ஒரு பக்கம் கொராணா
மறு பக்கம் ஊரடங்கு
இடையில் சாமானியன்...
உழைத்து வாழும் மக்களுக்கு
தினப் பிழைப்பு தானே உயிர்நாடி...
எந்த மருத்துவருக்கும்
பரிச்சயம் இல்லாத நாடி...
மருத்துவத் துறை போல
பாதுகாப்புடன் பணி செய்ய
இவர்களையும் பயிற்றுவிக்கலாம்...
உழைப்புச் சங்கிலியை அறுக்காமல்
நோய்த்தொற்றுச் சங்கிலியை அறுக்கலாம்...
மாதச் சம்பளம் வாங்கும்
வீட்டிலிருந்து வேலை பார்க்கும்
எங்களுக்கும் 4000
தொழில் முடங்கி வருமானம் இல்லாத
உழைப்பாளர் உறவுகளுக்கும் 4000
இல்லாத உறவுகளின் கைகளிலே
சென்று சேர வேண்டும் 8000
தமிழ் நாட்டின்
2 கோடி குடும்பங்களையும்
வருமான, சொத்து விபரங்களுடன்
கணக்கு எடுக்க வேண்டும்
தனக்கு மட்டும் எல்லாம் எனும்
மனதை வேரறுக்க வேண்டும்
உண்ணும் உணவுகளில்
நச்சுக் கலப்படங்கள் நீக்கி
வணிகம் செய்ய வேண்டும்
உடலை உறுதி செய்ய வேண்டும்
கூட்டுயர்வை கல்வி ஆக்க வேண்டும்
நாட்டுயர்வை வேள்வி ஆக்க வேண்டும்
ஆளும் கட்சி, எதிர்க் கட்சி ஒன்றாக வேண்டும்
நாம் அனைவரும்
ஓர் தாய்ப் பிள்ளைகள் என்றாக வேண்டும்
குடிநீரை விலைக்கு விற்கும்
கொடுங் குற்றம் கலைய
நீரில் மாசு நீங்கும்
நம்மாழ்வாரை மனதில் விதைக்க
மண்ணில் நஞ்சு நீங்கும்
பசுமை எங்கும் ஓங்கும்
நாட்டில் விவசாயத்தைப் பெருக்கினால்
எந்தத் தொழில் நட்டமானாலும்
எல்லோர் வயிறும் லாபமாகும்
வந்த பேரிடரையும்
வரப்போகும் பேரிடர்களையும்
இவைகள் எதிர்கொள்ள ஏதுவாகும்
நடப்பு அரசின் உறுதிமொழியான
சான்றோர்கள் பலரின் ஒத்த குரலான
'சமுதாயத்தில் உயர் தாழ்வு சமநிலை'
எனும் கனவும் நனவாகும்...
சூரியனைப் பார்த்து
நாளை தாமரையும்
புதிய மலராகும்
நல்ல விடியல் உருவாகும்...