தனிமையில் உறங்கும் போது
கதவு கட்டில் நிலைக் கண்ணாடி
எல்லாமே உறங்குகிறது
யார் வந்து
கதவைத் தட்டினாலும்
எல்லாமே எழுகிறது
மெல்லத் தட்டும் போது
செல்லமாய் தட்டி எழுப்பும்
அப்பாவும் அம்மாவும்
ரகசியமாய் தட்டும் போது
கண்ணத்தைக் கிள்ளி
மிச்ச தூக்கத்தையும் பறிக்கும் ஒருத்தி
அவசரமாக தட்டும் போது
அவசர அவசரமாக இயங்கும்
சமூகத்தில் எவன் ஒருவனோ
ஓங்கித் தட்டும் போது
ஒரு வேளையும் இல்லை
ஒன்றாய் இருக்க வரும் நண்பன்
யார் வந்து
கதவைத் தட்டினாலும்
எல்லாமே எழுகிறது
நிலைக் கண்ணாடியும் கட்டிலும்
சிலரை மட்டுமே பார்க்கும்
நானும் கதவும் மட்டும்
பலரைப் பார்த்ததுண்டு
நான் பார்க்காதவரும் உண்டு
கதவு பார்க்காத எவருமில்லை
தனிமையில் வாழ்ந்தாலும்
தினம் வீடு திரும்புகிறேன்
அங்கே எனக்காக
ஒன்றாய் தூங்கி
ஒன்றாய் எழுந்திட
கதவு கட்டில் நிலைக் கண்ணாடி
எல்லாமே காத்து இருக்கிறது...
நான் வந்து
கதவைத் தட்டும் போதும்
அவைகள் எல்லாமே எழுகிறது
நானும் இல்லாத
அந்த தனிமையை
அவைகள் மட்டுமே அறியும்
அவையும் இல்லாத
அந்த தனிமையை
அகிலம் மட்டுமே அறியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக