என்னோடு நான் நடந்து
எத்தனை நாட்கள் ஆகிறது
இன்றேனும் போய் வரலாமென்றால்
மழையும் கூட வருகிறது...
நீ இருக்கும் போது
ஏந்த விட்டவர்கள் தான்
நினைவேந்தல் செய்கிறார்கள்
இப்போது
நினைவில் இருக்கிறான்
இல்லாமல் ஆன பின்பு...
எண்ணிவிடக்கூடிய
நட்சத்திரம் தான் கவிஞன்
அதில் மின்னிய எவையும்
உன் இருளை பகிர்ந்து கொள்ளவேயில்லை
இருளும்
உன்னை பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை
கடைசிவரை வெளிச்சத்திற்கு
விட்டுத்தரவுமில்லை
இருள் உனை விழுங்கியது
இரவு மட்டும்தான் உறவாக இருந்ததால்
நீயும் உன்னை இரவுக்கு
உயில் எழுதிக் கொடுத்துவிட்டாய்
இப்படித்தான் உனக்கான வெளிச்சத்தை
பிறருக்கு விட்டுக் கொடுத்தாய்
இப்போது நீ இருள்
ஒர் பொழுது
காலமாகிவிட்டாய்...
மினுக்க மினுக்க
இரவை மறித்து இமைகள்
முத்தம் தரும்போதெல்லாம்
ஜொலிக்க ஜொலிக்க ஒரு விடியலைப்பிடித்து
விழிகளுக்குத் தருகிறது
இந்த இருள்
உன் நினைவேந்தும்
இந்தப் பாவிகளை
இரட்சிப்பாய்
மேலாக ரசிப்பாய்
இதைத்தானே
உன் வாழ்நாள் முழுவதும் செய்தாய்...
கனவுப் பட்டாம்பூச்சிகள்
சிறகசைப்பதே இல்லை
நீ பூக்காத விழிகளில்...
மனதில் படபடப்பு
சிறகில் தவம்
விழியில் தேடல்
வழியில் வருகிறாயா நீ...
உன்னோடு தான் என் வார்த்தைகள்
உன்னைத் தொடுகிறதா...
இப்படியே என்னைக்
கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்
எங்கிருக்கிறாய் நீ
எஞ்சி நிற்கிறேன் நான்...
கனவுப் பட்டாம்பூச்சிகள்
சிறகசைக்காமலே இன்னும்
நீ பூக்காத விழிகளில்...
மனதின் சுவர்களை
ஊடுருவிப் பார்க்கிறவன்
மரணக் குழியில்
தெரியாமல் விழுந்ததெப்படி?
மரணம் உன்னை அணைத்து இருக்காது
நீதான் அதனை
கட்டித் தழுவி இருப்பாய்
எட்டி இருப்பவரை
கிட்ட இழுக்கும் உன்
கவிதைகளில் ஒன்றை
காலனின் காதுகளில்
நீ சொல்லி இருப்பாய்...
ஃப்ரான்சிஸ் கிருபாவின் கவிதை:
"சிலிர்க்க சிலிர்க்க
அலைகளை மறித்து
முத்தம் தரும்போதெல்லாம்
துடிக்க துடிக்க ஒரு மீனைப்பிடித்து
அப்பறவைக்கு தருகிறது
இக்கடல்"
சவங்கள்
எப்பொழுதும்
மாலைகள் அணிந்து இருப்பதில்லை...
மாலை
அணிந்து இருப்பதெல்லாம்
சவங்கள் இல்லை...
மாலைக்கு
ஒருபோதும் பேதம் இல்லை
யாருக்கும் மணம் வீசும்...
தெருவில் பிய்த்து எறியப்பட்ட
இந்த மலர் மாலைகள் யாருக்காகவோ
தெருவெல்லாம் மணம் தேடி அலைகிறது...
இரத்தம் இல்லாத
அதன் சதைகளை இதழ்களை
மிதித்துக் கடந்துச் செல்கிறோம்...
இருந்தும் மலர்கள் எல்லாம்
நமக்கு மாலையாகிட
மலர்ந்து கொண்டே இருக்கிறது...
வகுப்பில் தூங்கியவருக்கும்
பாடம் நடக்கிறது
கனவுக் கரும் பலகையில்...
கவனம் சிதறாமல் கவனிக்கிறேன்
மனப்பாடம் செய்யாமல் ஒப்பிக்கிறேன்
எழுதி வைக்காமல் நினைவில் வைக்கிறேன்
ஆசிரியர் சாக்பீஸ் எடுத்து எறிந்து
பீஸ் இல்லா கனவைக் கலைந்து
எனை உருப்படாத பீஸ் என்கிறார்
பின் இருக்கை மாணவன் நான்
முன் இரு கை கட்டுவதில்லை
கனவுப் பாடங்கள் அப்படிப் பழக்கவில்லை
வகுப்பில் இருந்து துரத்தியவருக்கும்
பாடம் நடக்கிறது
சில மரத்தடியில்...
மரமெல்லாம் ஆசான்கள்
கனவெல்லாம் பாடங்கள்
மனதெல்லாம் கோலங்கள்
ஆசிரியர் தின நியாபகங்கள்....
ஒன்பது வினாடிகளில் ஓடியவன்
வென்றவன் என்றால்
ஒன்பது நாட்களாய் ஊர்ந்து வரும்
அவன் யார்?
அடுத்து எட்டு வினாடிகளில் ஓடிட
பயிற்சி எடுப்பவர்களைப் பார்த்து
எப்படி அவன் சலனமில்லாமல்
ரசித்து ரசித்து
தன் வழியில் போகிறான்...
உலகமே கைத்தட்டினாலும்
சகலமும் கைக்கெட்டினாலும்
சலனமே இல்லாதவன்
தன் சங்கைத் தானே ஊதாதவன்
போதிக் கூட்டுக்குள்
நத்தை புத்தன்