வியாழன், 31 டிசம்பர், 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (49)

 


பிடித்ததைச்  செய்யும் போது
கரங்கள் சிறகாகிறது
வானம் உறவாகிறது...

புதன், 30 டிசம்பர், 2020

 


மண்ணின் மைந்தன்
மண்புழுக்களின் நண்பன்
விவசாயக் காதலன்
பச்சைத் துண்டு பைந்தமிழன்

விதைகளை நேசித்தான்
பயிர்கள் வளர்ந்துவர பூரித்தான்
அதன் உடனிருந்தே சுவாசித்தான்
இயற்கை கடவுளையே பூசித்தான்

செயற்கை உரங்களைத் தவிர்த்தான்
பூச்சுக் கொல்லிகளை எதிர்த்தான்
என்னத்தான் செய்தாலும்
எண்ணமெலாம் பசுமையை நிறைத்தான்

உலகெல்லாம் சுற்றி வந்தான்
உழவெல்லாம் கற்றுத் தேர்ந்தான்
ஊருக்கெல்லாம் சொல்லித் தந்தான்
உயிர் நீங்கும்வரை சொல்லில் நின்றான்

விவசாயம் என்பது வாழ்வியல்
விவசாயி என்பவன் வியாபாரியல்ல
இலாபம் பார்ப்பவன் விவசாயியல்ல
இயற்கை நேசன் விவசாயி

என்ற கோட்பாட்டை நிறுவியவர்
விவசாய மும் மசோதா
எனும் சிந்தைக்கு வழியின்றி
வாழ்நாளில் சிங்கமாய் உறுமியவர்

வேம்புக்கு காப்புரிமை மீட்டுக்கொடுத்தவர்
இன்று மட்டும் இருந்திருந்தால்
வீம்புக்கு உரிமைகள் பறிக்கும்
வீணர்கள் விழித் திறந்திருப்பார்

விவசாயத்தில் மசானபு ஃபுகோகா
சித்தாந்தத்தில் கார்ல் மார்க்ஸ்
போராட்டத்தில் கரம்சந்த் காந்தி
மூன்றும் சேர்ந்தவர் நம்மாழ்வார்


செவ்வாய், 29 டிசம்பர், 2020

 


பார்த்துப் பார்த்துக்
கண்ணில் புதைத்தாய்
பார்க்காமல் இப்போது
நினைவில் புதைக்கிறாய்

பேசிப் பேசி
வார்த்தைகளில் அணைத்தாய்
பேசாமல் இப்போது
மௌனத்தில் அணைக்கிறாய்

தொட்டுத் தொட்டு
வளர்பிறை ஆக்கினாய்
தொடாமல் இப்போது
தேய்பிறை ஆக்குகிறாய்

பழகிப் பழகிப்
பைத்தியம் ஆக்கினாய்
விலகி இப்போது
வைத்தியம் பார்க்கிறாயா?

திங்கள், 28 டிசம்பர், 2020

 


நாடகம் முடிந்ததும்
ஒப்பனை கலைத்து விடுகிறேன்
அந்த நொடியிலே
மறு நாடகத்தை துவக்கி விடுகிறேன்
ஒப்பனைக்கு நாடகமா
நாடகத்திற்கு ஒப்பனையா
ஒப்பேதும் இல்லாத
புது நாடகம் என நினைப்பேன்
ஒப்பிட்டுப் புரிந்து கொள்வேன்
புதிய நாடகமே இல்லையென்று
முதலும் நாடகமா
முடிவும் நாடகமா
எப்போது புரிந்து கொள்வேன்...

என் ஒப்பனை
நான் பார்க்க இயலாத நாளை
கற்பனை செய்கிறேன்
முடிவும் கற்பனையோ
முதலும் கற்பனையோ

பிறர் அறிய இயலாத
இறுதிக் கற்பனையில்
கர்வம் தெரிவதில்லை
உயிராக இருக்கும் மட்டில்
அது எப்போதும் மறைவதில்லை

ஒப்பனை மறுப்பது
அரிதாரம் ஏற்ப்பது
ஒப்பனை நாத்திகம்
அரிதாரம் ஆத்திகம்
ஒப்பனை நான்
அரிதாரம் நான் அற்றது
வாழ்நாள் ஒப்பனை
இறுதிநாள் அரிதாரம்
யாவும் அலங்கோலம் ஆனபின்
நாடகமா... கற்பனையா...

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (48)

 


முழுவதுமாகத் தந்துவிட்டப் பிறகுதான்
தெரிந்து கொண்டேன்
இதயம் மீண்டும் மீண்டும் முளைக்குமென்று...

சனி, 26 டிசம்பர், 2020

 


சேரியில் வாழ
ஊரில் இல்லை
தலைவன்

சேற்றினிலும்
எந்தத் தாமரையும்
புதிதாய் பூப்பதில்லை

ஏட்டினிலே கூட
நாட்டின் துயர்
கதையாவதில்லை

ஆண்டுகள்
பல ஆகியும்
நாற்காலியில் நல்லவரில்லை...

சேரிகளில் தலைவர்கள் வாழட்டும்
புது அரசியல் சிந்தனை தழைக்கட்டும்
ரேஷன் மேம்படும்
தீ விபத்துகள் பயப்படும்
சாக்கடைகள் பயன்பெறும்
கல்வி, சாலைகள் நடை பெறும்

ராணுவத்தில் கட்டாயம்
ஒரு குடும்ப உறுப்பினர்

நூறுநாள் நூறு துறையில்
கட்டாயம் கடைநிலை வேலை
அரசியல்வாதிகளுக்கு அனுபவம் தேவை

நாட்டின்
கடைசி குடிசை
கடைசி உறக்கம்
கடைசி பசி
கடைசி ஊதியம்
கடைசி பேருந்து இருக்கை
முதல் விழிப்பு
முதல் திரையரங்கு இருக்கை
முதல் தடுப்பூசி
பொதுக் கழிப்பிடம்
பொதுக் குளிப்பிடம்
பொதுக் கல்லறை
அரசுப் பள்ளிக்கூடம்
அரசு மருத்துவமனை
அரசு போக்குவரத்து
அரசு மதுபானம்
கார்ப்பரேஷன் குடிநீர்
அடிபம்பில் பிறநீர்
தலைவர்களுடையது ஆகட்டும்

தியாகிகளை உருவாக்க
சட்டம் வேண்டும்
அரசு ஊழியர்கள் அதில்
முதல் பயனுற வேண்டும்

இனி வரும் காலம் 

பெரும்பான்மையினரது அரசாகட்டும்

இதை இனிது உவப்பவரே

நம்மை ஆளட்டும்...

வெள்ளி, 25 டிசம்பர், 2020

 


கார்ப்பரேட்
ஒரு மோசடி
சித்தாந்தம்

சிலந்தி வல்லரசுகளின்
சூழ்ச்சி வலைக் கட்டுமானம்
உயிரோடு கொல்லும எந்திரம்

விவசாய நிலங்களுக்கும்
விவசாயி மனங்களுக்கும்
விஷமூட்டும் விஷமம்

நம் ஆழ்வாரை
ஏற்காத ஆளும் கூட்டம்
நாளும் நம்பவைத்து ஏமாற்றும்
ஆசை வார்த்தைகளாய்த் திட்டம்

கல்வியில்
மருத்துவத்தில்
வாழ்விடத்தில்
இப்போது களம் இறங்கிவிட்டது
விவசாயத்தில்...

வருமானம் ஈட்டும்
வியாபாரக் கூட்டம்
வாழ்க்கைக்கு வழியை
எப்படிக் காட்டும்...

காந்தியைப்
பாரதியை
வினோபாவாவை
நம்மாழ்வாரை
எட்ட வைத்தே
அழகு பார்க்கும்
அவர்கள் வழியை எடுத்துரைத்தால்
பயித்தியமாய்ப் பார்க்கும்...

எந்தத் திட்டம் வந்தாலும்
சுயலாபம் மட்டுமே பார்க்கும்
பாவம் மட்டும் பார்க்காது
முடிந்தவரை சுரண்டும்
இந்த அநியாயம் எப்படி
வார்த்தைகளில் அடங்கும்...

என்றே
வந்த வார்த்தைகளை அடக்கினேன்
என் சோற்றுக்காக...

சோற்றுக்கான
இந்த சோசியலிசம்
தோற்றுத்தான் போகுது
இந்த கார்ப்பரேட்டிடம்...

வியாழன், 24 டிசம்பர், 2020

 


இயேசு பிறந்த நாளினை
கொண்டாடப் போவதில்லை
பல குழந்தைகளை
பலி வாங்கிய நாளும் அதுவே
ஆடு மேய்த்தவனுக்கு மட்டுமில்லை
மாடு மேய்த்தவனுக்கும்
பலி பிடிக்கும்
எல்லாக் கடவுளுக்குமே பிடிக்கும்
உருவம் இல்லாத கடவுளுக்கும்
உருவம் சிதைப்பது பிடிக்கும்
கடவுளாக மாறத் துடிக்கும்
மனிதர்களுக்கும் மிகப் பிடிக்கும்
மனிதனைக் கொன்றுதான்
தன்னைக் காத்துக் கொள்ளுமோ
கடவுள்...
மனிதரும் மனிதரைக் கொல்லுகிறார்
ராணுவம் எனப் பெயர் கொள்ளுகிறார்
எல்லைகள் பலப்பல வரைந்து கொண்டு
ஆணவம் கொண்டு ஆடுகின்றார்
உணவு உடை உறைவிடம்
அடிப்படைத் தேவைகள் இல்லாதோரிடம்
அதிகாரம் அநியாயம் செய்திடுவார்
சுடுகாடு போகும்வரை சுரண்டிடுவார்
புனித நூல்களைக் கையில் ஏந்திக்கொண்டு
கணித மனம் வளர்த்தே வாழுகின்றார்
கடவுளின் பிறப்பினைக் கொண்டாடுவார்
உழவனின் உரிமையை கழுவேற்றுவார்
சிலுவையேந்தி இருகோடி பேர் வீதியில்...
எந்தக் கடவுளின் பிறப்பையும்
இனி கொண்டாடப் போவதில்லை
மனிதன் காணும் கடவுள் வேறு
கடவுள் காணும் மனிதன் வேறு
மனிதனும் காணோம் கடவுளும் காணோம்
தேடுவோம் கிடைத்தால் கொண்டாடுவோம்


புதன், 23 டிசம்பர், 2020

 


மலர்ந்து விரியும் மலரென்று
கை ரேகைகள்
பட்டாம்பூச்சியை ஏமாற்றியதைப் போல
என்னையும் ஏமாற்றியது 

செவ்வாய், 22 டிசம்பர், 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (47)

 


செழிப்பும் வறுமையும்
இருவேறு துன்பம்
மறந்த நிலைதான் இன்பம் 

திங்கள், 21 டிசம்பர், 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (46)

 


ஆசையே துன்பத்திற்கு காரணம்
ஆசைக்கு காரணம் கடவுள்
கடவுளுக்கு காரணம் மனிதன்...

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

 


விபத்தான முத்தத்தில்
இன்ப வலி தாங்கமுடியாதது
இரவு தனித்திருந்தும்
இயல்பாகத் தூங்க விடாதது

எதிர்பார்க்கும் முத்தங்கள்
இதழ் எல்லைக்குள் முடிந்துவிடும்

எல்லையற்றது ஏங்க வைப்பது
எதிர்பாரா முத்தம்
இதழ்கள் பிரிந்த பின்னும்
முடிவதில்லை அந்த யுத்தம்...

சனி, 19 டிசம்பர், 2020

 


வீழ்ந்தாலும் எழும்
மழைத்துளி போல்
இந்த மனம் மாறக்கூடாதா...

கனம் தோறும்
வீசும் குளிர் காற்றில்
இதய எரிமலை ஆறாதா...

இந்த மூங்கில்
உள் நுழைந்து
இசை ஆடை பூணாதா...

மௌனக் கடிதம்
எழுதி வைத்தேன்
உன் விரல் திறவாதா...

விடியல் வந்து
எழுப்பும் இரவு
பகலில் பாயை விரிக்காதா...

தூக்கம் இழந்து
திரியும் எனக்கு
தூங்க மடியாய் மாறாதா...

வெள்ளி, 18 டிசம்பர், 2020

வியாழன், 17 டிசம்பர், 2020

 


தொடர்ந்து வாய்ப்பும்
தொடர்ந்து ஏமாற்றமும்
சாபம்
சலிப்பு மட்டுமே மீதம்

இரண்டும் கெட்டு
நிற்பதுதான்
வரம்
ஏங்கித் தவிப்பது சுகம்...

புதன், 16 டிசம்பர், 2020

 


நடுநிசி
தனிமையில்
கட்டி அணைத்தது யார்
விளக்கேற்றிப் பார்க்கிறேன்
விலகிச் செல்கிறது இருள்
மீண்டும் தனிமை...

செவ்வாய், 15 டிசம்பர், 2020

 


மனம்
இடம் மாறினால்
நிறம் மாறும்
நீர் போல...

போகும் இடம்
பாதையாகும்
நீர் போல...

சுட்டெரித்தால்
ஆவி ஆகும்
நீர் போல...

குளிர்ந்து விட்டால்
உறைந்து விடும்
நீர் போல...

கண்டதையும் சேர்ந்துவிட்டால்
சாக்கடை தான்
நீர் போல...

கலங்கினாலும்
தெளிந்து விடும்
நீர் போல...

உடல் பாத்திரத்தில்
ஊற்றி வைத்த
நீர் போல...

உடல் போனபின்னும்
உலகில் நிற்கும்
நீர் போல...

இறைக்கடல் சேரும்வரை
அலைந்து திரியும்
நீர் போல...

உள்ளதை மறைக்காமல்
தெளிவான நீர் போல...
உலகெலாம் சுதந்திரமாய்
சுற்றித் திரி
நீர் போல...
மனமே!

திங்கள், 14 டிசம்பர், 2020

 


நிரம்பி வழியும்
உன் நினைவுகள் தான்
என் நீல வானமாகும்
மனம் நீந்தினாலும் மூழ்கும்
ஆழம் போக ஆழம் போக
இருள் வந்துச் சூழும்
மேகச் சிப்பி மெல்லத் திறவ
முத்து நிலா தோன்றும்
சுற்றி விண்மீன்களாக நீந்தும்...

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

 


ஆயிரம் கரங்களால்
ஆரத்தழுவி
அகிலம் சுற்றி வரும்
ரயில் பூச்சி
பூமியின் புறக்கணிப்போ
வானத்தின் வலுக்கட்டாயமோ
தலைகீழாய் கவிழ்ந்து தவிக்கிறது
கடந்து போகும் காற்று
கரம் கொடுக்க மறுக்கிறது
வானும் மண்ணும்
சலனமின்றி இருக்கிறது...

சனி, 12 டிசம்பர், 2020

 


காற்றில் இலைகள் பட்டாம்பூச்சி
கிளையில் பட்டாம்பூச்சி இலைகள்
அலைகள் சிறகுகள் கடலும் பட்டாம்பூச்சி
கடற்கரையில் கரங்கள் சிறகுகள் பட்டாம்பூச்சி
கண்கள் இமையசைக்க பட்டாம்பூச்சி
இமை மூட உள்ளுக்குள் பட்டாம்பூச்சி
தேவதையாய் ஒரு பட்டாம்பூச்சி
வண்ண வண்ண பட்டாம்பூச்சி
வந்துகொண்டே இருக்கிறது பட்டாம்பூச்சி...

