வியாழன், 30 செப்டம்பர், 2021

 


என்னோடு நான் நடந்து
எத்தனை நாட்கள் ஆகிறது
இன்றேனும் போய் வரலாமென்றால்
மழையும் கூட வருகிறது...


புதன், 29 செப்டம்பர், 2021

 


பூவாகி
காயாகி
கனியாகி
நாவில் சுவையாகி
துப்பும் ஓர் கொட்டை
மீண்டும்
ஓர் நாவல் மரமாகும்
எச்சில் பகிரும் பருகும் உலகில்
மனிதன் மட்டும்
பிரிவினைவாதி...


செவ்வாய், 28 செப்டம்பர், 2021

 


தித்திக்கும் போது
கசப்பு காணாமல் போகிறது
கசக்கும் போது
தித்திப்பு கண்முன் வருகிறது
சந்தோஷம் எப்போதும் கூடவே இருக்கிறது
கசக்கும் வாழ்வில் தித்திப்பு போல...


திங்கள், 27 செப்டம்பர், 2021

ஃபிரான்சிஸ் கிருபா

 


நீ இருக்கும் போது
ஏந்த விட்டவர்கள் தான்
நினைவேந்தல் செய்கிறார்கள்

இப்போது
நினைவில் இருக்கிறான்
இல்லாமல் ஆன பின்பு...

எண்ணிவிடக்கூடிய
நட்சத்திரம் தான் கவிஞன்
அதில் மின்னிய எவையும்
உன் இருளை பகிர்ந்து கொள்ளவேயில்லை

இருளும்
உன்னை பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை
கடைசிவரை வெளிச்சத்திற்கு
விட்டுத்தரவுமில்லை
இருள் உனை விழுங்கியது
இரவு மட்டும்தான் உறவாக இருந்ததால்
நீயும் உன்னை இரவுக்கு
உயில் எழுதிக் கொடுத்துவிட்டாய்
இப்படித்தான் உனக்கான வெளிச்சத்தை
பிறருக்கு விட்டுக் கொடுத்தாய்

இப்போது நீ இருள்
ஒர் பொழுது
காலமாகிவிட்டாய்...

மினுக்க மினுக்க
இரவை மறித்து இமைகள்
முத்தம் தரும்போதெல்லாம்
ஜொலிக்க ஜொலிக்க ஒரு விடியலைப்பிடித்து
விழிகளுக்குத் தருகிறது
இந்த இருள்

உன் நினைவேந்தும்
இந்தப் பாவிகளை
இரட்சிப்பாய் 
மேலாக ரசிப்பாய்
இதைத்தானே
உன் வாழ்நாள் முழுவதும் செய்தாய்...


 


மதி என்னுடையது
விதி இறைவனுடையது
இரண்டும் இப்போது வியாபரியுடையது
இதயம் மீட்கப் போராடுகிறது
அது மூவருக்கும் சொந்தமானது


ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

 


ஆம்புலன்ஸ்காக
யாரும் வழிவிடவில்லை
தான் ஆம்புலன்சில் போகக்கூடாது
என்பதற்காகவே
இந்த வழிவிடல்...

ஒரு நதி
நீள வாக்கில்
இரண்டாகப் பிளந்து
ஒரு சிட்டெறும்புக்கு
வழி விடுவது போல்
காட்சி வந்து வந்து மறைகிறது...

விதி வழியில்
ஓடிக்கொண்டிருக்கிறது
பெரும் வாகன நதி...
ஒழுங்கு போல் தெரியும்
ஒழுங்கின்மை


 


பிழைக்க ஓடிக்கொண்டிருக்கும்
வாகனங்களுக்கு மத்தியில் புகுந்து
ஓலமிட்டு ஓடுகிறது ஆம்புலன்ஸ்


சனி, 25 செப்டம்பர், 2021

 

எது பிடிக்கும்?
எதுவுமே பிடிக்காது என்கிறாய்
திரும்பப் பார்க்கும் போது கேட்கிறேன்
எது பிடிக்காது?
எல்லாமே பிடிக்கும் என்கிறாய்
இரவும் பகலுமாய் இப்படியே
நிஜமும் நிழலும் பேசிக்கொள்ள
பிடித்தும் பிடிக்காமலும்
நாட்கள் நகர்கிறது...

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

 


முதல் கடைசி
மேலே கீழே
கறுப்பு வெள்ளை
எதுவுமே இல்லை
இந்த மணித் துளியில்...

இந்த மணித் துளியில்
அமர்ந்திருக்கும் பறக்கும்
பறவைகள்...

கைநிறைய கொடுத்தாலும்
ஒவ்வொரு மணித் துளியாய்
அழகாய் அலகால்
முத்தமிட்டு விழுங்கும்...

இந்த மணித் துளி
சாத்தியமானால்
சிறகுகள் முளைக்கும்...


வியாழன், 23 செப்டம்பர், 2021

 


அன்புடன் என்று புத்தகத்தில்
உன் பெயரை எழுதித் தந்தாய்
அன்றிலிருந்து ஒரு பட்டாம்பூச்சி
தினமும் வருகிறது...


புதன், 22 செப்டம்பர், 2021

 


கல்லாகிப் போன
மனதிற்குக் கூட
நிதம் தையல்கள் தேவைப்படுகிறது...


செவ்வாய், 21 செப்டம்பர், 2021

 


ஓவியத்தில்
வண்ணம் தீட்டாத வெற்றிடம்
கொக்கு

என்னிடத்தில் நீ
ஆனால்
எங்குமே வண்ணம் இல்லை...


திங்கள், 20 செப்டம்பர், 2021

 


கனவுப் பட்டாம்பூச்சிகள்
சிறகசைப்பதே இல்லை
நீ பூக்காத விழிகளில்...

மனதில் படபடப்பு
சிறகில் தவம்
விழியில் தேடல்
வழியில் வருகிறாயா நீ...
உன்னோடு தான் என் வார்த்தைகள்
உன்னைத் தொடுகிறதா...
இப்படியே என்னைக்
கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்
எங்கிருக்கிறாய் நீ
எஞ்சி நிற்கிறேன் நான்...

கனவுப் பட்டாம்பூச்சிகள்
சிறகசைக்காமலே இன்னும்
நீ பூக்காத விழிகளில்...


ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

 


மூக்குத்திப் பூவுடன்
முப்பொழுதும் கனவுடன்
மூடாத இமையுடன்
அன்பே உன் நினைவுடன்
அகல் விளக்கு ஒளியுடன்
அமர்ந்திருப்பேன் நிழலுடன்...


சனி, 18 செப்டம்பர், 2021

 


ஒரு இரவு தூங்கி எழுந்ததும்
நான் குழந்தையாக இல்லை
ஒரு இரவு தூங்கி எழுந்ததும்
நான் குழந்தையாக இருக்கிறேன்
கனவில் சாத்தியமாவது
நிஜத்தில் ஆகுமா...

நிஜம் வேறு
கனவு வேறு
எனும் நினைப்பும் வேறு...


வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ஃப்ரான்சிஸ் கிருபா

 


மனதின் சுவர்களை
ஊடுருவிப் பார்க்கிறவன்
மரணக் குழியில்
தெரியாமல் விழுந்ததெப்படி?

மரணம் உன்னை அணைத்து இருக்காது
நீதான் அதனை
கட்டித் தழுவி இருப்பாய்
எட்டி இருப்பவரை
கிட்ட இழுக்கும் உன்
கவிதைகளில் ஒன்றை
காலனின் காதுகளில்
நீ சொல்லி இருப்பாய்...

ஃப்ரான்சிஸ் கிருபாவின் கவிதை:

"சிலிர்க்க சிலிர்க்க
அலைகளை மறித்து
முத்தம் தரும்போதெல்லாம்
துடிக்க துடிக்க ஒரு மீனைப்பிடித்து
அப்பறவைக்கு தருகிறது
இக்கடல்"


வியாழன், 16 செப்டம்பர், 2021

 


குழந்தைகள் எட்டிப் பார்க்கும் உலகம்
எனக்கு எவ்வளவு எட்டியும்
தெரியவில்லை...


புதன், 15 செப்டம்பர், 2021

 


யாரோ ஒரு குழந்தை
என்ற சொல் நரகம்
யாரோ ஒரு கடவுள்
எப்படி இருக்க முடியும்...


செவ்வாய், 14 செப்டம்பர், 2021

 


குழந்தையின் சேட்டைகள்
இறைவனின் வரங்கள்

வரங்கள் வேண்டாம் என
சில நிற்கும்
பல நடக்கும்
எல்லாமே சிலைகள்
இது இறைவனின் சேட்டைகள்...


திங்கள், 13 செப்டம்பர், 2021

 


குழந்தையோடு பழகினால்
மிருகம் கூட
சிரிக்கக் கற்றுக்கொள்ளும்...

ஓட்டைப் பல்வெளியில்
பூக்கும் புன்னகை
வானப் புல்வெளியில் மின்னல்...


ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

 


கடவுள் வரைந்த
வளைவு நெளிவுகளில்
ஓவியன் பயணிக்கிறான்

சில வளைவுகளில்
மாய நெளிவுகளில்
சிக்கித் தவிக்கிறான்

வரை கோடுகளில்
சிறை செய்கிறான்
தனக்கும் எனக்கும்

ஆயுள்தண்டனை
வரமாய் கிடைக்குமா...
ஓவியத்தில் ஓவியமாய்
இருந்து கொள்கிறேன்


சனி, 11 செப்டம்பர், 2021

 


நிழல் நதியிலும்
நிஜம் வானிலும்
காற்றோடு பயணம்
காதல்...

நிஜம் பறந்ததும்
நிழல் மூழ்கியது
கண்ணீரில் பயணம்
காதல்...

குழந்தை விளையாட்டு
கடவுள விளையாட்டு
காகிதக் கப்பல்
காதல்...


வெள்ளி, 10 செப்டம்பர், 2021

 


நதியைத் தொட்டதும் முத்தம் கொடுப்பது
என் விரல்களா?
என் விரல்கள் பிடித்து முத்தமிடுவது
நதியின் குளிர்ந்த இதழ்களா?
இல்லை இல்லை என்று
இடையில் வந்து பாய்கிறாள்
ஒரு தேவதை...


வியாழன், 9 செப்டம்பர், 2021

 


இரைக்காக பாயும்போது
கண்களில் வந்து போகிறது
தாயின் முலைக்காம்புகள்...

இறைக்காக வேண்டும் போதும்
கண்களில் வந்து போகிறது
தாயின் முலைக்காம்புகள்...

எல்லா உயிர்களுக்கும் முதற் கடவுள்
சிறு தும்பிக்கையாய் நம்பிக்கையாய்
தாயின் முலைக்காம்புகள்!


புதன், 8 செப்டம்பர், 2021

 


சவங்கள்
எப்பொழுதும்
மாலைகள் அணிந்து இருப்பதில்லை...

மாலை
அணிந்து இருப்பதெல்லாம்
சவங்கள் இல்லை...

மாலைக்கு
ஒருபோதும் பேதம் இல்லை
யாருக்கும் மணம் வீசும்...

தெருவில் பிய்த்து எறியப்பட்ட
இந்த மலர் மாலைகள் யாருக்காகவோ
தெருவெல்லாம் மணம் தேடி அலைகிறது...

இரத்தம் இல்லாத
அதன் சதைகளை இதழ்களை
மிதித்துக் கடந்துச் செல்கிறோம்...

இருந்தும் மலர்கள் எல்லாம்
நமக்கு மாலையாகிட
மலர்ந்து கொண்டே இருக்கிறது...


செவ்வாய், 7 செப்டம்பர், 2021

 


யாரெல்லாம் வருவார்கள்
எதையெல்லாம் தருவார்கள்
காரிருள் தருவில்
பூக்கவிருக்கும் கனவில்....

யாருமே வரவில்லை
எதையுமே பெறவில்லை
கனவு உதிர்கிறது
அதிகாலைப் பனியில்...


திங்கள், 6 செப்டம்பர், 2021

 


பகலை அணைத்திருப்பேன்
இரவெல்லாம் அதையே நினைத்திருப்பேன்
வெகுதூரம் போனதனால்
வெள்ளைப் பகல் நீயெனக்கு...


ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

 


லாபம்
கள்ளமில்லா உள்ளங்களுக்கு
எப்படிச் சாத்தியம்...
தன் லாபம் பார்க்காமல்
வானம் போனவன் தான்
ஜனநாதன்


 


வகுப்பில் தூங்கியவருக்கும்
பாடம் நடக்கிறது
கனவுக் கரும் பலகையில்...

கவனம் சிதறாமல் கவனிக்கிறேன்
மனப்பாடம் செய்யாமல் ஒப்பிக்கிறேன்
எழுதி வைக்காமல் நினைவில் வைக்கிறேன்

ஆசிரியர் சாக்பீஸ் எடுத்து எறிந்து
பீஸ் இல்லா கனவைக் கலைந்து
எனை உருப்படாத பீஸ் என்கிறார்

பின் இருக்கை மாணவன் நான்
முன் இரு கை கட்டுவதில்லை
கனவுப் பாடங்கள் அப்படிப் பழக்கவில்லை

வகுப்பில் இருந்து துரத்தியவருக்கும்
பாடம் நடக்கிறது
சில மரத்தடியில்...

மரமெல்லாம் ஆசான்கள்
கனவெல்லாம் பாடங்கள்
மனதெல்லாம் கோலங்கள்
ஆசிரியர் தின நியாபகங்கள்....


சனி, 4 செப்டம்பர், 2021

 


மீன் சுவையானது
கிடைக்கும் வரை மனதிற்கு
பிடிக்கும் வரை கண்களுக்கு
வறுக்கும் வரை நாசிக்கு
விழுங்கும் வரை நாவிற்கு
எப்போதும் பசிக்கு
வலை வீசும் வாழ்க்கை
அலை எங்கள் நம்பிக்கை
மீன் சுவையானது
ஓடும் உதிரத்தில் உயிரானது...



வெள்ளி, 3 செப்டம்பர், 2021

 


ஒன்பது வினாடிகளில் ஓடியவன்
வென்றவன் என்றால்
ஒன்பது நாட்களாய் ஊர்ந்து வரும்
அவன் யார்?
அடுத்து எட்டு வினாடிகளில் ஓடிட
பயிற்சி எடுப்பவர்களைப் பார்த்து
எப்படி அவன் சலனமில்லாமல்
ரசித்து ரசித்து
தன் வழியில் போகிறான்...
உலகமே கைத்தட்டினாலும்
சகலமும் கைக்கெட்டினாலும்
சலனமே இல்லாதவன்
தன் சங்கைத் தானே ஊதாதவன்
போதிக் கூட்டுக்குள்
நத்தை புத்தன்


வியாழன், 2 செப்டம்பர், 2021

 


கூடு விட்டுக் கூடு பாயும்
வித்தை அறிந்த குழந்தைகள்
பொறுமை காத்து
விளையாட்டைப் பார்த்து
வெற்றி கொள்ளும் கூடுகள்...
கூடு அறியும் உன்னை
நீதான் தேடி அலைகிறாய்...


புதன், 1 செப்டம்பர், 2021

 


தன்னைப் பெரியவனாய்
குழந்தையை உணரச் செய்த
அந்தப் பூனை குழந்தையின் குழந்தை...