சனி, 31 ஆகஸ்ட், 2024


பல்வேறு சிறகிருந்தும்
பறக்க முடியாத
தென்னை மரத்தடியின்
நிழலில் கண்மூடி
தென்னை மரத்தைப்
பறக்க வைத்தேன்...

தென்னை நிழல்
நின் மடியானது
இளம் தென்றல்
உன் நினைவானது...



வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024


நீரை உறிஞ்சும் நிலமும்
நீரை உறிஞ்சும் வானமும்
இரு உதடுகள்...

பிரபஞ்சம் மொத்தமும்
ஒரு முத்தம் தான்
உன்னிடம் அறிந்தேன்...


வியாழன், 29 ஆகஸ்ட், 2024


அள்ள அள்ள
தீராமல் கிடைக்கிறது
மாய நீரோடையில் தாகம்...

முற்றும் நனைந்த பின்னும்
கிடந்து எரிகிறது
நெஞ்சில் தணியாத மோகம்...


புதன், 28 ஆகஸ்ட், 2024


ஓவியன்
எத்தனைக் கிறுக்கினாலும்
ஓவியம் தான்

காதலர்கள்
எவ்வளவு விலகினாலும்
காதலர்கள் தான்


செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024


அடுத்த நொடி
நான் இல்லாமல் போவது
காதல்

அடுத்த நொடி
நீ இல்லாமல் போவது
சாதல்

அடுத்த நொடி
நாம் இல்லாமல் போவது
கூடல்


திங்கள், 26 ஆகஸ்ட், 2024


திரும்பாத பொழுது
திரும்பாத தருணம்
திரும்பாத பருவம்
திரும்பாத உறவு
திரும்பாத உயிர்
திரும்பாத நீ...

திரும்பாத இடம்
போகும் வரை
திரும்பத் திரும்ப
நினைக்கும் நான்...


ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024


தாய்க் கொடியை
பற்றி வளரும்
சேய்க் கொடி

சேய்க் கொடியை
பற்றி இருக்கும்
தாய்க் கொடி

பற்று மீது
பற்று வைத்து
பருவங்கள் பல தாண்டும்

ஏதோவொரு இளந்தென்றல்
சேய்க் கொடியின்
மனதைக் களவாடும்

தனிப் பாதைத் தேடும்
இளங் கொடி
புதிய உறவாடும்

இளந்தளிர்கள் துளிரும்
வண்ண வண்ண
பூக்கள் மலரும்

தாய்க் கொடி
மண்ணில் படர்ந்து உரமாகும்
தாய்
மரித்தும் உயிர் தரும் உறவாகும்...


சனி, 24 ஆகஸ்ட், 2024


பல்கலைக்கழகத்தின் வழியாக
தினமும் போகிறது
சில பறவைகள்

அடிக்கடி
வகுப்பறையில் வந்து அமரும்
ஆனால் பாடம் படிக்காது

பறவைகளுக்குத் தெரிந்து இருக்கிறது
வகுப்புப் பாடங்களைப் படித்தால்
பறக்க முடியாதென்று...



வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024


வீட்டுச் சுவற்றில்
நீலம் பூத்து
பூவொன்றுத் தொங்கியது
சுண்ணாம்பு நிறத்தில் பகலொன்று
அதன் பின்னால்
இத்தனை நாட்கள்
ஒளிந்து இருந்திருக்கிறது

வீட்டுச் சுவற்றுக்கு
வண்ணம் அடிக்க வந்தவர்
தனது கனவை பூவாகவும்
லட்சியத்தைப் பகலாகவும்
வரைந்து பார்த்திருக்கலாம்

அந்தக் கலைஞனிடம்
அன்று பேரம் பேசி
குறைத்துக் கொடுத்தக் கூலி
நெஞ்சில் கனக்கிறது...


வியாழன், 22 ஆகஸ்ட், 2024


உனக்குப் பூப்பரித்துத் தருவதைவிட
பூப்பரிக்க உதவுவது
எனக்கு ரொம்பவும் பிடிக்கும்...

உன்னை நான்
தூக்கிப் பிடித்திருக்கும் போது
என்னில் நீ பூத்ததாய்
ஓர் உணர்வு...


