வியாழன், 30 ஏப்ரல், 2020

கல்லான மனிதர்கள்
கல்லாத மனிதர்கள்
கல்லுக்குப்  பாலூட்டும்
பகட்டான மனிதர்கள்

பகிராத மனிதர்கள்
பரிகாரம் செய்கிறார்
அரிதார மனிதர்கள்
அர்ச்சனை செய்கிறார்

செல்லாத காசையும்
வீசியெறிந்த தோசையும்
பைத்தியங்கள் உண்கிறார்
பங்குபோட்டுக் கொள்கிறார்

தெருநாய் என்றபோதிலும்
சமமாய்த் தின்ற யோகியை
கடந்தோடிடும் நாழிகை
கடவுள் தூவும் அர்ச்சதை

பைத்தியங்கள் தான் வாழ்கிறார்
மற்ற யாவருமே பிழைக்கிறார்

பூவின் நிர்வாணத்தை
வெகு நேரமாக பார்த்து நின்றேன்
காமம் வந்து சேரவில்லை

காமம் வந்து சேர்ந்த நேரம்
பூவைப் பூவைச் சூடிச் சென்றாள்...

புதன், 29 ஏப்ரல், 2020

பட்டுப் பூச்சியைப் பற்றி
பாடம் எடுக்கிறார் ஆசிரியை
பட்டுப் புடவையை அவளுக்கு
கட்டிப் பார்க்கிறான்
ஒரு மாணவன்...

கூட்டுப் புழுவிற்க்கு மட்டுமல்ல
ஏட்டுப் புழுக்களுக்கும் இப்படித்தான்
மறைவாகவே சிறகுகள் முளைக்கின்றன....

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

பெண்ணை
பெண்ணாக முழுமை ஆக்குவதும்
ஆணை
ஆணாக முழுமை ஆக்குவதும்
எதிர் பாலினங்களின்
முழு முதல் கடமை

இதனை
நேசித்து ஏற்றுக்கொள்ள
உலகமே நேசத்தால் நிரம்பும்

பூமி
வெண் புறாவாகி பறந்திடும்
அதற்கு இணை தேடி...

திங்கள், 27 ஏப்ரல், 2020

மனம் கொத்திப் பறவை
உன் நினைவுகள் வலித்தாலும்
மரம் சத்தம் போடுவதில்லை...

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

விபச்சாரி
வேண்டும் வரம் கொடுக்கும்
கடவுள்

சிறப்பு தரிசன
வேண்டுதல்களும்
சுயநலமானதே

ஆத்திகனையும்
நாத்திகனையும்
நிர்வாணம் ஆக்கி
புத்தனாக்கும் முயற்சி
தற்காலிகமாக

நல்லோரே இல்லை
எனினும்
எல்லோர்க்கும் பெய்யும் மழை

சட்டம்
கைது செய்யும்
நீதி
தண்டனை வழங்கும்
சமூகம்
சாக்கடையாய்ப் பார்க்கும்

இருந்தும்
புன்னகைப் பூக்கும்
குப்பை மேட்டுப் பூ
இந்த அன்பு

வரத்திற்கு வாரண்ட்
கொடுப்பதை விட்டுவிட்டு
வேண்டுதல்களை மாற்றுங்கள்
வேண்டாதவைகள்
தானாய் மாயும்

நேரில் வந்தாலும்
கண்களுக்கு தெரிவதில்லை
கடவுள்

ஆணின் எண்ணங்களை எல்லாம்
சேர்த்துப் பொருத்தி வைத்தால்
பெண்களாகவே இருக்கிறது
அவன் ரகசிய உலகம்

இலைகள்
காற்றில் ஆடிடும் நடனத்திலும்
சிவசக்தி

சனி, 25 ஏப்ரல், 2020

அணைந்து அணைந்து எரியும் அடுப்பில்
உலகம் எல்லோர்க்கும் உணவு சமைக்கிறது
பாடிப் பறக்க வேண்டிய வாழ்வில்
பாடுபட்டு பிச்சை எடுக்கும் மனிதன்...
மௌனம் என்னும் பேரிசையில்
மெய் மறந்தது
இந்த உலகம்

எனை மறந்த பேரழகே
எங்கிருந்தோ மௌனமாக
என்னுள் இசைக்கிறாய்...
எனக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும்
அந்தப் பூ விரல்கள்
அன்புத் தாய் முலைகள்...

