திங்கள், 31 மே, 2021

 


பாதகம் ஏதுமில்லா
சாதகம் ஆனதொரு
போதைக்கு வழியில்லையா
கொண்டாட்டம் வாழ்வில்லையா...

நிலவினில் கால் பதிக்க
அறிவியல் உடனிருக்க
நிழல் அங்கு போய்வரும்
கனவிற்கு துணையில்லையா...

உடல் மனம் கெடுக்கும்
ஊக்கிகள் பலவுண்டு
கள்ளச் சந்தைகள் உண்டு
கலப்படங்கள் உண்டு

நல்ல போதை கொண்டு
நலமுடனும் வாழ்ந்து
கள்ளம் யாவும் மறைய
உள்ளம் தான் துணியாதோ...

பாதகம் ஏதுமில்லா
சாதகம் ஆனதொரு
போதைக்கு வழியில்லையா
கொண்டாட்டம் வாழ்வில்லையா...


ஞாயிறு, 30 மே, 2021

 


உப்பு நீரில்
உயிர்த்திருக்கிறது
விழிப்(பூ)பு...


சனி, 29 மே, 2021

 


மீன் ஒன்று
நீரை வெறுத்து
வானில் குதிக்கிறது

நீர் மடியை
விரித்து வைத்து
காத்து இருக்கிறது...

பறவை ஒன்று
வானை வெறுத்து
நீரில் குதிக்கிறது

வான் கரங்கள்
அணைத்துக் கொள்ள
காத்து இருக்கிறது...

நானும்
நினைவை வெறுத்து
கனவில் குதித்தேன்

நினைவின் சிறகுகள்
தூக்கிச் செல்ல
காத்து இருக்கிறது...


வெள்ளி, 28 மே, 2021

 



இரை தேடும்
பறவை
பறவை தேடும்
நான்
எனைத் தேடி
யாரோ...
கண்ணுக்குத் தெரியவில்லை


வியாழன், 27 மே, 2021

 


மண்ணை எடுத்து
மேகம் ஆக்கும்
மழையாய்த் தூவும்
பிஞ்சு விரல்களில்
செயற்கை பொம்மைகள் எதற்கு?

தடுப்பூசி வேண்டாம் பிள்ளைகளுக்கு
இயற்கை அரணாக இருக்கு
அதை அழிப்பதை முடிந்தால் நிறுத்து...

இயற்கையை எல்லாம்
செயற்கையாய் மாற்றும்
நம் மனநிலையே பெரும் கிறுக்கு...


புதன், 26 மே, 2021

 


அணைந்த மெழுகுவர்த்தி
பிரிந்த தீபம்
எரிந்த திரி
கலைந்த புகை
காத்திருக்கும் நான்...



செவ்வாய், 25 மே, 2021

 


கனவுகள் விதைகளாகி
விதைகள் வனமாகி
வனம் மனமாகி
மனம் புதிராகி
புதிர் தேடலாகி
தேடல் கனவுகளாகி
கனவுகள் விதைகளாகி...
சுழற்சி வாழ்வானது
வாழ்க்கை சுழியானது...


திங்கள், 24 மே, 2021

லலிதா அம்மா

 


வானம் மேலும் நெருக்கம் ஆகிறது
எனை பெற்றெடுக்காத அன்னை
நான் பெற்ற அன்னை
வானுலகம் சேர்ந்தார்...

நண்பனின் அன்னை
விட்டுப் பிரிந்தார் மண்ணை
திறந்தே வைத்திருந்த அவர் கண்ணை
நாங்கள் பார்க்கிறோம்
அவர் பார்க்கிறாரா தெரியவில்லை...

ஒருவராய் இருந்து வளர்த்தார்
இரு பிள்ளைகள்
அழகழகாய்ச் செய்து விற்று வந்தார்
பொம்மைத் தென்னைகள்

அரி ஓம் ஸ்ரீ நாராயண
எனச் சொல்லியே அலைபேசுவார்
பேசும் வார்த்தைகள் அத்தனையிலும்
நம்பிக்கையை ஊட்டுவார்

தெய்வமே நம்பிக்கையாய்
வாழ்ந்து வந்தார்
தெய்வ நம்பிக்கை இல்லா
எனக்காகவும் அவர் வேண்டி வந்தார்

சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்
நாங்கள் சிரிப்பதற்குப் பேசுவார்
காண வரும்போதெல்லாம்
எப்பொழுதும் புன்னகையே வீசுவார்

வளராத பொம்மைத் தென்னைகளும்
வளர்ந்து நிற்கும் இரு பிள்ளைகளும்
சொல்லில் அடங்காத துயரங்களுடன்
மௌனமாய் அன்னை அவர்களுடன்...


ஞாயிறு, 23 மே, 2021

 


பறக்கும் பறவைகளுக்கும்
நீரில் மிதக்கும் படகு
தூரப் பயணங்களில்
இளைப்பாறிட...

வான் படகுகளில்
துடுப்பு இல்லாத மேகங்களில்
இளைப்பாறும் பறவைகளை பார்த்ததேயில்லை...


சனி, 22 மே, 2021

 


ஒரு பக்கம் கொராணா
மறு பக்கம் ஊரடங்கு
இடையில் சாமானியன்...

உழைத்து வாழும் மக்களுக்கு
தினப் பிழைப்பு தானே உயிர்நாடி...
எந்த மருத்துவருக்கும்
பரிச்சயம் இல்லாத நாடி...

மருத்துவத் துறை போல
பாதுகாப்புடன் பணி செய்ய
இவர்களையும் பயிற்றுவிக்கலாம்...

உழைப்புச் சங்கிலியை அறுக்காமல்
நோய்த்தொற்றுச் சங்கிலியை  அறுக்கலாம்...

மாதச் சம்பளம் வாங்கும்
வீட்டிலிருந்து வேலை பார்க்கும்
எங்களுக்கும்  4000
தொழில் முடங்கி வருமானம் இல்லாத
உழைப்பாளர் உறவுகளுக்கும் 4000
இல்லாத உறவுகளின் கைகளிலே
சென்று சேர வேண்டும் 8000

தமிழ் நாட்டின்
2 கோடி குடும்பங்களையும்
வருமான, சொத்து விபரங்களுடன்
கணக்கு எடுக்க வேண்டும்
தனக்கு மட்டும் எல்லாம் எனும்
மனதை வேரறுக்க வேண்டும்

உண்ணும் உணவுகளில்
நச்சுக் கலப்படங்கள் நீக்கி
வணிகம் செய்ய வேண்டும்
உடலை உறுதி செய்ய வேண்டும்

கூட்டுயர்வை கல்வி ஆக்க வேண்டும்
நாட்டுயர்வை வேள்வி ஆக்க வேண்டும்
ஆளும் கட்சி, எதிர்க் கட்சி ஒன்றாக வேண்டும்
நாம் அனைவரும்
ஓர் தாய்ப் பிள்ளைகள் என்றாக வேண்டும்

குடிநீரை விலைக்கு விற்கும்
கொடுங் குற்றம் கலைய
நீரில் மாசு நீங்கும்

நம்மாழ்வாரை மனதில் விதைக்க
மண்ணில் நஞ்சு நீங்கும்
பசுமை எங்கும் ஓங்கும்

நாட்டில் விவசாயத்தைப் பெருக்கினால்
எந்தத் தொழில் நட்டமானாலும்
எல்லோர் வயிறும் லாபமாகும்

வந்த பேரிடரையும்
வரப்போகும் பேரிடர்களையும்
இவைகள் எதிர்கொள்ள ஏதுவாகும்

நடப்பு அரசின் உறுதிமொழியான
சான்றோர்கள் பலரின் ஒத்த குரலான
'சமுதாயத்தில் உயர் தாழ்வு சமநிலை'
எனும் கனவும் நனவாகும்...

சூரியனைப் பார்த்து
நாளை தாமரையும்
புதிய மலராகும்
நல்ல விடியல் உருவாகும்...


 


சில நேரங்களில் நடக்கும்
சில நேரங்களில் நீந்தும்
சில நேரங்களில் பறக்கும்

பறவை மட்டும் அல்ல
சிறகை விரிக்கும்
நம் மனதும் கூட...


வெள்ளி, 21 மே, 2021

 


உன்னோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்
தரையில் தலை ஆட்டிக்கொண்டு இருக்கிறது
ஒற்றை இலை...


வியாழன், 20 மே, 2021

 


நான்கைந்து பேர்
நடந்து செல்லும்
சாதாரண வீடல்ல
எங்கள் வீடு
ஆயிரமாயிரம் பேர்கள்
நடந்து செல்லும்
பிரமாண்ட வீடு...

எங்கள் வீட்டில்
ஏராளமான அறைகள் உண்டு
அத்தனையும்
பிறர் வாழ விட்டுவிட்டோம்
பிறை பார்த்துப் பழகிவிட்டோம்

வாடகை கேட்பதில்லை
முன் பணமும் வாங்கவில்லை
அம்பானிக்கு 500 அறையாம்
சிரித்துச் சிரித்து மீளவில்லை

யார் வந்து போனாலும்
எதை எடுத்துக் கொண்டாலும்
கணக்குப் பார்ப்பதில்லை
யாரும் ஓர் தாய்ப் பிள்ளை

காலடிச் சிந்து
காணாமல் போகும்
கண்களும் மெல்ல
துயில் தேடிப் போகும்

சாலையோரம் தான்
எங்கள் சரணாலயம்
திறந்த வீட்டில்
தினம் சூர்யோதயம்...

தெருவோரப் பிள்ளைகள்
தேர் வேண்டாத முல்லைகள்
உலகம் எங்கள் வீடு
உள்ளம் எங்கள் கோயில்


புதன், 19 மே, 2021

 


சிரிப்பதற்குக் காரணம் தேடினால்
வாழ்வில் இறுதிவரை கிடைக்காது
மகிழ்ச்சி

கண்ணீருக்கு
நிறைய காரணங்கள் இருக்கலாம்
சிரிப்புக்குத் தேவையில்லை சிரி
அழும்போதும் சிரி
எச்சில் ஒழுகச் சிரி

வானம் பார்த்துச் சிரிக்கலாம்
மேகம் பார்த்துச் சிரிக்கலாம்
நிலவைப் பார்த்துச் சிரிக்கலாம்
கண்ணாடிப பார்த்துச் சிரிக்கலாம்
கண் மூடியும் சிரிக்கலாம்
சிரித்தால் சிறகில்லாமல் பறக்கலாம்...

சிரிக்காமல் நேரத்தை இழக்காதே
சிரிக்காதோர் நேசத்தை வளர்க்காதே
சிரிப்போரை என்றும் பழிக்காதே
சிரிப்பிலே சிக்கனம் காட்டாதே
சிரிப்பை சேமித்து வைக்காதே
சிரிப்பை உள் வைத்துப் பூட்டாதே

மணிப்பர்ஸ் வேண்டாம் சிரி
மரணத் தருவாயில் சிரி
மரணிப்பவரைப் பார்த்துச் சிரி
மனிதன் என்றால் சிரி...

பிணம் என்று
நெருப்பில் இட்டாலும்
தீக் கொழுந்தாகச் சிரி
மண்ணில் மறைத்தாலும்
மலராய் மலர்ந்து சிரி...


செவ்வாய், 18 மே, 2021

 


ஆஸ்கார் விருதுக்கு
குயிலைத் தெரியாது
ஆஸ்கார் விருதை
குயிலுக்கும் தெரியாது

குயில்
தன் இணைக்காக
பாடும் பாடல்
ஈடு இணை இல்லாதது

தேன் வந்து
காதில் விழும்
கனவானது
குயில் பாடும்
பாட்டினிலே நனவானது

தற்கொலை எண்ணம் வந்தால்
குயில் பாடல் கேளுங்கள்
கூ... கூ... சப்தம்
ஊ...ஊ... நிறுத்தும்


திங்கள், 17 மே, 2021

 


சில வினாடிகள் தான்
மணியோசை வாழ்வு
சில வினாடிகள் தான்
வந்து போகும் சிரிப்பு
சில வினாடிகள் தான்
மலர்ந்து விடும் மொட்டு
சில வினாடிகள் தான்
கண்களில் கடந்து போகும் நீ
சில வினாடிகள் தான்
காமத்தின் உச்சம்
பல மணி நேரங்கள்
அதற்கான காத்திருப்பே...


ஞாயிறு, 16 மே, 2021

 


நம்பிக்கை
விரல் பிடிக்கிறது
மழலை ரூபத்தில் இருக்கிறது...


 


வரும்போது என்ன கொண்டுவந்தோம்
போகும்போது என்ன கொண்டு போகிறோம்?
பயம்

தெரியாதது பயம்
அறிந்துகொள்ள பயம்
எல்லாம் தெரிந்தவன்
பயம் இல்லாமல் படுத்திருக்கிறான்
அவன் பெயர் சவம்...


சனி, 15 மே, 2021

 


வரம் எதற்கு?
தவம் எதற்கு?
பயம் இருந்தால்
துணை அதற்கு...


வெள்ளி, 14 மே, 2021

 


கூடை முழுவதும்
தூக்கிச் சென்றவளை
பார்த்தது போலில்லாமல்
கூந்தலில் சூடி சென்றவளை
பார்க்கிறது கண்கள்
குற்றம் என்றால்
பார்த்தது தான் தண்டனை...


வியாழன், 13 மே, 2021

 


முதல் நாள் பிறையே
முழு முதல் இறையே
உரு இலாத உண்மையே
நன்னாளில் ரம்ஜானில் எங்கள்
உருவில் புதைவா(ய்)
அன்பின் விதையே...


 


தொட்டுப் பழகும் நிலத்தை மறந்து
எட்டி நிற்கும் வானம் ரசிப்பேன்
நிலம் ஈரமாய் இருப்பதற்கு
நானும் ஓர் காரணமோ...

பச்சை நிற தாவணி
என் கண்கள் குளிர 
கட்டி வந்தாள்
நீல நிற தாவணியை
நான் காண்பதைக் கண்டு
பெரும் மூச்சிரைத்தாள்

விழி ஈர்ப்பு
எனைப் பிடித்திழுக்க
புவி ஈர்ப்பு விடுவதில்லை
பழி ஏதும் சொல்வதில்லை
பாதச்சுவடுகளை துரத்தவில்லை...


புதன், 12 மே, 2021

 


கருத்த மேகத்திடம்
முத்தம் ஒன்றுதான் கேட்டேன்
முத்த மழையால் என்னை
முழுவதும் நனைத்தது

கருத்த குயிலிடம்
முத்தம் ஒன்றுதான் கேட்டேன்
முத்த இசையால் என்னை
முற்றிலும் நிறைத்தது

கருத்த இரவிடம்
முத்தம் ஒன்றுதான் கேட்டேன்
முத்த இருளில் என்னை
மொத்தமாய் அணைத்தது

கருநீலப் பூவிடம்
முத்தம் ஒன்றுதான் கேட்டேன்
முத்த வாசத்தில் என்னை
கொள்ளை அடித்தது

கருத்த அவளிடம்
முத்தம் ஒன்றுதான் கேட்டேன்
முடியாது என்ற சொல்லுக்குக் கூட
முத்தம் கொடுக்காமல் கடந்து சென்றாய்...

மௌனமாய் மாறிட
வரம் ஒன்று கேட்டேன்
மௌனத்தை முத்தமிடும்
உன் இதழ்களில் சேர்ந்திட...

மேகத்திடம் குயிலிடம்
இரவிடம் பூவிடம்
கேட்டதெல்லாம் கூட
உன் இதழ்களில் சேர்ந்திடத்தானே...



செவ்வாய், 11 மே, 2021

 


நிலவுக்கும் எனக்கும்
தெரிந்த ரகசியம்
இரவு

பகலில் இருவரும்
ரகசியமாகவே இருக்கிறோம்
ரகசியத்தை பாதுகாக்க

பல ஆயிரம் கரங்களால்
பகல் தேடிப் பார்த்தும்
வெறுங்கையுடன் தான் போகிறது

நிலவுக்கும் தெரியாத
ஒரு இரவு
என்னோடு பேசியது ரகசியமாக...

நான் தூங்கும் போது
எனக்குள் வந்து தேடிப்பார்கிறது
நிலவு ரகசியமாக...


திங்கள், 10 மே, 2021

 


நிறைய நாக்குகள் உள்ள மலர்கள்
நிறைய பேசுகின்றன
மௌனமாக...

மௌன மொழியைக் கேளாத நான்
நிறைய மொழிகளால்
நிரம்பிப் போகிறேன்...

ஒற்றை நாக்கு
உலகைத் தெரிந்தது போல
உளறிக் கொண்டே இருக்கிறது...

நிறைய நாக்குகள் உள்ள மலர்கள்
நிறைய நிறையச் சிரிக்கிறது
மௌனமாக...


ஞாயிறு, 9 மே, 2021

 


எத்தனை வயதானால் என்ன?
நீ ஒளிந்து பார்க்கும் போது
உன் வயதும் ஒளிந்து கொள்கிறது...

சனி, 8 மே, 2021

 


சிறகை விரித்து
காதல் சிம்பொனியை
துவக்கி வைக்கிறது
ஒரு பறவை...

சிறகசைத்து சிறகசைத்து
பின்னிப் பிணைக்கிறது
பின்னணி இசையால்
உயிரை உறவை...

இசைப் பறவையா
இதயப் பறவையா
கூர்ந்து கூர்ந்து பார்கிறேன்
அந்தக் கனவை...

பறவை
பறந்து போனதா
கனவு
கலைந்து போனதா
யாரும் இல்லை...

பின்னணியில்
இசையும் இல்லை
இசைதான்
மௌனம் ஆனதா
நம்பமுடியவில்லை...


வெள்ளி, 7 மே, 2021

 


பறவையின் அலகு
காட்டுவதை
அதன் கண்கள் பார்க்கிறதா?

பறவையின் கண்கள்
காட்டுவதை
அதன் மூக்கு பார்க்கிறதா?

பார்வையும் அலகும்
கூராக இருக்கிறது
அது காட்டும் இடமெனக்கு
நீயாகத் தெரிகிறது...


வியாழன், 6 மே, 2021

 


நதியை முத்தமிட்டு
சூரியன் சூடேறி
சூன்யம் ஆனது
நதியின் உதடுகள்
இரவெல்லாம்
சிலிர்த்துக் கொண்டே இருக்கிறது...


புதன், 5 மே, 2021

டிராஃபிக் ராமசாமி வயது 87

 


நரைப்பட நரைப்பட
நீ நாயகன்
திரைப்பட நாயகர்கள் போல்
'கட்' என்றால் நிறுத்துவதில்லை
இந்தக் களநாயகன்

செய்யாற்றில் பிறந்ததாலா
செயலாற்றலுடன் வாழ்ந்தாய்
நூலாலையில் உழைத்ததாலா
தன்மானத்துடன் திரிந்தாய்

சட்டமன்றமும் நாடாளுமன்றமும்
உன் நிராசை
நீதிக்காக வீதிக்கு வந்தது
உன் பேராசை

சமூகம் உன்னை
குனிய வைத்துக் குத்தியது
இருந்தும்
சமூகத்தை நீ
நிமிர வைக்கக் கத்தியது
இனி எப்போதும்
இங்குக் கேட்க்கப் போவதில்லை...

உடல்நலம் சரியில்லாமலா இறந்தாய்
இல்லை...
பொதுநலம் சரியில்லை
போராடிப் போராடி மறைந்தாய்

உன்னையே நீ
விதையாய் புதைத்தாய்
வீதி வீதியாய்
போராட்டங்களாய் முளைப்பாய்...

இது மறுநாள் ஒப்பாரி
உயிர்த்தெழுந்து வருவாய்
நீ முற்போக்கு முளைப்பாரி...


செவ்வாய், 4 மே, 2021

 


தூக்கிச் சுமக்கும் உயிரை
எவ்வளவு சுமையானாலும்
இறக்கி வைப்பதில்லை...

உயிரின் உயிரான
உன்னை மட்டும்
முடியுமா என்ன?


திங்கள், 3 மே, 2021

 


என் தலையணையில்
கொஞ்சம் தலை சாய்ந்திரு
எல்லா இரகசியங்களையும்
அது சொல்லும்...

உச்சி வெயிலிலும்
அதன் ஈரம் காய்வதில்லை
வெள்ளைப் பூத்திருக்கும்
சின்ன உப்பளமும் இல்லை...

கடலும் இல்லை
கப்பலும் இல்லை
பயணம் உண்டு
பாதை இல்லை...

மறந்து விடாதே
முடிவில் கிள்ளை
கண்கள் திறந்து பார்த்தாலும்
இது கனவு இல்லை...

என் தலையணையில்
கொஞ்சம் தலை சாய்ந்திரு
எல்லா இரகசியங்களையும்
அது சொல்லும்...


ஞாயிறு, 2 மே, 2021

 

கவிதை கண்ணுக்குத் தெரிகிறது
சொற்களால் அதனை மறைத்து விடுகிறேன
சொற்கள் மட்டும் இல்லையென்றால்
சொர்க்க வாசல் நுழைந்திருப்பேன்

கண்களுக்கு இரண்டு உலகம்
ஒன்று
கண்களுக்குத் தெரிவதும்
இரண்டு
கண்களில் தெரிவதில் தெரிவதும்

இரண்டாம் உலகம்
யாருக்கும் சொந்தமில்லை
அதனால் நெருக்கமாக இருக்கிறது

நெருக்கமாக இருந்தாலும்
கானகத்தில் காணும் இடமெல்லாம்
புத்துயிர்ப்பு, விசித்திரம், இரகசியம்...


சனி, 1 மே, 2021

 


உன்னை நினைத்து
உருகி வரும் கண்ணீருக்கும்
என் கன்னத்தைப் பிடிக்கும்...