செவ்வாய், 30 ஏப்ரல், 2024


இயற்கை ஒளி பிடிக்கும் கடவுள்
செயற்கை ஒளி பிடிக்கும் நாங்கள்

படம் பிடிக்கும் பின்னணியில்
இமை திறக்கும் இயக்கம் நாங்கள்

மலர்ந்து உதிரும் மலரைப் போல
வாடி வதங்கும் கூட்டம் நாங்கள்

நடித்துப் பெயரெடுக்கும் நட்சத்திரங்கள் பின்னே
நடிக்காமல் பெயர்தொலைக்கும் பால்வெளி நாங்கள்

நூறு நாட்கள் முழுமையாக வேலை பார்த்தாலும்
சிலரின் அரைநாள் சம்பளமே மொத்தமாக வாங்கும்
சாபம் நாங்கள்

ஒருநாள் வரும்
ஒரு நாள் சம்பளமேனும் கூடி வரும்
திருநாள் காண காத்திருக்கும்
லைட் மேன் நாங்கள்


திங்கள், 29 ஏப்ரல், 2024


பரம் பொருளோ
பரம சிவனோ
பரம பிதாவோ
பிறை நிலாவோ
எத்தனை எத்தனைக் கடவுள்கள்
இருந்தும்
எதையும் நம்பாமல்தானே
இத்தனை இத்தனை ஏவுகணைகள்...

சொற்றுணை கொண்டு வேண்டுகிறோம்
தமிழே தாய் மொழியே
இயற்கையாய் வந்தணைத்த இறையே
மாயம் செய்
மண்ணில் மங்களம் செய்
போர் இலாத பாரிலே
உயிர்களை நிம்மதியாய் வாழச் செய்... 

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024


தினமும் வந்துபோகும் பறவைகள்
அந்த நம்பிக்கையில் தான்
ஒவ்வொரு நாளும் கடக்கும்...

தானியங்களைத் தான் தருகிறேன்
மாறாக தானமாகத் தருகிறது
இந்த வாழ்வை...

ஒவ்வொரு தானியத்தோடும்
கொத்தி விழுங்குகிறது
உதிர்ந்து கொண்டிருக்கும் என் நினைவுகளை...

சிறகுகளை அடித்து
என் மனதின் இறுக்கங்களைத்
தளர்த்தி விடுகிறது

தூரத்துப் புள்ளியாக
மறையும் புள்ளினமே
எழுதிச் சென்றதைப் படித்துக் கொண்டிருப்பேன்
நீங்கள் மீண்டும் வரும்வரை...


சனி, 27 ஏப்ரல், 2024


உற்று உற்று மிக உற்றுக்
கேட்டபோது கேட்காதது
கேட்காத போது கேட்கிறது...

சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டேன்
பார்த்த போது தெரியாதது
தெரிகிறது பார்க்காத போது...

வெள்ளி, 26 ஏப்ரல், 2024


புன்னகையைக் கற்றுக் கொடுக்க
பூமிக்கு வரும் குழந்தைகள்
கண்ணீரைக் கற்றுக் கொடுத்துப்
பாவம் செய்யும் மனிதர்கள்...


வியாழன், 25 ஏப்ரல், 2024


குழந்தைகளுக்குப்
படிக்கத் தெரிந்திருக்கிறது
ஜன்னல் கண்ணாடியில்
மழைத்துளிகள் எழுதுவதை...

தலை எழுத்தைப் பற்றி
அவர்களிடம் பேசும் போது
கள்ளமாகச் சிரிக்கிறார்கள்

வாழ்க்கை
விளையாட்டு எனத் தெரிந்த
தீர்க்கதரிசிகள்...


புதன், 24 ஏப்ரல், 2024


கண்ணீர் மட்டுமே
தொட்டு
முத்தமிட்டு
ஆறுதல் சொல்கிறது

எல்லாத் துன்பங்களிலும்
உடனிருந்து
இதய வேர்களின் வழியே
மீண்டும் கண்களில்
புன்னகையாய் பூக்கிறது

கண்ணீரை
நான் எப்படி
வெறுக்க முடியும்
மறுக்க முடியும்...

கடல் நீர்
காய்ந்த பிறகு
நிலம்
வெள்ளந்தியாய் சிரிக்கும்
அதனால்தான் அதனால்தான்
நிலம்
கடல் தாங்கி நிற்கும்

என் கண்ணீர்
என் கடல்
அலையலையாய்
நினைவுகள்...


செவ்வாய், 23 ஏப்ரல், 2024


வீடில்லாச் சிறுவன்
ஏதோ ஒரு வீட்டின் வாயிற்கதவில்
வாசல் உள்ளும் வெளியுமாக
ஊஞ்சல் ஆடி
இல்லாத அவன் வீட்டில்
கனவில் விளையாடுகிறான்...


திங்கள், 22 ஏப்ரல், 2024


சிகரெட் பிடிப்பவனை
சிகரெட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறது
கொஞ்சம் கொஞ்சமாக...


ஞாயிறு, 21 ஏப்ரல், 2024


உன் கரங்களை சிறகாக்கிக் கொண்டாய்
என் கரங்களை சிறையாக்கிக் கொண்டேன்

பார்வைச் சிறைத் திறந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என் வானத்தை...

மனச் சிறை சுவர்களில்
வரைந்துக் கொண்டிருக்கிறேன்
நம் தூரத்தை...


சனி, 20 ஏப்ரல், 2024


தொடர்ந்து முயன்றால்
இமையமும்
இமையின் கீழ் வரும்...


வெள்ளி, 19 ஏப்ரல், 2024


ஒருவர் மட்டும்
தனித்து நிற்கும் கடற்கரை

துவக்கமா முடிவா
தெரியவில்லை

அங்கு
அலைகள் மட்டுமே இருக்கிறது
அவருடன்

அவர் மட்டுமே இருக்கிறார்
அலைகளுடன்

இறைவனின் சமாதானம்
இப்படித்தான் நடக்கிறது

மௌனம்
ஆதி பகவன் மொழி
கேட்கக் கேட்க
ஞானம் பிறக்கும்...


வியாழன், 18 ஏப்ரல், 2024


தமிழ்நாட்டில் முற்றிலும் முடிந்தது
அவன் தந்தையின் பயணம்
தமிழ்நாட்டில் முதலில் துவங்குகிறது
அவனின் அரியணைப் பயணம்
வெற்றிவாகைச் சூட வைப்போம்
இது நமக்கான தருணம்
கரணம் தப்பினால் மரணம்
விரல் கையில் சரியாய் சேரணும்...


புதன், 17 ஏப்ரல், 2024


29 நக்சலைட்டுகள்
சுட்டுக்கொல்லப்பட்டனர்
என்பது செய்தி

29 உயிர்கள்
சுட்டுக்கொல்லப்பட்டனர்
என்பது உண்மை


செவ்வாய், 16 ஏப்ரல், 2024


கொன்றவன் எப்படி
வென்றவன் ஆனான்
மந்திரி வேடத்தில்
நல்லவன் ஆனான்
கடன் வாங்கி கடன் வாங்கித்தான்
வெளிநாடு போனான்
வாங்கிய கடன்களெல்லாம்
அதானி அம்பானிக்குத் தானாம்
இது வேட்டிக்குள் ஓணான்
இனி வேணவே வேணாம்...


ஞாயிறு, 14 ஏப்ரல், 2024


பாமர மக்களின்
தோளோடு தோள் கோர்க்கும்
நட்பு மனம் தானே
இனி நாடாள வேண்டும்...






சனி, 13 ஏப்ரல், 2024


போதும் போதும்
மாட்டுக்கறி பிரிவினைவாதம்
நாட்டுக்கினி சகோதரத்துவம்தான் வேண்டும்...


வெள்ளி, 12 ஏப்ரல், 2024


நீரையும்
மண்ணையும்
காற்றையும்
விட்டுவிட்டு
ராமர் கோயிலை
புதிதாகக் கட்டும்
சிந்தனையாளர்கள்

ஏரிகளை
ஆறுகளை
அணைகளை
விட்டுவிட்டு
பட்டேல் சிலையை
வானளாவக் கட்டும்
தேசபக்தர்கள்

வறுமையை
பஞ்சத்தை
பட்டினியை
விட்டுவிட்டு
மதச் சிறுமையை
மனதில் ஏற்றும்
மானுட அறிஞர்கள்

சிறு
குறு
தெரு
வணிகர்களை
விட்டுவிட்டு
அம்பானி, அதானியை
வளர்த்தெடுக்கும்
அறநெறிப் பண்பாளர்கள்

இலைமறைக் காயாக
எதிர்மறையை நேர்மறையாக
மாற்றிச் சொல்வதெல்லாம்
மாறிவரும் பண்பை
மக்கள் மனம் சேர்க்க...

எதிர்த்துப் பேச வேண்டாம்
எதிர்த்துப் பார்த்தாலே
பாவிகள் எரித்து விடுவார்கள்
கோத்ரா
டெல்லியில் விவசாயிகளின்
யாத்ரா
எதையும் மறந்துவிடாதீர்கள்

பத்துத் தலை வேண்டாம்
ஒற்றை விரல் போதும்
துணிந்து
ஒரு கை பாருங்கள்...

அரை ஆடை
இல்லையென்றாலும்
ஆடம்பர ஆடை
இல்லாத இந்த
காந்தியின் கையுடன்
கை சேருங்கள்...

இந்தியா
இந்தியாவாகவே இருக்கட்டும்
இந்தியாக,
இந்துவாக
சுருங்கிடாமல்
இந்தியா
இந்தியாவாகவே இருக்கட்டும்...


புதன், 10 ஏப்ரல், 2024


பட்டாம்பூச்சியையே பார்த்துக்கொண்டு இருக்கிறாயே
வேறு வேலை இல்லையா என்றாள் தோழி
அவளுக்கு மட்டும்தான் அது பட்டாம்பூச்சி...

செவ்வாய், 9 ஏப்ரல், 2024


நடுநடுவே
நான் காணாமல் போவதாக
நீ சொல்கிறாய்

உன்னைப் பார்த்த
நாள் முதலே
நான் காணவில்லை

நடுநடுவே
எனைக் காணும்போது
என் கைகளைப் பற்றிக்கொள்
என் காதில் ஏதேனும் சொல்
அது போதும்
மறந்தும் என்னிடம்
என்னைத் தந்துவிடாதே

தொலைந்து போகட்டும் விடு
இல்லை
தொட்டுக்கொண்டே இரு...



ஞாயிறு, 7 ஏப்ரல், 2024


வெண் ஆடை தேவதை
நின்றாடும் பாவனையில்
பூங்காவில் பூத்திருக்கிறாள்
தூங்காமல் காத்திருக்கிறாள்

கண் ஜாடை காட்டுகிறாள்
மௌனராகம் பாடுகிறாள்
வில்லாக இதழ் மடித்து
மோக அம்பை ஏவுகிறாள்...


சனி, 6 ஏப்ரல், 2024


டீ மாஸ்டர்தான் அவர்
ரிங் மாஸ்டர் போல
கடை வாசல் நாயினை
கண்ட்ரோலில் வைத்திருப்பவர்

மீதம் போட மாட்டார்
போட்டு மீதம் சாப்பிடுவார்
நடு நடுவே பேசிடுவார்
அவ்வாறே தன்னையும்
இடை இடையே ஆற்றிடுவார்
சொந்தமாகவே பார்ப்பார்
ஊரில் தன் சொந்தங்களை
இவர் எப்படி விட்டு வந்தார்?
இடைவெளி எவ்வளவோ
அவ்வளவும் அன்பு...

கடையின் நிழலைப்
போர்த்திப் படுத்திருக்கும்
கடிகார மணிமுள்ளெனச் சுற்றி
கடை விளிம்பைத் தொட்டிருக்கும்
உச்சி வெயிலில் மணியடிக்கும்
நடுப் பகலை அறிவிக்கும்
அந்த வயதான ஆண் நாய்
தண்ணீரைத் தன்மேல் ஊற்றச்சொல்லி
வெயிலின் மீது நீர் சிலுப்பும்
மாயவித்தை தான்
கொஞ்சம் கொஞ்சமாய்
வெம்மை அடங்கும்,
இறை நிழல்
ஒட்டுமொத்தமாய் படரத் துவங்கும்...

எப்பேர்ப்பட்ட
இவ்விரு உயிர்கள் மத்தியில்
இப் பேறு பெற்று தினமும்
டீ குடிக்கிறேன்...

வெள்ளி, 5 ஏப்ரல், 2024


பகடைக்காய் மனது
சுழற்றி உருட்டி விளையாடு
எது வந்தாலும் பார் சிரிப்போடு...


வியாழன், 4 ஏப்ரல், 2024


இரவு தோறும்
கடவுளின் பிரார்த்தனை
மனிதருக்காக

புதிதாய்
ஒரு காலையை
கடவுள் சிருஷ்டிக்கிறார்

பழைய பகல்களை
பாவ மூட்டைகளாய்
மனிதர் தோளில் சுமக்கிறார்

பகலெல்லாம்
மனிதரின் பிரார்த்தனை
தனக்காகவே

நாளையும் கடவுள்
மனிதருக்காக பிரார்த்தித்து
ஒரு புதிய காலையைப் படைப்பார்

மனிதரும்
தனக்காக தனக்காக என்று
பாவ மூட்டையே சுமப்பார்

கடவுள் தனக்காக
பிரார்த்திக்கும் ஒரு நாளில்
மனிதர் உறங்க முடியாது
காலை விடியாது...


புதன், 3 ஏப்ரல், 2024


வலியை உற்று நோக்கினால்
உளி மறைந்து போகிறது
அழகிய சிற்பம் ஆகிறது...



செவ்வாய், 2 ஏப்ரல், 2024


துளியை
கர்ப்பக் குடம்
விழுங்கும்

கையளவு எடுத்து
கீழே விட
தரையில் தவழும்

நீர்
வளர வளர
விலகி ஓடும்

கடல்
காத்துக் கிடக்கும்
மீண்டும் துளியாக...



திங்கள், 1 ஏப்ரல், 2024


வானம்
கண்ணாடி ஆகும் போது
வாழ்க்கை அழகாகிறது...