நம்பிக்கைப் பாலூட்டி
பாசத் தாலாட்டி
நேசப் பரிசளித்தப் பதுமை...

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அன்பு அதிகமுள்ள
பறவைகளின் கூடு
சிறியதாகவே உள்ளது

துணையைத் தவிர
வேறு துணையே இல்லை
அகிலமே அதன் வீடு

அதன் உலக வங்கியில்
எல்லாமும்
பொதுக் கணக்கே

அவை
வயிற்றில் கூட
அதிகம் சேமிப்பதில்லை

எந்தக் கொடை வள்ளலும்
அதன் சரித்திரத்தில்
இல்லை

பிறருக்கு நாம்
கொடுத்து உதவும் குணமும்
ஒரு குற்ற உணர்வோ...

வியாழன், 23 ஏப்ரல், 2020

கண்ணீர்த் துளிகளின்
விழிம்பினில் நின்றுதான்
புன்னகைப் பூக்கிறது...

இரண்டுக்கும் ஒரே மொழிதான்
உலகெங்கும்...
மழலையும் முதுமையும்
யாவர்க்கும் பொது மொழி
கல்லாத மொழி
கடவுள் மொழி

புதன், 22 ஏப்ரல், 2020

( joker 2019 - Arthur vs Zebra )

மனித ஜோக்கர்கள்
விலங்காக மாறுகின்றனர்
விலங்கு ஜோக்கர்கள் ஏன்
மனிதனாக மாறுவதில்லை
மாறாக எதுவாக மாறிடும்...

மனிதன்
மிருகமாக மாறுவதேயில்லை
எந்த மிருகமும்
மனிதரைப் போல
தன் இனத்தினை
அழிப்பது இல்லை

கீழிருந்து பார்க்கும்போது
மேலே இருப்பது வியப்பு
மேலிருந்து பார்ப்போருக்கு
கீழே இருப்பது வியப்பு
கீழும் மேலும் மறைய
யாவும் இங்கே வியப்பு
யாவும் இங்கு மறைய
யாது இங்கே வியப்பு...

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

எதையோ மறைப்பதற்கு
புன்னகை பூக்கிறது
மறந்தும் அது
உண்மையில் பூப்பது இல்லை

மலராத கொடியிற்கு
மறதி ஒரு வரம்
நினைவினையே
அது மலராய் உதிர்த்திடும் 

திங்கள், 20 ஏப்ரல், 2020

கண்களுக்கு எட்டும் வரை
வரையும் ஓவியம்
யாருடையதோ...

நாள்தோறும் வரைந்து கொண்டே
யாரும் பார்க்காத வண்ணம்
ஓவியத்துள் ஒளிகிறாயோ

இமைத் தூரிகைகள்
ஒன்று சேர்ந்து
மனதின் உள்ளே
வரையும் ஓவியம் போல்

வெளி எல்லாம் வரையும்
அந்த இமைகள்
யாருடையதோ...

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

மொட்டு மலர்வதைப் போல
மலர்கிறாள் எனக்காக
பூட்டி வைத்த அழகை எல்லாம்
திறந்து விடுகிறாள்
ஏழு வண்ணங்களையும்
குடையைப் போல விரிக்கிறாள்
அடர் மழையெனவே
கொட்டித் தீர்க்கிறாள்
தன் அழகை எல்லாம்
பரிசளிக்கிறாள்
மூன்றாம் கண்ணை
திறக்கச் செய்த பார்வதி
என் ரதி...

நதியின் மேலாடை நழுவ
நதி தகிப்பதைப் போல
ரதியும் தகித்திடுவாள்

பூங்காற்றிடம்
பாடம் பழகிய விரல்கள்
சும்மா இருப்பதில்லை...

சனி, 18 ஏப்ரல், 2020

இலைகள் இல்லாத மரங்கள்
யாரோடும் பேசுவது இல்லை

பகலும் இரவும் தவிர
எந்த வண்ணமும் இல்லை

நதியின் உதடுகள்
இடைவிடாமல்
உன்னைக் கேட்கின்றன

ஒரு சொல் மட்டும்
விழி வழி இறங்கி வந்து
நதியினில் கரைகிறது...
உணவுக்காகக் காத்திருந்தேன்
நானே
உணவாகிப் போன உணர்வு...

என்
உலகத்தில் இருந்து
வேறு உலகத்திற்கு செல்வது
கனவா...

நிஜத்தில் இருந்து பிரிந்தபோதும்
நீந்துவதை
நிறுத்த முடியவில்லை

நான்
வேட்டையாடப்பட்ட பொழுதிலும்
உனை
வேட்டை ஆடுகிறேன்

நினைவே உணவாகிப் போக
கனவே
வேட்டை ஆகிறது

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

ஒவ்வொரு அடியும்
உனைக் காண...

ஒவ்வொரு மூச்சும்
உனைத் தீண்ட...
பாடாமல்
பேசாமல்
எழுதாமல்
இருந்துவிட்டால்
ஊமை மொழி மறைந்திடுமோ

தெரியாத
புரியாத
பல கோடி
மொழிகள் உண்டு
அவை ஒலியாக
உலவும் உலகம்
என்றும் அழியாது
இந்த அருவம்

துளியாக
நதியாக
உருவங்கள் மாறினும்
கடலாக கூடும்
நீர் போல்

ஒலி யாவும்
ஒரு நாளில்
மௌனமாய் கூடிடும்
மொழி தன்னில்
உயர்வு மாயை

வியாழன், 16 ஏப்ரல், 2020

உணவை இழந்து
ஒரு பசியும்
உன்னை இழந்து
ஒரு பசியும்
வேட்டை ஆடுகிறது
வயிறும் உயிரும்
பற்றி எரிகிறது
இரவு
வேடிக்கை பார்க்கிறது...

இரு பசி
நடு நிசி
கனவு சமைக்கிறது
உண்ண உண்ண
காலியானது கனவு தான்
பசியின் கொழுந்துகள்
வளர்ந்து வளர்ந்து
விடியல் பிறந்தது...

நான்
என்னிடம் இல்லாதபோது
நான் யார்...

புதன், 15 ஏப்ரல், 2020

இசை கூட
தன்னை இழந்து விடுகிறது
மழலைக் கொஞ்சும் போது

இளமை மாறாத
இசையின் ரகசியம்
இது தானோ...

இசைக்கருவி இன்றி போனாலும்
பிஞ்சு விரலில் இதழில்
நாதம் மீட்டும்

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

வண்ண மீனைப் போல
என்னுள்
இங்கும் அங்கும் ஓடுகிறாய்

துளித்துளியாக
இந்தக் கடல் மட்டம்
உயருதடி...
உலகை
மொத்தமாகக் கட்டியணைக்க
கரங்களை நீட்டிடும்
விருட்சத்தைப் போல
உன்னைக் கட்டியணைத்திட
கரங்களை நீட்டுகிறேன்
நீ எந்தன் உலகமடி...

திங்கள், 13 ஏப்ரல், 2020

சித்திரை பிறந்தது
சித்தமெல்லாம்
புதுச் சித்திரம் வரையுது

காலம்
வரையும் ஓவியத்தில்
வண்ணம் தீட்டி வாழ்ந்திடுவோம்

உலகோவியம்
என் உயிருடனே
தமிழ் மொழியினில் பேசியது

தாய்மொழி
தரணியிலே எனை
அறிமுகம் செய்கிறது
இந்த
உடல் உயிர் மத்தியிலே
உணர்வினை வழங்கியது

விண்ணையும் மண்ணையும்
அன்னையும் போல்
என்னை ஊட்டி வளர்க்கிறது

காதல் சின்னங்கள் கூட
எதிரும் புதிருமாகவே
இருக்கிறது

ஒன்றை ஒன்று
அழித்துக் கொள்ளவே
அணி சேர்கின்றன

ஒருவரை ஒருவர்
அறிந்திடாமலே
இருவருமே ஆடும் வேட்டை

இருந்தும்
தான் முதலில் இறப்பதற்குத் தான் 
இந்த முயற்சி...

மேகங்கள் மொத்தமாகக்
கூடிக் கூத்தாடி
கடைசித் துளி ஆனந்தத்தையும்
பொழிந்து விட்டு
எதைத் தேடிச் செல்கின்றதோ வேகவேகமாக...

கூட்டாளிகள் காணவில்லை
கூத்தடிக்கவும் நேரமில்லை
பார்ப்போருக்கு எல்லாம்
லேசாகத் தெரியும்
சுமப்போருக்குத் தான்
பாரம் புரியும்

இறப்பதற்கு முன்பு வரை
இறக்கி வைக்கத் தெரிவதில்லை
நான்கு பேர் சுமப்பதையா
ஒருவனாகச் சுமந்து திரிந்தான்

என் பாரம் அறிந்து கொள்ள
எந்த நால்வர் உள்ளனரோ...
அந்த நால்வர் உடனிருந்தால்
பாரம் இன்றே குறையுமன்றோ...

நிலவுத் தோழியும் அருகில் இல்லை
ஒளியாய்ப் படர்ந்த போதும்
பாரம் அவள் அறிவதில்லை

இரவில் வந்து போகின்றாள்
இறுதிவரை வருவாளோ
கனவாய் தொடர்ந்தே கலைவாளோ...

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

அரை குடமாகவே
இருக்க ஆசை
எனக்குள் நானே
பேசிக்கொள்ளப் பிடிக்கிறது

நிறை குடமோ
காலிக் குடமோ
மௌனமாகவே இருக்கிறது

மௌனம்
என்னோடு
உன்னை மட்டுமே பேசுகிறது

குடம்
நிஜமாகவோ
கானலாகவோ
ஒழுகத் துவங்கி விடுகிறது...

என்னோடு
நானே பேசும் போது
எனக்குள்
நான் அழுது கொள்கிறேன்


பகிர்ந்துகொள்ள முடியாத

ஒருவருடைய வார்த்தைகளே
பலப் பால்வெளிகள்...

எண்ணக் குதிரைகளின்
ஓட்டத்தின் வல்லமை
ஒளியினை விஞ்சியதோ...

அது பற்ப்பல பால்வெளித் திரள்களை
ஒரு பாய்ச்சலில் கடந்திடுமோ
பேராற்றல் தான் வார்த்தையில் அடங்கிடுமோ...

பேராற்றலின் பிறப்பிடம்
காதலை அறிவது
மானிட மடமையன்றோ

என் தேவியே 
நீ இன்றி நான் இங்கு
உன் கனவினில் வரும் கனவோ...


சனி, 11 ஏப்ரல், 2020

நிஜமும் கனவும்
நூலிழையும் மாற்றம் இல்லை
இறுதியில்
நினைவினைக் கொடுத்து விட்டு
திரும்பிப் பார்க்காமலே செல்கின்றன

பின் தொடர முடியவில்லை
அதன் வேகமா
இதய சோகமா
தெரியவில்லை

முகவரி இல்லாத இரண்டையும்
தேடித் தொடர்கிறது
வாழ்க்கை...
சிறு இலைகள்
வீழ்ந்து தொடுகையிலே
உன் நினைவுகள்
என்னை வீழ்த்தியது...

சிறு இலைகளை வீழ்த்தியது
யார் யார் நினைவோ...

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கண்ணாடி மனது
கடைசிவரை
எனைக் காட்டவே இல்லை

எல்லோரையும் பிரதிபலிக்கும்
என்னை மட்டும்
பலி கொடுக்கும்

உடையாமல் காத்து நின்றேன்
தவறி உடைந்ததும்
கதறி அழுதேன்
இருந்தும் இப்போதும்
என்னைக் காட்டவே இல்லை
ஒரு சில்லில் கூட...

வியாழன், 9 ஏப்ரல், 2020

புதன், 8 ஏப்ரல், 2020

பார்ப்பது எல்லாம்
உன் போல் தெரிகிறதா...
பார்வை உன்னை வரைகிறதா...

எனை எப்போதும் அணைத்திருக்கிறாய்
குழந்தையைப் போல் தூக்கிச் சுமக்கிறாய்

உன்னை முகர்ந்தேன்
என்னை இழந்தேன்
வாசம் என்னைத் தாலாட்டுது
உன் சுவாசம்
என் உயிர்க் கூட்டுது...
இருளின் இதழ் கவ்வி
ஈரிதழ் முத்தம் தர
இருபது இதழ்களாய் மலர்ந்தது
இருளின் இதழா...
பூவின் இதழா...

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

எனது
கனவு ஓவியங்களுக்கு
வண்ணங்களைக் கொடுத்து
அன்னியப் படுத்த விரும்பவில்லை
நிர்வாணமே
அதன் மிக அருகில்
கொண்டு சேர்க்கிறது...

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

மூங்கில் பாய் விரித்து
படுத்திருந்தேன்
இந்த முள் குத்தவில்லை
முன் நடந்தவை தான்...
இரத்தமும்
சப்தமும்
இல்லாமல்
வலி வழிந்தோடுகிறது
கானல் நதியாக...

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

பத்து மாதங்கள் காத்திருந்து
பிறந்த பிறப்பு யாவும்
பத்து நொடிகள் கூட
காத்திருப்பதில்லை

சட்டென்று
உடைந்து விடுகிறது வாழ்க்கை
நீர்க் குமிழி போல...

தேடி அலைகிறான் நண்பன்
தன் தந்தையை
சிறுவனைப் போல...

தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
மகன் தந்தைக்குத் தோழன்
நண்பர்கள் நாங்கள் உண்டு
கலங்காதே தோழா...

வியாழன், 2 ஏப்ரல், 2020

கண்ணுக்குத் தெரிந்தே
நாங்கள் மரணக் கயிற்றில்
நடப்பதை ரசித்துவிட்டு

கண்ணுக்குத் தெரியாத
இந்த மரணக் கூத்தில்
உங்கள் விந்தைகள் வியக்கின்றன...

உயிருக்காக
எனைத் தின்னும்
அந்தக் கிருமியே மேல்

சிறுவயதில்
நிலவில் பார்த்த கிழவி
நான் வளரவளர
குமரி ஆகிறாள்
மேலும்
நான் வளரவளர
குழந்தை ஆகுவாளோ...

தலைக்கு மேலே
பார்ப்பதனால் 
பருவம்
தலைகீழாகத் தெரிகிறதோ...

புதன், 1 ஏப்ரல், 2020

புறக்கணிப்பின்
தூது வார்த்தை
'சூழ்நிலை'

ஒற்றை வார்த்தை தான்
உறவை உடனே அறுத்துவிடும்
மறுபேச்சையும் கொன்று விடும்

உயிர் அவள்
எளிதாகப் பிரிந்துவிட்டாள்

உடலை விட்டுவிட்டு
உயிர் கடவுளிடமும் சொன்னது
சூழ்நிலை என்று

உடல் மண்ணில்
அழுகிப் போனது...
எப்படி எழுவேன்
அடித்து வீழ்த்தியது
உன் இமைகள் அல்லவா...