வெள்ளி, 11 டிசம்பர், 2020

 



கண் மூட
என் வானம்
திறக்கிறது

நிலவொன்று
வெகு நாளாய்
வர மறுக்கிறது

வழியில்லை
விழி உன்னை
வரைகிறது

திறவாத
கண் ஏனோ
வலிக்கிறது

அதை உணர்கின்ற
உள் வானம்
அழுகிறது

வரைந்த ஓவியத்தை
சில துளிகள்
அழிக்கிறது

வான் விட்டு
சில துளிகள்
விழுகிறது

என் துளிகள்
விரட்டி அதைப்
பிடிக்கிறது

வெளி வானில்
ஒரு வெண்ணிலவு
சிரிக்கிறது...

வியாழன், 10 டிசம்பர், 2020

 



மொட்டு
இதழ் குவித்துக் காத்திருக்க
வானம் வண்டாக மாறி வருகிறது

கரை
இதழ் குவித்துக் காத்திருக்க
கடல் அலையாக மாறி வருகிறது

மண்
இதழ் குவித்துக் காத்திருக்க
மேகம் மழையாக மாறி வருகிறது

கண்
இதழ் குவித்துக் காத்திருக்க
நினைவு கண்ணீராக மாறி வருகிறது

இரவு
இதழ் குவித்துக் காத்திருக்க
பகல் ஒளியாக மாறி வருகிறது

கற்பனை
இதழ் குவித்துக் காத்திருக்க
வார்த்தைகள் கவியாக மாறி வருகிறது

குழந்தை
இதழ் குவித்துக் காத்திருக்க
பாற்கடல் முலையாக மாறி வருகிறது

மூங்கில்
இதழ் குவித்துக் காத்திருக்க
காற்று இசையாக மாறி வருகிறது

நாகம்
இதழ் குவித்துக் காத்திருக்க
எலி இரையாக மாறி வருகிறது

நான்
இதழ் குவித்துக் காத்திருக்க
நீ எதுவாக மாறி வருகிறாய்...

புதன், 9 டிசம்பர், 2020

 


முக வரிகள் ஏதுமில்லை
தலை கால்கள் புரியவில்லை
எனக்கானக் கடிதம் ஒன்றை
ஒற்றைக் கொலுசோடு
இரு பாதங்கள் கொண்டுவந்தது
என் மன வாசல் திறக்கின்றது
பாதம் படி தாண்டி நுழைகின்றது
நொடி தான் உடன் மறைகின்றது
இதயம் இரு வேகம் எடுக்கின்றது
தொடர முடியாமல் துடிக்கின்றது
ஒற்றைக் கொலுசோசை கேட்கின்றது
இதயம் உள் நீ விட்டுச் சென்றது
கடிதம் அதுவாகப் படிக்கின்றது
ஜல் ஜல் ஐல்...

செவ்வாய், 8 டிசம்பர், 2020

 


மழையில் ஒன்றாக சேர்ந்திருப்போம்
நினைவு நூலிழையில் குடை விரிப்போம்
மழைத் துளிகள் சிதறாமல் சேர்த்துவைப்போம் 
குளிரில் கன்னங்கள் உரசிக் கொள்வோம்
மின்னல் இடியோசை எழுகின்றது...
வெம்மை மேலேறி மழை நின்றது 

திங்கள், 7 டிசம்பர், 2020

 


அருகில் உள்ளதை விட்டுவிட்டு
தொலைவில் ஏதோ தேடும் கண்கள்
காட்சி ஒன்று
தேர்வுகள் இரண்டு
இதுவா அதுவா வாழ்க்கை
இரண்டும் கூட இல்லை
எதுவா இருக்கும் என்றே
எவரிடமும் பதில் இல்லை
பொதுவாய் ஒரு வாழ்க்கை
அதில் அர்த்தமொன்றும் இல்லை
விலகிப் போனால் துறவு
விடுவதில்லை உறவு
கல் ஆனாலும் கடவுள்
மனிதன் ஆனாலும் கல்
மனக் கண் மறைந்து
கண்கள் மட்டும் கண்டால்
காட்சி யாவும் ஒன்று
தேர்வு மறையும் அன்று 

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

 


இரவை வரைய வேண்டும்
அதில் ஒளியும் இருக்க வேண்டும்
ஓவியனின் சங்கடமோ
அவன் பகல் பொழுதில்
படர்ந்திருந்த இருள்...

அழகு ஓவியங்கள் பின்னால்
அலங்கோலமாய் ஓவியன்
இருளுக்கு ஒளி கொடுத்து
இருளிலேயே கிடக்கிறான்

இருந்தும்
அசிங்கமான இந்த சமூகத்தை
அழகு படுத்தவே நினைக்கிறான்...


சனி, 5 டிசம்பர், 2020

 


நுரைதள்ளியும் நிற்கவில்லை
நீலக் கடல் ஓயவில்லை
கரைதன்னில் யாருமில்லை
என்றாலும் கவலையில்லை...

இரவானால் கருங்கடல் தான்
பகல் வேஷம் பூண்டவன் நான்
என்னுள்ளே எண்ணற்ற இரகசியங்கள்
சங்குள்ளே கேட்கும் அந்த ஸ்வரங்கள்...

வெள்ளி, 4 டிசம்பர், 2020

 


காற்றில்
என்ன வண்ணங்கள் உள்ளது
பறவைகள்
சிறகில் தொட்டுத் தொட்டு வரைகிறது...

வானவில்லை
வரைந்த சிறகுகள் எங்கே
அழித்த சிறகுகள் எங்கே

பிடித்த வண்ணங்களை
எடுத்துப் பூசிக்கொண்டதோ...
கிளிக்கு பச்சை
குயிலுக்கு கருப்பு
கொக்கிற்கு வெள்ளை

எனக்கொரு வண்ணம்
தேடிப் பார்க்கிறேன்
காற்றினில் விரல்களைத்
துலவிப் பார்க்கிறேன் 

வியாழன், 3 டிசம்பர், 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (44)

 


வாழ்க்கை பொய் சொல்வதில்லை
பிரிந்த பாதச்சுவடுகள் வாழ்வதில்லை
மெய்யென்றிருப்பது இரு சுவடுகளே...


புதன், 2 டிசம்பர், 2020

பெயரில்லாப் பெருவாழ்வு (43)

 


அன்பெல்லாம் வரமாகும்
பிரிவெல்லாம் சாபமாகும்
இடையில் நிற்பதுவே தவமாகும்...

செவ்வாய், 1 டிசம்பர், 2020

 


நம்பிக்கை இழந்த இராசாளி  கூட
காற்றிடம் சரணடைந்த
ஒற்றைச் சிறகு தான்

காலத்தின் கைகள் விசித்திரமானது
ஒன்றைக் கொடுத்து
ஒன்றை எடுத்துக் கொள்கிறது

ஒற்றைச் சிறகொன்று
காலின் கீழே
ஏதோ எழுதியது...

உயரப் பறக்கும் பறவை
அதன் சிறகால்
சித்திரம் வரைகிறது...

படித்துப் பார்த்தேன்
விளங்கவில்லை
எனினும் கண்ணீர் பெருகியது

காற்றுதான் அசைக்கிறது
யாவுமிங்கு தூசாகவே பறக்கிறது
காற்றை யாரோ இயக்குவது
திசைகள் அடிக்கடி மாற்றுவது...

காற்றில்லாத நிலா
சாட்சியாய் இருக்கிறது
மூச்சை நிறுத்தி முயலுகிறேன்
நிலவைச் சேரத் தாவுகிறேன்

காற்றுக்கென்ன பைத்தியமா
கடைசியில் கைப்பற்றி இழுக்கிறது
மீண்டும் நம்பிக்கை பிறக்கிறது...