அலைகள் எடுத்துப் போன
உன் பாதச் சுவடுகள்
சிப்பிக்குள் முத்தாகும்...
விழிகள் எடுத்துப் போன
உன் பாதச் சுவடுகள்
இதயத்தில் சிறகாகும்...
சைதாப்பேட்டை தாடண்டர் நகரில்
90களில் நூலகத் தெருவில்
சைக்கிள் காதலன் ஒருவன்
பெயர் செல்வம்
ஆனால் அப்போது அவர் பெயர் தெரியாது
எப்போதும் தனது சைக்கிளுடன்
பேசாமல் பேசிக் கொண்டிருப்பார்
முன் சக்கரம் தூக்கி
பின் சக்கரத்தில் ஓட்டுவதெல்லாம்
தனித்துவமாக இருக்கும்
வேகமாக ஓட்டுகையில்
லாவகமாக ஸ்கிட் செய்வது
முன் சக்கரம் ஊன்றி
பின் சக்கரம் தூக்கி
தலைகீழாக நிற்பது
கைகளை விட்டாலும்
சைக்கிள் அவரை விடாது
பழைய ரஜினி படத்தில் வரும்
ஜானி குதிரை மாதிரி
பாதுகாப்பாக கூட்டிச் செல்லும்...
செல்வம் போல ஓட்ட
பயிற்சி செய்ததுண்டு
முயற்சி செய்ததுண்டு
பாதி கைக் கூடியிருக்கிறது
மீதியில் எனது ஜானி
கீழே தள்ளி இருக்கிறது...
நூலகத் தெருவில் போகும் போதெல்லாம்
செல்வத்திடம் பாடம் படிப்பேன்
தூர மிருந்து பார்ப்பேன்
பேசியதில்லை
அவர் அமைதியில்
ஒருவித பயம் எனக்கு...
அந்த சீனியரிடம் முதல் முறையாக
சில வருடங்களுக்கு முன் பேச நேர்ந்தது
அந்தக் குழந்தையிடம்
இந்தக் குழந்தை பேச பயந்த
அந்த நாட்களின் நினைவுகளில்
சில பூக்கள் அகத்தில் மலர்ந்தது
நானும் அவரும் முகம் மலர
தலையசைத்துப் பிரிந்தோம்...
அண்ணன் செல்வம்
இப்போது ஆட்டோ காதலனாக
நான் எப்போதும் போல
வேடிக்கைப் பார்ப்பவனாக
சென்னையைச் சுற்றி வருகிறோம்...
பிறகு இதுவரை
அவரை சந்திக்கும் போதெல்லாம்
அகமும், முகமும்
90களின் நினைவுகளும்
மலரும், இனியும் மலரும்...
அடி வானம் விழுந்துகொண்டு
மேல் வானம் வளர்ந்துகொண்டு
நடு வானம் எரிந்துகொண்டு
கீழ் வானில் சில மேகம்
இங்கும் அங்கும் அலைந்துகொண்டு
அதைத் தொட்டுவிட மலைமுகடும்
மலை முகட்டில் மரக் கிளையும்
மரக் கிளையில் பச்சைக் கிளியும்...
தரையில் நின்று பார்க்கும் என்மேல்
ஒரு இறகும் விழுந்தது
மேகம் தொட பச்சைக்கிளி
அவ்வாறு அழைத்தது...
வானம் தொடும் முயற்சியிலே
பூமியில் இதயங்கள் கூடி வைக்கும்
மண்பானை வெல்ல அரிசிப் பொங்கல்
மனம் போலப் பொங்கி வழிகிறது
அமிர்தம் இனிப்பாக நாவை அணைக்கிறது
கண் மூடி வானத்தில் இணைக்கிறது...
எல்லோர்க்கும் அமிர்தம்
எல்லோர்க்கும் வானம்
இயற்கை இறைவன்
அவனே உழவன்...