கொடுத்ததை வைத்து வாழும் பறவை
இறைவனை வேண்டுவதில்லை
இருசிறகினை ஏந்திப் பிழைத்து
பாரங்கள் சேர்ப்பதில்லை
மழைச் சாரல்
கையைப் பிடித்து இழுக்கிறது
உடல் பணிச் சுமையால்
தயங்கி ஒதுங்கி இருக்கிறது
மனம் குழந்தையாகி
ஜன்னல் தாண்டிக் குதிக்கிறது
நீர்க் குமிழி கப்பல்களை
தள்ளிவிட்டு ரசிக்கிறது
மின்னல் கயிறுகளை
எட்டித் தாவிப் பிடிக்கிறது
சட்டெனவே கயிறறுந்து விடுகிறது
தொப்பெனவே குழந்தை மனம் விழுகிறது
மழையைக் கட்டிப்பிடித்து
இங்கும் அங்கும் புரள்கிறது
தள்ளி நிற்கும்
இந்த உடல் ஏனோ நடுங்குகிறது...
கையைக் கூட நனைக்காமல்
கண்கள் மட்டும் நனைந்து
பார்த்துக்கொண்டு இருக்கிறது
மனக் குழந்தையின் சேட்டைகளை...
ஒன்பது விலாசம் மாறிவிட்டது
என்னை நிறைய மாற்றிவிட்டது
மாறிக் கொண்டும்
மாற்றிக் கொண்டும் இருப்பதால்
வந்த குழப்பம்
தற்போதைய தற்காலிக முகவரியை
குறிப்பெடுத்துக் கொள்கிறது
உடனுக்குடன் தருவதற்கு
தாமதமாகத் தந்தால்
பழைய முகவரியாய்
மாறக்கூடும்
முகவரிகள் மாற மாற
முக வரியும் மாறிவருகிறது
தலை வரிகள் இப்படித்தான் எனில்
தலை குனிந்தாவதுதான் ஏது?
தலை நிமிர்ந்தே நடந்திடுவேன்
தரணியிலே எனக்குச் சொந்த முகவரிகள்
இரண்டு உண்டு
அன்னை மடி ஒன்று
மண்ணின் மடி இன்னொன்று
கதவெண்கள் இல்லாததால்
வாடகையும் வாங்கவில்லை
இருந்தும் என்னையே கொடுப்பதற்கு
காத்துக்கொண்டு இருக்கிறேன்
நாற்பது வருடங்களாய்...
உள்ளூரில்
எல்லை தாண்டியவர்களை
தடுக்கத் துப்பில்லை
சீன எல்லையிலும்
ஏனைய எல்லைகளிலும்
நாடகம் போடுகிறார்கள்...
புல் எடுக்கச் சென்றவளை
மேய்ந்துவிட்டது மேல்ஜாதி மாடுகள்
மாட்டை வெட்டத் தடுக்கிறார்கள்
அதை மேய்க்கும் திருட்டுக் கிருஷ்ணர்கள்
ராம ஜென்ம பூமியில்
காம வன்ம லீலைகள்...
வில்லும் அம்பும் இதன் குறியீடு
ஏழைப் பெண்கள்தான் பலி ஆடு
விலை உயர்ந்த ஆடையிலே
ஒளிந்திருக்கும் தலைவனே
கிழிந்த ஆடை பெண்களுக்கு
உதவி செய்ய வருவாயா?
தண்டிக்க வேண்டும்
நால்வரை மட்டுமல்ல
நாடாள்பவர்களையும் தான்