நத்தை நிதானமாக
உலகைத் தொட்டுத் தொட்டு
ஒளிந்து விளையாடுகிறது
கனவாக
ஒரு முத்தை
தன்னுள்ளே வளர்த்தெடுக்கிறது
உன்னைத் தொட்டு ஒளிந்து விளையாடி
நானும் வளர்க்க விரும்புகிறேன்
ஒரு கனவு முத்தை...
கற்றது தமிழ்
கனவெல்லாம்
தங்க மீன்கள்
சமகால
சமமில்லாத
உலகின் ஒரு துளியாய்
தரமணி
எல்லாவற்றுக்கும் தீர்வு தேடிய
உன் அன்பிலிருந்து
பேரன்பு
இப்போது
ஏழு கடல்
ஏழு மலை
எங்கும் நீ தேடியதை
காணக் காத்திருக்கும்
நாங்கள்...
உன்னைத் தேடுபவர்கள்
உன்னில் தேடுபவர்கள்
என்றும்
ஓயாமல் ஓயாமல்
நீ தேடக் கிடைக்கட்டும்
அறிய பொக்கிஷங்கள்
தம்பி மலர்வண்ணனின்
அழகிய காட்சிக் கோர்வையில்
நம் இயக்குனர் ராம்...
https://www.facebook.com/share/v/1Dxs6mdGUF/
புசித்த வயிற்றில் கடவுள்
பட்டினி வயிற்றில் பேய்
அறியாத வயிற்றில் பைத்தியம்
மூன்று வேளை
மூன்று முகம்
முப்பரிமாணத் தத்துவம்
மீன் பிடிக்கக் கற்றுக் கொண்டேன்
பசி வந்தால் பிடிப்பேன்
மற்ற நேரத்திலெல்லாம் ரசிப்பேன்
ஒருபோதும் ஒருபோதும்
இனி வேலைக்கு வர மாட்டேன்
போ...
எப்போதும் மீன் கிடைக்குமா?
என்றுதானே கேட்டாய்
எப்போதும் உயிர்க்காற்று கிடைக்குமா?
ஏன் மௌனமானாய்
அதுபோலவே
கிடைக்கும்வரை கிடைக்கும்
போ...
குளம் வற்றினால்
நதி நாடிச் செல்வேன்
அதுவும் வற்றினால்
கடல் தேடிச் செல்வேன்
அதுவும் வற்றினால்
அப்போதும் தேடுவேன்
நீர் தேடும் மீன்கள்
எனக்கு வழி காட்டும்
மீன் எனக்கு தெய்வம்
பசித்து வேண்டினால்
தன்னையே ருசிக்கத் தரும்
துள்ளிக் குதிக்கும்
கடைசி நிமிடத்தைக்
கொண்டாடித் தீர்க்கும்
தெய்வத்தின் குதூகலம்
சாத்தானுக்கு பிடிக்காமல்
என்னுளிருந்து பாய்ந்த கணத்தில்
தெய்வம் இரண்டானது
சட்டியில் குழம்பானது
உண்டது நான்
எனினும்
கொன்றது சாத்தான் தான்
தெய்வத்திற்கு எல்லாம் தெரியும்
நாவில் அரூபமாய் நின்று
கூத்தாடிக் கொண்டாடி
என்னுள் பசியாற்ற
நீந்திச் சென்றது தெய்வம்...
எப்போதும் மீன் கிடைக்குமா?
என்றுதானே கேட்டாய்
எப்போதும் ஜீவக்காற்று கிடைக்குமா?
ஏன் மௌனமானாய்
அதுபோலவே
கிடைக்கும்வரை கிடைக்கும்
போ...
நண்பன் இருக்கிறான்
நட்சத்திரம் இருக்கிறது
தேன் இருக்கிறது
தேவதை இருக்கிறாள்
பகல் இருக்கிறது
பறவைகள் பறக்கிறது
இரவு இருக்கிறது
இமைகளை மூடுகிறது
மூங்கில் இசைக்கிறது
மௌனம் ஒலிக்கிறது
தேடல் தொடர்கிறது
தெய்வம் இருக்கிறது
வேறேதும் வேண்டுமெனில்
நீ போ
என்னை விடு...
எனக்குத் தெரியாதுதான் அன்று
உனக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்
உன்னைப் பிரிந்து தவிப்பேனென்று...
காட்டத் தெரியாத அன்பை
நீயும் கடந்ததன் வழி அறிந்திருப்பாய்
நான் கடக்கும்போது நினைக்கிறேன்
கடவுள் நம்பிக்கை இல்லாத நமக்கு
குல தெய்வம் தோன்றியது
இவ் வழியில்தானே தந்தையே... என் கடவுளே...
உழுதவர் உடைமை
யாவுமே இங்கு
உழுதவர் உடைமை
ஜீன்ஸ் முதல்
ஜி எஸ் எல் வி வரை
உழுதவர் உடைமை
உண்ணும் அன்னமும்
உடுத்தும் ஆடையும்
கிடைக்கும் இன்பமும்
காட்டும் ஈகையும்
இருக்கும் உறைவிடமும்
இயக்கும் ஊக்கமும்
படிக்கும் எழுத்தும்
பதவியும் ஏற்றமும்
மந்திரமும் ஐயரும்
காக்கும் ஒற்றுமையும்
கவியும் ஓவியமும்
குணமாக்கும் ஔடதமும்
உழுதவர் உடைமை
யாவுமே இங்கு
உழுதவர் உடைமை
அவரைப் போற்றுதலே
நம் முழுமுதற் கடமை
மாற்றுத் திறனாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் சமூகத்தில் தொடர்ந்து நடக்கும் பாலியல் குற்றங்கள்.
அதற்கு எதிராக காவல்துறையும், நீதித்துறையும் சட்டத்திற்கு வணங்கி எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் வழங்கப்படும் தீர்ப்புகள்.
இவற்றிற்கு எல்லாம் இணங்காமல் குற்றம் இழைத்தவர்களை உயிரோடு கழுவில் ஏற்றவும், அத்துமீறியவனின் உறுப்பை அறுத்துக் கதறக் கதற தலைகீழாகத் தொங்க விடவும் வேண்டுமென நினைக்கும் அநீதிக்கு வணங்காத உள்ளங்கள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.
அத்தகைய உள்ளங்களைப் பிரதிபலிக்கும் நல்லதொரு திரைப்படத்தை தனது தனித்துவமான பாணியில் சிறப்பாக படைத்திருக்கிறார் இயக்குனர் பாலா.
இதுபோன்று சமூக அக்கறை கொண்டு எடுக்கப்படும் நல்ல படங்களை நாம் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து வெற்றிப் படமாக்குவது சமூகக் கடமை அல்லவா...
"வணங்கான் - பார்ப்பவர்கள் கண்களுக்கு நிச்சயம் கண்ணியத்தை வழங்குவான்"
காற்றில் கரைந்து
போவது தானே
பாடல்...
காத்திருந்து காத்திருந்து
காலமாகிப் போவதுதானே
இந்த பூதவுடல்
காற்றில் கலந்து போனாலும்
காலமாகிப் போனாலும்
இசை வானில்
எப்போதும் ஒளிரும்
ஜெயச் சந்திரன்
பூ விழுந்தக் கண்களிலே
நீ பூச் சூட்டிய நினைவுகள் மட்டும்
வாடாமல் மணம் வீசும்...
சொர்க்கம் போகும்
பாதையெங்கும் பூத்துக் குலுங்கும்
நின் நினைவுகள்...