வியாழன், 31 அக்டோபர், 2019

பணத்தைப் பெருக்குவதும்
குப்பையைப் பொறுக்குவதும்
மகிழ்சியை அனாதை ஆக்குகிறது

புதன், 30 அக்டோபர், 2019

கவிதைகள்
என் வழி வந்து
இறங்கையில்
நம்பத் தோன்றுகிறது
சாமி
சிலரில் வந்து
இறங்கும் என

சாமி இறங்கியவன்
இறந்து விடுகிறான்
வேறு ஒருவனாய்
பிறந்து விடுகிறான்

பிறந்தவனுக்கு
சாமி
கற்ப்பிக்கப் படுகிறது

தன்னை உணர்ந்தவனை
உயிர்பலி கேட்கும் சாமி
அறிந்தவனுக்கு மட்டும்
அடைக்கலம் கொடுக்கிறது

சொர்க்கத்தில் வாழ்பவர்கள்
இதயத்தில் இருக்கிறார்கள்
நரகத்தில் வாழ்பவர்கள்
கண்ட இடங்களில் எல்லாம்
இருக்கிறார்கள்

அடைக்கலம் சிறை
உயிர்பலி சுதந்திரம்

பறந்துத் திரிபவர்கள்
வணங்குவது இல்லை
வணங்கும் கைகள்
பறப்பது இல்லை


மூளைகளின் முயற்சி
ஒரு குழந்தையைப் புதைத்தது
இதயங்களின் முனைப்பு
ஒரு ஆட்டுக்குட்டியை மீீீட்டது



செவ்வாய், 29 அக்டோபர், 2019

பத்து லட்சம் என்பதால்
பரிதாபமாகிப் போனாயோ...

பல ஆயிரம் கோடிகளெல்லாம்
பகட்டாய் உலவுகிறது
பல நூறு தவறு செய்து

வெறும் கையுடன் பிறந்த
ஒரு குற்றத்திற்காகவே
இங்கு பலர்
கொல்லப்படுகிறார்

இரண்டு கைகளில்
கிடைப்பது போதும்
ஒரு கைக்கும் கிடைக்காமல்
பறிப்பது பாவம்

பேராசையால்
பறிக்கும் குழிகளில் தான்
எத்தனைச் சடலங்கள்...

எவர் சேர்த்துவைத்த
ஒவ்வொரு பத்து லட்சமும்
ஒரு படுகொலை

எந்த
சட்டமும் பேசாது
சாமியும் பேசாது

பல்கிப் பெருகிக்
கொழுத்தப் பணக்காரர்களே
உங்களுக்கு
ஒருபோதும் கூசாதா

வலி
வரும்போது மட்டும் உணரும்
உங்கள் இதயம்
பிறர் வலி பற்றிப்
பேசாதா...

திங்கள், 28 அக்டோபர், 2019

சுர்ஜித்

88 அடிக்குள்
இறங்க முடியாதவனா
கடவுள்

6 அடிக்குள்
இறங்கிய நீதான்
கடவுள்

மூடி விடுங்கள்
எல்லாச் சவக் குழிகளையும்
3 நாட்களில்
உயிர்த்தெழுவான்...

மூன்று நாட்களாய்
சூரியன் வந்தும்
விடியல் இல்லை

சுர்ஜித்
வந்து விடியட்டும்
நாளை...

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

தண்ணீர்
விலையாகிப் போனது
கண்ணீர்
மதிப்பில்லாமல் போனது

நிலாவில்
நீர்த் தேடுகிறார்கள்
குழாயில்
குழந்தைத் தவிக்கிறது

 கண்கள்
மூடாமல் காத்திருக்கிறோம்
கடவுள்
இருக்கிறாரா பார்த்துவிடுவோம்

சனி, 26 அக்டோபர், 2019

எவர்
மண்ணிலும் நெஞ்சிலும்
ஈரமில்லை

குழிப் பறிப்பதற்கு
பழகிவிட்ட சமூகம்
பணத்தை மட்டுமே
பூட்டி வைக்கிறது

தலைக் கவசம்
விற்க்கச் சென்றுவிட்டாள்
எங்கள் நீதி தேவதை

ஆழ்குழாய்க் கிணறுகள்
கீழே இருப்பதால்
அரசியல்வாதிகள் அதிகாரிகள்
நேர்கொண்டப் பார்வையில்
விழாமல் போனது

விளம்பரம் தேடும்
பணியின் ஊடாக
பெரும் மனதோடு
உறவாடும் ஊடகங்கள்

இளைஞர்கள் எல்லோரும்
மேலேத் தூக்கிக்கொண்டு இருக்கிறார்கள்
ஏதோவொரு கதாநாயகனை

தலை குனிந்து
நிற்பது வீண்
தேடுதலோ தேர்தலோ
நாம் தேடுபவர்கள்
ஆழ்குழிக்குள்...

வெள்ளி, 25 அக்டோபர், 2019

நான்
என்ற சிறு கனவு
எப்போதோ முடிந்திருக்கும்

நீ
வந்து சேர்ந்ததால்
இன்னும் தொடர்கிறது...

நான் வளர்ந்து
நாம் ஆனது
பெருங்கனவு

வியாழன், 24 அக்டோபர், 2019


பறவைகளும் பூச்சுகளும்
பாடசாலை போவதில்லை
வண்ணத்துப்பூச்சிகளும்
தேவசாலை போவதில்லை
மண்ணில் உயிரோவியமாய்
விவசாயம் செய்துவிடும்
விளையும் யாவையுமே
பொதுவென்று விட்டுவிடும்
சாலையிட்டு வாழும் நீயோ
விஷச்சாயம் மண்ணிலிட்டாய்
சுணக்கமின்றி தந்த மண்ணை
இரக்கமின்றி கொன்றுவிட்டாய்
புழுவாய் பூச்சாய்
மாறும் மனிதா
உணவு ஊட்டி
வளர்த்த உன்னை
இறந்தும் மீண்டும்
உணவாய் உறவாய்
உன் முன்னோர் தானே
காணும் இயற்கை

புதன், 23 அக்டோபர், 2019

அழகில் மயங்கி அமர்ந்தேன்
தேனில் மயங்கிப் பறந்தேன்
மலரைக் காணவில்லை
மயக்கம் தேடுகிறேன்...

செவ்வாய், 22 அக்டோபர், 2019

சுமை

சுருண்டு போன
வெண்முடி கண்டதும்
சுருட்டி வைத்தனர்
பாயைப்போல மூலையில்

எப்போதாவது
விரித்து வைப்பர்
விசாலமாய்
வீட்டில் விருந்தினர்
வரும்போது

நாட்கள்
இப்படியே போனது
முகத்தில்
சுருக்கங்கள் பலவானது

மேலோட்டமாய்
சிலர் பார்த்துவிட்டுக்
கூறினர்...
முகத்தில்
சுருக்கங்கள் அதிகமென்று
மன
இறுக்கங்களைக் காண
இயலாது போனதால்

யார்
வந்து சென்றாலென்ன...

சுழலும்
காற்றாடிக் காற்றினில்
புரளும்
நாட்காட்டி வரிசையில்
இவள் கண்கள்

அந்த
மார்கழி மாதத்தின்
மரண தினத்தை
எண்ணியவாறு...

திங்கள், 21 அக்டோபர், 2019

என்னை நான் அறிவேன்
அந்த உன்னதமான தருணத்திலே...
சிந்தை நீ

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

நட்சத்திரங்களே இல்லாத வானத்தில்
நிலவின் சோகம்
நிரம்பி இருக்கிறது

சனி, 19 அக்டோபர், 2019


இட்லி
வெந்து கொண்டு இருக்கும்
இருந்தும் பிள்ளை
அழுது அடம் பிடிக்கும்
அம்மாவிடம்

நீ
வந்து விடுவாய்
இருந்தும்
அழுது புலம்புகிறேன்
தனிமையிடம்

வியாழன், 17 அக்டோபர், 2019

நதி சுமந்து செல்லும்
ஒளியைப் போல
உன் நினைவுகளோடு நான்

புதன், 16 அக்டோபர், 2019

நிலவு
தேடிப் பார்க்கிறது
படித்துறையில்...

பகலெல்லாம் உன்னைத்
தேடி அலைந்து விட்டு
உறங்கிப் போனானோ

இல்லை
நீ தோன்றி இருப்பது
அவன் கனவிலா...

செவ்வாய், 15 அக்டோபர், 2019


சுவாசம் இல்லை
உணவு இல்லை
உடை இல்லை
மொழி இல்லை
மதம் இல்லை
ஜாதி இல்லை
கண்ணீர் இல்லை
சிரிப்பு இல்லை
பொறாமை இல்லை
கோபம் இல்லை
ரத்தம் இல்லை
காதல் இல்லை
காமம் இல்லை
நம்ப முடியவில்லை
இது என் நிழலா...

திங்கள், 14 அக்டோபர், 2019

அவன்
ஏக்கம் தாங்காமல் எங்கள்
இலைகள் எல்லாம் இறங்கியது

நீ
இறங்க மாட்டாயா
வெண்ணிலவே

மண் பிடித்துள்ள எங்களை
அவன் பித்து பிடிப்பதற்குள்
வந்துவிடு
ஏழைப் படும்
பாடு எல்லாம்
பணக்காரர் ஆக்காதா

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

காத்திருப்புகள்
அழகாகவே தொடங்குகிறது
விடியலைப் போல

நேரம் கூடக் கூட
வாடிப் போகும்
பூவினைப் போல

ஆறுதலாய்
உன் கனவு வரும்
நிலவினைப் போல

கண் விழித்தால்
விடியல் வரும்
வழக்கத்தைப் போல...




சனி, 12 அக்டோபர், 2019

நிலவு:
நான் உன்னைப் பார்க்கத்தான் வருகிறேன்
ஆனால் நீயோ
நான் போகும் வரை
உன் இமைகளைத் திறப்பதே இல்லை

நான்:
என் இமைகள் மூடிய
இரவுக்குள் தான்
நீ இருக்கிறாய்

வெள்ளை ரோஜா

மொத்த சிவப்பையும்
உறிஞ்சி எடுத்ததொரு
முத்தம்

வியாழன், 10 அக்டோபர், 2019

தேனீர் கோப்பையினில்
தினம் உந்தன் நினைவுகள்
அருந்துகிறேன்...

