ஞாயிறு, 31 அக்டோபர், 2021

 


"நீ இல்லாமல்
நான் வாழப் போவதே இல்லை"
மரணமும் உன்னைப் போலவே சொல்கிறது...


சனி, 30 அக்டோபர், 2021

 


குழி
விழுங்கக் காத்திருக்கும்
மண் மூடி மறைந்திருக்கும்

உணவை ஊட்டும்
மாயக் கை
வளைந்து நெளிந்து செல்கிறது
எந்தத் திருப்பத்தில்
இனி திரும்பப் போவதில்லையோ

அச்சம் விட்டுப் போகும்வரை
மிச்சம் நாம்
நீந்தினாலும் பறந்தாலும் நடந்தாலும்
குழி
விழுங்கக் காத்திருக்கும்...


வெள்ளி, 29 அக்டோபர், 2021

 


மீன் பிடிக்கக் காத்திருக்கும்
கொக்கைப் போல காத்திருக்கிறேன்
ஒரு சொல் பிடிக்க...

நிஜம் காத்திருக்கிறது
உன் நிழல் பிடிக்க...

நிலவு இல்லாத இரவில்
நீயும் வந்து போகிறாய்...

தவமிருக்கும் தருவைப் போல
இருந்து பார்க்கிறேன்
காற்றைப் போல நீயும் வந்து
கலைத்துப் போகிறாய்...

வானம் போல கண்களை
நான் திறந்து வைக்கிறேன்
மேகத்தை நீ தூதனுப்பி
மழையைத் தருகிறாய்...


வியாழன், 28 அக்டோபர், 2021

 


வேற்று உலகம் போவதற்கு
கண்களை மூடுகிறேன்
ஓடும் பேருந்தில் ஓடிவந்து ஏறுகிறாய்...


புதன், 27 அக்டோபர், 2021

 


ஒரு கல்
விழுந்த செய்தி
குளமெங்கும் பரவியது

ஒரு குளம்
மறைந்த செய்தி
கல்லில் ஈரம் வடிகிறது...


செவ்வாய், 26 அக்டோபர், 2021

 


நான்
யாரென்று தெரியவில்லை
நீ
யாரென்று சொல்லுகிறேன்

நீ
நான் யாரென்று அறிவாய்
உன்னை
நீ யாரென்று அறிவாயா?

யார் யாரென்று
அறிந்தவன் புத்தன்
அறியாதவனுக்கு
அவனும் புத்தரும்
யாரோ தான்...


திங்கள், 25 அக்டோபர், 2021


 

ஒவ்வொரு நாளும்
கடைசிக் கண்மூடலை
தெரிந்து வைத்திருக்கிறாய்

இமைகள் மூடிடும்
அந்த நாழிகையில்
நான் பார்க்காத வண்ணம்
உள் நுழைகிறாய்

இருளை மெல்ல மெல்ல விலக்கி
முகம் காட்டுகிறாய்
முதலில் பார்த்த பரவசத்தை
இதயத்தில் நிரப்புகிறாய்
உலகம் நிரம்பி விடிகிறது...

வாழ்வின் கடைசி கண்மூடலில்
வந்து நுழைவாயா...
இருளில் தனியாக விட்டுவிடுவாயா...


ஞாயிறு, 24 அக்டோபர், 2021

 


பூமி
சாமி தான்
காளான் குடைப் பிடித்து
மழையில் நனைந்து நிற்பான்

ஏழை
சாமி தான்
ஊரான் குடைப் பிடித்து
விழியில் நனைந்து நிற்பான்

பூமியும் ஏழையும்
தனக்குத்தானே குடைப் பிடித்தால்
பயிறு விளையாது
வயிறு நிறையாது


சனி, 23 அக்டோபர், 2021

 


ஓவியத்தினுள்
நுழைந்து  திரும்பும் வரை
ஓவியமே உலகம்

வெளியில் வந்துவிட்டேன்
உலகமே ஓவியம்
உள் நுழையும் அனுபவம்

சடலம் ஓவியம்
உயிர் கற்பனை
உணர்வு உலகம்

எல்லாமே அழியும் கோடுகள்...


வெள்ளி, 22 அக்டோபர், 2021

 


இடமிருந்து வலமாக
வலமிருந்து இடமாக
இரவெல்லாம்
புரண்டு புரண்டு படுத்து
நினைவுகளை அழிக்கிறேன்
முடியவில்லை
முடிவில் அழிந்துபோனது
இரவு...


வியாழன், 21 அக்டோபர், 2021

 


வேட்டையாடிடும் கண்களுக்குள்
வேடந்தாங்கல் பறவையொன்று
வேகம் குறைத்து நடக்கின்றது
கூட்டாளிகளைப் பிரிக்கின்றது...


புதன், 20 அக்டோபர், 2021



வான் கடந்து வந்து கொண்டிருக்கிறேன்
தேடிக் கொண்டிருக்கிறேன்
வழியெல்லாம் நீ...

செவ்வாய், 19 அக்டோபர், 2021

 



நிலவு
மலர்ந்து உதிரும் ரோஜா
மனதில் கிளையில் முட்கள்

நான்
புல்லில் முளைத்த கனவு
நீ
என்னில் பூத்த நிலவு...


திங்கள், 18 அக்டோபர், 2021

 


காற்றின் தூரிகை
ஒற்றை நாணல்
மௌனமாக எழுதுகிறது
மௌனத்தையே எழுதுகிறது
படபடத்து துடிதுடித்து...


ஞாயிறு, 17 அக்டோபர், 2021

 


மறைக்கத் தெரியாதவர்கள் குழந்தைகள்
புன்சிரிப்பில் எழுதிவைத்து
பூ மனதில் பூட்டி வைப்பார்...
ஒளிந்து விளையாடும் குழந்தைகள்
தன் கண் மூடி
தன்னையே மறைத்துக் கொள்வார்
புத்தரைப் போல்
மூடிய புத்தகம் போல்...


சனி, 16 அக்டோபர், 2021

 


பசி இல்லாத ஊரில்லை
பாலபிஷேகம் செய்யாத கோவிலில்லை
மனிதரைத் தவிர ஆறாம் அறிவு யாருக்குமில்லை...

வெள்ளி, 15 அக்டோபர், 2021

 


எலிகளைக் கொல்லாத ஒரு பூனை
குழந்தைகளைக் கொன்றது
பசுவைக் கொல்லாத மனிதர்கள்
மனிதர்களைக் கொள்கின்றனர்...


வியாழன், 14 அக்டோபர், 2021

 


வறுமையை கண்டித்தால் கூட
மகிழ்ச்சி தான்
கண்டுகொள்ளாமல் இருப்பதால தான்
கள்வர் என்று சொல்கின்றேன்

சாலைவாழ் மக்களைச் சந்திகாதவன் தான்
மேலைநாட்டுத் தலைவரை எல்லாம்
கூனிக் கும்பிடு போட்டுவரப் போகிறான்

கோட்டுச் சூட்டுக் காரனுக்கு
ஓட்டை ஒட்டு உடுத்துவோனின்
இன்னல்கள் தெரியாது
இனிமேலும் புரியாது

வானொலியில் பேசுகிறான்
வான்வெளியில் திரிகின்றான்
நேர்வழியில் வந்துனை பார்க்காதவன்
வறுமை வலியை ஏதுணர்வான்?


புதன், 13 அக்டோபர், 2021

 


வானம்
காணும் போதெல்லாம்
காணாமல் போகிறேன்

மேலே வானம்
கீழே நீயும்
கண் மூடிட இரண்டும்

காணாமல் போகிறேன்
உயிர் போல
மனம் போல
தெய்வம் போல...

அதற்கும் மேலாகவே
வானும்
நீயும்

காணும் போதெல்லாம்
காணாமல் போகிறேன்...


செவ்வாய், 12 அக்டோபர், 2021

 


ஒளியில் நிழல் மலர்கிறது
இருளில் நிழல் உதிர்கிறது
உயிர்
எங்கு மலர்கிறது?
எங்கு உதிர்கிறது?
யாருக்கும் தெரியா
அந்த வேற்று உலகம்
மிக அருகில் தான் உள்ளதா?
நட்சத்திரங்களைக் கடந்து உள்ளதா?
ஒளியிற்கும் இருளிற்கும் இடையிலா?
ஒளியும் இருளும் அதனுள்ளா?
அந்தப் பெருங் கனவுலகு
இந்தச் சிறு கனவில்
மலரும் முன்பே உதிர்ந்து
நிழல் மலர்கிறது...


திங்கள், 11 அக்டோபர், 2021

 


பொருள் தேடலில்
பொருளில்லை
விளங்கும்போது உயிரில்லை...


ஞாயிறு, 10 அக்டோபர், 2021

 


கடலின் துளிகளும்
கண்ணீர்த் துளிகளும்
நதியின் துளிகளும்
வியர்வைத் துளிகளும்
மேகத் துளிகளாய்
வானத் துளியில்...
துளியின் துளிதான்
படைப்பு பிறப்பு
இறப்பும் துளிதான்
நினைப்பும் துளிதான்
கனவும் துளிதான்
அனைத்தும் துளிதான்
துளியின் துளிதான்...






சனி, 9 அக்டோபர், 2021

 


விட்டுச் சென்ற பாதங்களை
திரும்பப் பார்க்காமலே இருக்கட்டும்
அந்தச் செருப்புகள்

வெறும் பாதங்களாகவோ
புதுச் செருப்போடோ
திரும்பப் பார்காமலே இருக்கட்டும்

எல்லாப் பாதங்களும்
மிதித்து மிதித்துப் போகட்டும்
அந்த வலியே மேலானது...


