நம்பிக்கை இழந்த இராசாளி கூட
காற்றிடம் சரணடைந்த
ஒற்றைச் சிறகு தான்
காலத்தின் கைகள் விசித்திரமானது
ஒன்றைக் கொடுத்து
ஒன்றை எடுத்துக் கொள்கிறது
ஒற்றைச் சிறகொன்று
காலின் கீழே
ஏதோ எழுதியது...
உயரப் பறக்கும் பறவை
அதன் சிறகால்
சித்திரம் வரைகிறது...
படித்துப் பார்த்தேன்
விளங்கவில்லை
எனினும் கண்ணீர் பெருகியது
காற்றுதான் அசைக்கிறது
யாவுமிங்கு தூசாகவே பறக்கிறது
காற்றை யாரோ இயக்குவது
திசைகள் அடிக்கடி மாற்றுவது...
காற்றில்லாத நிலா
சாட்சியாய் இருக்கிறது
மூச்சை நிறுத்தி முயலுகிறேன்
நிலவைச் சேரத் தாவுகிறேன்
காற்றுக்கென்ன பைத்தியமா
கடைசியில் கைப்பற்றி இழுக்கிறது
மீண்டும் நம்பிக்கை பிறக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக