நீர்
தீயை அழிக்கிறது
விதையை வளர்க்கிறது
நீ
தீயை வளர்க்கிறாய்
விதையை அழிக்கிறாய்
போதை
(போ)ன வெற்றிடத்தை
(தை)க்கும் போராட்டம்
போனது எதுவென்றாலும்
இருப்பது வெற்றிடம்
தைத்து மறைக்காதே
அந்தப் பாதை கொண்டு செல்லும்
வெற்றியிடம்
தை முதல்
திறந்தே வைத்தேன்
வெற்றிடம்
அது அட்சய பாத்திரம்
அள்ளி அள்ளித் தருகிறது
போதையை
காற்றாடி போதை
கயிறு எதற்கு?
கட்டவிழ்த்துப் பார்
கட்டுக்கடங்காத போதையை
கள் போதை
கெமிக்(கள்) எதற்கு?
காற்று போதை
மெத்தக் குடிக்க
கடற்கரை இருக்கு
நிலவு போதை
கனவு போதை
ஏதும் இல்லாமல் போனால்
உடல்
ஊரல் போட்டுக் காய்ச்சும்
தூக்கம் போதை
நான்கு பேர் இல்லாமல்
உன்னைத் தூக்கும் போதை
பெண் போதை
மண் போதை
பொன் போதை
பண் போதை
கண் போதை
மந்திரம் போதை
தந்திரம் போதை
எந்திரம் போதை
சகலமும் போதை
எந்த போதையில்
நில்லாது சுற்றுகிறதோ
இந்த பூமி...
வெற்றிடம்
அந்த அட்சய பாத்திரம்
உனக்கும்
அள்ளி அள்ளித் தருகிறதோ
அந்த சாமி...
ஒரு இரவுக்கும்
மறு இரவுக்கும்
இடையில்
எத்தனைப் பெரிய பகல்
ஒரு பகலுக்கும்
மறு பகலுக்கும்
மத்தியில்
இத்தனைச் சிறிய இருள்
ஒரு சிரிப்பிற்கும்
மறு சிரிப்பிற்கும்
இடையில்
எத்தனைப் பெரிய கண்ணீர்
ஒரு அழுகைக்கும்
மறு அழுகைக்கும்
மத்தியில்
இத்தனைச் சிறிய புன்னகை
ஒரு பிறப்பிற்கும்
மறு பிறப்பிற்கும்
இடையில்
எத்தனைப் பெரிய மரணம்
ஒரு இறப்பிற்கும்
மறு இறப்பிற்கும்
மத்தியில்
இத்தனைச் சிறிய ஜனனம்
திரும்பத் திரும்ப
படித்துப் பார்க்கிறேன்
அப்பாவை...
எனக்காக ஏனோ
வீணே யோசித்துத்
தவங்கிடந்தவர்...
அவர்
தவம் கலைத்த
வீணனும் நானே...
தவம் கலைத்த
எனக்கே நாளும்
வரம் கொடுத்தவர்...
செருப்புகள் தொலைப்பேன்
என் பாதங்களுக்காக
வறுத்தப்படுவார்...
சாப்பிட மாட்டேன்
என் உடலினை எண்ணி
அவர் புகைப் பிடிப்பார்...
அவர் தவறுகளை
என்னிடம் மறைத்தில்லை
எனக்கான பாடம் ஆக்கினார்...
சொத்து பத்தை விரும்பாதவர்
நம்பிக்கை வித்தை
விதைத்துச் சென்றார்...
அவர் தோட்டம் வளர்க்கவில்லை
காட்டை உருவாக்கிக் கொள்ள
சுதந்திரம் தந்தார்...
திரும்பத் திரும்ப
படித்துப் பார்க்கிறேன்
அப்பாவை...
தோளில் தூக்கி
வானில் தெய்வம்
காட்டி நிற்கிறார்...
வானில் தெரியும்
தெய்வமாகவும்
காட்சி தருகிறார்...
திரும்பத் திரும்ப
படித்துப் பார்க்கிறேன்
அப்பாவை...
தாகம் தீர
தோன்றும்
தாகம் போலவே...
