"நீ இல்லாமல்
நான் வாழப் போவதே இல்லை"
மரணமும் உன்னைப் போலவே சொல்கிறது...
மீன் பிடிக்கக் காத்திருக்கும்
கொக்கைப் போல காத்திருக்கிறேன்
ஒரு சொல் பிடிக்க...
நிஜம் காத்திருக்கிறது
உன் நிழல் பிடிக்க...
நிலவு இல்லாத இரவில்
நீயும் வந்து போகிறாய்...
தவமிருக்கும் தருவைப் போல
இருந்து பார்க்கிறேன்
காற்றைப் போல நீயும் வந்து
கலைத்துப் போகிறாய்...
வானம் போல கண்களை
நான் திறந்து வைக்கிறேன்
மேகத்தை நீ தூதனுப்பி
மழையைத் தருகிறாய்...
ஒவ்வொரு நாளும்
கடைசிக் கண்மூடலை
தெரிந்து வைத்திருக்கிறாய்
இமைகள் மூடிடும்
அந்த நாழிகையில்
நான் பார்க்காத வண்ணம்
உள் நுழைகிறாய்
இருளை மெல்ல மெல்ல விலக்கி
முகம் காட்டுகிறாய்
முதலில் பார்த்த பரவசத்தை
இதயத்தில் நிரப்புகிறாய்
உலகம் நிரம்பி விடிகிறது...
வாழ்வின் கடைசி கண்மூடலில்
வந்து நுழைவாயா...
இருளில் தனியாக விட்டுவிடுவாயா...
வறுமையை கண்டித்தால் கூட
மகிழ்ச்சி தான்
கண்டுகொள்ளாமல் இருப்பதால் தான்
கள்வர் என்று சொல்கின்றேன்
சாலைவாழ் மக்களைச் சந்திகாதவன் தான்
மேலைநாட்டுத் தலைவரை எல்லாம்
கூனிக் கும்பிடு போட்டுவரப் போகிறான்
கோட்டுச் சூட்டுக் காரனுக்கு
ஓட்டை ஒட்டு உடுத்துவோனின்
இன்னல்கள் தெரியாது
இனிமேலும் புரியாது
வானொலியில் பேசுகிறான்
வான்வெளியில் திரிகின்றான்
நேர்வழியில் வந்துனை பார்க்காதவன்
வறுமை வலியை ஏதுணர்வான்?
ஒளியில் நிழல் மலர்கிறது
இருளில் நிழல் உதிர்கிறது
உயிர்
எங்கு மலர்கிறது?
எங்கு உதிர்கிறது?
யாருக்கும் தெரியா
அந்த வேற்று உலகம்
மிக அருகில் தான் உள்ளதா?
நட்சத்திரங்களைக் கடந்து உள்ளதா?
ஒளியிற்கும் இருளிற்கும் இடையிலா?
ஒளியும் இருளும் அதனுள்ளா?
அந்தப் பெருங் கனவுலகு
இந்தச் சிறு கனவில்
மலரும் முன்பே உதிர்ந்து
நிழல் மலர்கிறது...
ஒளிந்து பார்ப்பதை
உள்ளே வரைகிறேன்
உதிரம் தொட்டு
நேரில் பார்ப்பதை
வெளியே வரைகிறேன்
சாயம் தொட்டு
ஒளிந்து பார்க்கும் என்னையும்
ஓவியத்தில் வைத்துவிட்டேன்
நீ திரும்பிப் பார்க்கவேண்டும்
உன்னைத் தூரிகையால் திருப்பிவிட்டேன்
உதிரம் தொட்டு வரைவதையும்
உனக்குச் சொல்லிவிட்டேன்
அந்த நிர்வாண மாதிரி
எங்கோ பார்க்கிறாள்
ஏதும் தெரியாதமாதிரி...
உதிரம் தொட்டு
அவள் உள்வரையும்
அந்த ஓவியம்தான் என்ன?
யாரோ கொண்டு வந்தார்கள்
யாரோ கொண்டு போகிறார்கள்
இடையில் இருந்த வரை
இவன் யாரோ தான்
என்னைத் தூக்கிச் செல்லும்
அந்த நால்வர் யாரோ?
யார் யாரோ வருகிறார்கள்
வருவார்களா யாருக்குத் தெரியும்
எனக்குத் தெரியாத
அந்த கணத்தில்
யாரோ தானே அவர்கள்
ஊர் பேர் தெரியாத
அந்த யாரோ
மிக நெருக்கமாகிறார்
எனைக் கடந்து போகிறார்
யாரோ ஒருவரை
யாரோ நான்கு பேர்தான்
சுமந்து செல்கிறார்கள்
நாள்தோறும்
உரிமையோடு பழகும் நண்பர்கள்
ஊரைக் காலி செய்துவிட்டார்கள்
வாங்க போங்கன்னு
எங்கோ தூரத்திலிருந்தே உரையாடல்
எனக்காக இதைக் கட்டினேன்
எனக்காக இதை வாங்கினேன்
எனக்காக எனக்காக என்று
பேசப் பழகிக் கொண்டார்கள்
உனக்கானவன் நான்
என்பதை மறந்து போனவர்களே...
உலகம் விட்டுப் போகும்வரை
நான் உனக்கானவன்தான்!
மாளிகைச் சுவர்களுக்குள்
மண் சுவர்களுக்குள்
வாழ்ந்தது போதும்
நம் குட்டிச் சுவர் காத்திருக்கிறது
வந்து சேருங்கள்
இது என் ஊர்
எனும் நினைப்பே
நீங்கள் தந்ததுதான்
ஊர் வந்து சேருங்கள்
இந்த உலகம் விட்டுப் போகும்வரை
நம் ஊரில்தான் இருப்பேன்...