புதன், 30 டிசம்பர், 2020

 


மண்ணின் மைந்தன்
மண்புழுக்களின் நண்பன்
விவசாயக் காதலன்
பச்சைத் துண்டு பைந்தமிழன்

விதைகளை நேசித்தான்
பயிர்கள் வளர்ந்துவர பூரித்தான்
அதன் உடனிருந்தே சுவாசித்தான்
இயற்கை கடவுளையே பூசித்தான்

செயற்கை உரங்களைத் தவிர்த்தான்
பூச்சுக் கொல்லிகளை எதிர்த்தான்
என்னத்தான் செய்தாலும்
எண்ணமெலாம் பசுமையை நிறைத்தான்

உலகெல்லாம் சுற்றி வந்தான்
உழவெல்லாம் கற்றுத் தேர்ந்தான்
ஊருக்கெல்லாம் சொல்லித் தந்தான்
உயிர் நீங்கும்வரை சொல்லில் நின்றான்

விவசாயம் என்பது வாழ்வியல்
விவசாயி என்பவன் வியாபாரியல்ல
இலாபம் பார்ப்பவன் விவசாயியல்ல
இயற்கை நேசன் விவசாயி

என்ற கோட்பாட்டை நிறுவியவர்
விவசாய மும் மசோதா
எனும் சிந்தைக்கு வழியின்றி
வாழ்நாளில் சிங்கமாய் உறுமியவர்

வேம்புக்கு காப்புரிமை மீட்டுக்கொடுத்தவர்
இன்று மட்டும் இருந்திருந்தால்
வீம்புக்கு உரிமைகள் பறிக்கும்
வீணர்கள் விழித் திறந்திருப்பார்

விவசாயத்தில் மசானபு ஃபுகோகா
சித்தாந்தத்தில் கார்ல் மார்க்ஸ்
போராட்டத்தில் கரம்சந்த் காந்தி
மூன்றும் சேர்ந்தவர் நம்மாழ்வார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக