கைகளால் துழாவி
காற்றில் வரைந்த உன்னை
இதயம் மட்டும் உணர்கிறது...
நம்பி வாழும் மிருகம்
இரை தேடும் மிருகம்
கோயில் இல்லா உலகம்
நம்ப மறுக்கும் மனிதன்
இறை தேடும் மனிதன்
இதயம் இல்லா உலகம்
தனக்காக வாழும் மிருகம்
தன்னலம் காக்கும் மிருகம்
இயற்கை வாழ்வு உலகம்
ஊருக்காக வாழும் மனிதன்
பொதுநலம் பேசும் மனிதன்
செயற்கை வாழ்வு உலகம்
நிகழ்காலத்தில் வாழும் மிருகம்
தவவாழ்க்கை வாழும் மிருகம்
அற வாழ்வு உலகம்
எதிர்காலத்தில் வாழும் மனிதன்
ஏமாற்றி வாழும் மனிதன்
அரக்க வாழ்வு உலகம்
மிருகம் எல்லாம் தேவர்களோ...
மனிதர் எல்லாம் அரக்கர்களோ...
கணிப்பொறியில் மாட்டிக் கொண்ட
எலி மனிதர்கள்
வலைவலையாய்ப் பின்னி
உலகையும் பொறியாய் மாற்றுகிறார்
மனிதரை மனிதரே
இரையாய் ஆக்குகிறார்
நிஜ அனுபவங்களை எல்லாம்
நிழல் ஆக்குகிறார்
குளிரூட்டியில் கூடி
இரத்த வெப்பம் ஆற்றுகிறார்
இறந்த சடலங்களைப் போல்
ஜீல்லென வாழுகிறார்
அப்பாவி மனிதரை எல்லாம்
கொல்லெனக் கொல்லுகிறார்
கணிப்பொறி அடிமைகளே
நிஜக் கனவினைக் காணுங்களே...
கவிஞன் கையில் கோடி கிடைத்தால்...
கோடானுகோடி வார்த்தைகளை போல
வாரி வாரி இறைத்து
விளையாடுவான்
சுமை என்று
தூக்கி எறிந்துவிட்டு போனவன்
திரும்பிவந்து இமைக்காமல் தேடுவான்
தப்புத் தப்பாக தாள் எண்ணி
சரியாக வேறு எதையோ
எண்ணிக் கொண்டிருப்பான்
கொடுத்துக் கொடுத்துப் பழகிய கையை
தயக்கம் இல்லாமல் ஏந்தி நிற்பான்
பிறர் கையென்று பிரித்துப் பார்க்கமாட்டான்
குழந்தைக்கு கொடுப்பான்
குரங்குக்கும் கொடுப்பான்
சாமிக்கு ஒருபோதும் கொடுக்கமாட்டான்
கனவுலோக கிரகவாசி
சகலம் இருந்தாலும் சன்யாசி
வெறுங்கை சுகவாசி
அந்தக் கவிஞன் கையில் கோடி கிடைத்தால்
பொதுவில் வைப்பான்
பூட்ட மாட்டான்...
அப்பாவின் நினைவு நாள்
எப்போதும் போலவே ஒருநாள்
கண்கள் குளம் ஆகும்
நினைவுகள் மீன்கள் ஆகும்
என்றெல்லாம் கிடையாது
அப்பாவின் நினைவு நாள்
எப்போதும் போலவே ஒருநாள்
இரு கைகளில்
ஆரத் தழுவியதும்
உடல்கள் மறைந்துவிடும்
பின்னர் எப்படி
கண்ணீர் பெருகிவரும்
இரு கரங்களுக்கு இடையில்
ஆரத்தழுவி ஆருயிராய் இருக்கிறார்
தந்தை மறைந்தார் என்பது
பிறர் காணும் உண்மை
பிள்ளைக்கு அது பொய்
பட்டம் விட நினைக்கையில்
பட்டப் பகலில் தூங்கையில்
பச்சைப் பொய் சொல்கையில்
இன்னும் என்னை முறைக்கிறார்
எளிமையைக் காண
அதில் நகைக்கிறார்
ஓயாமல் ஓயாமல்
என்னுள்ளே உழைக்கிறார்...
கூண்டுப் பறவைகளை எண்ணி
கண்ணீர் சிந்தும் வானம்
விதை தூவும் பறவை சொந்தங்கள்
நமக்கும் சேர்த்தே காட்டை உருவாக்கும்
திறந்து மூடும் கூண்டினுள்ளே
விதவிதமாய் தின்னக் கிடைக்கும்
பறக்க முடியாத கூண்டுப் பறவைக்கு
அது எப்படிச் செரிக்கும்?
கொஞ்சம் கொஞ்சமாய்
வளரும் சிறகின் ஆழத்தில்
பைத்திய வேர் துளிர்க்கும்
வானம் இல்லாமல் பறக்கும்
நகங்களினால் அலகினினால்
கூண்டை மட்டுமல்ல
நம் இரும்பு மனங்களையும்
கிழித்திடத் துடிக்கும்
தன் இறகுகளை பிய்த்து
கடிதங்கள் போடும்
கொண்டுபோகும் காற்றில்
ஈரம் கூடும்...
உருவமில்லா காற்றில் கூட
இதயம் இருக்கிறது
மனித உருவினுள்ளே
இதயம் அல்ல இரும்பே இருக்கிறது
தேனீக்கும் பட்டாம்பூச்சிக்கும்
பூவோடு இருக்கும் தொடர்பு
வழிபாடு
நதியிற்கும் குளத்திற்கும்
மழையோடு இருக்கும் தொடர்பு
வழிபாடு
காலுக்கும் வேருக்கும்
மண்ணோடு இருக்கும் தொடர்பு
வழிபாடு
முகிலுக்கும் மூங்கிலுக்கும்
காற்றோடு இருக்கும் தொடர்பு
வழிபாடு
நிலவுக்கும் ஒளியிற்கும்
வானோடு இருக்கும் தொடர்பு
வழிபாடு
காலத்திற்கும் அகாலத்திற்கும்
இறைவனோடு இருக்கும் தொடர்பு
வழிபாடு
உழைப்பவருக்கும் உண்ணுபவற்கும்
இயற்கையோடு இருக்கும் தொடர்பு
வழிபாடு
பொங்கலோ பொங்கல்
உலக உயிர்கள் அனைத்திற்கும்
அந்த சூரிய அடுப்பு
கருணைக் கதிர் வீசட்டும்
பொங்கலோ பொங்கல்
உலக உயிர்கள் அனைத்திற்கும்
பானை அட்சயப் பாத்திரம்
எப்போதும் பொங்கட்டும்...
குழந்தை மொழியில் பேசும் போது
ஆண்ட்டி அங்க்கிள்களுக்கு
வயது குறைகிறது...
இங்க வாயேன்
அங்க போயேன்
நாம விளையாடலாமா என்று
அவர்களோடு நம்மை சேர்த்துக் கொள்கிறார்கள்
குழந்தை மொழியில் பேசும் போது
ஆண்ட்டியாக அங்க்கிளாக
குழந்தைகள் ஒருபோதும் பார்ப்பதில்லை
பேசும் ஒவ்வொரு தொனிக்கும்
ஒரு உருவம் இருக்கிறது
அதில் வயதும் தெரிகிறது...
என்னைத் தேர்ந்தெடுத்து
எவனோ
எவளோ
எழுதுகிறார்...
முதலில் படிக்கும்
வாய்ப்பு எனக்கு
அவ்வளவுதான்
சில பிடிக்கும்
சில பிடிக்காது
பல பிடிக்கும் பிடிக்காது
ஒரு வரியில் சொல்ல
'வாழ்க்கை போல இருக்கிறது'
என்னைத் தேர்ந்தெடுத்து
எவனோ
எவளோ
எழுதுகிறார்...
கடவுள் கூட
எவனோ
எவளோ
நான் பார்த்ததில்லை
அன்னையும்
தந்தையும்
தவிர
அவனோ
அவளோ
எனக்குப் பெரிது இல்லை
யாராக இருந்தாலும்
சொல்லிவிட்டு போவதில்லை...
அந்த அளவிற்கு தான்
பழக்கம்
பழகாத
தனிமை மட்டும்
கூடவே வருகிறது
நானும்
சொல்லாமல் போகும்வரை
எவனோ
எவளோ
எழுதிவிட்டுப் போகட்டுமே...
கதவை தட்டாமலே நிற்கிறேன்
யார் திறப்பார்களோ?
உனக்கு உள்ளே
எனக்கு வெளியே
வெகு நேரமாக...
கதவைத் தட்டாமலே நிற்கிறேன்
இரவின் கதவை பகலும்
பகலின் கதவை இரவும்
மாறி மாறித்
தட்டித் திறந்து கொண்டிருக்க...
நான் மட்டும்
கதவைத் தட்டாமலே நிற்கிறேன்
தட்டாமல் திறந்த நினைவுகளில்
கதவை தட்டாமலே நிற்கிறேன்
யார் திறப்பார்களோ?