புதன், 9 அக்டோபர், 2019

மூன்று நாட்கள்
சுவாசத்தைத் தந்து சென்றாய்
காலம் முழுவதும் வாழ்வதற்கு...

செவ்வாய், 8 அக்டோபர், 2019

ஷேடோ...

அவள் இனிமையானவள்
முழுமையானவள்

முன்னிருந்து இழுப்பவள்
பின்னிருந்து மேய்ப்பவள்

விஸ்வரூபம் எடுப்பவள்
என்னைத் தாங்கி நடப்பவள்

பாதம் குத்த பாயும் முள்ளின்
மீது பாய்ந்து விழுபவள்
அவள் காயம்கொண்டு ரத்தம்
நனைக்க என்னில் வலியின் யுத்தம்

எப்போதும் என்னைத் தொடர்பவள்
இருட்டில் ஒளிந்து ரசிப்பவள்
நான் துயில போர்த்தி அணைப்பவள்

என் உதட்டை நானே கடித்தேனா
உன் இதழின் தேனைக் குடித்தேனா
நிழல் உந்தன் மாயங்கள்
நிழலுலகின் மர்மங்கள்

எரித்தாலும் புதைத்தாலும்
இறுதிவரை தொடர்ந்து வரும்
நிழல் அவள்

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
எனக்காகவே பிறப்பவள்

அவள் நிஜப் பெயரை
வெளியில் சொல்வதில்லை
அவள் பெயர் கூட என்னை
விட்டு வெளியேறிட விரும்புவதில்லை

அவள் நிஜம் வாழும் என் இதயம்
அதனால் தான் எனக்கு உதயம்

நிஜங்கள் பிரிந்த போது எங்கள்
நிழல்களைப் பகிர்ந்து கொண்டோம்
தினம் உதயம் எங்களைப் பார்க்கிறது
நாங்கள் நிழலைப் பார்த்தே வாழ்கிறோம்

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

உன்னையே உலகமாக நினைத்தேன்
வளர்ந்து வளர்ந்து
உலகமே நீயாகிப் போனாய்

வற்றிய நதியில் கற்கள்

பாறை மனம் உடைந்து
உன்னை வரைகிறது

கானல் நீர் வடித்து
ஜீவநதி உயிர்க்கிறது

உன்
நெளிவு சுழிவுகளை
மனம்
நீந்திக் களிக்கிறது

சனி, 5 அக்டோபர், 2019

பச்சையிலிருந்து நீலத்திற்கு
ஒரு பயணம்
வாழ்க்கை
தனிமையின் விரல் பிடித்து
அழைத்துச் செல்கின்றன
நினைவுக் கரங்கள்

புன்னகையால் கிள்ளிவிட்டு
கண்ணீரில் மூழ்கச் செய்யும்
விசித்திரக் கரங்கள்

எந்த வயதிலும்
நடைபழக ஏந்திச் செல்லும்
நம்பிக்கைக் கரங்கள்

பழகிய நடையை
கைபிடித்துக் கூட்டிச் செல்லும்
மாயக் கரங்கள்

உன்னை உதறிவிட்டு
நடந்து திரிகின்றன சில
நடைப் பிணங்கள்

இரவைத் தவறவிட்ட
விட்டில் பூச்சிகள்
வெளிச்சம் தேடியே
மாய்த்துக் கொள்கின்றன 

வியாழன், 3 அக்டோபர், 2019

மூழ்கும் போது
சிலர் இறக்கிறார்கள்
சிலர் பிறக்கிறார்கள்

செவ்வாய், 1 அக்டோபர், 2019

அரை ஆடையின் பொன் சிரிப்பு

பெரும்பான்மையான மக்களின்
பிரதிபலிப்பு தலைவன்
உன் சிரிப்பில்
பார்க்க முடிகிறது அந்த
கள்ளம் கபடம் அற்ற மக்களை


இன்று
இந்தியாவின்
அரை நிர்வாணத்தை
ஆடம்பர ஆடை கொண்டும்
அறை நிர்வாணத்தை
ஆடம்பர மாளிகை கொண்டும்
மறைத்து விட்டார்
எங்கள் தலைவர்
எங்கள் பிரதிபலிப்பு...


உன்
அரை நிர்வாணத்தின்
அர்த்தம் விளங்காதவர்கள்
அந்த
முழு நிலவின்
ஆடை அவிழ்க்கிறார்கள்


பெரும்பான்மை
சிறுபான்மையை
மறைத்துவிட்டதா...
மறந்துவிட்டதா...


உத்தமர் உன்னை
மறைத்தார்களா...
மறந்தார்களா...


எத்தனை
நாடுகளுக்கு சென்றாலும்
மீட்டுவர முடியாது
உலக வங்கியிலும் கிடைக்காது
அரை ஆடையின்  பொன் சிரிப்பு