சனி, 31 ஜூலை, 2021

 


நிழல் என்று தெரியாமல்
நிஜம் தினம் வந்து
காத்திருக்கும்...

வெள்ளி, 30 ஜூலை, 2021

 


இலை உதிர்கிறது
இறகு உதிர்கிறது
கிளையும் அறியவில்லை
சிறகும் அறியவில்லை
நானும் அறியவில்லை
எது உதிர்கிறது...
இலையும் கிளையும்
இறகும் சிறகும்
நானும் நீயும்
அறியாத வரையில்
நெருங்கி இருக்கும் உயிர்...


வியாழன், 29 ஜூலை, 2021

 


பழகும் வரை
குரைக்கும் நாய்கள்
பழகிய பின்
கத்தும் மனிதர்கள்


புதன், 28 ஜூலை, 2021

 


தூங்காத குழந்தையுடன்
விளையாடும் தெய்வம்
குழந்தை தூங்கியதும்
என்ன செய்யும்...


செவ்வாய், 27 ஜூலை, 2021

 


2000 ரூபாய் நோட்டிலும்
காந்தி அவசியம்தானா?
மூட்டை தூக்கும் தொழிலாளி
தூக்க முடியாத நோட்டு...
கீரை விற்க்கும் பாட்டிக்கு
சில்லரை தர இயலாத நோட்டு...
கள்ளப் பணத்திற்கு
கச்சிதமான நோட்டு...
சிலருக்காக சிந்திக்க
சின்ன அரசாங்கம் போதுமே!


திங்கள், 26 ஜூலை, 2021

 


மழைத்துளி இலையில் பட்டு
சிதறுகிறது சில நினைவுகள்
உதிர்ந்த பூக்கள் இலைக்கு
பிரிந்த நீ எனக்கு...


ஞாயிறு, 25 ஜூலை, 2021

 



போகும் தூரம் தெரியாத போது
சரியான பாதைதான் ஏது?
ஒவ்வொரு பாதச்சுவடும் முடிவு
ஒவ்வொரு பாதச்சுவடும் தொடக்கம்...


சனி, 24 ஜூலை, 2021

 


முதலில் போகிறவர்களை
முந்திப் போகிறவர்களை
பரிதாபமாகவும்

முதலில் வருபவர்களை
முந்தி வருபவர்களை
அபரிமிதமாகவும்

பார்த்துப் பழக ஆரம்பித்தது
எப்போது என்றே தெரியவில்லை
இதுவரையில்...

மரணமும் ஜனனமும்
உடலுக்கு ஒருமுறை
மனதிற்கு பலமுறை...


வெள்ளி, 23 ஜூலை, 2021

 


மலை இறங்கி ஓடி வந்த நதியில்
நிரம்பி இருக்கிறது மலையின் நினைவுகள்
யார் கலைத்தாலும் கலைவதில்லை...


வியாழன், 22 ஜூலை, 2021

நத்தை

 



செடியிலிருந்து ஒரு மலர்
மெல்ல இறங்கிப் போகிறது
உறவுகளிலிருந்து உதிர்ந்து
தனிமையில் மட்டும் மலர்ந்து...

கண்களை ஈர்க்கிறது
பேசாததையும் கேட்கிறது
புத்தரைப் போல மௌனத்தை
ஞான உபதேசம் செய்கிறது

காத்திருந்து காலம்
காற்று வேகத்தில் பாய்கிறது
கடந்து போனது மலரல்ல
நந்தவனத்து மாயோன்

முதுகில் சிலுவை
சுவடெங்கிலும் இரத்த வைரச்சரிகை
நில்லாது ஏற்றும் பாவச்சுமை
இல்லாது போகும் இறை...


புதன், 21 ஜூலை, 2021

 


கற்றுக் கொடுக்க வருபவர்கள் தான்
குழந்தைகள்
அவர்கள் முத்தம் கொடுக்கையிலும் அது தெரிகிறது...

செவ்வாய், 20 ஜூலை, 2021

 


எட்டுப் புள்ளியில் முத்தம் வைத்து
எட்டாத தூரத்தில் தன்னை வைத்து
உரு இல்லாத இறைவனில் இல்லாமல் போகிறார்...


திங்கள், 19 ஜூலை, 2021

 


மழைக் காலத்து மரணம்
நேரம் பார்த்து தன்னையே விதைத்தான்
அந்த விவசாயி...
இந்த பூமி செழிக்கும்


ஞாயிறு, 18 ஜூலை, 2021

 


ஆண்டுக்கு ஒரு முறை
சில கொலைகளைச் செய்கிறது
உயர்கல்வித்துறை
நாளைக்குத் தான்
அந்த கொலைநாள்
அதில் தேர்வாவது எல்லாம்
ஒரு வெற்றியா...
தன்னையே கொடுக்கும்
கர்ணன்களைத் தான்
இந்தச் சமூகம் குருதி கேட்கிறது





 



அன்னை வளர்ப்பில் வளந்த
பிள்ளை இல்லை நான்
அவன் மறைந்துவிட்டான்
எங்கோ தொலைந்துவிட்டான்
ஆங்காங்கே மறைந்து நின்று பார்ப்பான்
நான் அன்னையை
நேரில் நின்று பார்ப்பதுபோல்...
என் நண்பன் இப்போது
அன்னை இல்லாமல் பார்ப்பதுபோல்...
அவள் எப்போதும் இருக்கிறாள்
நாம்தான் இல்லை
அன்னை வளர்ப்பில் வளர்ந்த
பிள்ளைகள் இல்லை நாம்
அவர்கள் அப்போது பெரிய சுகவாசி...


சனி, 17 ஜூலை, 2021

 



மழையும் இருக்கிறது
குடையும் இருக்கிறது
நீ இல்லையே...


வெள்ளி, 16 ஜூலை, 2021

 


என் மனநிலை சரியில்லாத போது
கோமாளி ஆகிவிடும் நண்பர்கள்
என் கனவுலகில் ஏராளம்


வியாழன், 15 ஜூலை, 2021

 


நான் மரித்து
கவிதை ஆகிறேன்
கவிதை மரித்து
நான் ஆகிறேன்...
தொடர்ந்து மரிக்கிறேன்
நீயில்லாமல்
வேறென்ன செய்வேன்...


புதன், 14 ஜூலை, 2021

 


கதவுகளை நீ திறக்கும் போது
உனக்காக என்று நீயும்
எனக்காக என்று நானும்
தனக்காக என்று கதவும்
தலையசைத்த தருணத்தில்
காற்று இரண்டு கட்டிக்கொண்டு
ஒன்றானது...
உன்னை நான் கட்டிக்கொள்ள பார்க்கிறேன்
கதவை நீ கட்டிக்கொண்டு சிரிக்கிறாய்
சட்டமிட்ட உன் புகைப்படங்களை
கண்களில் புகைப்படம் எடுக்கிறேன்...


செவ்வாய், 13 ஜூலை, 2021

 



ஏதோ ஒரு கரம்
பிய்த்து எறிகிறது
ஏதோ ஒரு கரம்
வளர்த்து எடுக்கிறது
உன் கரம்
இரண்டும் செய்கிறது
சருகாகிறேன்
துளிராகிறேன்
உருமாறியே
உயிர் வாழ்கிறேன்...

திங்கள், 12 ஜூலை, 2021

 


இல்லாத ராமனுக்கு கோவில்
வீடில்லாமல் எத்தனையோ
ராம்-லட்சுமணன்கள் வீதியில்...


ஞாயிறு, 11 ஜூலை, 2021

 


பொருளா?
தாரமா?
பொருளாதாரம்

இரண்டும் துறந்தவன்
அவதாரம்
புத்தன்

அம்மணம்
அவன் அலங்காரம்
கழற்றி வைத்த அகங்காரம்

இயற்கை
அவன் கூடாரம்
செய்வதில்லை அதனை சேதாரம்

பஞ்ச பூதங்கள்
வாழ்வாதாரம்
தேவைதானா இந்த பொருளாதாரம்...


சனி, 10 ஜூலை, 2021

 


பூக்கள் ஆகிடத் துடிக்கும்
வண்ணத்துப்பூச்சிகள்
வண்ணத்துப்பூச்சி ஆகிடத் தவமிருக்கும்
பூக்கள்
இரண்டும் ஆகிடத் தவிக்கும்
மனது
ஒன்றாய் இருந்து பார்க்கும்
இதயம்
எல்லாம் வந்தது
ஒன்றுமிலாததிலிருந்து...
ஆமாம்
இப்போது ஒன்றுமில்லாது போனது...
மீண்டும் பூக்கள்
மீண்டும் வண்ணத்துப்பூச்சி
மீண்டும் மனது
மீண்டும் இதயம்
மீண்டும் வெற்றிடம்...


வெள்ளி, 9 ஜூலை, 2021

 



எழுதி முடிக்காமல் சென்றுவிட்டாள்
ஏக்கத்தோடு காத்திருக்கிறது வார்த்தைகள்
அர்த்தமற்று...


வியாழன், 8 ஜூலை, 2021

 


மரண வலிதான்
என்னை அங்கிருந்து கூட்டிவரும்
கருணைக் கரமும் நீதான்...


புதன், 7 ஜூலை, 2021

பாடல் 5

 


( ஆண் - 1 ; பெண் - 2 )

1
நீதான் அடி நீதான்
அடி நீதானே பெண்ணே
ஒரு வார்த்த சொல்லிப் போன...

வெயிலோடு நின்னு
நீ உறவாடச் சொன்ன
அதனால நானும் நின்ன...

கண்ணாலத் தாண்டி
நீ கொல்லாமக் கொன்ன
உசுரோட என்னத் தின்ன...

2
மாமா என் மாமா
நீ பழி சொல்லலாமா
என் உசுரே அது உனக்காகத்தான்...

வேணா இது வேணா
நீ வெயிலோடு நின்னா
தாங்காது இந்தக கண்ணு...

நினவோ இது கனவோ
அட எதுவானா என்ன
நான் விளையாட்டா தானே சொன்னேன்...

1
நீதான் அடி நீதான்
அடி நீதானே பெண்ணே
என் உசுரும் அது உனக்காகத்தான்...
2
நீ பசி ஆற வேணும்
என் மடி சாய வேணும்
நீ தூங்க நான் ரசிக்க வேணும்...
1
பசி தூக்கம் போச்சு
பல நாளு ஆச்சு
பறந்தோடி வாடி புள்ள...
2
உன் நினைவோடு தானே
உயிர் வாழ்கிறேனே
தன்னால வருவேன் நானே...
1
என் உசுரே அது உனக்காகத்தான்...
2
என் உசுரே அது உனக்காகத்தான்...
1&2
என் உசுரே அது உனக்காகத்தான்...


செவ்வாய், 6 ஜூலை, 2021

 



உன் நினைவுக் குளத்தில்
கல் எறிந்தது நீயா?
சிதறும் நினைவிலும் நீ...
உன் நினைவுக் கடலில்
குளம் சில திவலைகள்
உன் நினைவு வானில்
கடல் சில திவலைகள்
உன் நினைவில்
வானம் சில திவலைகள்...


திங்கள், 5 ஜூலை, 2021

 


மொட்டைப் பனை மரத்தில்
தின்று கொழுத்த பேன்கள்
காண்டாமிருகமென பெருத்து அலைகிறது
அது ஒற்றைப் புலிக்கு பயந்த காடு...


ஞாயிறு, 4 ஜூலை, 2021

 


தெரியாத தடத்தில் தான் பயணம்
அறியாத இடத்தில் தான் உறவு
புரியாத செய்கையே அன்பு
புரிகின்ற தருணமே மரணம்

புதிதாக பார்ப்பதே அறிவு
மறக்காமல் இருப்பதே பிரிவு
மறைவாக இருக்கும் ஞானம்
பொதுவாக இருக்கும் வானம்


சனி, 3 ஜூலை, 2021

 


நேற்றுவரை தெரியாது இன்று
இன்றுவரை தெரியாது நாளை
நாளைவரை தெரியாது நேற்று
இறுதிவரை தொடர்கிறது கூத்து...


வெள்ளி, 2 ஜூலை, 2021


அலைகள்
சில துளிகள் கண்களில் கொடுத்து
கடலென எடுத்துச் செல்கிறது...


வியாழன், 1 ஜூலை, 2021

 


என்னோடு
படுத்து உறங்கும் நிழல்
நான் எழும் போது
எழுந்து விடுகிறது

செருப்பு இல்லாமல்
வெயில் சுட்டு
நான் தாவிக் குதிக்கையில்
நிழலும் தாவிக் குதிக்கிறது

நீ இல்லாமல்
நான் அழுகிறேன்
நிழலும் அழுகிறது
நிழல் ஈரமாக இருக்கிறது...

ஆனால்
இப்போது எனக்காக இல்லை
உன் நிழலுக்காக அழுகிறது...