செவ்வாய், 29 ஜனவரி, 2019

அணைதனை மீறிடும் வெள்ளம் போல
இமைகளைக் கடந்திடும் கண்ணீர்


நான்குகடல் சூழ்ந்தன
நடுவினில் தனியென
வலியினில் புழுவென
நரம்புகள் துடித்தன


நீங்காத கூந்தல் வாசம்
நெஞ்சோடு தினம் பேசும்


யாரும் கேட்காத
ஊமை மொழி
நான் கேட்டுக்கொண்டிருக்கையிலேயே
என்னை அழி


உன்
விரல்களை இதழ்களை
பிரிந்திருக்க முடியவில்லை


புவி ஈர்ப்புவிசை தளர்ந்து
உடற்க்கூட்டை உள்ளம் பிரிந்து
தேடி அலைகிறது உன்னை
விரைவில் சேர்ந்துவிடு என்னை






    

புதன், 23 ஜனவரி, 2019

சர்க்கரையால் உன் பெயரெழுதிப் பார்த்திருந்தேன் இனிதாக
சீண்டிய சிற்றெறும்பு எல்லாம்
சிறகுகள் முளைத்துச்
சிட்டுக்குருவிகளாய்
வட்டம் அடிக்கின்றது என்னை


அறிந்ததிலிருந்து அறியாததற்க்குப் பயணம்
ஒவ்வொரு நொடியும் புதுமை ஆகிறாள்


இறந்த காலங்களை அழித்துக்கொண்டே
என்னில்  நிகழ்காலம் தீட்டுகின்றாள் 


ஓவியம் வரைந்துவிட்டு
ஓடி ஒளிந்துக் கொண்டாள்
கண்கள் வர மறுத்தாள்
கண்ணீர்க் குடம் நிறைத்தாள்


என்னையிழந்த தூக்கம் தந்த
உன் மடிதான் கிடைத்திடுமா
அந்த நிம்மதிதான் திரும்பிடுமா...


உன் புருவ மத்தியின் புதைக்குழிக்குள்
என்னைப் புதையல் ஆக்கிவிடு





திங்கள், 21 ஜனவரி, 2019

நெஞ்சம் நிறைந்தவளே
உன் பிரிவால்
என் மஞ்சம் நனையுதடி

உள்ளம் உருகுதடி
உடல் யாவும் எரியுதடி

ஓராயிரம் கோடி முறை
உன் பெயர்ச் சொல்லி ஓயவில்லை
ஈராயிரம் கோடித் துளி
கண்ணீர்ப் பெருகுதடி

உள்ளம் கிறுக்குதடி
எனக்குள்ளே உன் பெயர் செதுக்குதடி
மண்டைக் குடையுதடி
உள்ளுக்குள் பூகம்பம் வெடிக்குதடி


எரிமலைக் குழம்பெனவே
நெஞ்சுக்குள் வேதனைப் பொங்குதடி
காலத்தால் பசுமை பூக்குமடி
உனை என்னிடம் சேர்க்குமடி 

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

கட்டந்தரையில் தலையணையாய் உன் நினைவு
கட்டெறும்பு எனைக் கடித்தது போல் உணர்வு


நீ கண் இமைத்து
வந்த தென்றலில் மனம் களவு
காரிருள் சூழ்ந்திடக்
காண்பதெல்லாம் உந்தன் கனவு


உவமை கூற உன் அழகிற்கு உலகில் பொருளில்லை
உனைக் கண்டு கவியெழுதாத் தூரிகை எனதில்லை


உளி கொண்டு உணர்வின்றி வடிப்பது சிலையில்லை
உனையன்பே இழந்துவிட்டாள் என் வாழ்வில் உயிரில்லை

சனி, 19 ஜனவரி, 2019

நதியின் தேடல் போல
என் ரதியைத் தேடுகிறேன்
நினைவுப் பாறையில்
முட்டி மோதி
பயணம் தொடருகிறேன்


மழையால் அல்ல
விழியால் உண்டான
நதி இது


விழிகளைப் பிடுங்கி
எறியத் தோன்றுகிறது
நீ இருக்கும் இடத்திற்கு
முகவரி இல்லாததால்
விழித்துக் கொண்டிருக்கிறேன்


நீ காதோடு பேசிய
வார்த்தைகள் யாவும்
என் வாழ்க்கைப் படத்தின்
பின்னணி இசையாகிறது


வண்ணமிழந்த வானவில்லானேன்
பிரிவு போதுமடி
உன்னோடு சேர்ந்து இறப்பதும்
என் வாழ்வின் தொடக்கமடி



வெள்ளி, 18 ஜனவரி, 2019

தூரச் சென்ற என்னை
துரத்தி வந்த காற்று

தொட்டணைத்த நேரம்
கண்கள்
திரும்பி உற்றுத் தேடும்

மனதில் நின்ற உருவம்
மாயை ஆகிப் போகும்

மனதின் இந்த தாகம்
என்றும் தீரா சோகம்

செவ்வாய், 15 ஜனவரி, 2019

புத்தகத்தில் மறைத்து வைத்த
மயிலிறகின் கவிதை


குழந்தைகளோடு விளையாடிய எனக்கு
புது அனுபவம்
உன்னோடு விளையாடியது


உன் ஸ்பரிசத்தில் தான்
என் கலைக் குறியீடு
விளங்கியது


எனைக் கொண்டு
உன் மேனியில்
அவன் வரைந்த
ஓவியங்களின் அர்த்தங்கள்
விரிந்துகொண்டே போகிறது


முன்பெல்லாம்
அவன் சிரிப்பினில்
உன்னைக் காண்பேன்

இப்போதெல்லாம்
கண்ணீரை மட்டும் தான்
பார்க்க முடிகிறது


பிரிவின் ஏக்கத்தை
என்னைவிட யார் அறிவார்
புத்தகத்தை அவன்
திறந்து மூடும் போதெல்லாம்
எந்தன் பழைய ஞாபகங்கள்


அழுகைச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
என் மாயக் கண்களின்
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
முகம் கொடுப்பேன்
அவன் முத்தமிட

அந்த முத்தங்கள்
எனக்கானதல்ல


குழந்தைகளின் பிடிவாதங்களை
நன்கு அறிந்ததால் சொல்கிறேன்
நீ அவனை சேர்ந்து விடு
காதல் துயரத்தால் இறந்தவர்களின்
கல்லறைகளிலும்
எனக்கு அனுபவம் உண்டு


அடுத்த முறை
அவன் புன்னகைக்
காணக் காத்திருக்கிறேன்
எனது சுயநலத்தோடும்...

திங்கள், 14 ஜனவரி, 2019

நெடுநாள் அமாவாசை
என் நிலவைக் காணவில்லை


தென்றலின்
காலைக் கட்டிப்பிடித்து
தூது செல்லக் கதறினேன்
என் கண்ணீரை உணர்ந்தாயா
அதன் ஈரத்தில்


குயிலிடம்
என் நிலை கூறினேனே
என் தனிமை உணர்ந்தாயா
அதன் கீதத்தில்


வானம் என்னைப்
பரிதாபமாகப் பார்க்கிறது
என் கண்ணில்
நீயில்லை என்றால்
இந்த மண்ணில்
நான் இல்லை
என்பதை உணர்ந்து


உணர வேண்டிய நீ
உணரவில்லை எனப்
பித்துப் பிடிக்கிறது


கடற்கரையில்
உனது பாதங்களைத் தேடிச் சென்றேன்
எங்கும் காணவில்லை


அழித்திருக்கும் என்று
கோபத்தில்
அலைகளை எட்டி உதைத்தேன்


அக்கரையில்
நீ இருந்தால்
தள்ளிப் போய் விடு
சுனாமி வந்துவிடும்


எள்ளி நகைக்கும் நட்சத்திரங்களை
தலையால் முட்டித் தகர்க்கத் தோன்றுகிறது

வேண்டாம்

காலங்களை
உனக்காக மட்டுமே
கடக்க விரும்புகிறேன்



இரவினில் கண்களைப் பதித்துவிட்டு
பகலினில் குருடனாய் உலவுகின்றேன்
தேடித் தொடரவில்லை என்றால்
நாடி நின்றுவிடும் அல்லவா


உச்சி வேளையில் கூட
என்னைச் சுற்றியுள்ள
புல்வெளிகளில் பனித்துளிகள்


இருந்தும்
துக்கத்தில் அவைகளும்
துவண்டே போகின்றன


நீ வரும் வேளையில்
நான் அயர்ந்து இருந்தாள்
எனை முத்தமிட்டு எழுப்பு
நான் மீளாத் துயில்கொள்ளும் முன்


அனுதினமும் முழுநிலவாய்
நீ வேண்டும்...


வெள்ளி, 11 ஜனவரி, 2019

நீ
காத்திருந்த இடங்களை
கால்கள் கடக்க முடியவில்லை
உலகம் மறந்து நிற்கிறேன்
உன் நினைவால்
மண்ணை நனைக்கிறேன்

உனை
கடந்து போவது
மேகங்கள் இல்லை
என் நெஞ்சத்தின்
வலிப் புகைகள்

கானலாய்
உன் நினைவுகளை
பருகப் பருக
இதயத்தின் தாகம்
தீர்வதேயில்லை


கண்ணீர் குளத்தில்
கனவு குமிழ்கள்
உடைய உடைய
குளம்
நிறைந்து கொண்டேயிருக்கிறது

உனது
நினைவுச் சரணாலயத்தில்
காத்திருக்கிறேன்
காற்றில்லாமல்
மூச்சுத்திணறுவது போல்
நீ இல்லாமல் தவிக்கிறேன்
கல்லறையாகும் முன்
வந்துவிடு



புதன், 9 ஜனவரி, 2019

தளர விடு
தடவி கொடுப்பதற்கு
நான் இருக்கிறேன்

உன்
நெளிவு சுளிவுகளை
மனம்
நீந்திக் களிக்கிறது

உள்ளம் கலக்கிறது
உதடுகள் துடிக்கிறது
விரல்கள் விடுதலை கேட்கிறது

காத்திருப்பு
ஏனென்று தெரியவில்லை
கதகதப்பு குறையவில்லை

காதல் தனது
அரிதாரத்தை மெல்லக்கூட்டி
ரூபம் மாற்றுகிறது

அழகியல் கூடுகிறது
ஆழம்
மெல்ல ஈர்க்கிறது

தயக்க உடை கலைந்து
தாவி என்னை அணைக்கிறது

தப்பிப் பிழைக்கவே
பழகிய மனது
தற்கொலைக்கு தயாராகிறது

கட்டி அணைக்கும் போதுதான்
கனவு கலைந்தது
கண்கள் நனைந்தது...

செவ்வாய், 8 ஜனவரி, 2019

வாழ்க்கை பிரவாகத்தில்
சிறு துளி நான்

அதில்
ஆனந்த கூத்தும்
துயரத் தாண்டவமும்
எனது அனுபவங்கள்

மகா அனுபவம்
எங்கேயோ கடலாக
காத்திருக்கிறது

எல்லோரும்
அங்கே சங்கமிப்போம்
இப்போதைக்கு
பயணிப்போம்...

    

சனி, 5 ஜனவரி, 2019

உன்னை காதலிப்பது பாவம்
உனக்கு நரகம் தான்
என்று சொன்னவர்கள்
தீர்க்கதரிசிகள்

நீ இல்லாமல் இப்போது
நரகத்தில் தானே வாழ்கிறேன்

உன்னிடம்
நான் கொடுத்த
இதயத்தையாவது
சொர்க்கத்தில் வாழவிடு
புறக்கணித்து விடாதே






வெள்ளி, 4 ஜனவரி, 2019

பிரிந்த பிறகுதான்
காதலின் அடர்த்தி
உணர்கிறேன்

உள்ளே செல்ல செல்ல
அதன் மையத்தை
அடையவே முடியவில்லை

காலம் கடந்து
என் காலம் முடிந்தாலும்
எனது ஆன்மா
அந்த
மையத்தை நோக்கி
பயணித்துக் கொண்டே
இருக்கும்


இந்த
பயணம் முழுவதும்
உனது நினைவுகள்
இதுவே எனது
பெரும் ஆனந்தம்...

புதன், 2 ஜனவரி, 2019

அவளின்
மந்திரப்புன்னகை

காயம் ஆற்றும்
காதல் கூட்டும்
மண்ணிலிருந்து
என்னை
மெல்ல தூக்கும்

தாபங்கள் ஊட்டும்
தாகங்கள் தீர்க்கும்
நெஞ்சுக்குள்
வானவில் வந்து
பூக்கும்

மேனி சிலிர்க்கும்
சிறகுகள் முளைக்கும்
காதினில்
இன்ப கீதங்கள்
சுரக்கும்

கண்கள் குளிரும்
ஆனந்தக்
கண்ணீர் நிறையும்
மனம்
பரிசல் ஏறி
பயணம் தொடரும்

கதவுகள் திறக்கும்
கனவுகள் பிறக்கும்
கற்பனை வில்லினில்
கவிதைகள்
தொடுக்கும்

இந்த
மந்திரப் புன்னகை தான்
என்னை
விட்டு விலகிவிட்டாள்
கொட்டும் மழை
நின்றதுபோல்
நிசப்தத்தில்
ஆழ்த்திவிட்டாள்...

செவ்வாய், 1 ஜனவரி, 2019

என்
மூளை சிலந்திக்கு
நானே உணவாகிறேன்

என்னை
சுற்றிச்சுற்றி பின்னிய
உன் நினைவு வலையில்
இறந்து கொண்டே
நிதம் வாழ்கிறேன்

நான் களவாடிய
உன் மனது தான்
என்னைக்
காத்து நிற்கிறது