புதன், 21 ஆகஸ்ட், 2024

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024


நாளை நாளை என்று
நாளும் நாளைக் கடக்கிறேன்
இன்று...

நேற்று
பின்னால் இல்லை
முன்னாள் உட்கார்ந்து இருக்கிறது

நேற்றிருந்தாள்
நாளையும் இருப்பாள்
இன்றில் இல்லாதவள்...


திங்கள், 19 ஆகஸ்ட், 2024


ஆயுள் முழுவதும்
பலூன் விற்றவருக்கு
லேசான வாழ்வில்லை...

கடவுள் ஊதிய
பலூன்களாகவே
அவர் அனைவரையும் காண்கிறார்...

பூமியையும், சூரியனையும் கூட
அவர் அவ்வாறே
தன் கனவில்  பார்க்கிறார்...

பலூன் வெடித்து
அழும் சிறுவர்களை
அவர் சலனமில்லாமலே காண்கிறார்...


ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024


கணவன் சொன்னான்
அவளுக்குப் பிடித்ததெல்லாமும்
எனக்கும் பிடிக்கும்

அவளுக்குப் பேய் பிடிக்கும்
எனக்கும் பேய் பிடிக்கும்
பிறகென்ன பேய் வீடுதான்...

சனி, 17 ஆகஸ்ட், 2024


மூச்சைப் படிக்கக் கற்றுக்கொண்டால்
காற்று எழுதத் தொடங்கும்
காதல் கடிதம்...


வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

"தங்கலான்"


படம் சொல்லும் கருத்தை புரியாதது போல் மிளிரல், புரிந்தது போல் உளறல்...
படம் பார்த்துவிட்டு மற்றும் பார்க்காமல்...
தன் ஜாதியை உயர்த்திப் பிடித்து,
பிறர் ஜாதியை தரம் குறைத்து...
என்று ஏகமாக விமர்சனங்கள் வந்தவாரே உள்ளன.

மண்ணும் மக்களாகிய நாமும் மாசடைந்திருப்பதை இந்த போக்குகள் வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது.
ஆம் படம் சரியாகத் தன் தாக்கத்தை உண்டாக்கி வருகிறது என்பதை இதன் வழி உணர முடிகிறது.

அன்று பொன் பொருளுக்காக,
இன்று மென் பொருளுக்காக...
அன்றும் கூலி,
இன்றும் கூலி...
இன்னும்
அரசன் அயலான்,
அடிமை தங்கலான்...

"பிறந்த மண் உயிர்களைக் காக்க வேண்டும்.
உயிர்கள் பிறந்த மண்ணைப் பொன்னாகப் போற்றிக் காத்துக் கொண்டாடிட வேண்டும்.
பிறந்த மண்ணில் உயிர்கள் அனைத்தும் கூடி வாழ வேண்டும், பகிர்ந்து வாழ வேண்டும்.
பேதங்களைத் தவிர்த்திட வேண்டும்.
வறியவர், செல்வந்தர் அனைவருக்கும் நல்ல கல்வி வேண்டும்.
அந்தக் கல்வி உலகைச் செதுக்க வேண்டாம், உள்ளம் செதுக்க வேண்டும்.
நல்ல கல்வி சுயசார்பு வாழ்வைத் தர வேண்டும்.
அன்னியரை சார்ந்து வாழாமல் இருந்திட வேண்டும்.
மண்ணும், உயிர்களும் சுரண்டப் படாமல் இருந்திட வேண்டும்.
மாசற்ற ஆதி மனதை, அந்தப் புனித வெளியைத் திரும்பப் பெற வேண்டும்..."

என்று திரை மொழியில் சொன்ன தங்கலான் திரைப்படக் குழுவிற்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.
சமூகப் பொறுப்போடு உள்ள வெகு சில திரைப்படக் குழுக்களிள் பா.ரஞ்சித்தின் குழு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது மிக்க மகிழ்ச்சி.

ஒன்று சொல்வேன், அதை உரக்கச் சொல்வேன் "அம்பேத்கரும், புத்தமும் இங்கு நம் அனைவருக்குமாகவே தேவையுள்ளது".


தங்கலான்


அன்று பொன் பொருளுக்காக,
இன்று மென் பொருளுக்காக...
அன்றும் கூலி,
இன்றும் கூலி...
இன்னும்
அரசன் அயலான்,
அடிமை தங்கலான்...


வியாழன், 15 ஆகஸ்ட், 2024


குழந்தாய்
மேலும் கீழும்
உன்னைத் தூக்கி விளையாடும்
இந்தத் தாத்தாவின் முதுகு
வெறும் தட்டை முதுகு கிடையாது
தட்டான் முதுகு
அதன் கண்ணாடிச் சிறகுகள்
கற்பனை வானத்தில்
மேலும் கீழும்
உன்னைத் தூக்கிப் பறப்பதை
நீ மட்டுமே அறிவாய்...

உனக்குத் தெரியுமா?
ஒரு பெருங் கவிஞனை
நீ அசைத்து அசைத்து
கவிதை எழுதுகிறாய்...


புதன், 14 ஆகஸ்ட், 2024


முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக சித்தரிப்பவர்களுக்கு
ஒருபோதும் தெரிந்திருக்காது
தங்களுக்கு மனதில் தீவிரவியாதி என்று...


செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024


தூண்டிலில் சிக்கியதும்
நீந்தும் மீனைப் போல
கடைசியாக கொஞ்சம் வாழ்ந்து கொள்கிறேன்...

அழகு இல்லையெனினும்
இந்த முத்தத்தின் ஆழத்தை
என்றேனும் அறிவாய்

ஆர்ப்பரிப்பு இல்லையெனினும்
இந்த அணைப்பின் அழுத்தத்தை
ஒர்நாளில் உணர்வாய்

தூண்டிலில் சிக்கியதும்
நீந்தும் மீனைப் போல
கடைசியாக கொஞ்சம் வாழ்ந்து கொள்கிறேன்...



திங்கள், 12 ஆகஸ்ட், 2024


வந்துபோகும்
மூச்சுக்காற்று
வாழ்வின் ஒத்திகை

ஒன்றிரண்டு நொடிகள்
வெளியில் நின்று பார்ப்பது
மரண ஒத்திகை


ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

பாடல் 8


ஒளி எங்கே பிறந்தது
இருள்தானே கருவறை
இறு பொருமை காத்திடு
உன் இருமை வென்றிடு
இனி நாளை மட்டுமில்லை
நாளெல்லாம் உன் நாளே
உனக்கு மட்டும் இல்லை
விடியல் உலகிற்கே உன்னாலே...

காற்றின் சம்மதம்
நான் கேட்டதில்லையே
என்னுள் பூட்டும் வேளையும்
என் உயிரைக் கூட்டுதே...

ஏதும் செய்யா திரியை
எரிய செய்த போதும்
என்னைச் சுற்றி ஏனோ
ஒளியை நல்குதே

நானும் அதுபோல் மாற
என்னும் வேளையில்
சுயநலம் என்னைச் சுற்றி
சூறையாடுதே!

என்னுள் ஏதோ ஒன்றை
நான் தேடும் வேளையில்
என்னைத் தொலைந்து நின்றேன்
இந்த வேள்வியில்...

துன்பம் இன்பம் இனியில்லை
இரவும் பகலும் இல்லை
எல்லாம் ஒன்றாயான தன்மை
இது சித்தர் சொன்ன உண்மை

அமைதி தொடருதே
தன்னலம் மாறுதே
பறவைகள் ஆன பின்னே
வானில் தடைகள் ல்லையே!


சனி, 10 ஆகஸ்ட், 2024


உண்ணத் தெரியாதவர்களுக்கு
ஒன்றும் தெரியாது
கழிவறை மனிதர்களுக்கு மட்டும்தான்

வீணாகிப் போன
இந்த மனிதர்களுக்கு
விதவிதமாகக் கழிவறைகள்

மனிதரோடு சேர்ந்து வாழும்
மிச்சம் உண்டு வாழும்
சமூகப் பிராணிகளின்
எச்சம் பாழகிக் கொண்டிருக்கிறது

எந்தக் காட்டிலும்
கழிவறை இல்லை
துர்நாற்றமும் இல்லை...


வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024


ஒரு பூ
பூக்கும் போது
ஒரு நிழலும் பூத்தது...

ஒரு பூ
உதிரும் போது
ஒரு நிழலும் உதிர்ந்தது...