வெள்ளி, 8 அக்டோபர், 2021

 


ஒளிந்து பார்ப்பதை
உள்ளே வரைகிறேன்
உதிரம் தொட்டு

நேரில் பார்ப்பதை
வெளியே வரைகிறேன்
சாயம் தொட்டு

ஒளிந்து பார்க்கும் என்னையும்
ஓவியத்தில் வைத்துவிட்டேன்
நீ திரும்பிப் பார்க்கவேண்டும்
உன்னைத் தூரிகையால் திருப்பிவிட்டேன்
உதிரம் தொட்டு வரைவதையும்
உனக்குச் சொல்லிவிட்டேன்

அந்த நிர்வாண மாதிரி
எங்கோ பார்க்கிறாள்
ஏதும் தெரியாதமாதிரி...

உதிரம் தொட்டு
அவள் உள்வரையும்
அந்த ஓவியம்தான் என்ன?


வியாழன், 7 அக்டோபர், 2021

 


கையில் துப்பாக்கியுடன்
குழந்தைப் புகைப்படம்
பார்த்தாலே சுடுகிறது...

புதன், 6 அக்டோபர், 2021

 


குழந்தைகளை
யாரும் வளர்த்துவிடாதீர்கள்
அவர்களாவது குழந்தையாகவே இருக்கட்டுமே...


செவ்வாய், 5 அக்டோபர், 2021

 


உன் காலடியில் இருக்கும்
பூக்கள் எல்லாம் சொல்கிறது
கடவுளைப் போல் நீயும் கல் என்று...


திங்கள், 4 அக்டோபர், 2021

 


தனிமை போல்...
ஆனால் என்னுடன்
இசை புகை நிலா
இரவின் துவக்கம்

இப்போது என்னுடன்
இசையும் நிலாவும் மட்டும்

இப்போது என்னுடன்
நிலா மட்டும்

இப்போது நான் மட்டும்
தனிமை போல்
ஒரு உணர்வு
வந்து வந்து போகிறது
இரவின் மத்தியில்...

காலையில்
ஒரு பகல் தூரத்தில்
தனிமை...


ஞாயிறு, 3 அக்டோபர், 2021

 


நெருப்புப் புல்லாங்குழலின்
இசைப்பொறியில்
இதயம் சுடுகிறது...

உன்மீது படரும்
இரவின் பனியை
மெல்லத் துடைக்கிறது...

சனி, 2 அக்டோபர், 2021

 


யாரோ கொண்டு வந்தார்கள்
யாரோ கொண்டு போகிறார்கள்
இடையில் இருந்த வரை
இவன் யாரோ தான்

என்னைத் தூக்கிச் செல்லும்
அந்த நால்வர் யாரோ?
யார் யாரோ வருகிறார்கள்
வருவார்களா யாருக்குத் தெரியும்

எனக்குத் தெரியாத
அந்த கணத்தில்
யாரோ தானே அவர்கள்

ஊர் பேர் தெரியாத
அந்த யாரோ
மிக நெருக்கமாகிறார்
எனைக் கடந்து போகிறார்

யாரோ ஒருவரை
யாரோ நான்கு பேர்தான்
சுமந்து செல்கிறார்கள்
நாள்தோறும்


 


உரிமையோடு பழகும் நண்பர்கள்
ஊரைக் காலி செய்துவிட்டார்கள்

வாங்க போங்கன்னு
எங்கோ தூரத்திலிருந்தே உரையாடல்
எனக்காக இதைக் கட்டினேன்
எனக்காக இதை வாங்கினேன்
எனக்காக எனக்காக என்று
பேசப் பழகிக் கொண்டார்கள்
உனக்கானவன் நான்
என்பதை மறந்து போனவர்களே...
உலகம் விட்டுப் போகும்வரை
நான் உனக்கானவன்தான்!

மாளிகைச் சுவர்களுக்குள்
மண் சுவர்களுக்குள்
வாழ்ந்தது போதும்
நம் குட்டிச் சுவர் காத்திருக்கிறது
வந்து சேருங்கள்

இது என் ஊர்
எனும் நினைப்பே
நீங்கள் தந்ததுதான்

ஊர் வந்து சேருங்கள்
இந்த உலகம் விட்டுப் போகும்வரை
நம் ஊரில்தான் இருப்பேன்...


வெள்ளி, 1 அக்டோபர், 2021

 


யாரைக் கடவுள் என்று சொல்ல?
உயர இருப்பவனையா
உறங்கிக் கிடப்பவனையா
உணர்வுடன் காவல் இருப்பவனையா...