குருவி மாதிரி
குட்டிக் கவிதைகள்
பருந்து மாதிரி
பெரிய கவிதைகள்
என்றேதும் கிடையாது
வானத்தில் வாழும்
நிமிடங்கள் எல்லாமே
கவிதைகள் தான்
சிலந்தி வலைக்கும்
பறவை கூட்டிற்கும்
இடம் தரும்
குடிசை வீடுகள்
கவிதை தான்
கிறுக்கு
கொஞ்சம் இருந்தாலே
கவிதை தான்
செருப்பு
அறுந்து போகாதவரிடம்
செருக்கு
அறுந்து போகாதிருக்கும்
சந்தேகம் என்றால்
சொல்லிப் பார்
உன் செருப்பறுந்த சங்கதியை
விருந்துண்ட
அவன் காதுகள்
மெல்லச் சிவக்கும்
உன் கண்களுக்குத் தெரியாமல்
அது
அப்படித்தான் சிரிக்கும்
எதுவும் முளைப்பதற்கு
காலம் அவசியம்
காத்திருந்தால்
சம்பவங்கள் மீது
சொற்கள் முளைக்கும்
காத்திருந்தால்
சொற்கள் மீது
கவிதை முளைக்கும்
காத்திருந்தால்
மின்னல் முளைக்கும்
சொற்கள் முளைக்கும்
கவிதை முளைக்கும்
காத்திருந்தால்
காதல் முளைக்கும்
தாடி முளைக்கும்
கவிதை முளைக்கும்
காத்திருந்தால்
கனவு முளைக்கும்
இரவு விழிக்கும்
கவிதை முளைக்கும்
விளையாட
நேரம் பார்த்து
காத்திருந்தது
விடுமுறைக்கு
தேதி கிழித்து
காத்திருந்தது
வாடகைக்கு
சைக்கிள் எடுக்க
காத்திருந்தது
நெல்லிக்காய்கள்
காய்க்கும் வரை
காத்திருந்தது
ஒலியும் ஒளியும்
பார்க்க பக்கத்து வீட்டில்
காத்திருந்தது
நிலவைப் பாம்பு
முழுங்கக் காணக்
காத்திருந்தது
தீபாவளிக்கு
பட்டாசு வாங்கி
காத்திருந்தது
புத்தாடை வாங்க
டெய்லர் கடையில்
காத்திருந்தது
கறிக்குழம்பு
ஆகும் வரை
காத்திருந்தது
ரஜினி படம்
முதல் நாள் பார்க்க
காத்திருந்தது
கல்லூரிக்கு
பள்ளி நாட்களில்
காத்திருந்தது
நண்பனுக்கு
கடைத் தெருவில்
காத்திருந்தது
காதலிக்கு
எந்த நேரமும்
காத்திருந்தது
முதல் சம்பளத்தை
வாங்கி எண்ணக்
காத்திருந்தது
முழுச் சம்பளத்தை
அம்மா கையில் கொடுத்து
காத்திருந்தது
காத்திருந்தது எல்லாமே
கனவு ஆனது
கவிதை ஆனது
கல்யாணம்
ஆகும் வரை
காத்திருந்தது
பிறகு
காத்திருக்க முடியாமல்
மாறிப் போனது
குறித்த நேரத்தில்
குறித்த எல்லாமும்
நடக்கச் சொன்னது
குறி தவறிடாது
இருப்பதற்கு
இலஞ்சம் புகுந்தது
கூவம் நதி
நாறும் படி
விதி மாறியது
குப்பை மேடுகள்
வசதிக்கேற்ப
இடம் மாறியது
காத்திருக்காத
ஒரு கூட்டத்திற்காக
உலகம் மாறியது
சிறகுகள் இல்லாத
வானம் செல்லாத
பறவையானது கவிதை
கவிதை மாறியது
கலவரம் ஆகியது பூமி
வேடிக்கை பார்க்கிறது சாமி
கண்ணுக்கு தெரியாமலிருந்து
வாழ வைத்தது
அன்று சாமி
கண்ணுக்கு தெரியாமலிருந்து
வாழ்வை அழிக்கிறது
இன்று கிருமி
சாமியும் கவிதை
கிருமியும் கவிதை
நாளையும் கவிதை
கிறுக்கு
கொஞ்சம் இருந்தாலே
கவிதைதான்...