வலி தான்
தூரத்திலிருந்து வந்தமர்ந்து
இதயத்தில் காதலானது
வலி தான்
எனக்கே எனக்கானதாக
எண்ணியெண்ணி ஏங்கவைத்தது
வலி தான்
புழுவென ஊர்ந்துவந்து
மனதில் பட்டாம்பூச்சியானது
வலி தான்
துன்பமாய் இன்பமாய்
இருவேடம் பூணுவது
வலி தான்
யாவுமது நடத்தும்
நாடகம் தான்
வலி தான்
யாரோடும் பேசாது
என்னோடுமட்டும் பேசுவது
வலி தான்
பைத்தியம் ஆக்கியது
தெளிய வைத்தது
வலி தான்
போகும் மானம்
கிடைக்கும் ஞானம்
வலி தான்
போரைத் துவங்குவது
சமாதானம் செய்வது
வலி தான்
வினை ஊக்கி
வினை நீக்கி
வலி தான்
ஊட்டும் பால்
ஊற்றும் பால்
வலி தான்
பூக்கிறது
உதிர்கிறது
வலி தான்
கொண்ட உயிர்
கொண்டுபோகும் மரணம்
வலி தான்
வாழும் பேய்
சாகும் கடவுள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக