குழந்தைகளிடம்
எல்லாமும் விளையாடும்
கதவின் திரைச்சீலை கூட...
ஒரு சைக்கிள்
ஒருவருக்கு மட்டும்
காலம் மாறி
ஒரு பைக்
நண்பர்கள் பலருக்கு எனும்
சோசியலிச விதை
துளிர்விட்ட வசந்த காலம்...
யார் சொன்னதையும் கேட்காதவர்கள்
நண்பர்கள் சொல்லக் கேட்டுக்கொள்வோம்
விளையாட்டில் இருந்து
விளையாட்டிற்கு
இடம் பெயர்ந்தோம்
என்பதே அறியாத காலம்
அதுவரை விளையாடியது
பயிற்சி ஆட்டம் தான்
வாழ்வில் ஆட்டம் காணும் போது தெரிகிறது
எது எப்படியோ
சோசியலிச விதையில்
நண்பா(தல) உன் பங்கு இருக்கிறது
கம்யூனிஸ்ட்
கட்சிக் கொடி மட்டும்தான்
சிவப்பாக உள்ளது
விசிறி வைத்த
வெள்ளைக் கொடியை
மாற்றி வைத்தாலும்
ஆச்சரியமில்லை
கால மாற்றத்தில்
இன்றும் கட்சிக்காரர்கள்
லாபத்தைப் பார்க்கிறார்கள் தான்
கார்ல் மார்க்ஸ்
லாபத்தைப் பார்த்தது போலில்லை...
அம்பானி அதானியெல்லாம்
ஆட்டங் கண்டிருப்பார்
அந்த ஜீவாவிற்கேனும்
இன்று ஜீவனிருந்திருந்தால்
ஜீ மட்டுமல்லவா இருக்கிறார்
அவர்கள் ஆட்டம் ஆடுவதற்கு
தாளம் போட்டுக்கொண்டு...
உடலைக் காதலிக்காதவன்
அதைத் தாண்டி
எதைக் காதலிப்பான்
கஞ்சா இழுப்பவன்
மெத்தக் குடிப்பவன்
அபினிடம் ஐக்கியமானவன்
சிகரெட்டில் சிக்கியவன்
உடல் தீங்கில்லாமல்
உயிர் வாழ்ந்தால் சரி
உடல் கெட்டு
தன்னில் உறவு கெட்டு
தாகம் என்றால்
தண்ணீர் கேட்கும்
உணர்வு கெட்டுப்
-போகும் முன்னர்
போய் வா
ஒரு பயணம்
உடலை மீட்டு...
உடல் தாண்டி
உலகம் மாயை
நீ உயிரென்னும்
போதை சாயை
பண போதை
மனம் கெடுக்கும்
பான போதை
உடல் கெடுக்கும்
பக்குவமாய் எடுத்துக்கொள்
தேவைக்கு
அளவுக்கு மேலே
ஆசை கொண்டால்
ஆகாயம் மேலே
காத்திருக்கிறது...
மெத்தப் படித்தவராக
அழகாக அறிவாக
நல்ல வேலையில் இருப்பவராக
அதிகம் சம்பாதிப்பவராக
வெற்றி கொண்டவராக
சாதனையாளராக
இருக்கத் தேவையில்லை
'அம்மாவிற்குப் பிள்ளையாக'
அவ்வளவுதான்
அவள் எதிர்பார்ப்பு...
ஒரு சின்ன அதட்டல்
அவ்வளவுதான்
ஆனால் அத்தனையும் பேரன்பு
மிரளாமல் என்ன செய்வேன்...
உலகத்தின் மையம்
இதுவென்றும்
அதுவென்றும்
சொல்வார்கள் சொல்லட்டும்
எல்லோருக்கும்
ஒரே மையம்
அம்மா...
கடவுளே ஆனாலும்
கர்ப்பக்கிரகம் தான்
சன்னிதி
ஞானம் பெரிதல்ல
அம்மாவிற்கு
நான் தான்...
உலகக் கடவுளாக
இருப்பதில்லை அம்மாக்கள்
நமக்கு மட்டும் தான்...
ஊருக்காக வானம்
எனக்காக அம்மா
எப்பொழுதும் விழித்திருக்கும்...
எனக்கு நோய்நொடி என்றால்
அம்மாவிற்கு
ஒரு நொடி கூட இல்லை...
கடவுள்
கடுமையாகச் சிந்தித்து தான்
உயிரை
அவளுக்குள் வைத்தான்
சிக்ஸ் பேக்
அழகு
உன் ஒன் பேக்
பேரழகு...
வானம்
அவள் விரல்களில் புள்ளியாகிறது
மனதில்
மா கோலம் வரைகிறாள்
வானம் புள்ளிகளாகும் தருணங்களில்
திருவிழாவில் தொலைந்துபோன
குழந்தை ஆகிறேன்
விரல் தேடி அலைகிறேன்
அவள் விரல்களில்
என் கன்னத்தை கிள்ளுகிறாள்
இந்தப் புள்ளியை வானமாக்குகிறாள்
வானத்தைப் புள்ளி ஆக்குகிறாள்
புள்ளியை வானம் ஆக்குகிறாள்
ஜகஜாலக்காரி...