திங்கள், 30 செப்டம்பர், 2019

பெண்ணின் புற அழகைத் தாண்டிய இரகசியங்கள்

இமயத்தை ரசிக்காமல்
எப்படி தாண்ட முடியும்

கானகத்தில் தொலைந்தால் தான்
அதன் இரகசியங்களை அறியமுடியும்

புத்திசாலிகளுக்கு
தொலைந்து போவது
அவமானம்

முட்டாள்களுக்கு
தொலைந்து போவதில்
பயம்

இரகசியங்கள்
இரகசியமாகவே...

மனப்பிறழ்வு

உடலென்னும் சிறையில்
நாம் அவர்களைப் பார்க்கலாம்
உலகென்னும் சிறையில்
அவர்கள் நம்மைப் பார்க்கலாம்

அவர்கள்
புறத்தை அலங்கரிப்பதில்லை
அகத்தின் அலங்காரம்
நமக்குப் புரிவதில்லை

யார் இங்கு
மெய்யை மெய்யாய் அறிந்தவர்
நிஜங்கள் பொதுவானது அல்ல

சமூகம் ஒரு புனைவு
சக மனிதர்களின் கனவு
யாரிடம் இல்லை மனப்பிறழ்வு
சித்தன் கூட பித்தன் தானே

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

என்னுடன்
தோற்க நினைப்பதாலேயே
நீ வென்றுவிடுகிறாய்
உன்னை
வெல்லும் துடிப்பிலேயே
நான் தோல்வியுறுகிறேன்

முட்டி மோதிய
எனக்குத் தெரியும்
உனது வலிமை

விழச் செய்யும்
உன் பார்வைதான்
எழவும் செய்யும்

இந்தக்
காகிதப் படகைத்
தாங்கிக் கொண்ட
கருணைக் கடல்
நீ

உன்
வெப்பங் கலந்த
மூச்சுதான் என்னை
முட்டி முட்டி இயக்கும்

எனது
வீழ்ச்சிக்கு காத்திருக்கும்
மண்ணில்
வெற்றி கொண்டு
வாழுகின்றேன்
இந்தப் பெண்ணில்...

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

அரசு மதுபானம் எனும் கல்

நிஜம்: குழந்தைப் பருவத்தில்
              மண்ணைத் தின்றேன்
              வளர்ந்து இப்போது
               கல்லைத் தின்றேன்
   
              என் வளர்ச்சி
              யாருக்கும் பிடிக்கவில்லை

நிழல்: மண் மூட வேண்டியதை
             கல் மூடப் போகிறது


நிழல் கண்டு
நிஜம் இங்கு
குழம்பியது

நிஜத்தையே
நிஜம் தொட்டு
வினவியது

நிஜத்தையே
நிஜம் இன்னும்
அறியவில்லை

நிஜம்
நிழலினைத் தொடர்ந்திட
முடியவில்லை

நிழல்
அதன் பயணத்தை
நிறுத்தவில்லை...

நிஜம் இங்கு
நிஜமாகவே தவிக்கிறது

நிழல்
நீங்கிப்போகும் முன்னே
கல்
நீக்க வேண்டும்

பனங்கல்
மாற்றாக வேண்டும்
மண்ணில்
நீர் ஊற்றாக 
வேண்டும்



செவ்வாய், 24 செப்டம்பர், 2019

நான்

நதியைப் பிரிந்து
நினைவில் நீந்தும்
படகு

வானம் பார்த்து
தவிக்கும் ஒற்றைச்
சிறகு

தடம் தவறி
சுற்றித் திரியும்
எறும்பு

குழந்தை ஒன்றின்
அரவணைக்கப் படாத
குறும்பு

பத்து மாதம்
கலையாமல் தொடரும்
கனவு

பிரசவ வலியுடன்
ஏங்கித் தவிக்கும்
கவிதை

உன் பேச்சுக்காக
தவம் கிடக்கும்
மௌனம்

புதன், 18 செப்டம்பர், 2019

உன்னைப் பிரிந்த தருணத்தில்
உனது புகைப்படங்கள்
வரமா சாபமா

கனத்துப் போன
இதயத்தில்
நிறைந்திருப்பது
இன்பமா துன்பமா

பிரிந்து வாழும்
நரகத்தில் ஏது
வரமும் இன்பமும்

திங்கள், 16 செப்டம்பர், 2019

கடவுளின் வார்த்தைகள்

யார் வளர்த்தால் என்ன
யார் பறித்தால் என்ன
சேர்ந்து உண்ணும் போது
எல்லாம் நியாயம் பெறுகிறது

எட்டு கால்களில்
நடப்பதைப் போலவே
அலைந்து திரியுங்கள்
உடலுக்கும் பாரம் இல்லை
உள்ளத்திற்கும் பாரம் இல்லை

உன்னையே பயன்படுத்தவில்லை
உனக்கு எதற்கு எந்திரத்தின் பயன்பாடு

காதலில் மட்டுமல்ல
வாழ்விலும் பைத்தியமாகு
உன்னைச் சுற்றியும்
வானவில் உருவாகும்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

உன் நினைவுகளின்
பேச்சுகள்தானே
பொன் வார்த்தைகள் ஆகின்றன

அந்த வார்த்தைகள் வாங்கும்
மூச்சினில்தானே
வாழ்க்கை இங்கு நீள்கின்றன

கானல் நீரை
அள்ளிக் குடித்து
தாகப் போரைத்
தள்ளிப் போட்டேன்

காலம் ஊனம் ஆகிறது
ஊர்ந்து ஊர்ந்து போகிறது
ஆலம் விழுதுகள் ஆசையைப் போல்
மண்ணைச் சேர்ந்திடத் தவழ்கிறது...

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

மூச்சாகினாய் நீ
மூச்சு விட்டதனால்
மூர்ச்சையானேன்

முக்காலமும் நீ
காலம் கைவிட்டதால்
காலமாகிவிட்டேன்

சொர்க்கம்
நரகம்
இரண்டுமே
உன் நினைவுகள்...

வியாழன், 12 செப்டம்பர், 2019

இரவின் பக்கங்களில்
உன்னை எழுதிக்கொண்டே இருக்கிறேன்

விடியல் சிந்தும்
கண்ணீர்ப் பனித்துளிகளில்
படித்துப் பார்
என் இதயத்தை...

குழந்தை மனம் வேண்டும்

அவர்கள் விரும்பியது கிடைக்கவில்லை எனில்
உயிர் விட்டு அழுகின்றனர்
கண்ணீரில் கரைகின்றனர்

அன்பை முழம் போடத் தெரியாதவர்கள்

பயத்தின் ஆழம் அறியாதவர்கள்

பரவசப் பட்டாம்பூச்சிகள்

அவர்கள்
ஒவ்வொரு வார்த்தையும்
மலரும்
தேன் சிந்தும்

ஆரவாரங்களில்
மூழ்கித் தொலைபவர்கள்


மெய்யாக வாழ்வதை அவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்


குழந்தைகளை வளருங்கள் கடமை

குழந்தை மனதை வளர்ப்பது மடமை

குழந்தை மனம் வேண்டும்

வாழ்வதற்கு...


புதன், 11 செப்டம்பர், 2019

உன் நினைவுகளோடு
குழந்தையைப் போல் விளையாடுகிறேன்,
கண்ணாமூச்சி தவிர...
நல்லவர்களால் செய்யப்பட்டச் சட்டம்
எப்படித் தீயவர்களுக்குப் பொருந்தும்

நல்லவர்கள் இடரி வீழ்வதைக் கூட
தாங்கிப் பிடிக்காது

நடந்துவந்த பாதையை நாமறியாமல் யாரறிவார்

அமைதி என்றுமே சாட்சியாய்
கூடவே பயணிக்கிறது

குற்றவாளிகள் என யாரும் இல்லை
குற்றச் சூழ்நிலைகள் தான் உருவாக்கப்படுகின்றன

இதில் பங்களிக்காதவர் பிறக்கவே இல்லை
பட்டாம்பூச்சியின் சிறகசைப்பிற்கும் பங்குண்டு
பட்டப்பகல் நட்டநடுஇரவு எதற்குமே விதிவிலக்கல்ல

கொடுக்குச் சுத்தியலால் தட்டித்தட்டி
அமைதியை மென்மேலும் குலைத்து
சட்டச் சிலந்திகள் கொழுத்துக் கொண்டே போகிறது

பாவம் இரைகள்...


செவ்வாய், 10 செப்டம்பர், 2019

வில் ஆகினாள்
காமன் அம்பில்
விசைக் கூட்டினாள்

விழி மின்சாரம் வீசி
என்னை விளக்காக்கினாள்

அவளைத் தவிர
அனைத்தையும் இருட்டாக்கினாள்

நனைக்காத அருவியொன்றை
உச்சந்தலையில் பாய்ச்சினாள்

கூடுவிட்டுக் கூடுபாயும்
மாயவித்தைக் காட்டினாள்

என்னில் அவளைத் தேடினாள்
அவளில் என்னைத் தேடினேன்
இருவருமே ஒன்றாய்த் தொலைந்தோம்
இதுவரமே இனிதாய்த் தொடர்ந்தோம்...

நிழலின் முத்தங்களில்
ஈரமானது கன்னமல்ல
நெஞ்சம்

சனி, 7 செப்டம்பர், 2019


நீ பார்த்த நான்
நான் அல்ல

முதன்முதலில்
நீ பார்த்த நான்
நான் அல்ல

முதன்முதலில்
உனைப் பார்த்த நான்
நான் அல்ல

பேசிப் பழகிய நான்
நான் அல்ல

சுற்றித் திரிந்த நான்
நான் அல்ல

தொட்டுப் பழகிய நான்
நான் அல்ல

உன் நெற்றிக் குங்குமம் வரைந்த நான்
நான் அல்ல

உன் இரத்தக் கடிதங்கள் படித்த நான்
நான் அல்ல

உன் காதில் பாடிய நான்
நான் அல்ல

நீ பாடிக் கேட்ட நான்
நான் அல்ல

உன் நிழலாக தொடர்ந்த நான்
நான் அல்ல

உன்னை விரும்பிய நான்
நான் அல்ல

உன்னோடு கோபித்த நான்
நான் அல்ல

சந்தேகம் கொண்ட நான்
நான் அல்ல

தீக் காயம் தந்த நான்
நான் அல்ல

தினம் பார்க்கக் காத்திருந்த நான்
நான் அல்ல

மறுநாள் பார்க்கும்வரை 
நினைத்திருந்த நான்
நான் அல்ல

ஏமாந்த நான்
நான் அல்ல

ஏமாற்றிய நான்
நான் அல்ல

வாக்குகள் கொடுத்த நான்
நான் அல்ல

வாக்கைத் தவறிய நான்
நான் அல்ல

நீ நம்பிய நான்
நான் அல்ல

நம்பிக்கை துரோகம் செய்த நான்
நான் அல்ல

நீ இல்லாமல் வாழும் நாட்களில்
நான் இல்லாமல் போனேன்
உன்னைத் தேடித்தேடி
நான் நீயாகிப் போனேன்

நீயாகிப் போன
நீதான் நான்
நிழற்கண்ணாடி வேண்டாம்
நேரில் உனை வந்து காண்

நான் நீயாகிப் போனேன்
நீ நான் ஆகினாயா?
உன்னை உணரச் செய்தாயே
என்னை உணரச் செய் தாயே...

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

கற்பனையில்
கடல் வார்த்து

உன்
நினைவு அலைகளில்
கால் நனைத்து

கனவுப் பூக்களுடன்
காத்திருப்பேன்...

எப்பொழுதும்
என்னைக் கட்டி அணைத்திருக்கும்
மௌனமே

ஒரு
வார்த்தை முத்தம்
தந்தாலென்ன...