வியாழன், 8 ஆகஸ்ட், 2024


சக நாயுடன்
சண்டை போட்ட நாயும்
சக மனிதனோடு
சண்டை போட்ட மனிதனும்
ஒருவரை ஒருவர்
தழுவிக் கொண்டனர்...


புதன், 7 ஆகஸ்ட், 2024

வினேஷ் போகத்


தோல்வியும் வெற்றியும்
விளையாட்டில் உடன்பிறப்புகள்
சகோதரத்துவம் உணர்ந்தவள் நீ

யாருக்கு என்ன குரோதம்
புறக்கணிப்பு உனக்கிழைத்த துரோகம்
என்ன செய்தாலும் பறிக்க முடியாதது
உந்தன் மல்யுத்த வீரம்

உன் திறமை என்பதோ இமையம்
நீ இடம் பிடித்ததோ
உலகத்தவர் இதயம்...

திறமையை எடை போடத் தெரியாதவர்கள்
100 கிராம் எடையில் மடை மாற்றுகிறார்கள்
மடையர்கள், பதக்கத் திருடர்கள்...


செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024


ஒரு வரியில்
எழுத முடியாத
அற்புதங்களில் ஒன்று
குழந்தை

எந்த வஸ்த்துவும் இல்லாமல்
குழந்தையாய் மாற்றும்
குழந்தை

குதூகலம் குழந்தை
நட்சத்திரம் குழந்தை
நீ இப்போது
நட்சத்திரத்தை ஏந்தி நிற்கும்
வானம்...



திங்கள், 5 ஆகஸ்ட், 2024


என்னைப் பார்த்து வளர்த்த மரங்கள்
வளர்ந்து வெகுநாள் கழித்து
திரும்பச் சென்று காண்கையிலே
நிழலால் என்னை அணைத்து
தென்றல் முத்தம் தருகின்றன

எத்தனை எத்தனை மாற்றங்கள்
இவ்வுலகில் நிகழ்ந்தும்
இன்னும் மாறாமல் இருக்கின்றன
பல உயிர்கள் வாழ
வாடகை இல்லாமல் இடம் அளிக்கின்றன

ணிலாய், பறவையாய் மாறி
உன்னில் நான் தங்கி
வாழத் தோன்றுகிறது
என் அன்பு மரங்களே...


ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024


உடைந்து
உருகி
நகரும்
மனது...

சிரிக்கும் மேகங்கள்
எங்கோ நின்று அழுதிருக்கும்

அழும் மேகங்கள்
நேற்றுவரை சிரித்திருக்கும்

சிரித்து
அழுது
நகரும்
மேகம்...


சனி, 3 ஆகஸ்ட், 2024


ஒருவரை ஒருவர்
வணங்கும்போது
கடவுள் கண்களுக்குத் தெரிகிறார்...

இப்போது
இங்கே
நீங்கள் வணங்கும்
இந்தத் தருணத்தில்
இப்படித்தான் அடிக்கடி
ஆத்திகன் ஆகிறேன்...


வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024


என்னை நான் மறந்து
ஒரு கிளையில் அமர்ந்திருந்தேன்
ஒரு பறவையாக

என்னை நான் அடைந்து
அந்தக் கிளையைப் பார்த்திருந்தேன்
பறவை ஆக...


வியாழன், 1 ஆகஸ்ட், 2024


பூமியை
நேசித்து வாழ
முயலுக்குத் தெரிந்திருக்கிறது

முயலை
கூண்டிலடைத்து வாழ
மனிதருக்குத் தெரிந்திருக்கிறது

வானை
நேசித்து வாழ
பறவைக்குத் தெரிந்திருக்கிறது

பறவையை
கூண்டிலடைத்து வாழ
மனிதருக்குத் தெரிந்திருக்கிறது

தன்னைத்தானே
கூண்டிலடைத்து வாழவும்
மனிதருக்குத் தெரிந்திருக்கிறது

பூமியை, வானை
கூண்டிலிருந்து தான்
தானும் பார்த்து வாழ்கிறான்

பாவம் மனிதன்
நேசம் கொள்வதாய்
மகிழ்ச்சி கொள்வதாய்
நடித்து வாழ்கிறான்...