இரவும் பகலும்
ஒளியும் இருளும்
கட்டிப் புரளும் இணைகள்...
புல்லாங்குழலுக்குத் தெரியாது
தான் இசைப்பது
தீபத்திற்குத் தெரியாது
தான் சுடுவது
உனக்குத் தெரியாது
நீ என்னைக் கவர்ந்தது
எனக்குத் தெரியாது
என்னை நான் இழந்தது...
பெரும் காதலல்லவா
பெரும் காத்திருப்பல்லவா
பெரும் மௌனமல்லவா...
பொறு
கொஞ்சம் பொறு
இன்னும் கொஞ்சம் பொறு...
பூர்வ ஜென்மக் காதலி
எப்படி விடுவாள்
நிச்சயம் தொடுவாள்...
மூடுபனி...
இன்னும் கொஞ்சம் இழுத்துப் போர்த்தி
தூங்கச் சொல்கிறது இயற்கை
மௌனமாய் ரகசியமாய்
என்ன புத்தி இது
எழுந்து சென்று பார்க்கிறது
எதையும் நம்ப மறுக்கிறது
மூடுபனி சிரித்தது
மெல்லத் தொட்டணைத்தது
சமாதானம் செய்தது
குளிர்ந்த மனது
குட்டித் தூக்கம் போட்டது
போர்வைக்குள்...
மூடிய விழிக்குள்ளும்
வந்தது மூடுபனி
யாரையோ ஒளித்து நிற்கிறது
ஊடுருவிப் பார்க்கும் விழிகள்
பரிட்சையமானது தான்
என் சொர்க்க வாசல் தான்...
வலி தான்
தூரத்திலிருந்து வந்தமர்ந்து
இதயத்தில் காதலானது
வலி தான்
எனக்கே எனக்கானதாக
எண்ணியெண்ணி ஏங்கவைத்தது
வலி தான்
புழுவென ஊர்ந்துவந்து
மனதில் பட்டாம்பூச்சியானது
வலி தான்
துன்பமாய் இன்பமாய்
இருவேடம் பூணுவது
வலி தான்
யாவுமது நடத்தும்
நாடகம் தான்
வலி தான்
யாரோடும் பேசாது
என்னோடுமட்டும் பேசுவது
வலி தான்
பைத்தியம் ஆக்கியது
தெளிய வைத்தது
வலி தான்
போகும் மானம்
கிடைக்கும் ஞானம்
வலி தான்
போரைத் துவங்குவது
சமாதானம் செய்வது
வலி தான்
வினை ஊக்கி
வினை நீக்கி
வலி தான்
ஊட்டும் பால்
ஊற்றும் பால்
வலி தான்
பூக்கிறது
உதிர்கிறது
வலி தான்
கொண்ட உயிர்
கொண்டுபோகும் மரணம்
வலி தான்
வாழும் பேய்
சாகும் கடவுள்
நிழல் அவனைப் பிடித்துப் போகிறது
அவன் தடியைப் பிடித்துப் போகிறான்
தட்டித்தட்டிப் போகிறது தடி
இருவரையும் கூட்டிக்கொண்டு...
டக் டக் டக்...
கேட்கிறது
அதன் இதய ஒலி
மருந்தாக
மயிலிறகாக
குணமாக
என்றேதும் நினைப்பதற்கில்லை
குத்து வாலாக
வேலாக
அம்பாக
என்றேனும் என்னில் பாய
வேண்டிடும் இதயம்