வெள்ளி, 31 ஜனவரி, 2020

மலர காத்திருக்கும் மலர்
எதற்கு காத்திருக்கும்
யாரெல்லாம் காத்திருக்கிறார்
மலர் மலர்வதற்கு
காத்திருப்பு தான் வாழ்க்கையோ...

காலம் காத்திருப்பதே இல்லை
கடந்து கொண்டே இருக்கிறது
ஆனால் கடந்துவிட முடியவில்லை
காலம் காத்திருக்கிறதா
கடந்து கொண்டு இருக்கிறதா...

நானும் காத்திருக்கிறேன்
நீயும் காத்திருக்கிறாய்
காத்திருப்பும் காத்திருக்கிறது
காத்திருந்து தான் பார்த்துவிடுவோம்...

காத்திருந்து காத்திருந்து
காலமாகிப் போனவரெல்லாம்
பார்த்தது என்னவோ
உணர்ந்தது என்னவோ
மொத்தமாக மூச்சை நிறுத்திய
அந்த ஆச்சரியம்தான் என்னவோ...

என்னைக் கடந்து கொண்டிருக்கும்
பெண் ஒருத்தி
என் மூச்சை நிறுத்துகின்றாள்
எமன் எதிர்பாலாகத்தான் இருக்கும்
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
அந்த பேரழகிக்கு...

வியாழன், 30 ஜனவரி, 2020

பத்மஸ்ரீ. வரரேகலா ஹஜப்பா

பழம் தின்று
கொட்டை போடும் பறவை
பழம் விற்று
கல்விக் கொட்டகை
போடுவது உந்தன் உவகை
வியாபார நோக்கில்லாத
காடும் கல்வியும்
வளர்ந்து செழிக்கட்டும் பூமி
கெடுத்து வாழும் இவ்வுலகில்
உன் போல் கொடுத்து
வாழ்பவன் தான் சாமி...

புதன், 29 ஜனவரி, 2020

நீரின் தழுவல் கூட
சில படகுகளை
பைத்தியமாக்கி விடும்

மிதக்கும் தன்மை
மறந்துவிடும்
மூழ்கிவிடும்
கரைந்துவிடும்...

நீயும் கூட
நானும் கூட...

செவ்வாய், 28 ஜனவரி, 2020

ஏனோ தெரியவில்லை
ஊதாமலே
ஒரு புல்லாங்குழல்
இசைக்கின்றது

ஏதேதோ முனங்கல்கள்
நெஞ்சில்
முளைக்கின்றது...

திங்கள், 27 ஜனவரி, 2020

உன் இதழின் வழியாக
மொத்தமும் பருகி விட்டேன்
என் இதழின் வழியாக
மீட்டு எடுத்துக்கொள் உன்னை... 

சனி, 25 ஜனவரி, 2020

கறிக்கடைக்கு வந்தாள்
என்ன வேண்டும் என்றான்

பழக்கடைக்கு வந்தாள்
என்ன வேண்டும் என்றான்

பூக்கடைக்கு வந்தாள்
என்ன வேண்டும் என்றான்

ஓவியங்கள் விற்குமிடம் வந்தாள்
என்ன வேண்டும் என்றான்

அந்தப் பெண்
எதுவுமே பேசவில்லை
எல்லாவற்றையும்
வாங்கிச் சென்றாள்

சும்மா இருந்தவனிடம்
வந்த அந்தப் பெண்ணை
என்ன வேண்டும் என்றான்

அந்தப் பெண்
இப்போதும் பேசவில்லை
கவிதையொன்றை
வாங்கிச் சென்றாள்

நானும் கூட ஒரு
குழந்தைக்கு முத்தம் தந்தேன்
அப்போது அங்கு அந்த
பெண்ணும் வந்தாள்
என்ன வேண்டும் என்றேன்
அவள் ஏதும் பேசவில்லை...

தினமும்
அந்தக் குழந்தையுடன்
காத்திருக்கிறேன்...

வெள்ளி, 24 ஜனவரி, 2020

உன் நிழல் நான்
எப்போதும் உன்னை
நான் பிரிவதில்லை

நான் மறைந்து
நீ தேடும் வேலையிலும்
உன்னில் தான் ஒளிந்திருப்பேன்

வெளிச்சம் காட்டாமலே
என்னைப் பூட்டி வைக்கிறாய்
இருந்தும் என்னால்
வெண்மை ஆகிட முடியவில்லை

இந்த கருப்பை ஏனோ
நீ காலம் முழுவதும்
நேசம் செய்கிறாய்

நினைவுகள் ஊட்டி
நித்தமும் வளர்க்கிறாய்
முத்தம் தராமலே
முடிவையும் தருகிறாய்

நீ
மண்ணில் புதைவாய்
நான்
உன்னில் புதைவேன்

முள்ளாக நானும்
பூவாக நீயும்
மீண்டும் இணைய
ரோஜா மாலைகள் தந்து
வழி அனுப்புகின்றனர்...

முத்தம் இல்லாமலே
நம்மை வாழச் சொல்லும்
இந்த மனிதர்களே வேண்டாம்

பிறந்தால் தானே பிரிவு
இப்படியே கலந்து இருப்போம்
உன்னில் நானும்
என்னில் நீயும்...

வியாழன், 23 ஜனவரி, 2020

சலசலப்பு  சத்தம்
நதியிடம் நீயா என்றேன்
நீதான் என்றது

நதி நல்லிசை இசைக்கிறது
என்னுள் தான் சலசலப்பு
நதியாக வேண்டி நானும் ஓடுகிறேன்

கடலாகும் முன்னே
நல்லிசையே வந்தெனில் சேரு...

புதன், 22 ஜனவரி, 2020

சிவப்பு பொட்டுச் சிங்காரி

சில நேரங்களில்
சிவப்பு விளக்கிற்கு
நிற்க்காமல் போவதும்
விபத்திலிருந்து காக்கிறது 

செவ்வாய், 21 ஜனவரி, 2020

அமர்ந்து இருக்கும் போது
மனம் பறக்கிறது
பறக்கும் போது
அமர்வதற்கு எதையோ தேடுகிறது...

திங்கள், 20 ஜனவரி, 2020

காதல் என்பதே
முதல் முறை தான்
காலம் பல ஆனாலும்...

இப்போதும் உன்னை
முதல் முறையாகத் தான்
பார்க்கின்றேன்

முதல் அழைப்பு
முதல் திகைப்பு
முதல் சிரிப்பு
முதல் சந்திப்பு
முதல் தவிப்பு
முதல் அணைப்பு
முதல் இதழ் இணைப்பு
முதல் மௌனம்
முதல் அச்சம்
முதல் நாணம்
முதல் நேசம்
முதல் ஸ்பரிசம்

எத்தனை முறை நடந்தாலும்
எல்லாம் முதல் தான்

காதல் என்பதே
முதல் முறை தான்
காலம் பல ஆனாலும்...

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

புதைக்கும் எரிக்கும் வாழ்க்கை
தரமானால் உரமானால்
என்றும் மரிப்பதில்லை...

மண்ணில் விதையாவோம்
விண்ணில் ஒளியாவோம்
சுயநலமின்றி சுயமாவோம்...

அகம் யாவும்
பிறருக்காக நிறைப்பதுதான்
நித்திய சுகம்...

தூது புறா

தூது போக
நீ இருந்தவரை
காத்திருப்புகள் அழகானது

இரையின்றி சில காலம்
உன் இணையைத் தேடி
நீயும் வந்துவிடுவாய்

நானும் உண்ணாமல்
நீயும் உண்ணாமல்
இருக்கிறது இன்னும் மறக்காமல்

றெக்கை இல்லாத தூதுவன்
இதயம் இல்லாத தூதுவன்
எந்த நரகத்தில் இருந்து வந்தானோ...

கண்ணிமைக்கும் பொழுதினில்
காரியங்கள் செய்கிறான்
காத்திருப்புகள் அசிங்கமானது...

சனி, 18 ஜனவரி, 2020

உனக்காகவே மையிட்டேன்
உனக்காகவே பூவைத்தேன்
உனக்காகவே பொட்டும் வைத்தேன்
எல்லாம்
உனக்காகவே உனக்காகவே

உனக்காகவே தலை குனிந்தேன்
உன் கண்களை
என் மீது
ஏந்திக் கொண்டேன்

எல்லாம்
உனக்காகவே உனக்காகவே என்று
எனக்காகாவே
உன் முன் நின்றேன்

நான் நிமிர்ந்து
பார்க்கும் போது
நீயும் மெல்லத்
தலை குனிந்தாய்

இது
எனக்காகவா
உனக்காகவா...

வெள்ளி, 17 ஜனவரி, 2020

விட்டு விலகி
வெறுமை ஆக்கிவிட்டாள்
வெறுமையாய் வெறுமையை
கட்டியணைத்து இருக்கிறேன்
ஊமையாய்...

நீ
கேட்காத வார்த்தைகளை
எழுதிவைத்து பார்க்கிறேன்
நான் கேட்காத
உன் வார்த்தைகள்
தெரிகிறது...

வியாழன், 16 ஜனவரி, 2020

ஆசையைத் துறந்து
பார்க்கும் போதுதான்
அழகு தெரிகிறது...

புதன், 15 ஜனவரி, 2020

இவள் கண்கள் குளிர்ந்த நீர்
புருவம் வளைந்து நெளிந்த பாதை நிலம்
மூக்கு மூச்சுக் காற்று
நெற்றிப் பொட்டு நிலவு ஆகாயம்
இதழ்கள் சூடேற்றும் நெருப்பு
ஐம் பூதங்களின் கலவை நான்
இவள் ஐம் பூதங்களில்
கரைந்து போனேன்...

செவ்வாய், 14 ஜனவரி, 2020

உன்னில் மூழ்கி
இருந்திடவே
இறந்திடவே
ஆசை கொண்டேன்

ஏனோ நீயும்
விலகிச் சென்றாய்...

தனிமையில் மூழ்கி
இருந்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
இறந்தேன்...

கவிதையாக வந்து
கரம் பிடித்தாய்
சொற்கள் ஆகி
சொக்க வைத்தாய்

களைத்துக் களைத்துப்
போடுகிறேன்
கலை உருவாய்
கண் நிறைத்தாய்

உருவத்தை நீ
விட்டு வந்து
அருவமாகி என்னை
அடைந்து விட்டாய்

உன்னில் மூழ்கி
இறப்பேன் பெண்ணே
என் கரங்கள்
இறுகப் பற்றிக்கொள்

வார்த்தைத் தீயில்
பற்றிக் கொல்
உருவம் இழந்து
உனை அடைவேன்...

திங்கள், 13 ஜனவரி, 2020

வேட்டைக்கார புலியைக் கூட
வேட்டையாடிடும் காதல்
பசலை வந்து பசி மறந்து
பார்வை எதையோ தேடும்...

கானலான உருவம் கண்டு
கையை மெல்ல நீட்டும்
களைந்து போகும் கோலம் தன்னை
பைத்தியம் போல் காட்டும்...

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

ஒற்றைச் சிறகுடன்
ஒரு பறவை
தான் கடந்து வந்த
பயணங்களில் பயணப்படுகிறது...

வானில் மிதந்த சிறகுகளை
கனவில் மட்டும் விரிக்கிறது
ஒரு சிறகைத்தேடி அலைகிறது...

முறிந்த சிறகு கிடைக்கவில்லை
வானம் செல்ல வழியுமில்லை
ஒற்றைச் சிறகுடன் ஒரு பறவை...

சனி, 11 ஜனவரி, 2020

வாழ்க்கையில்
பெண் ஏற்கும்
கதாபாத்திரத்தால் தான்
அத்துணை பாத்திரங்களும்
பொருள் படுகிறது 
பேசிக் கேட்டதை விட
நீ பேசாமல்
நிறையக் கேட்கிறேன்

விட்டு விட்டு
பார்த்த உனை
விடாமல் பார்க்கிறேன்

மெய் தீண்ட முடியாமல்
நினைவால்
மெய்யாகத் தீண்டுகிறேன்

நீயும் இல்லாமல்
நானும் இல்லாமல்
வெறுமையாக வாழ்கிறேன்

மௌனக் கரங்கள்
கழுத்தை நெருக்க
சத்தமின்றி கதறுகிறேன் 

வெள்ளி, 10 ஜனவரி, 2020

மறையாத பிறையும்
முடியாத பாதையும்
நிற்காத பயணமும்
நின் முகம் காணும் வரை
விடியாத பொழுதும்
தொடர்ந்தாலே போதும்
இந்த சுவாசம் நீளும்... 

சிறிய பூச்சிகள்

என் பெரிய உலகத்தில்
நீ சிறியதாய்

உன் பெரிய உலகத்தில்
யாரெல்லாம் சிறியதாய்

யார் பெரிய உலகத்தில்
நான் சிறியதாய்

எல்லோர்க்கும் அவரவர் பெரிது
கலை உள்ளத்தில் மட்டுமே
எல்லாமே பெரிது

விடியல் பொதுவானது
விழிகள் தனித்துவமானது
பார்வை மனமானது
பிரித்து விளையாடுது...

வியாழன், 9 ஜனவரி, 2020

காதல்

நான் எந்த அழகைக் கண்டாலும்
உன் உருவாய்ப் பார்க்க வைக்கும்
சாப்ட்வேர் 

புதன், 8 ஜனவரி, 2020

நண்பர்கள் பலவிதம்

இரண்டு தேனீர் வாங்கி
என் நண்பனுடன் பகிர்ந்துள்ளேன்

நான் மட்டும்
தேனீர் குடிக்கையில்
சிந்திய சில துளிகள்
பகிர்ந்து கொள்ள
எத்துணை எறும்பு நண்பர்கள்

என்னைச் சுற்றி
ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள்
உண்ணும் போதெல்லாம்
கொஞ்சம் சிந்திப் பார்க்க வேண்டும்
யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று...

எறும்பு

என்னதான்
நீ சுறுசுறுப்பாய்
உழைத்துக் கொண்டே இருந்தாலும்
உனக்கு கிடைப்பதெல்லாம்
சிந்துவதும் சிதறுவதும் தான்...

சோம்பலான
வெளிநாட்டு நாய்களுக்கெல்லாம்
பிரத்யேகமான உணவு வகைகள்

சுதந்திரம் இருக்காது
சுகபோகமாய் இருக்கலாம்
முன்னுரிமை இருக்கும்
முதுமையும் சீக்கிரம் வந்துவிடும்

உன் இனத்தோடு
இருக்க முடியாது
உடல் கனத்தோடு
இருக்க வேண்டும்

முடிவு செய்துகொள்
சுதந்திரமா...
சுகபோகமா...

சூதாட்டம்

கனவில்
மெய்ப்பட வாழ்வதற்கான வாழ்விடம்
குறைகளை எல்லாம் நிறைத்துவிட
கற்பனைக் காய் நகர்த்தி
தன்னை ஒப்பனையில் மேம்படுத்தி
உயரப் பறக்கும் கழுகாவோம்
நமக்கு நாமே இரையாவோம்
நினைவுத் துளிகள்
பெருமழையாய் பெய்து நனைத்தாலும்
ஒப்பனை கலைவது இல்லை

திங்கள், 6 ஜனவரி, 2020

குளித்துவிட்டு துவட்டாமல்
பறவை எல்லாம்
பறந்து செல்லும்
அதிகாலைகள் குளிர் எடுக்கும்

காற்றில் தெறிக்கும்
அதன் நீர்த்துளியும்
பறந்துவந்து தூங்கும் என்னை
எழுப்புகின்றதோ

என் அன்னையும்
என்னை எழுப்புகிறாள்
நான் குளிப்பதற்கு...

சனி, 4 ஜனவரி, 2020

இதுவரை சந்திக்காததால்
இன்றும் அழகாகவே
சித்திரப் படுகிறாள் பெண்

அழகு ஒரு ஈர்ப்பு
அதைத் தாண்டி தான்
அவள் இருக்கிறாள்

சிந்தனையில் அழகானவள்
புறக் கண்களுக்கு கிடைப்பதில்லை
கண்களில் நுழைந்தவள்
இதயத்தில் நிற்ப்பதில்லை

வடிவங்கள் கரையாமல்
கடவுளும் காதலியும்
கலப்பதில்லை

வெள்ளி, 3 ஜனவரி, 2020

காற்று
நடனம் சொல்லிக் கொடுக்கிறது
செடி
நளினமாக ஆடுகிறது
பார்த்த கண்கள் உறைந்துவிட்டது
செடி நிற்காமல் நின்று ஆடுகிறது...

அவள் கூந்தலின் நடனம்
மனதில் நிற்காமல்
நின்று ஆடுவது போல...

பிச்சைக்காரர்

இரக்கம் தேடும் முகபாவம்
யாரோ இங்கு பரிதாபம்

இடைவிடாது முகபாவம்
உடைபடாத கல்மனம்
விடுவதாக இல்லை
இரக்கத்தை தந்து
கைமாறு பெற்றுக் கொண்டார்

அந்த முகபாவத்தை
முயன்று பார்த்தேன்
கண்ணாடி உடைந்து
பல சில்லுகளாய்
இதயத்தைத் தைத்தது

ஒரு கணம்
அந்த பெரியவரின் முகம்
நிழலாடிச் செல்கிறது
அதில் அந்த வலி
எங்குமே இல்லை

ஆயிரம் துண்டுகளாய்
மனிதனை வெட்டும் போது
கடைசி துண்டு
துடிப்பதே இல்லை...

வியாழன், 2 ஜனவரி, 2020

தூரத்திற்குத் தான் தெரியும்
பிரிவின் துயரம்

கானல் நீரிடம் பேசுபவன்
கண்ணீரிடம் பேசுவதில்லை
கட்டி அணைக்கவே
துடிதுடிக்கிறான்

பாசம்
பெயர்களைச் சுருக்கும்
அதற்கு
நெருக்குவது தான் இயல்பு

இடைவெளி அதற்கு பிடிப்பதில்லை

பலர்
அதனை தவறாக நினைப்பதுண்டு

பயணம்
தூரம் குறைய குறைய
ஒன்றையும்
தூரம் நெடுக நெடுக
மற்றொன்றையும்
தருகிறது
அதற்கு பெயர் வைப்பது
அவ்வளவு எளிதன்று...

அக்கா

தனக்குப் பிறக்காத குழந்தை
தன்னோடு வளரும் தம்பிக்கு
அன்னையாய் இருக்கப் பழகி
தன்னை இழந்துத் தாயானவள் 
தூக்கம் இல்லாத இரவையும்
தூங்கி வழிகிற பகலையும்
சாபமாய் கொடுத்து விட்டு
சலனம் இல்லாத வான்குளத்தில்
நீளமாகக் கரைந்து விட்டாள்

சாபம் என்னை வதைக்கிறது
கண்களில் இருந்துனை பிரிக்கிறது
நஞ்சாய் நீளம் கலக்கிறது
இதயம் வலியிலும் சிரிக்கிறது
நினைவினில் கட்டி அணைக்கிறது

கசப்பு மட்டுமே பிடிக்கிறது
மௌனம் ஒன்றுதான் இனிக்கிறது
எழுதிஎழுதியே விரல் தொடுகிறது
நிழலும் சேர்ந்து சுடுகிறது
இரவின் உதடுகள் தணிக்கிறது

புதன், 1 ஜனவரி, 2020

ஆச்சரியமாக இருக்கிறது
இத்தனையும் செய்துவிட்டா
என்னை
திருட்டுப் பூனை
என்றீர்கள்...
வாழ்க்கை என்பது வாழைப்பழம்
அதை கீழிருந்தோ மேலிருந்தோ
முழுவதுமாக ருசித்துச் சாப்பிடுங்கள்

கனியும்வரை காத்திருக்க வேண்டும்
அவ்வளவு தான்
கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை

அடுத்தவரிடம் இருந்து பிடுங்காதீர்கள்
உபரி இருந்தால் கொடுத்துவிடுங்கள்
அயல்நாட்டிடம் வாங்காதீர்கள்
நம் நாட்டிலேயே விளையும்

வயிறு விரும்பும்வரை உண்ணுங்கள்
நாக்கை ரசியுங்கள் ருசியுங்கள்
சொல் பேச்சு கேட்கவேண்டாம்

உரிப்பதற்கு கற்றுக் கொடுப்பவர்களிடம்
எச்சரிக்கையாய் இருங்கள்
அன்னிய உடைகளில் மொழிகளில்
மாறுவேடத்தில் வரலாம் அவர்கள்

உள்ளூர் காரர்கள் கூட
உயர்ந்த ஆடையுடன் அலையலாம்
அடையாளம் கண்டு கொண்டால்
ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டாம்