பல்வேறு சிறகிருந்தும்
பறக்க முடியாத
தென்னை மரத்தடியின்
நிழலில் கண்மூடி
தென்னை மரத்தைப்
பறக்க வைத்தேன்...
தென்னை நிழல்
நின் மடியானது
இளம் தென்றல்
உன் நினைவானது...
தாய்க் கொடியை
பற்றி வளரும்
சேய்க் கொடி
சேய்க் கொடியை
பற்றி இருக்கும்
தாய்க் கொடி
பற்று மீது
பற்று வைத்து
பருவங்கள் பல தாண்டும்
ஏதோவொரு இளந்தென்றல்
சேய்க் கொடியின்
மனதைக் களவாடும்
தனிப் பாதைத் தேடும்
இளங் கொடி
புதிய உறவாடும்
இளந்தளிர்கள் துளிரும்
வண்ண வண்ண
பூக்கள் மலரும்
தாய்க் கொடி
மண்ணில் படர்ந்து உரமாகும்
தாய்
மரித்தும் உயிர் தரும் உறவாகும்...
வீட்டுச் சுவற்றில்
நீலம் பூத்து
பூவொன்றுத் தொங்கியது
சுண்ணாம்பு நிறத்தில் பகலொன்று
அதன் பின்னால்
இத்தனை நாட்கள்
ஒளிந்து இருந்திருக்கிறது
வீட்டுச் சுவற்றுக்கு
வண்ணம் அடிக்க வந்தவர்
தனது கனவை பூவாகவும்
லட்சியத்தைப் பகலாகவும்
வரைந்து பார்த்திருக்கலாம்
அந்தக் கலைஞனிடம்
அன்று பேரம் பேசி
குறைத்துக் கொடுத்தக் கூலி
நெஞ்சில் கனக்கிறது...
படம் சொல்லும் கருத்தை புரியாதது போல் மிளிரல், புரிந்தது போல் உளறல்...
படம் பார்த்துவிட்டு மற்றும் பார்க்காமல்...
தன் ஜாதியை உயர்த்திப் பிடித்து,
பிறர் ஜாதியை தரம் குறைத்து...
என்று ஏகமாக விமர்சனங்கள் வந்தவாரே உள்ளன.
மண்ணும் மக்களாகிய நாமும் மாசடைந்திருப்பதை இந்த போக்குகள் வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது.
ஆம் படம் சரியாகத் தன் தாக்கத்தை உண்டாக்கி வருகிறது என்பதை இதன் வழி உணர முடிகிறது.
அன்று பொன் பொருளுக்காக,
இன்று மென் பொருளுக்காக...
அன்றும் கூலி,
இன்றும் கூலி...
இன்னும்
அரசன் அயலான்,
அடிமை தங்கலான்...
"பிறந்த மண் உயிர்களைக் காக்க வேண்டும்.
உயிர்கள் பிறந்த மண்ணைப் பொன்னாகப் போற்றிக் காத்துக் கொண்டாடிட வேண்டும்.
பிறந்த மண்ணில் உயிர்கள் அனைத்தும் கூடி வாழ வேண்டும், பகிர்ந்து வாழ வேண்டும்.
பேதங்களைத் தவிர்த்திட வேண்டும்.
வறியவர், செல்வந்தர் அனைவருக்கும் நல்ல கல்வி வேண்டும்.
அந்தக் கல்வி உலகைச் செதுக்க வேண்டாம், உள்ளம் செதுக்க வேண்டும்.
நல்ல கல்வி சுயசார்பு வாழ்வைத் தர வேண்டும்.
அன்னியரை சார்ந்து வாழாமல் இருந்திட வேண்டும்.
மண்ணும், உயிர்களும் சுரண்டப் படாமல் இருந்திட வேண்டும்.
மாசற்ற ஆதி மனதை, அந்தப் புனித வெளியைத் திரும்பப் பெற வேண்டும்..."
என்று திரை மொழியில் சொன்ன தங்கலான் திரைப்படக் குழுவிற்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.
சமூகப் பொறுப்போடு உள்ள வெகு சில திரைப்படக் குழுக்களிள் பா.ரஞ்சித்தின் குழு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது மிக்க மகிழ்ச்சி.
ஒன்று சொல்வேன், அதை உரக்கச் சொல்வேன் "அம்பேத்கரும், புத்தமும் இங்கு நம் அனைவருக்குமாகவே தேவையுள்ளது".
அன்று பொன் பொருளுக்காக,
இன்று மென் பொருளுக்காக...
அன்றும் கூலி,
இன்றும் கூலி...
இன்னும்
அரசன் அயலான்,
அடிமை தங்கலான்...
ஒளி எங்கே பிறந்தது
இருள்தானே கருவறை
இறு பொருமை காத்திடு
உன் இருமை வென்றிடு
இனி நாளை மட்டுமில்லை
நாளெல்லாம் உன் நாளே
உனக்கு மட்டும் இல்லை
விடியல் உலகிற்கே உன்னாலே...
காற்றின் சம்மதம்
நான் கேட்டதில்லையே
என்னுள் பூட்டும் வேளையும்
என் உயிரைக் கூட்டுதே...
ஏதும் செய்யா திரியை
எரிய செய்த போதும்
என்னைச் சுற்றி ஏனோ
ஒளியை நல்குதே
நானும் அதுபோல் மாற
என்னும் வேளையில்
சுயநலம் என்னைச் சுற்றி
சூறையாடுதே!
என்னுள் ஏதோ ஒன்றை
நான் தேடும் வேளையில்
என்னைத் தொலைந்து நின்றேன்
இந்த வேள்வியில்...
துன்பம் இன்பம் இனியில்லை
இரவும் பகலும் இல்லை
எல்லாம் ஒன்றாயான தன்மை
இது சித்தர் சொன்ன உண்மை
அமைதி தொடருதே
தன்னலம் மாறுதே
பறவைகள் ஆன பின்னே
வானில் தடைகள் இல்லையே!
தோல்வியும் வெற்றியும்
விளையாட்டில் உடன்பிறப்புகள்
சகோதரத்துவம் உணர்ந்தவள் நீ
யாருக்கு என்ன குரோதம்
புறக்கணிப்பு உனக்கிழைத்த துரோகம்
என்ன செய்தாலும் பறிக்க முடியாதது
உந்தன் மல்யுத்த வீரம்
உன் திறமை என்பதோ இமையம்
நீ இடம் பிடித்ததோ
உலகத்தவர் இதயம்...
திறமையை எடை போடத் தெரியாதவர்கள்
100 கிராம் எடையில் மடை மாற்றுகிறார்கள்
மடையர்கள், பதக்கத் திருடர்கள்...
என்னைப் பார்த்து வளர்த்த மரங்கள்
வளர்ந்து வெகுநாள் கழித்து
திரும்பச் சென்று காண்கையிலே
நிழலால் என்னை அணைத்து
தென்றல் முத்தம் தருகின்றன
எத்தனை எத்தனை மாற்றங்கள்
இவ்வுலகில் நிகழ்ந்தும்
இன்னும் மாறாமல் இருக்கின்றன
பல உயிர்கள் வாழ
வாடகை இல்லாமல் இடம் அளிக்கின்றன
அணிலாய், பறவையாய் மாறி
உன்னில் நான் தங்கி
வாழத் தோன்றுகிறது
என் அன்பு மரங்களே...
பூமியை
நேசித்து வாழ
முயலுக்குத் தெரிந்திருக்கிறது
முயலை
கூண்டிலடைத்து வாழ
மனிதருக்குத் தெரிந்திருக்கிறது
வானை
நேசித்து வாழ
பறவைக்குத் தெரிந்திருக்கிறது
பறவையை
கூண்டிலடைத்து வாழ
மனிதருக்குத் தெரிந்திருக்கிறது
தன்னைத்தானே
கூண்டிலடைத்து வாழவும்
மனிதருக்குத் தெரிந்திருக்கிறது
பூமியை, வானை
கூண்டிலிருந்து தான்
தானும் பார்த்து வாழ்கிறான்
பாவம் மனிதன்
நேசம் கொள்வதாய்
மகிழ்ச்சி கொள்வதாய்
நடித்து வாழ்கிறான்...