தெளிந்து இருந்தேன்
கலங்கினேன்
தெளிவில்லாதது
தேடி அடைந்தது
ஓர் புதிய தெளிவை
கலங்கக் கலங்கக்
கிடைக்கிறது
ஓர் புதிய தெளிவு
கலங்காத நீரில்லை
கலங்காத வானில்லை
கலக்கம் ஓர் நடனம்
நடராஜன் நடனம்
நடை கூட நடனம்
நான் ஆடா நேரத்தில்
மனம் ஆடும் நடனம்
விதி ஆடும் நடனம்
விளையாட்டு நடனம்
துகளுள்ளே பொதிந்துள்ள
துகளாடும் நடனம்
ஆனந்த நடனம்
அழுகை நடனம்
ஆண்டவன் அருளிய
விலையில்லா நடனம்
அலை ஆடும் நடனம்
மலராடும் நடனம்
நமக்குள்ளே புகுந்திங்கு
காற்றாடும் நடனம்
ஜனனம் நடனம்
மரணம் தெளிவு
இறுதிவரை ஆட்டம்
வாழ்க்கை கொண்டாட்டம்
தேவதை என்ற சொல்
என்னுள் நுழைந்து வரையும் ஓவியம்
ஒன்று இவள்
இன்னொன்று அவள்
அழகு மட்டுமல்ல
இரகசியங்களும் சேர்ந்து இருக்கும்
அந்த ஓவியத்தில்
ஒரு கண்ணின் இரகசியம்
மறு கண்ணிற்கும் தெரியாது
ஒளி தொடும்போது
ஒளிந்து பார்க்கிறேன்
மழை தொடும்போது
மறைந்து பார்க்கிறேன்
இருள் தொடும்போது
கண்மூடி பார்க்கிறேன்
நான் தொடும்போது
கனவில் பார்க்கிறேன்
தேவதை என்ற சொல்
என்னுள் நுழைந்து வரையும் ஓவியம்
சொல் மறைந்து போய்விடினும்
ஓவியம் அழிந்து போவதில்லை...
தொட்டுத் தொட்டு
வரைந்த குதிரை
வளர்த்த குதிரையைப் போல்
வாழ்ந்து வருகின்றது
ஓவியனோடு
தொட்டுத் தொட்டு
அணைத்த காதலி
பிரிந்து மனதினில் போல
வாழ்ந்து வருகின்றது
ஓவியனோடு
கனவில் சுமந்து
நினைவில் கீழே தள்ளும்
சுகமான பயணம்
சுமையான தருணம்
இரண்டையும் தாங்கி நிற்கும்
அந்த ஓவியம்
வாழ்ந்து வருகின்றது
ஓவியனோடு
கடிவாளம் போடாதவனை
எந்தக் குதிரையும்
கொஞ்சம் அதிகம் நேசிக்கும் தானே
ஓவியனால் வாழும்
ஓவியங்கள்
ஓவியங்களால் வாழும்
ஓவியன்
நம்மால் வாழும்
கடவுள் போல...
நேற்றைப் போல் இன்று
இன்றைப் போல் நாளை
பழைய மனிதர்கள்
இன்னும் பழையதாக
கடந்த வருடங்களைப் போல்
கடந்து செல்கிறது
இந்த வருடமும்
புது வருடம்
புது நாள்
புது நாழிகை
புதிய பனி
புதிய வெயில்
புதிய மழை
புதிய காற்று
புதிய மேகம்
புதிய வானம்
புதிய பூக்கள்
புதிய நதி
புதிய கடல்
எல்லாமே
முதுமை இல்லாத புதியது
புதிய காலம்
புதிய பாலம்
புதிதில் புகுத்தப் பூக்கிறது
இறந்த காலம்
விட்டு விலகி வர
மனம்தான் என்றும் மறுக்கிறது
இன்னும்
புதிய மனிதர்கள்
வெறும் கற்பனையே
பழைய மனிதர்களை
முதுமை காட்டிக் கொடுக்கிறது
பிறந்த குழத்தையை
பழையதாக்கவே
நாளும் நாமும் முயள்கின்றோம்
புதிய ஆடைகள்
வாங்கி அணிந்து
புதிதைப் போல புனைகின்றோம்...
இனியேனும் என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!