கவிதை என்பது
முத்தம் போல
அது
இப்படி இருக்க வேண்டும்
அப்படி இருக்க வேண்டும்
என்று
எப்படி வேண்டுமானாலும்
பேசிக் கொள்ளுங்கள்
கவிதை என்பது
முத்தம் போல
தந்துவிட்டதன் பின்
விளக்கம் எல்லாம் வேண்டாம்
சிறு அமைதி வேண்டும்
அதிலிருந்து
பேரமைதிக்குப் போக...
கவிதை என்பது
யுத்தம் போல
சார்ந்தவரைத் தவிர
பிறர் யாவர்க்கும்
அர்த்தமில்லாமல் தோன்றும்
கவிதை என்பது
யுத்தம் போல
காயம்பட்ட இதயம்
ஆயுதம் இன்றி
இப்படியும்
தனித்துப் போராடும்...
சில நேரம் முத்தம்
சில நேரம் யுத்தம்
இன்னும் சிலசில என
சில நேரங்களில்
சில கவிதைகள்
ஒரு போல
ஒரு பொழுதும்
இருப்பதில்லை
ஒரு வரையறைக்குள்
சிறை படுத்தல்
அர்த்தமில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக