புதன், 30 ஏப்ரல், 2025


இரவெல்லாம் முழு மூச்சாய்

தூங்கி உழைத்து

ஆற்றலை ஈட்டுகிறேன்


பகலெல்லாம் பலப்பல

துண்டுத்துண்டுக் காரியங்களில்

ஓய்வெடுத்துக் கரைக்கிறேன்


பகலெல்லாம் முழு மூச்சாய்

ஒரு வேலை

ஒரு ஓய்வு வேண்டும்


பொழுதெல்லாம்

ஒரு மூச்சில்

ஒரு பயணம் போகும்வரை... 


செவ்வாய், 29 ஏப்ரல், 2025



இன்றைய அரசியலை

எதிர்த்துப் பேசினால் தீவிரவாதி

எதிர்ப்பது போல் பேசினால் திராவிடவாதி

தலையை இடம் வலம் ஆட்டுவார் இடதுசாரி, 

கீழும் மேலும் ஆட்டுவார் வலதுசாரி

எல்லாமும் எல்லாமும் ஒவ்வொரு வியாதி... 


திங்கள், 28 ஏப்ரல், 2025


குடி மறுவாழ்வு மையங்களின் நடத்தை சரியில்லையாம்

சரிதான்... சரிதான்... 

நியாயமான கூற்று தான்


உடல்நிலை சரியில்லாததால்

மருத்துவமனைக்கு போனான்

மனநிலை சரியில்லாததால்

மனநிலை காப்பகம் போனான்

வாடகை ஏற்றத்தால்

பத்து வீடுகள் மாறிப் போனான்

தாய் நாட்டில் தொடர்ந்து போர்

அகதிகள் முகாமிற்குத் தப்பிப் போனான்

இல்வாழ்க்கை பிடிக்காமல்

துறவு வாழ்வைத் தேடிப் போனான்

கலவில் மாட்டிக் கொண்டு

சிறைச்சாலைக்குப் போனான்

வன் கொலைச் செய்தான்

தூக்கு மேடைக்குப் போனான்

என்ன செய்து என்ன செய்து

குடி மறுவாழ்வு மையத்திற்குப் போனான்? 


குடி மறுவாழ்வு மையங்களின் நடத்தை சரியில்லையாம்

சரிதான்... சரிதான்... 

நியாயமான கூற்று தான்



ஞாயிறு, 27 ஏப்ரல், 2025


இதயத்தில்

கூடு கட்டுகிறது

அடிக்கடிக் கீச்சிடுகிறது

ஆள் அரவம் இல்லாத

இந்த இடத்தை

எப்படிச் சரியாக தேர்ந்தெடுத்தது? 


அது பறந்து போகையில்

இதமாக இருக்கின்றது

இருந்தாலும்

எப்போது வந்தமரும்

என்றுதான்

இதயம் துடிக்கின்றது... 


நெடுங்காலம் இருப்பதாலே

அந்தப் பறவைக்குப் பெயர் வைத்தேன்

மனதிற்குள் உச்சரிப்பேன்

பறவைக்கும் சொன்னதில்லை

பெயரைத்தான் சிறை வைத்தேன்

உயிரே

உனை ஒருபோதும் வைக்க மாட்டேன்


நீ 

இருந்தால் இரு

பறந்தால் பற... 


சனி, 26 ஏப்ரல், 2025

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வைரவ்


பார்க்கவில்லை

பேசவில்லை

இருக்கத்தான் செய்கிறது கடவுள்

இருக்கத்தான் செய்கிறது அன்பு

யார் தடுப்பது? 

இயற்கை விதித்தது

மலரும் கனியும்

மழையும் காற்றும் ஒளியும் இருக்கிறது

யார் தடுப்பது? 

இயற்கை விதித்தது

நம் உறவை... 





வெள்ளி, 25 ஏப்ரல், 2025

பாடல் 11


இரு கண்கள் இதமாய் இணைகிறதே

இருக்கின்ற நிமிடங்கள் மறைகிறதே

இதய வாசல் திறக்கிறதே

இதழ்கள் மட்டும் மறுக்கிறதே 


விரல்களின் தயக்கம் விடுபடுமா

வீணையின் கேள்விக்கு விடை வருமா

வண்ணம் எல்லாம் உரு பெறுமா

என் காதல் ஓவியம் உயிர் பெறுமா


பனிமூட்டப் பாதை உள்ளே 

பார்வை தெரியாமல்

பாவை நெஞ்சம் அது 

சிறையென்று அறியாமல்

சிக்கித் தவித்தேன் 

காதல் பித்துப் பிடித்தேன்

மோகம் எனும் தீயினுள்ளே 

நாளும் குளித்தேன்


மீண்டும் வந்தாள் என் தேவதையை

தயக்கம் என்னில் இன்னும் போகலையே

நீங்கிச் சென்றாள் சிறு சிரிப்புதிர்த்து

பின் தொடர்ந்தேன் அவள் நிழலணைத்து



இரு கண்கள் இதமாய் இணைகிறதே

இருக்கின்ற நிமிடங்கள் மறைகிறதே

இதய வாசல் திறக்கிறதே

இதழ்கள் மட்டும் மறுக்கிறதே 


விரல்களின் தயக்கம் விடுபடுமா

வீணையின் கேள்விக்கு விடை வருமா

வண்ணம் எல்லாம் உரு பெறுமா

என் காதல் ஓவியம் உயிர் பெறுமா


பனிமூட்டப் பாதை உள்ளே 

பார்வை தெரியாமல்

பாவை நெஞ்சம் அது 

சிறையென்று அறியாமல்

சிக்கித் தவித்தேன் 

காதல் பித்துப் பிடித்தேன்

மோகம் எனும் தீயினுள்ளே 

நாளும் குளித்தேன்


மீண்டும் வந்தாள் என் தேவதையே

தயக்கம் என்னில் இன்று காணலையே

பக்கம் வந்த அவள் கைவிரலை

பற்றிக் கொண்டேன் அவள் விலகவில்லை... 


வியாழன், 24 ஏப்ரல், 2025


கண்ணில்

யாவும் கடவுளானால்

உன்னில் உலகம் கோவிலாகும்... 

புதன், 23 ஏப்ரல், 2025

கண்ணீர் அஞ்சலி


குற்றம் குறைய பாடுபடுவோம்

குற்றம் கலைய பாடுபடுவோம்

இந்தியராய் ஒன்றுபடுவோம்... 


இனம் பேசி

சினம் கூட்ட

தொடும் குற்றம் உச்சியை... 


கட்சியை, ஆட்சியை, பதவியை

கடந்து நின்று

இந்தியராய் காட்டுவோம் சக்தியை... 


குற்றம் குறைய பாடுபடுவோம்

குற்றம் கலைய பாடுபடுவோம்

இந்தியராய் ஒன்றுபடுவோம்... 


செவ்வாய், 22 ஏப்ரல், 2025


நாளும் எரியும் தீ

எந்நாளும் அணையா தீ

நீ எழுதி எழுதி வளர்க்கும் தீ


அன்பால் அணைக்கும்

அறியாமை அகற்றும்

பொதுவுடைமை உன் உயிர்த் தீ... 


ஜெயமோகன் அவர்களுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்


திங்கள், 21 ஏப்ரல், 2025


தூண்டில் மீனின்

தவிப்பில் இருக்கிறது

பிரிவின் வலி... 


இங்கும் அங்கும்

அலையும் மீன்கள்

யாரை தேடுதோ... 


எல்லோர் வாழ்விலும் உண்டு

தூண்டில்கள்

தேடல்கள்... 

ஞாயிறு, 20 ஏப்ரல், 2025


சிலுவையை

பிறர்க்காக சுமப்பவர்

பரம பிதா

தனக்காக சுமப்பவர்

பரம குடி 


சனி, 19 ஏப்ரல், 2025


அறையப்படுவது மட்டுமில்லை

அணைக்கப்படுவதும் சிலுவை

ஆமென் ஆமே... 

வெள்ளி, 18 ஏப்ரல், 2025


இயற்கை சிலுவையில் அறைந்து

இரத்தம் சிந்துகிறாள் பரம மாதா

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுகிறாள்... 

வியாழன், 17 ஏப்ரல், 2025


சிலந்தி வலை

சிலுவை ஆனது

பட்டாம்பூச்சி 

பரம பிதா ஆனது


மூன்றாம் நாளில்

காணவில்லை

உயிர்த்தெழுந்து எங்கே போனது... 

புதன், 16 ஏப்ரல், 2025


காற்றின் மௌனத்தை

கலைத்துப்போடும் நாக்குக்கு

வாய்ச் சிறையில்

ஆயுள் தண்டனை... 

செவ்வாய், 15 ஏப்ரல், 2025


வானே மழை

வானே குடை

எல்லாம் கடவுள் கையில் இருக்கிறது... 


திங்கள், 14 ஏப்ரல், 2025


செருப்புகள் வாய்த்த

பாதங்கள் கூட

ஏகபோகமாய் வாழ்பவையே... 

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025


புதிய இலைகள்

புதிய பூக்கள்

வருடாவருடம்

தழைக்கட்டும் தாவரங்கள்

செழிக்கட்டும் உயிர்கள்

காக்கட்டும் வேர்கள்

இனிய தமிழ் புத்தாண்டில்

இனி இயற்கை

எல்லோர்க்கும் பொதுவாகட்டும்

உலகம் போர் இன்றி மாறட்டும்... 


சனி, 12 ஏப்ரல், 2025


விழித்துக் கொண்டிருக்கையில்

சுவாசித்துக் கொண்டிருப்பது

தியானம்


தூங்கிக் கொண்டிருக்கையில்

சுவாசித்துக் கொண்டிருப்பது

ஞானம்


வெள்ளி, 11 ஏப்ரல், 2025


என் மடியில் நீ தூங்கி 

நான் பார்த்திருந்தைத்தான்

தூங்காமல் இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்


தூக்கமின்மை 

எனது நோயாம்

சொல்கிறார்கள்


நோய் முற்றிப் போகட்டும்

விடிய விடிய அவள்

என் மடியில் தூங்கட்டும்... 













வியாழன், 10 ஏப்ரல், 2025

கடவுள் சிரிக்கிறார்...


சாகா வரம் வேண்டுகிறேன்

தினம் தினம்

செத்துப் பிழைத்து வாழும்

இந்த வாழ்வில்... 

புதன், 9 ஏப்ரல், 2025


மனதிற்கு இனிய பாடல்களை

இசையமைத்து எழுதியது யாராயினும்

இதயம் வரை கேட்பதற்கு

நீயே காரணம்... 

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

மகிழ்ச்சி


தேடி அலைவோர்க்கும்

வாங்க நினைப்போர்க்கும்

நிச்சயம் இல்லை


திங்கள், 7 ஏப்ரல், 2025


தோன்றி மறையும்

நிழலென்று நினைக்கும்

நாமும் நிழல்... 

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025


சரியாகவே நடந்தாலும்

திருப்பங்கள் வரும்போதெல்லாம்

உன் நினைவோடு மோதி விடுகிறேன்... 


சனி, 5 ஏப்ரல், 2025

நண்பர்கள்

 


வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்தோம்

அர்த்தமில்லாததையே பேசினோம்

அர்த்தமுள்ளதாக மாறியது பொழுது

அர்த்தமுள்ளதாக தோன்றியது வாழ்வு... 

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

நீயில்லாமல்...


நினைவெல்லாம் வண்ணங்கள்

கனவெல்லாம் வானவில்

நிஜம் மட்டும் கருப்பு வெள்ளை


வியாழன், 3 ஏப்ரல், 2025

நிதர்சனம்


பறக்கத்தான் போகிறது

நேசம் கொண்டு பூவில் வந்த

பட்டாம்பூச்சி... 














புதன், 2 ஏப்ரல், 2025


காய்ந்து உதிர்ந்த  இலையின் ஈரம்

காயாமல் இருக்கிறது கிளையில்

முத்தமாக... 


செவ்வாய், 1 ஏப்ரல், 2025

அமுது...


தாகம் தீர்க்க

கண்ணீர் தேடி வரும்

இரவு


இருளுக்குள் 

சுரக்கும் சுனையை

சத்தமில்லாமல் பருகும்


நான் அழுது 

நீ குடிக்க வா

கண்ணீர் பால்


இப்படியே இப்படியே

இல்லாமல் போகிறது

எனக்கான நாளைய பால்...