்தைகளாய்த் திட்டம்
கல்வியில்
மருத்துவத்தில்
வாழ்விடத்தில்
இப்போது களம் இறங்கிவிட்டது
விவசாயத்தில்...
வருமானம் ஈட்டும்
வியாபாரக் கூட்டம்
வாழ்க்கைக்கு வழியை
எப்படிக் காட்டும்...
காந்தியைப்
பாரதியை
வினோபாவாவை
நம்மாழ்வாரை
எட்ட வைத்தே
அழகு பார்க்கும்
அவர்கள் வழியை எடுத்துரைத்தால்
பயித்தியமாய்ப் பார்க்கும்...
எந்தத் திட்டம் வந்தாலும்
சுயலாபம் மட்டுமே பார்க்கும்
பாவம் மட்டும் பார்க்காது
முடிந்தவரை சுரண்டும்
இந்த அநியாயம் எப்படி
வார்த்தைகளில் அடங்கும்...
என்றே
வந்த வார்த்தைகளை அடக்கினேன்
என் சோற்றுக்காக...
சோற்றுக்கான
இந்த சோசியலிசம்
தோற்றுத்தான் போகுது
இந்த கார்ப்பரேட்டிடம்...
இயேசு பிறந்த நாளினை
கொண்டாடப் போவதில்லை
பல குழந்தைகளை
பலி வாங்கிய நாளும் அதுவே
ஆடு மேய்த்தவனுக்கு மட்டுமில்லை
மாடு மேய்த்தவனுக்கும்
பலி பிடிக்கும்
எல்லாக் கடவுளுக்குமே பிடிக்கும்
உருவம் இல்லாத கடவுளுக்கும்
உருவம் சிதைப்பது பிடிக்கும்
கடவுளாக மாறத் துடிக்கும்
மனிதர்களுக்கும் மிகப் பிடிக்கும்
மனிதனைக் கொன்றுதான்
தன்னைக் காத்துக் கொள்ளுமோ
கடவுள்...
மனிதரும் மனிதரைக் கொல்லுகிறார்
ராணுவம் எனப் பெயர் கொள்ளுகிறார்
எல்லைகள் பலப்பல வரைந்து கொண்டு
ஆணவம் கொண்டு ஆடுகின்றார்
உணவு உடை உறைவிடம்
அடிப்படைத் தேவைகள் இல்லாதோரிடம்
அதிகாரம் அநியாயம் செய்திடுவார்
சுடுகாடு போகும்வரை சுரண்டிடுவார்
புனித நூல்களைக் கையில் ஏந்திக்கொண்டு
கணித மனம் வளர்த்தே வாழுகின்றார்
கடவுளின் பிறப்பினைக் கொண்டாடுவார்
உழவனின் உரிமையை கழுவேற்றுவார்
சிலுவையேந்தி இருகோடி பேர் வீதியில்...
எந்தக் கடவுளின் பிறப்பையும்
இனி கொண்டாடப் போவதில்லை
மனிதன் காணும் கடவுள் வேறு
கடவுள் காணும் மனிதன் வேறு
மனிதனும் காணோம் கடவுளும் காணோம்
தேடுவோம் கிடைத்தால் கொண்டாடுவோம்
வீழ்ந்தாலும் எழும்
மழைத்துளி போல்
இந்த மனம் மாறக்கூடாதா...
கனம் தோறும்
வீசும் குளிர் காற்றில்
இதய எரிமலை ஆறாதா...
இந்த மூங்கில்
உள் நுழைந்து
இசை ஆடை பூணாதா...
மௌனக் கடிதம்
எழுதி வைத்தேன்
உன் விரல் திறவாதா...
விடியல் வந்து
எழுப்பும் இரவு
பகலில் பாயை விரிக்காதா...
தூக்கம் இழந்து
திரியும் எனக்கு
தூங்க மடியாய் மாறாதா...
மனம்
இடம் மாறினால்
நிறம் மாறும்
நீர் போல...
போகும் இடம்
பாதையாகும்
நீர் போல...
சுட்டெரித்தால்
ஆவி ஆகும்
நீர் போல...
குளிர்ந்து விட்டால்
உறைந்து விடும்
நீர் போல...
கண்டதையும் சேர்ந்துவிட்டால்
சாக்கடை தான்
நீர் போல...
கலங்கினாலும்
தெளிந்து விடும்
நீர் போல...
உடல் பாத்திரத்தில்
ஊற்றி வைத்த
நீர் போல...
உடல் போனபின்னும்
உலகில் நிற்கும்
நீர் போல...
இறைக்கடல் சேரும்வரை
அலைந்து திரியும்
நீர் போல...
உள்ளதை மறைக்காமல்
தெளிவான நீர் போல...
உலகெலாம் சுதந்திரமாய்
சுற்றித் திரி
நீர் போல...
மனமே!
கண் மூட
என் வானம்
திறக்கிறது
நிலவொன்று
வெகு நாளாய்
வர மறுக்கிறது
வழியில்லை
விழி உன்னை
வரைகிறது
திறவாத
கண் ஏனோ
வலிக்கிறது
அதை உணர்கின்ற
உள் வானம்
அழுகிறது
வரைந்த ஓவியத்தை
சில துளிகள்
அழிக்கிறது
வான் விட்டு
சில துளிகள்
விழுகிறது
என் துளிகள்
விரட்டி அதைப்
பிடிக்கிறது
வெளி வானில்
ஒரு வெண்ணிலவு
சிரிக்கிறது...
மொட்டு
இதழ் குவித்துக் காத்திருக்க
வானம் வண்டாக மாறி வருகிறது
கரை
இதழ் குவித்துக் காத்திருக்க
கடல் அலையாக மாறி வருகிறது
மண்
இதழ் குவித்துக் காத்திருக்க
மேகம் மழையாக மாறி வருகிறது
கண்
இதழ் குவித்துக் காத்திருக்க
நினைவு கண்ணீராக மாறி வருகிறது
இரவு
இதழ் குவித்துக் காத்திருக்க
பகல் ஒளியாக மாறி வருகிறது
கற்பனை
இதழ் குவித்துக் காத்திருக்க
வார்த்தைகள் கவியாக மாறி வருகிறது
குழந்தை
இதழ் குவித்துக் காத்திருக்க
பாற்கடல் முலையாக மாறி வருகிறது
மூங்கில்
இதழ் குவித்துக் காத்திருக்க
காற்று இசையாக மாறி வருகிறது
நாகம்
இதழ் குவித்துக் காத்திருக்க
எலி இரையாக மாறி வருகிறது
நான்
இதழ் குவித்துக் காத்திருக்க
நீ எதுவாக மாறி வருகிறாய்...
முக வரிகள் ஏதுமில்லை
தலை கால்கள் புரியவில்லை
எனக்கானக் கடிதம் ஒன்றை
ஒற்றைக் கொலுசோடு
இரு பாதங்கள் கொண்டுவந்தது
என் மன வாசல் திறக்கின்றது
பாதம் படி தாண்டி நுழைகின்றது
நொடி தான் உடன் மறைகின்றது
இதயம் இரு வேகம் எடுக்கின்றது
தொடர முடியாமல் துடிக்கின்றது
ஒற்றைக் கொலுசோசை கேட்கின்றது
இதயம் உள் நீ விட்டுச் சென்றது
கடிதம் அதுவாகப் படிக்கின்றது
ஜல் ஜல் ஐல்...
அருகில் உள்ளதை விட்டுவிட்டு
தொலைவில் ஏதோ தேடும் கண்கள்
காட்சி ஒன்று
தேர்வுகள் இரண்டு
இதுவா அதுவா வாழ்க்கை
இரண்டும் கூட இல்லை
எதுவா இருக்கும் என்றே
எவரிடமும் பதில் இல்லை
பொதுவாய் ஒரு வாழ்க்கை
அதில் அர்த்தமொன்றும் இல்லை
விலகிப் போனால் துறவு
விடுவதில்லை உறவு
கல் ஆனாலும் கடவுள்
மனிதன் ஆனாலும் கல்
மனக் கண் மறைந்து
கண்கள் மட்டும் கண்டால்
காட்சி யாவும் ஒன்று
தேர்வு மறையும் அன்று
காற்றில்
என்ன வண்ணங்கள் உள்ளது
பறவைகள்
சிறகில் தொட்டுத் தொட்டு வரைகிறது...
வானவில்லை
வரைந்த சிறகுகள் எங்கே
அழித்த சிறகுகள் எங்கே
பிடித்த வண்ணங்களை
எடுத்துப் பூசிக்கொண்டதோ...
கிளிக்கு பச்சை
குயிலுக்கு கருப்பு
கொக்கிற்கு வெள்ளை
எனக்கொரு வண்ணம்
தேடிப் பார்க்கிறேன்
காற்றினில் விரல்களைத்
துலவிப் பார்க்கிறேன்
நம்பிக்கை இழந்த இராசாளி கூட
காற்றிடம் சரணடைந்த
ஒற்றைச் சிறகு தான்
காலத்தின் கைகள் விசித்திரமானது
ஒன்றைக் கொடுத்து
ஒன்றை எடுத்துக் கொள்கிறது
ஒற்றைச் சிறகொன்று
காலின் கீழே
ஏதோ எழுதியது...
உயரப் பறக்கும் பறவை
அதன் சிறகால்
சித்திரம் வரைகிறது...
படித்துப் பார்த்தேன்
விளங்கவில்லை
எனினும் கண்ணீர் பெருகியது
காற்றுதான் அசைக்கிறது
யாவுமிங்கு தூசாகவே பறக்கிறது
காற்றை யாரோ இயக்குவது
திசைகள் அடிக்கடி மாற்றுவது...
காற்றில்லாத நிலா
சாட்சியாய் இருக்கிறது
மூச்சை நிறுத்தி முயலுகிறேன்
நிலவைச் சேரத் தாவுகிறேன்
காற்றுக்கென்ன பைத்தியமா
கடைசியில் கைப்பற்றி இழுக்கிறது
மீண்டும் நம்பிக்கை பிறக்கிறது...
கற்கும் மனம்
அற்று கிடப்பதே
இயற்கைக் கல்வி
பாடங்கள்
நுழைந்து திரும்புகையில்
விரல்கள் தழுவும்
விருப்பப் பகுதிகள்
அழிந்தும் கிடக்கும்
அகத்திலும் ஒளிக்கும்
எப்போதாவது
வந்து உதிக்கும்
கனவு விண்மீனைத் தொடர்ந்து
கண்மூடி அலையும்
வெறுங் கைப் பயணம்
வெற்றுப் படகாகவே திரும்பும்
மதிப்பெண்கள் வேண்டாது
மதிப் பெண்கள் வேண்டும்
கண்படாத கோலொன்று
இதய விளக்கைத் தூண்டும்
செயற்கை ஒளி
மதிப்பெண்கள்
இருள் பாய்ச்சும் விளக்கை
அறிந்ததே இல்லை
இவர்கள்
நடமாடும் நூலகங்கள்
தனது நூல்களே தனக்கு
சிறை வைக்க
இரை வைக்கிறது
என அறியாமலே
எட்டு கால்களிடம்
தன்னை ஒப்படைக்கிறார்
இதுமாதிரி அதுமாதிரி
இல்லாமல் இருப்பதே
இம்மாதிரிப் பள்ளிச் சிறப்பு
பேசும் விழி
நீ எனக்கு
கேட்கும் செவி
நான் உனக்கு
என் இதயம்
இப்படித்தான்
உனை விழுங்கிக் கொண்டே
இருக்கிறது
என்னை விழுங்க
உன் இதயம் துடிக்கிறதா...
சப்தம் என்னில்
கேட்டுக்கொண்டே இருக்கிறது
என்
மௌனப் பசி
தீர்த்து
நீ
என்னை ருசி...
வெகுநேரம் ஆகியும்
தீராத பசி
உணர்த்தியது
நான் விழுங்குவது
உன் மௌனமென்று
இரு இதயம்
ஒன்றானால்
ஒன்றை ஒன்று
மௌனமாக விழுங்கி
முடிவில்
ஒன்றும்
இல்லாமல் போகும்...
மேகமெல்லாம்
விண்ணில்
ஓடி விளையாடி
ஒன்று கூடி
உருமாறி
இசை பாடி
வரும் மாரி
மண்ணிலும்
ஓடி விளையாடுது
ஒன்று கூடி
நதியாகுது
இசை பாடுது
கடல் சேருது
மீண்டும்
உருமாறி
விண்ணில்
இடம் மாறி
காற்றைக் கைக் கோர்க்குது
தொடர்ந்து விளையாடுது
தடம் மாறினாலும்
முகம் மாறினாலும்
உண்மை மாறாதது
விளையாட்டை மறவாதது
மேகம்
என்றும் அழகானது
என்னை அணைத்தாலும்
எங்கு இருந்தாலும்
எனக்குத் துணையானது
நான்
என்றும் மறவாதது
உனை
இதயம் நினைந்து விட
நீ
கண்ணில் இறங்கி வர
கண்ணத்தில் முத்தம் தர
அறிந்து கொண்டேன்
அன்பே
நீதான் அது
எனை என்றும்
பிரியாதிரு...
கவிராஜனின் பித்தன்
நவயுக புத்தன்
கண்ணம்மாப்பேட்டைச் சித்தன்
லலிதாமாவின் புத்ரன்
1997 சைக்கிள் சாமியார்
2007 கார்ப்பரேட் சாமியார்
2017 சீட்டுக்கட்டு சாமியார்
பத்தாவது முடித்தபோதே
திருவண்ணாமலை ஓடிப்போன சாமியார்
ஆயிரம் சம்பாதித்து
ஐயாயிரம் செலவழித்து
அத்தனையும் நண்பர்க்களித்து
அன்னைக் காசை அபகரித்து
அநியாயம் என்றாலும்
அவன் போல் இதுவரை
நான் கண்டதில்லை அவனியிலே
அன்னையிடம் அன்யோன்யம்
நண்பனின் நண்பனாகவே
அவன் அறிமுகம்
நட்பிற்கு நான் படித்த இலக்கணம்
அவன் மிதிவண்டி ஓட்டும் விதம்
திநகரில் பலர் அறிவார்
ஒரு கையில் ஓட்டிடுவான்
மறு கையில் படித்திடுவான்
நடுநடுவே புகைத்திடுவான்
நடுவில் வரும் யாரையுமே
பார்க்க மாட்டான்
யாரையுமே இடித்ததில்லை
அவனாலொரு விபத்து இல்லை
எப்படி என்றே தெரியவில்லை
நான் சொல்வதொன்றும்
சொப்பனம் இல்லை
பக்கம் பக்கமாய் படித்திடுவான்
பக்கத்திலும் இருந்திடுவான்
பங்குக்குப் பேசிடுவான்
பசிக்கும் உணவிடுவான்
படிப்பதை நிறுத்த மாட்டான்
நாங்கள் பழித்துப் பேசினாலும்
செவி கொடுப்பான்
சேர்ந்தும் ரசிப்பான்
பாரதியார் பிறந்தநாளில்
பலநூறு அவர் கவிதைப் புத்தகங்கள்
பழக்கமில்லாதவர்களுக்கு பரிசளிப்பான்
உடனிருக்கும் எங்களையா விட்டுவைப்பான்
விடியவிடிய பேசிப்பாடி
எங்கள் காதிலும் பல கவிதைகள்
போட்டு வைப்பான்
எண்ணற்ற திறமைகளைக் கொண்ட போதும்
அவன் எண்ணமெல்லாம் யாவையும் துறப்பதற்கே
சித்தமெல்லாம் இறையருளை வேண்டி நின்றே
சித்தனாக நித்தம் அவன் வேண்டுகின்றான்
நண்பன் காத்திருந்தான்
வரும் வழியெங்கும்
வேடிக்கை பார்த்துக் கொண்டே
மெதுவாக வந்தேன்
ஆசிரியர் காத்திருந்தார்
ஆர்வம் எனக்கில்லை
நேரம் அலைக்கழித்து
தாமதமாய் வகுப்பு வந்தேன்
அன்னை காத்திருந்தாள்
எனது எல்லா வேலையும்
செய்து முடித்துவிட்டு
சாவகாசமாக வீடு வந்தேன்
காதலி காத்திருந்தாள்
எங்கிருந்து வந்தது
எப்போதும் இல்லாத வேகம்
எப்போதும் இல்லாத ஆர்வம்
எப்போதும் இல்லாத அவசரம்...
இடியொலியைப் போல் வந்தேன்
ஒளிமின்னல் அவள் முகத்தில்
மெல்ல மலர்கிறது...
நீர் வீழ்ச்சி
மன எழுச்சி
தருவதைப் போல
உன்
மயிர் நீட்சி
ஞானம் பாய்ச்சி
வழிகிறது...
ஞானம்
கலைத்துப் போடும்
காமுகனா
ஓவியனா
கானல் ரசனை வெள்ளம்
பாய்கிறது...
என் அன்னை
குழந்தை ஆகப் பார்க்கிறாள்
நான் வளர்ந்து
ஆள் ஆகப் பார்க்கிறேன்
இந்த குழந்தைகள் தினத்தை
யார் கொண்டாடுவது?
நானா அன்னையா...