உடல்
மெல்ல கற்றுத் தேரும்
தவழ நடக்க நீந்த
உடலை
நடக்க விட்டால்
மரணம் வரைதான் கூட்டிச் செல்லும்
மனம்
எங்கு கற்றுத் தேர்ந்ததோ
குழந்தை முதலே பறக்கிறது
மனதை
பறக்க விடு
ஏழு ஜென்மம் கூட்டிச் செல்லும்
வெந்து தணியக் காடு
உன் ஓரப் பார்வைக்குக் காத்திருக்கும்
பசுமை தழைக்கும்
பூத்துக் குலுங்கும்
நினைவுகள் தாங்க முடியவில்லை
வெந்து தணியக் காடு
உன் ஓரப் பார்வைக்குக் காத்திருக்கும்
குயில்களின் இசை
மயில்களின் நடனம்
உனை நினைக்காத நாழிகை இல்லை
வெந்து தணியக் காடு
உன் ஓரப் பார்வைக்குக் காத்திருக்கும்
வேட்டையாடும் புலி
சிதறிப் பாயும் குருதி
உனை கட்டியணைக்கத் துடிக்கும் மனவுறுதி
வெந்து தணியக் காடு
உன் ஓரப் பார்வைக்குக் காத்திருக்கும்
காட்டாற்று வெள்ளம்
கயல் கூட்டம் துள்ளும்
இதயத்தைத் துளை போடும்
சிறு பச்சைப் புல்லும்
வெந்து தணியக் காடு
உன் ஓரப் பார்வைக்குக் காத்திருக்கும்
ஆல் அமர்ந்த வண்டு
மொத்த மரத்தையும் உண்டு
போல் பல நின் கனவுகள் கண்டு
வெந்து தணியக் காடு
உன் ஓரப் பார்வைக்குக் காத்திருக்கும்...
ஆழம்
தூரம்
மீனுக்கு இல்லை
நீர்த் துளியில் வாழும்
மீன்கள் கூட
துளியின் துளி
உயரம்
தூரம்
பறவைக்கு இல்லை
வான் துளியில் வாழும்
பறவைகள் கூட
துளியின் துளி
ஆழ் கடலும் துளி
அலை கடலும் துளி
கடல் துளி
உச்சிவானம் துளி
அடிவானம் துளி
வான் துளி
நீ துளி
நான் துளி
நாம் துளி
பெண் துளி
ஆண் துளி
கண்ணீர் துளி
ஜனனம் துளி
மரணம் துளி
வாழ்க்கை துளி
உருவம் துளி
அருவம் துளி
கடவுள் துளி
மணித் துளி
மனம் துளி
மாயை துளி
யாவும் துளி
யாதும் துளி
துளியின் துளி
சேட்டிலைட் வரும் முன்னர்
நண்பர்கள் சேட்டை தான்
பெரும் பொழுதுபோக்கு...
கால்பந்து விளையாடினாலும்
மட்டைப்பந்து விளையாடினாலும்
ஒளிந்து விளையாடினாலும்
ஓடி விளையாடினாலும்
எது விளையாடினாலும் சேட்டை தான்
சேட்டை தான் விளையாட்டு
இப்போதெல்லாம் சேட்டை குறைந்து வருகிறது
சேட்டிலைட்டில் தான் விளையாட்டு
இருட்டில் விளையாடிய விளையாட்டெல்லாம்
சேட்டிலைட்டில் மறைந்தது
விளையாட்டாகவே இல்லை
எந்த விளையாட்டும்
எல்லாவற்றிலும்
ஒரு நேர்த்தியைத் தேடுகிறது
நேர்த்தியில் சாத்தியமே இல்லை சேட்டை
போக்கற்றவனுக்குத்தான்
சேட்டை
கைவந்தக் கலை
சேட்டைக்காரனுக்கு
வாழ்கையே விளையாட்டு...
வானம் கடலுக்கு அப்பால்
கீழே இறங்கியது
மேகங்கள் இறங்க மறுக்கிறது
கடலுக்கு இந்த பக்கம்
வானம் கூட இறங்க மறுக்கிறது
ஒரு குழந்தையும் கூட...
இறக்கிவிட அன்னையும் தான் கெஞ்சுகிறாள்
இறங்காமலிருக்க குழந்தையும் தான் கொஞ்சுகிறது
அலை ஓடிவந்து ஏறிக்கொள்ளும் என்ற அச்சம் அதற்கு
கடலுக்கு அந்தப் பக்கம் மட்டுமல்ல
கடலுக்கு இந்த பக்கமும்
மர்மமாகவே இருக்கிறது...
வண்ண மீன்களை
கண்ணாடித் தொட்டிக்குள் பார்த்திருந்தேன்
அந்தக் கடவுளின் கருவறையை சுற்றிச் சுற்றி வந்து தரிசிக்கிறேன்
கடவுளும் ஆயிரம் வேலைகளுக்கு நடுவிலும்
என்னையும் கண்ணாடியில் ஊடுருவி பார்க்கிறார்
என் உள் பார்க்கத் தெரிந்த அவர் கடவுள்
புறம் மட்டும் பார்த்துப் புலம்பும் நான் பக்தன்
யார் சொன்னது என்னை நாத்திகன் என்று...
நானே மறுக்கிறேன்
நானே ஏற்கிறேன்
நானே கடவுளின் பழியை தூக்கிச் சுமக்கிறேன்
நானே கடவுள்
நானே பேய்
நானே மீன்
என்னைச் சுற்றியும் கண்ணாடிச் சிறை
எங்கே போனது என் கடல்...
மரண அடி
உடையும் உடல்
உடையும் கண்ணாடி
உயிர்க்கும் ஓர் பாற்கடல்...
பசி வரும்போது
உணவு சுவையாகிறது
உணவுக்கான காத்திருப்பில்
மணம் அருகில் இருக்கும் சிலநேரம்
மணம் தூரக் கமழும் பலநேரம்
சிலநேரம் தேடி வரும்
பலநேரம் தேட விடும்
நாவில் படும் முன்பு
மனதில் அசைபோடும்
சுவை போல் இல்லை
வாயில் அசைபோடும் போது...
மரணம் வரும்போது
வாழ்க்கை சுவையாகிறது
அனுபவத்திற்கான காத்திருப்பில்
சூழல் அருகில் இருக்கும் சிலநேரம்
சூழல் கானல் நதியாகும் பலநேரம்
சிலநேரம் தாகம் தீரும்
பலநேரம் தாகமாய் தீரும்
அனுபவம் வாய்க்கும் முன்பு
மனதில் அசைபோடும்
சுவை போல் இல்லை
வாழ்க்கை வசமாகும் போது...