இயேசு பிறந்த நாளினை
கொண்டாடப் போவதில்லை
பல குழந்தைகளை
பலி வாங்கிய நாளும் அதுவே
ஆடு மேய்த்தவனுக்கு மட்டுமில்லை
மாடு மேய்த்தவனுக்கும்
பலி பிடிக்கும்
எல்லாக் கடவுளுக்குமே பிடிக்கும்
உருவம் இல்லாத கடவுளுக்கும்
உருவம் சிதைப்பது பிடிக்கும்
கடவுளாக மாறத் துடிக்கும்
மனிதர்களுக்கும் மிகப் பிடிக்கும்
மனிதனைக் கொன்றுதான்
தன்னைக் காத்துக் கொள்ளுமோ
கடவுள்...
மனிதரும் மனிதரைக் கொல்லுகிறார்
ராணுவம் எனப் பெயர் கொள்ளுகிறார்
எல்லைகள் பலப்பல வரைந்து கொண்டு
ஆணவம் கொண்டு ஆடுகின்றார்
உணவு உடை உறைவிடம்
அடிப்படைத் தேவைகள் இல்லாதோரிடம்
அதிகாரம் அநியாயம் செய்திடுவார்
சுடுகாடு போகும்வரை சுரண்டிடுவார்
புனித நூல்களைக் கையில் ஏந்திக்கொண்டு
கணித மனம் வளர்த்தே வாழுகின்றார்
கடவுளின் பிறப்பினைக் கொண்டாடுவார்
உழவனின் உரிமையை கழுவேற்றுவார்
சிலுவையேந்தி இருகோடி பேர் வீதியில்...
எந்தக் கடவுளின் பிறப்பையும்
இனி கொண்டாடப் போவதில்லை
மனிதன் காணும் கடவுள் வேறு
கடவுள் காணும் மனிதன் வேறு
மனிதனும் காணோம் கடவுளும் காணோம்
தேடுவோம் கிடைத்தால் கொண்டாடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக